privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.ககல்பர்கி கொலையை நியாயப்படுத்தும் அயோக்கியவாதி சாரு !

கல்பர்கி கொலையை நியாயப்படுத்தும் அயோக்கியவாதி சாரு !

-

கன்னட அறிஞர் கல்பர்கி
கன்னட அறிஞர் கல்பர்கி

ன்னட மொழியின் ஆய்வறிஞர் எம்.எம். கல்பர்கி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 30-ம் தேதி (கடந்த ஞாயிற்றுக்கிழமை, 30.08.2015) இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவர் வீட்டுக் கதவை காலை 9 மணி அளவில் தட்டியிருக்கின்றனர். கதவை திறந்து பார்த்த கல்பர்கியின் மார்பிலும், தலையிலும் சுட்டு விட்டு தப்பியோடி இருக்கின்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கல்பர்கி தனது இறுதி மூச்சை விட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் தர்வாட் மாவட்டத்தை சேர்ந்தவரான கல்பர்கி இந்துத்துவ சக்திகளையும், லிங்காயத் சாதிவெறியர்களையும் கடுமையாக எதிர்த்து நின்றவர்.

கல்பர்கியின் மரணத்துடன் ஒப்புநோக்கத்தக்க வேறிரண்டு மரணங்கள் மராட்டிய மாநிலத்தின் பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த பன்சாரே ஆகியோருடையது.

கல்பர்கியின் கொலைக்கு காரணமானவர்களை யூகிக்க எந்த சிரமத்தையும் வைக்கவில்லை இந்து மதவெறியர்கள். இந்து மதத்தை விமர்சித்தீர்கள் என்றால் நாயின் சாவை ருசியுங்கள் என்று பந்த்வால் தாலுக்காவின் பஜ்ரங்க் தள நிர்வாகி புவித் ஷெட்டி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ‘அடுத்தது நீங்கள் தான் கே.எஸ். பகவான்’ என்று இன்னொரு பேராசிரியரையும் குறிவைத்துள்ளார்.

12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பசவர் உருவாக்கிய வீரசைவம் அல்லது லிங்காயத் மதக்கொள்கை இந்து மதத்தின் கொள்கைகள் மற்றும் வழிபாட்டு முறைக்கு மாறான ஒன்று என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார், கல்பர்கி. பவுத்தம், சமணம், சிரமணம், சார்வாகம் மற்றும் சீக்கியம் போன்று பசவரின் வீரசைவமும் பார்ப்பனீயத்தின் வேதங்களையும், சாதியமைப்பையும் நிராகரித்தது. பசவர் ஓரிறைக் கோட்பாட்டை கொண்டவர்; உருவ வழிபாட்டை நிராகரித்தவர். பசவரின் கொள்கைகளை ஏற்று அவரது புது சமயத்தில் இணைந்தவர்களே லிங்காயத்துகள்.

பசவரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட பார்ப்பனர்களும் இருந்தனர். தாழ்த்தப்பட்ட மக்களும் இணைந்தனர். அவர்களுக்கிடையில் திருமண உறவும் சாத்தியமானது.காலப்போக்கில் லிங்காயத்துகளை பார்ப்பனீயம் உள்வாங்கியது. அய்யா வைகுண்டரை உட்கவர்ந்தது போல பசவரையும் உட்செரித்து கொண்டது. மதச்சார்பற்ற தேர்தல் அரசியல் கட்சிகளின் வெற்று வாக்குறுதிகளால் சோர்வுற்றிருந்த மக்களிடம் இந்து ராஷ்டிர கனவை விதைத்து போலியான தேசியக் குறிக்கோள் ஒன்றை காட்டியது ஆர்.எஸ்.எஸ். பின்னர் அதன் நிர்மாணத்துக்கு பிற்பட்ட மற்றும் தலித் மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சிக்கியவர்கள் தான் கர்நாடகத்தின் லிங்காயத்துகள்.

