ஆகஸ்டு 3 சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தை ஒட்டி கைது செய்யப்பட்ட மாணவர்கள் 38 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.தோழர்கள் சாரதி, ஆசாத், மாரிமுத்து, செல்வக்குமார், நினைவேந்தன், திருமலை, தினேஷ் ஆகியோர் புழல் சிறையில் இருந்து முழக்கமிட்டபடியே வெளியே வந்தனர். அதே போல பெண்கள் சிறையிலிருந்து தோழர்கள் நிவேதிதா, வாணிஸ்ரீ, ரூபாவதி, ஜான்சி ஆகியோரும் தொடர்ந்து போராடுவோம் என்ற உறுதியோடு வெளியே வந்தனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
சிறை வாயிலில் 200-க்கும் மேற்பட்ட தோழர்கள் அணிதிரண்டு வரவேற்றனர். விடுதலை செய்யப்பட்ட தோழர்களை கடுமையாக அடித்தும், உளவியல் சித்திரவதை செய்தும் போலீசு துன்புறுத்தினாலும் அவர்களின் மன உறுதியை குலைக்க முடியவில்லை. இவர்களை விடுவிக்க கூடாது என்று போலீசு மட்டுமல்ல, நீதிமன்றமும் எத்தனை எத்தனை இடையூறு செய்தாலும் தோழர்கள் உறுதி குலையாமல் அதை எதிர் கொண்டார்கள். வழக்கு போராட்டத்தை மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் மேற்கொண்டார்கள்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இதே போன்று கடலூர் சிறையிலிருந்து மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு மற்றும் தோழர்கள், கோவை சிறையிலிருந்தும் ஐந்து தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை வழக்கு உள்ளிட்டு பல பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டு சிறை வாசம் தொடர்ந்தாலும் தோழர்கள் உறுதியாக அதை எதிர் கொண்டு போராடினார்கள். அனைவரையும் பெருந்திரளான மக்கள், தோழர்கள் கூடி நின்று வரவேற்றனர்.
டாஸ்மாக்கை மூடும் வரை போராட்டம் ஓயாது என்று மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு சிறைக்கு வெளியே அறிவித்தார். அதையே புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களும் புழல் சிறை முகப்பில் அறிவித்தனர்.
ஏதோ சிறையில் அடைத்து பிணை மறுத்தால் போராட்டம் முடங்கிவிடும் என்று அரசு நினைப்பது நடக்காது.
தகவல்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், விருத்தாசலம்