privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்அறிவுத்துறையினரை வதைக்கும் அரசு பயங்கரவாதம்!

அறிவுத்துறையினரை வதைக்கும் அரசு பயங்கரவாதம்!

-

புரட்சியாளர்களைச் சிறையில் அடைத்து, அடிப்படை வசதிகளையும் மருத்துவ உதவிகளையும் திட்டமிட்டே புறக்கணித்து நோயையும் மன உளைச்சலையும் தீவிரப்படுத்துவதன் மூலம் மரணத்துக்குள் தள்ளி, அவர்கள் இயற்கையாகவே மரணமடைந்ததாக் காட்டும் சதியை திட்டமிட்டு ஆட்சியாளர்கள் அரங்கேற்றத் துடிக்கின்றனர். முனைவர் ஜி.என்.சாய்பாபாவும், தோழர் கோபட் காந்தியும் அண்மையில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டங்களே இதனை நிரூபித்துக் காட்டுகின்றன.

முனைவர் ஜி.என்.சாய்பாபா
முனைவர் ஜி.என்.சாய்பாபா

புரட்சிகர அமைப்புகளின் உருவாக்கத்திலும் செயல்பாடுகளிலும் முக்கிய பங்கு வகித்ததோடு, காட்டு வேட்டை என்ற பெயரிலான பழங்குடியின மக்களின் மீதான அரசு பயங்கரவாத அடக்குமுறையை எதிர்த்து கருத்தியல் தளத்திலும் போராடி வந்த டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியரான முனைவர் ஜி.என்.சாய்பாபா, கடந்த 2014 மே 9 அன்று மகாராஷ்டிர மாநில பயங்கரவாதத் தடுப்புப் போலீசாரால் சட்டவிரோதமாகக் கடத்திச் செல்லப்பட்டார். பின்னர் மாவோயிஸ்டு பயங்கரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் எனும் பயங்கரவாத “ஊபா” சட்டத்தின் கீழ் அவர் நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சக்கர நாற்காலியின் உதவியுடன் இயங்கிவரும் மாற்றுத் திறனாளியான அவர், இதய நோய், ரத்தக் கொதிப்பு, சிறுநீரகக் கோளாறு முதலானவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறை மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து – மாத்திரைகளைக்கூட தராமல், சிறை அதிகாரிகள் அவரைப் புறக்கணித்திருக்கின்றனர். மருத்துவர் பரிந்துரைத்துள்ள உணவும் சிகிச்சையும் முறையாக அவருக்கு அளிக்கப்பட வேண்டுமென நாக்பூர் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும், சிறை நிர்வாகம் அதை அலட்சியப்படுத்தியுள்ளது. தொடரும் இக்கொடுமைக்கெதிராக, கடந்த ஏப்ரல் 11 முதலாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட அவர், ஏப்ரல் 14 அன்று நினைவிழந்த நிலையில் நாக்பூர் மருத்துவமனையில் கிடத்தப்பட்டார். அங்கு அவருக்கு இதய நோக்கான ஆன்ஜியோகிராம் சோதனை செய்யப்பட்ட போதிலும், மருத்துவர்களை நிர்பந்தித்து சிகிச்சையை போலீசார் தாமதப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் சாய்பாபாவை மரணத்துக்குள் தள்ளுவதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது.

பல்வேறு மனித உரிமை அமைப்பினரும், அறிவுத்துறையினரும் வழக்குரைஞர்களும் இக்கொடுஞ்செயலை எதிர்த்தும், முனைவர் சாய்பாபாவை நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரியும் கடந்த மே மாதத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தொடங்கினர். இதுபற்றிய பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மொகித் ஷா, ஏ.கே.மேனன் ஆகியோர் தாமே இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, மாநில அரசும் சிறைத்துறையும் சாய்பாபாவின் உடல் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும், அவர் விருப்பப்படும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்குமாறும் ஜூன் 22 அன்று உத்தரவிட்டனர். அதன் பிறகு, மரணத்தின் விளிம்பில் நிற்கும் அவரது உடல்நிலை காரணமாக, நாக்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தால் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட அவரது பிணை மனுவை மறு பரிசீலனை செய்ய வேண்டுமெனவும், இவரைப் பிணையில் விடுவிக்க வேண்டுமென்ற கருத்துக்கு தாங்கள் வந்துள்ளதாகவும், இதுபற்றி மாநில அரசு கருத்து கூறுமாறும் கடந்த ஜூன் 26 அன்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சாய்பாபா மூன்று மாத கால பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தோழர் கோபட் காந்தி
தோழர் கோபட் காந்தி