கல்பர்கி தனியொரு இயக்கமாக லிங்காயத்துகள் பார்ப்பனமயமாதலை விமர்சித்து வந்தார். பசவரின் வச்சனா (இசை கவிதை) கவிதைகளை ஆய்வு செய்த கல்பர்கி, பசவருக்கும் அவருடைய இரண்டாவது மனைவிக்கும் இடையே பாலியல் உறவு இருக்கவில்லை என்று கூறினார். சிவ பக்தரான பசவர் முன்பு சிவன் தோன்றி தனக்கு ஒரு பாலியல் துணை கேட்டதாகவும், பசவரால் ஏற்பாடு செய்ய முடியாமல் போன நிலையில் அவருடைய மனைவியே சிவனுக்கு உதவ முன்வந்ததாகவும் வீரசைவ புராணக் கதை கூறுகிறது. லிங்காயத்துகளின் இன்னொரு திருஉருவான சென்னபசவர் ஒரு செருப்பு தைக்கும் தலித் தொழிலாளிக்கும் பசவரின் தங்கைக்கும் பிறந்தவர் என்றார்.

அஅஅஅஅ
கல்பர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் – பார்ப்பனிய பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட அறிஞர்கள்!

கல்பர்கியின் இந்த ஆய்வு முடிவுகள் 1989-ல் வெளியான உடனே லிங்காயத்துகளிடமிருந்து எதிர்ப்பு வலுத்தது. எழுத்தாளர் பெருமாள் முருகனை மிரட்டியது போல கல்பர்கிக்கும் நெருக்குதல் கொடுத்து அவருடைய நூலின் மேற்குறிப்பிட்ட பகுதிகளை நீக்கம் செய்தனர். லிங்காயத் சாதிவெறியர்களுக்கு பணிந்ததை தான் மேற்கொண்டதொரு அறிவுத்துறை தற்கொலை என்று வருணித்தார், கல்பர்கி.

கல்பர்கி தந்திரோபயமாக பின்வாங்கினாலும் லிங்காயத்துகளின் பார்ப்பனமயமாதலை தொடர்ந்து விமர்சித்தார். பா.ஜ.க.வின் வருகையுடன் இந்துத்துவத்தின் பிடியில் லிங்காயத்துகள் சிக்கியதும் அவர்களின் எதிர்வினைகளில் பண்பு ரீதியான மாற்றம் ஏற்படத் துவங்கின. குழந்தை பிராயத்தில் கடவுள் சிலையின் மீது சிறுநீர் கழித்து அதற்கு சக்தி இருக்கிறதா என்று சோதனை செய்ததாக கூறிய மறைந்த கன்னட எழுத்தாளர் யூ. ஆர். அனந்தமூர்த்தியின் கூற்றை மேற்கோள் காட்டி பேசியதற்காக கடந்த ஜூன் மாதத்தில் அவரது வீட்டிற்கு வந்து கல்லெறிந்து ஆர்ப்பாட்டம் செய்து மிரட்டி விட்டு சென்றுள்ளனர் விசுவ ஹிந்து பரிசத் அமைப்பினர். இவர்களின் கரம் இந்த கொலையின் பின்னணியில் இருப்பது இப்போது அனைவரும் அறிந்த ஒன்றாகி விட்டது

எனினும் கொன்ற அந்த இருவரை மட்டுமே பிடிக்க 6 சிறப்புக் குழுக்களை அமைத்து தேடுகிறது கர்நாடக அரசு.சீசரை கொன்று விட்டு கண்ணீர் விட்ட புரூட்டஸை போல கல்பர்கியின் கொலையாளிகளை உருவாக்கிய சித்தாந்தத்தின் பிரதிநிதிகளான எடியூரப்பாவும், ஜெகதீஷ் செட்டரும் அவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கு கொண்டனர். புரூட்டஸ் பக்கம் நின்ற சின்னா என்ற இழிந்த கவிஞனை போல சாரு நிவேதிதா என்ற தமிழ் போர்னோ எழுத்தாளன் கல்பர்கியின் கொலையை கொண்டாடியுள்ளார். அதாவது மக்களோடு சேர்ந்து பழகி அவர்களது வாழ்க்கையை அறிந்து கொண்ட ஒரு எழுத்தாளர் இப்படி மக்களின் மத நம்பிக்கைகளை இழிவு படுத்தக் கூடாதம். அப்படி எழுதினால்  அந்த முட்டாள் எழுத்தாளர் விளைவுகளை சந்திக்க வேண்டுமாம்

