privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஹிந்து தாலிபான்கள் உருவாக்கும் காவி மதரஸாக்கள் !

ஹிந்து தாலிபான்கள் உருவாக்கும் காவி மதரஸாக்கள் !

-

ரலாறு: தில்லியில் உள்ள குதூப் மினாரை நிர்மாணித்தவர் சக்ரவர்த்தி சமுத்ரகுப்தன்; அதன் உண்மையான பெயர் விஷ்ணு ஸ்தம்பம்.

பூகோளம்: உயிரற்றுக் கிடந்த இந்த பூமிக்கு உயிரளித்தவர் மனு.

தொழில்நுட்பம்: மகாபாரத காலத்திலேயே இந்தியாவில் தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. சஞ்சையன் த்ருதிராஷ்டிரனுக்கு போர் காட்சிகளைத் தனது யோக த்ருஷ்டியில் கண்டு சொன்னான். அந்த யோக த்ருஷ்டி தான் பிற்காலத்தில் தொலைக்காட்சியானது.

Vimanas I
இந்திய வரலாற்றில் விமானம்

பொறியியல்: வேதகாலத்திலேயே நம்மிடம் அநஷ்வத் ரதம் என்கிற மோட்டார் கார் இருந்தது. (அஷ்வத் – குதிரை ; அநஷ்வத் – குதிரையில்லாத) இந்த மோட்டார் காரை யந்திர ரதம் என்றும் சொல்வார்கள்.

அறிவியல்: மகாபாரத கவுரவர்கள் எப்படி பிறந்தார்கள் என்று நினைக்கிறீர்கள்? காந்தாரியின் கருவிலிருந்து வந்த பெரும் சதைக் கோளத்தை த்வாய்பயன் என்ற முனிவர் நூறு துண்டுகளாக நறுக்கி பசு நெய் நிரம்பிய நூறு குடுவைகளில் போட்டார். அந்த ஒவ்வொரு சதைத் துணுக்கும் ஒரு குழந்தையாக பிறந்தது – அட இதைத் தானே இன்றைக்கு ஸ்டெம் செல் ஆராய்ச்சியின் முடிவில் சொல்கிறார்கள்? ஆக, நம்மிடம் ஸ்டெம் செல் தொழில்நுட்பம் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது.

பரிணாமம்: ஒருவன் ரொட்டி சுடும் போது சில ரொட்டிகள் அரை வேக்காடாகவும், சில ரொட்டிகள் கரிந்து போயும், சில ரொட்டிகள் நல்ல பதமாகவும் வரும். அதே போல் கடவுள் மனிதனைப் படைத்த போது கரிந்து போன ரொட்டி தான் கருப்பர்கள். அரைவேக்காட்டு ரொட்டி வெள்ளைக்காரர்கள். பதமாக வெந்த ரொட்டிகள் தான் இந்தியர்கள்.

அச்சம் வேண்டாம் நண்பர்களே… இவற்றைத் தான் இனிமேல் நாம் வரலாறாகவும், பூகோகமாகவும், தொழில்நுட்பமாகவும், அறிவியலாகவும், பரிணாம வளர்ச்சித் தத்துவமாகவும் படிக்கப் போகிறோம். இந்த செந்தில் கவுண்டமணி காமெடிகளைப் படிப்பதன் மூலமாகத் தான் இந்திய மாணவர்களின் தேசியப் பெருமிதம் வளர்ச்சியடையும் என்கின்றனர் ஹிந்துத்துவ அறிஞர்கள்.

ஆப் கீ பார் அதோகதி சர்க்கார்.

ஹிந்து மதரஸா உங்களை அன்புடன் வரவேற்கிறது…!

saffronisation
ஹிந்து மதரஸா உங்களை அன்புடன் வரவேற்கிறது…!. படம் : இணையத்திலிருந்து