முனைவர் சாய்பாபாவைப் போலவே, மாவோயிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான தோழர் கோபட் காந்தி, கடந்த 2009-ல் டெல்லியில் கைது செய்யப்பட்டு, இந்திய அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய தாக்குதல் நடவடிக்கைக்கு சதித் திட்டம் தீட்டினார் என்று பொய்வழக்கு சோடிக்கப்பட்டு “ஊபா” சட்டத்தின் கீழ் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே இதய நோய், இரத்த அழுத்த நோய், இடுப்பு எலும்பு நகர்வினால் ஏற்பட்ட பாதிப்பு, மூட்டுவலி, சிறுநீரக நோய் மற்றும் இதர தொல்லைகளால் அவதிப்படும் 68 வயதான அவருக்கு, கடந்த ஐந்தரை ஆண்டுகளாக படுக்கையும் கழிப்பறை வசதியும் செய்து தராமல், குறுகிய கால இடைவெளியில் துப்புரவு செயப்படாத வெவ்வேறு வார்டுகளுக்கு சிறிதும் மனிதாபிமானமின்றி சிறை அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றியதன் காரணமாக, அவரது உடல்நிலை மோசமாகியது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கடந்த மார்ச் மாதத்தில் டெல்லி செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், சிறை அதிகாரிகள் அதைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தனர்.

ஒரு அரசியல் கைதியைப் போலல்லாமல், தண்டிக்கப்பட்ட கிரிமினல் குற்றவாளியைப் போல நடத்தப்படுவதையும், சிறை நிர்வாகத்தின் அடிப்படை மனித உரிமை மீறல்களையும் எதிர்த்து அவர் கடந்த மே 30 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். 18 நாட்களாக அவர் தொடர்ந்து போராடிய நிலையில், நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் சிறை நிர்வாகம் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவும், அவரது நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் ஜூன் 19 அன்று முன்வந்துள்ளது.

அரசாங்கத்தின் கருத்துக்கு மாறுபட்ட கருத்தை முன்வைத்து நாட்டின் மீதும் மக்களின் மீது அக்கறை கொண்டு இலட்சியத்துடன் செயல்படும் கோபட் காந்தி போன்ற அறிவுத்துறையினரும் புதிய சமுதாயச் சிந்தனையாளர்களும் சிறையில் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். சிறையில் ராஜ உபச்சாரம் செய்ததோடு, ஊழல் குற்றவாளி ஜெயலலிதா – சசிகலா கும்பலை விடுதலை செய்யும் அரசும் நீதித்துறையும் சிறைத்துறையும், மாற்றுத் திறனாளியான பேராசிரியர் சாய்பாபாவை கிஞ்சித்தும் மனிதாபிமானமின்றி சிறையலடைத்து வதைக்கிறது.

ஒருவர் மீது பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்டுவிட்டால், எல்லாவகை மனித உரிமை மீறல்களும் அவமானப்படுத்தல்களும் நியாயப்படுத்தப்படுகின்றன. பா.ஜ.க.வின் மைய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி சட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமர், மகாராஷ்டிரா கல்வி அமைச்சர் வினோத் டாங்டே, கோவா பொதுப்பணித்துறை அமைச்சர் சுவின் தவாலிகர் ஆகியோர் பட்டபடிப்பு சான்றிதழ் மோசடி செய்து அமைச்சராகி நாட்டை வழிநடத்துகிறார்கள். ஆனால் கல்வியாளர்களும் புரட்சிகர சிந்தனையாளர்களும் அரசு பயங்கரவாதத்தை எதிர்ப்போரும் கைது செய்யப்பட்டு சிறையில் வதைபட்டுக் கொண்டிருக்கின்றனர். அவசர நிலை பாசிச ஆட்சிக் காலத்தைவிட கொடுமையான இருண்ட காலத்தில் நாடும் மக்களும் தள்ளப்பட்டிருப்பதையே இது மீண்டும் நிரூபித்துக் காட்டுகிறது.

– குமார்
_____________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2015
_____________________________