பார்ப்பனியம் எனும் சிறுபான்மை ஆதிக்க சாதியினரின் வர்ணாசிரமக் கொடுமைகளை பெரும்பான்மை மக்களின் அதாவது ‘இந்துக்களின்’ நம்பிக்கை என்று நியாயப்படுத்துவது ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் அரதப் பழசான தந்திரம். இதுதான் சாரு எனும் அயோக்கிய முட்டாள் “மக்களை” புரிந்து கொண்டிருக்கும் இலட்சணம். இப்படித்தான் மோடி முதல் இலக்கிய கேடி சாரு வரை தலித் மற்றும் சிறுபான்மை மக்களை கொன்றொழிப்பதை வெளிப்படையாக ஆதரித்து வருகிறார்கள். அடிப்படையில் பார்ப்பனியக் கொடுங்கோன்மைகளை எதிர்த்த கல்பர்கிதான் மக்களை நேசித்தவர் அல்லது மக்களின் நிம்மதிக்காக பாடுபட்டவர். அத்தகையை நல்லவரை கொன்ற இந்துமதவெறியர்களும் அதை பொது மக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தியதன் எதிர்விளைவு என்று நியாயப்படுத்தும் சாரு முதலான கூட்டம்தான் மக்களை வெறுப்பவர்கள்.

கல்பர்கி கொலையை எதிர்த்து போராட்டம்
கல்பர்கி கொலையை எதிர்த்து போராட்டம்

இன்னும் சில ‘முற்போக்காளர்களோ’ கல்பர்கியின் கொலையை கருத்துரிமைக்கு வந்த சோதனை என்று பேசுகிறார்கள். பெருமாள் முருகன் பிரச்சினைக்கும் அப்படித்தான் பேசினார்கள். இதுவும் ஒரு வித சரணாகதிதான். அதாவது பார்ப்பனியத்தையோ, கொங்கு வேளாளக் கவுண்டர் சாதிவெறியையோ எதிர்ப்பதற்கு துப்பற்று இப்படி கருத்துரிமை என்று பேசுவதால் ஆதாயம் கருத்துரிமைக்கு அல்ல. மாறாக சாதிவெறியர்களும், மதவெறியர்களும்தான் இந்த கருத்துரிமை போரில்  தமது கொலைவெறி மறைக்கப்படுவது குறித்து எக்காளச் சிரிப்பில் திளைக்கிறார்கள். வன்னிய சாதிவெறி என்று சொல்லாமல் பொதுவில் சாதிவெறி என்று சொல்லி இளவரசன் மரணத்திற்காக சோகம் கொண்ட தமிழினக் குழுக்களின் அணுமுறையும் இப்படிப்பட்டதே.

இவையெல்லாம் சேர்ந்து இந்துமதவெறியர்களின் வெளிப்படையான தாக்குதல்களை அதிகரிக்கப்பதற்கே உதவியிருக்கிறது. பேராசிரியர், ஆய்வறிஞர், பழங்கன்னட இலக்கிய ஆய்வாளர், கல்வெட்டு அறிஞர் என்று பன்முக ஆளுமை தன்மை கொண்ட கல்பர்கி கொலைசெய்யப்பட்டது எத்தகைய ஒரு இழப்பு! இந்துமதவெறியர்களை மறைமுகமாகக் கூட எதிர்ப்பதற்கு துப்பற்ற எண்ணற்ற படைப்பாளிகளை இலக்கியத்திலும், திரைத்துறையிலும் கொண்டிருக்கும் தமிழ் இலக்கிய உலகம் இது குறித்து கொஞ்சமாவது வெட்கப்படுமா?

கல்பர்கி இழப்புக்கு பதிலடி தருமாறு உழைக்கும் மக்களை அணிதிரட்டுவோம்! பார்ப்பனியத்திற்கு பாடைகட்ட  தமிழகத்தை தயார் படுத்துவோம்!!

– சம்புகன்.