கடந்த ஆண்டு செப்டெம்பர் 2-ம் தேதி தில்லியில் ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகள் மத்யாஞ்சல் என்கிற தமது பரிசீலனைக் கூட்டமொன்றை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய பொறுப்புகளில் உள்ள 93 பேரும் அதன் பல்வேறு பரிவார அமைப்புகளைச் சேர்ந்த 15  பேரும் கலந்து கொண்டனர். இவர்கள் தவிர, மத்திய பாரதிய ஜனதா அரசின் காபினெட் அந்தஸ்தில் உள்ள அமைச்சர் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் மூன்று துறைகளில் இந்துத்துவ செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும், ஏற்கனவே இத்துறைகளில் நடந்து வரும் காவிமயமாக்கல் நடவடிக்கைகளின் முன்னேற்றம் பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் கும்பல் முக்கியமானதாக கருதும் மூன்று துறைகள் – சிக்‌ஷா, சன்ஸ்கிருதி மற்றும் சன்சார் (அதாவது கல்வி, கலாச்சாரம் மற்றும் தகவல் தொடர்பு). ’பாரதியகரன்’ என்கிற அவர்களது காவிமயமாக்கல் திட்டத்தைப் பொறுத்தவரை இம்மூன்று துறைகளும், அதில் தனிச்சிறப்பாக கல்வித் துறையும் முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

தாம் உருவாக்கவுள்ள எதிர்கால இந்து சாம்ராஜ்ஜியத்தின் புதல்வர்கள் என்னவிதமான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என்பதை மாத்திரமல்ல, அந்த எதிர்காலத்தை சாத்தியமாக்க நிகழ்காலத்தில் தன் அடியாட் படையின் அறிவுமட்டம் எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்பதை கல்வித் துறையின் மூலமாக சாதித்துக் கொள்வதே ஆர்.எஸ்.எஸ் கும்பலின் திட்டம். சுருக்கமாகச் சொன்னால், இனிமேல் ஊருக்கு மறைவாக நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத பயிற்சி மையங்களான ஷாகாக்களின் சித்தாந்த தயாரிப்பு வேலைகளை மக்களின் வரிப்பணத்தில், அரசின் செலவில் பள்ளிக் கூடங்களில் வைத்தே நடக்கும்.

மேற்படி பரிசீலனைக் கூட்டத்தைத் தொடர்ந்து,  திட்டமிடல் கூட்டம் ஒன்றும் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டங்களின் நோக்கம் மிகத் தெளிவானது. இந்தியாவின் வரலாற்றைத் திருத்தி எழுத வேண்டும். திருத்தி எழுதப்படும்rss-hindu-madarasa-3 வரலாறு எவ்வாறு இருக்கும்? அது ஹிந்துப் பெருமிதத்தை உயர்த்திப் பிடிப்பதாக இருக்கும்.

ஹிந்து பெருமிதத்தை எவ்வாறு உயர்த்திப் பிடிப்பது?

இதை ஆரியப் படையெடுப்பிலிருந்து துவங்குகிறார்கள். முன்பொரு காலத்தில் அகண்ட பாரதம் ஒன்று இருந்ததாகவும், இந்த அகண்ட பாரதத்திற்குள் இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், நேபாளம் மற்றும் திபெத் ஆகிய பகுதிகள் இருந்ததாக எந்த விதமான தொல்லியல், வரலாற்றியல், மானுடவியல் அடிப்படையும் இல்லாத புருடாக்களை அள்ளித் தெளிக்கிறார்கள். உண்மையில் அக்காலத்தில் இன்றைக்குள்ளதைப் போன்ற நாடு, தேசம் என்கிற கருத்தாக்கங்களே கூட உருவாகியிருக்கவில்லை.

அடுத்து திபெத்தில் தான் முதல் மனிதன் தோன்றினானென்றும், அதிலிருந்து ஆரிய இனமும், ஆரிய இனத்திலிருந்து மற்ற இனங்களும், முதலில் சமஸ்கிருதமும், அதிலிருந்து பிற மொழிகளும் தோன்றியதாக அம்புலிமாமா கதைகளை விவரிக்கிறார்கள். இந்த கேலிக்கூத்தில் தெறித்த முத்துக்களுக்கு ஓரிரு உதாரணங்கள் – இந்தியாவுக்கு பன்றி என்கிற விலங்கை அறிமுகப்படுத்தியதே இசுலாமிய படையெடுப்பாளர்கள் தான். தலித்துகளை மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடுத்தியது இசுலாமியர்கள். தலித்துகளை மாட்டின் தோலை உரிக்க வைத்து அவர்களை தலித்துகளாக்கியதே வெள்ளைக்காரர்கள் தான். இந்தியாவின் சுதந்திர போராட்டங்கள் என்பதே முசுலீம்களுக்கு எதிராக நடந்தவை தாம்.

அதாவது பன்னெடுங்காலமாக பார்ப்பனியம் ஏற்படுத்தி வைத்திருக்கும் படிநிலை சமூக அமைப்பையும், இந்த சமூக அமைப்பைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டிருக்கும் மனுஸ்மிருதி போன்ற தண்டனைச் சட்டத் தொகுப்புகளையும், அதன் தீய விளைவுகளையும் ஒட்டு மொத்தமாக ‘படையெடுப்பாளர்களின்’ மேல் சுமத்துவதன் மூலம் தான் ஆர்.எஸ்.எஸ் கும்பல் இந்து பெருமிதத்தை உற்பத்தி செய்யப் போகிறதாம்.

இந்த மூளைச் சலவையின் விளைவு எப்படி இருக்கும்? அதை நீங்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும் காவிப் பரிவாரங்களின் பாசிச கோமாளித்தனங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம். வேதகால ரிஷிகள் மாட்டுக்கறி தின்றதன் குறிப்புகள் வேதங்களிலேயே இருப்பதை எதிரில் பேசுபவர்கள் விளக்கிச் சொன்னாலும், ஆசனவாயில் மிளகாய்ப் பொடி அப்பிய பன்றிகளைப் போல் உறுமும் இந்துத்துவ ‘அறிஞர்’ பெருமக்களின் கோணங்கித்தனங்களை நீங்கள் புதிய தலைமுறைத் தொலைக்காட்சி விவாதங்களில் கட்டாயம் கண்டிருப்பீர்கள்.

இவ்வாறான இந்துப் பெருமிதம் தலைக்கேறிய மடையர்களை உருவாக்கும் பணியை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பரிவார கும்பல் சிரமேற்றுள்ளது. தற்போது மோடியின் வடிவில் இந்த அற்பர்களுக்கு அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கிறார்கள் என்றாலும், இந்தியாவில் எல்லா கல்வி நிலையங்களையும் ஹிந்து மதரஸாக்களாக மாற்ற வேண்டும் என்கிற ஆர்.எஸ்.எஸ் திட்டத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது.

rss-hindu-madarasa-abvp
ஏ.பி.வி.பி குண்டர்கள். படம்: இணையத்திலிருந்து

1949ல் உருவாக்கப்பட்ட ஏ.பி.வி.பி என்கிற ஆர்.எஸ்.எஸ் மாணவர்கள் அமைப்பு இன்று பதினைந்து பல்கலைக்கழகங்களில் தெரிவு செய்யப்பட்ட மாணவர் அமைப்பாக வளர்ந்துள்ளது. மாணவ சமுதாயத்திற்கு ஹிந்து பாரம்பரிய பெருமிதங்களை கற்பிப்பதும், அவர்களை தேச நிர்மாண பணிகளில் ஈடுபட வைப்பதையும் தனது கொள்கைகள் என்று இந்த அமைப்பு சொல்லிக் கொள்கிறது. ஆனால், எதார்த்தத்தில் இந்த அமைப்பினால் திரட்டப்பட்ட மாணவர்கள் தான் இந்துத்துவ கும்பல் நடத்திய பல்வேறு கலவரங்களிலும், பாபரி மசூதி இடிப்பிலும் முன்னின்றனர். மாணவர்களை பயங்கரவாதிகளாக வார்த்தெடுப்பதை ஒற்றை நோக்கு திட்டமாக (Single point Agenda) இவ்வமைப்பு கொண்டு செயலாற்றி வருகிறது. மாணவர்கள் மத்தியில் முற்போக்கான அரசியல் கருத்துக்கள் பரவுவதைத் தடுப்பது, முற்போக்கான மற்றும் ஜனநாயக கருத்துக்களை வெளியிடும் கல்லூரி பேராசிரியர்கள் தாக்கப்பட்ட பல்வேறு சம்பவங்களில் இந்த அமைப்பை சேர்ந்த மாணவர்கள் குண்டர் படைகளாக செயல்பட்டுள்ளனர். ரோகித் வெமுலாவின் தற்கொலை எனும் கொலையை இப்பின்னணியில்தான் பார்க்க வேண்டும்.

rss-hindu-madarasa-2
வித்யாபாரதியின் கட்டுப்பாட்டில் சுமார் 18,000 பள்ளிகள் நாடெங்கும் செயல்பட்டு வருகின்றன

1978-ல் உருவாக்கப்பட்ட வித்யா பாரதி மற்றும் அகில பாரதிய சிக்‌ஷா சன்ஸ்தான் போன்ற அமைப்புகள் கல்வித் திட்டத்தில் படிப்படியான மாற்றங்களைக் கொண்டு வந்து இந்தியாவின் அனைத்து கல்வி நிலையங்களையும் காவி மதரஸாக்களாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. இன்றைய தேதியில் வித்யாபாரதியின் கட்டுப்பாட்டில் சுமார் 18,000 பள்ளிகள் நாடெங்கும் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் சுமார் 18 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவை தவிற இவ்வமைப்பில் சுமார் 80,000 ஆசிரியர்கள் உள்ளனர். இது தவிற, இவ்வமைப்பின் சார்ப்பில் சில பத்தாயிரம் ஓராசிரியர் பள்ளிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

பரிவார அமைப்பின் சார்ப்பில் நடத்தப்படும் பள்ளிகளில் மேலே குறிப்பிட்டுள்ளதைப் போன்ற அறிவுக்கும், உண்மைக்கும் பொருத்தமற்ற, திரிக்கப்பட்ட வரலாறு, புவியியல், அறிவியல் பாடங்களையும் இந்தக் காலத்திற்கு எந்த வகையிலும் பயன்படாத சமஸ்கிருதத்தையும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்வி அளிக்க வேண்டிய கடமையில் இருந்து தவறும் அரசின் கொள்கையின் விளைவாக தனியார் பள்ளிகளின் லாப வேட்டை, அரசுப் பள்ளிகள் புறக்கணிக்கப்படுவது போன்ற காரணங்களால் பெற்றோரும் வேறு வழியின்றி இது போன்ற இந்து மதரஸாக்களில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கின்றனர்.

இன்று பாரதிய ஜனதா ஆளும் பல்வேறு மாநிலங்களில் வித்யாபாரதியின் கல்வித் திட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். வித்யாபாரதியின் முன்னாள் உறுப்பினர்கள், தலைவர்கள் மத்தியபாடநூல் கழகம், சி.பி.எஸ்.சி போன்ற மத்திய அரசின் பள்ளி மற்றும் உயர்கல்வி சார்ந்த துறைகளில் பொறுப்புகளில் அமர்ந்து இவ்வமைப்புகளின் பாடதிட்டங்களை வித்யாபாரதியின் பாடதிட்டங்களைப் போல் மாற்றியமைத்து வருகின்றனர்.

rss-hindu-madarasa-6
புராணத்திலிருந்து இந்திய வரலாறு – பாரதிய இதிஹாஸ் சன்கலன் யோஜ்னா

இவை தவிர 1973-ல் ஏற்படுத்தப்பட்ட பாரதிய இதிஹாஸ் சன்கலன் யோஜ்னா என்கிற அமைப்பு வரலாற்றைத் திருத்தி எழுதும் பணியை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசின் மனித வள அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் தன்னாட்சி அமைப்பான வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் (ICHR – Indian Council of Historical Research) பொறுப்பில் இதிகாஸ் சங்கலன் யோஜ்னா அமைப்பின் தலைவரான சேர்ந்த ராவ் அமர்த்தப்பட்டுள்ளார். ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் ‘வரலாற்றுப்’ பொறுத்தப்பாட்டை ஆராய்வதே இப்பரிவார அமைப்பின் முக்கிய செயல்திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இனி நமது எதிர்கால சந்ததியினர் கற்கப் போகும் வரலாறு எவ்வாறு இருக்கும் என்பதைத் தனியே விளக்கத் தேவையில்லை.

மத்திய பாடநூல் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பாட நூல்களை திருத்தியெழுதும் பணியை வித்யா பாரதியின் முன்னாள் தலைவர் தீனாநாத் பத்ரா ஏற்றுக் கொண்டுள்ளார். ஏற்கனவே இவர் எழுதிய நூல்கள் குஜராத் மாநில கல்வித் துறையால் அங்கீகரிக்கப்பட்டு அம்மாநில அரசுப் பள்ளிகளின் பாட திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

மோடியின் ஆட்சிக்காலத்தில் குஜராத் மாநிலத்தின் கல்வி திட்டம் உள்ளாகியிருக்கும் மாற்றங்களை அவதானித்தால், இனி வரும் காலத்தில் இந்தியாவெங்கும் உள்ள கல்வித் திட்டம் என்ன வகையான மாற்றங்களை சந்திக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

வகை மாதிரிக்காக சில – பத்தாம் வகுப்பு குடிமையியல் பாடத்தில் காந்தியின் கொலை பற்றி விவரிக்கும் பகுதியில் கோட்சே என்கிற பெயரே இல்லை. அதே பாடத்தில் தேசப்பிரிவினை பற்றி விளக்கும் பகுதியில் முசுலீம் லீகின் வரலாறு உள்ளது ஆனால் இந்து மகாசபையின் வரலாறு இல்லை. இவை தவிர ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் சொல்லப்படும் உளறல்களான ராமாணத்தில் ஆகாய விமானம், மகாபாரத குருக்‌ஷேத்திரப் போரில் அணுகுண்டு, பிள்ளையாருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி போன்றவைகளும் இந்த பாட திட்டத்தில் அடக்கம்.

ஜனவரி 19, 2000-மாவது ஆண்டில் குஜராத் மாநில கல்வித் துறை எல்லா பள்ளிகளுக்கும் ஓர் அரசாணையை வழங்கியுள்ளது – அதன்படி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாதாந்திர பத்திரிகையான சாதனாவுக்கு எல்லா பள்ளிகளும் சந்தா கட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதே ஆண்டு டிசம்பர் மாதம் அனுப்ப பட்ட இன்னொரு உத்தரவின் படி எல்லா ஆசிரியர்களும் சமஸ்கிருத பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்கப் போவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இன்னொரு பரிவாரமான சமஸ்கிருத பாரதி என்பது இங்கே குறிப்படப்பட வேண்டிய தகவல்.

இச்சமூகத்தின் பொதுபுத்தியை பார்ப்பன பொதுபுத்தியாக மறுவடிவமைக்க இதன் அஸ்திவாரமாக உள்ள அறிவுத் துறையை முதல் படியாக பார்ப்பனமயமாக்கும் பணியை ஆர்.எஸ்.எஸ் கும்பல் நிறைவேற்றி முடித்துள்ளது. இந்நடவடிக்கைகளுக்கு ஜனநாயக உணர்வும் சொரணை உணர்வும் கொண்ட மிகச் சில அறிவுத்துறையினர் மற்றும் கல்வித்துறையினரிடமிருந்து எழுந்த எதிர்ப்பைத் தவிர மக்கள் மத்தியிலிருந்து பெருமளவிற்கு எதிர்ப்பு ஏதும் எழவில்லை என்பது நமது கவனத்திற்கும் கவலைக்கும் உரியதாகும்.

உருவாகவுள்ள காவி மதரஸாக்களிலிருந்து மூளைச் சலவை செய்யப்பட்டு வெளியேறப் போகும் ஹிந்து தாலிபான்களுக்கும் ஆப்கானின் பச்சைத் தாலிபான்களுக்கும், ஈராக்கின் ஐ.எஸ்-களுக்கும் இடையே பெருமளவில் வேறுபாடுகள் ஏதும் இருக்கப் போவதில்லை. பெண்கள் குறித்து, சாதி குறித்தும், பிற மதங்களைக் குறித்தும் பாரதிய ஜனதா மத்திய அமைச்சர்கள் உதிர்க்கும் கருத்துக்களுக்கும் தாலிபான் தலைவர் முல்லா ஓமரின் கருத்துக்களுக்கும் சாராம்சத்தில் ஏதும் வேறுபாடுகள் உண்டா என்ன?

வேகமாகப் பரவி வரும் காவி விஷத்தை உழைக்கும் மக்கள் முறிக்க வேண்டும். இல்லையென்றால் நாம் கற்காலத்தை நோக்கி காவிகளின் தடியால் தள்ளப்படுவோம்.

– தமிழரசன்.

மேலும் படிக்க