உலகம் முழுவதும் மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம் கொண்டாட்ட நாளாக மட்டும் அனுசரிக்கப்படுகிறது. சமூக அமைப்பினாலும், குடும்ப நிறுவனத்தாலும் அடிமையாக்கப்பட்ட பெண்களை தட்டி எழுப்பும் விதமாக பெண்கள் விடுதலை முன்னணி ஒவ்வொரு ஆண்டும் போராடும் விழிப்புணர்வை ஊட்டும் முகமாக தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி பென்னாகரத்தில் 8.03.2017 அன்று மாலை பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தினை தோழர் பழனியம்மாள் தலைமை ஏற்று பேசுகையில் அன்றைக்கு லட்சகணக்கான பெண்கள் ஆயத்த ஆடை மற்றும் இதர தொழிற்சாலைகளும் கொத்தடிமைகளாக வேலைசெய்து வந்தனர். ஆண்களுக்கு மட்டும் தான் வாக்குரிமை இருந்தது இப்படி பல்வேறு அடக்குமுறைகளை தகர்த்து பெண் விடுதலை மற்றும் பொதுவுடமை போராளி கிளாரா ஜெட்கின் தலைமையில் ஆயிரக்கணக்கான பெண்கள் ரத்தம் சிந்தி உயிர்த்தியாகம் செய்து 8 மணி நேர வேலை, 8 மணிநேர உறக்கம், வாக்குரிமை, சங்கம் சேரும் உரிமைகளை பெற்றெடுத்த உன்னதமான நாள் தான் மார்ச் 8 . ஆனால் இன்றைக்கு விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் ஆண்களும், பெண்களும் உழைத்தால்தான் வாழ்க்கையை ஓட்டமுடியும் என்கிற நிலையில் 12,14 மணி நேரம் உழைக்க வேண்டியிருக்கிறது. மீட்டெடுத்த உரிமைகள் பறிபோயிருக்கிறது.
இந்திய சமூக அமைப்பே ஆண் என்றால் வீரம், பெண் என்றால் அழகு சாதன பொருளாக பார்ப்பது,என்று இருவேறு உலகமாக பிரித்து பார்க்கபடுகிறது. இதன் விளைவாக பெண்களுக்கு அநீதிகள் அதிகரித்திருக்கிறது. ஆண்கள் ஆயிரம் தவறு செய்தாலும் அதற்கு எந்த வசை சொல்லும் இல்லை, பெண்கள் தவறு செய்தால் நடத்தை கெட்டவள் என்ற வசை சொற்கள் இருக்கிறது. பெண்கள் சத்தமாக பேசினால் வாயாடி என்று வசை பாடுகிறார்கள் . ஆண்கள் அசிங்கமாக பேசினாலும், அடிச்சாலும் அவர்களுக்கு எந்த வசை சொல்லும் கிடையாது. ஆண்கள் இறந்தால் பெண்களுக்கு விதவை என்கிற பட்டம் இருக்கிறது. பெண்கள் இறந்தால் ஆண்களுக்கு எந்த பட்டமும் கிடையாது, பெண்கள் மீதான இந்த கறையை ஆணாதிக்கத்தை தகர்தெறிய பெண்களும் சமூக போராடங்களில் ஈடுபடும் பொழுதுதான் பெண்களுக்கான சமத்துவம் பிறக்கும். அதுதான் சல்லிக்கட்டு போராட்டம் நமக்கு உணர்த்திருக்கிறது. எனவே சமூக போராட்டங்களில் பங்கெடுப்போம்,பெண்களின் விடுதலையை மீட்டெடுப்போம் என்று அறைகூவினார்.
தோழர்.மலர்கொடி பேசுகையில் தண்ணீர் ,விலைவாசி,போன்ற எல்லா பிரச்சினைகளும் பாதிப்பது பெண்கள்தான். இன்றைக்கு குடிக்க தண்ணீர் இல்லாமல் குழாய் அடியில் சண்டைபோட்டுக்கொள்கிறோம். நிலத்தடி நீர் வறண்டு போனதற்கு யார்காரணம். வறட்சியை ஏற்படுத்தியது யார்.? மரங்களை அழித்து, மணலை ஒட்ட சுரண்டி கொள்ளையடித்தது முதலாளிகள்தான் 1000,2000 அடிகளை போர் போட்டடு தண்ணீரை உறிஞ்சி கொள்ளையடிக்கின்றனர். ஆனால் நமக்கு முறையாக தண்ணீர் கொடுப்பது கிடையாது, விலைவாசி உயர்வால் வாழமுடியாமல் பல மணிநேரம் உழைக்கிறோம். அதோடு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அச்சத்தோடு வாழ வேண்டிய நிலை இருக்கிறது. இதற்கு காரணமான சினிமா, சீரழிவு கலாச்சாரத்தை எதிர்த்து போராட வேண்டும். பெண்கள்தான் பல புரட்சிகளுக்கு வித்திட்டிருக்கிறார்கள் .அத்தகைய புரட்சியின் மூலம்தான் பெண் விடுதலை சாத்தியமாகும் அதற்கு அனைவரும் தயாராக வேண்டும் என்றார்.
தோழர் வனிதா பேசுகையில் முதலாளிகளின் உற்பத்தியை பெருக்கி அதிக அளவில் கொள்ளையடிக்க பெண்களைதான் வேலைக்கு அமர்த்தபடுகிறார்கள். ஏனென்றால் பெண்கள் அதிகமாக உழைக்க கூடியவர்கள், நேரத்தை வீணடிக்கமாட்டார்கள், சங்கம் வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்கிற அடிப்படையில் இன்றைக்கு சுமங்கலி திட்டம் என்கிற பெயரில் இளம் பெண்களை ஒப்பந்த முறையில் சக்கையாக கசக்கி பிழியபடுகிறார்கள். மேலும் ஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு பலியாகிறார் . இந்த சமூக நிலைமைகளை மாற்றாமல் பெண்களுக்கு விடுதலை இல்லை என்றார்.
சிறப்புரை ஆற்றிய வழக்குரைஞர் பொற்கொடி பேசுகையில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அச்சத்தில் வாழ வேண்டிய சூழ்நிலையில் இருந்து வருகிறோம். சிறுமி ஹாசினி, நந்தினி என்று அடுத்தடுத்து பாலியல் படுகொலைகள் நடக்கிறது, இதற்கு ஆபாச சீரழிவு கலாச்சாரம், டாஸ்மாக் போன்றவைகள் முக்கிய காரணம். ஆபாசத்தை விற்றுக் காசாக்கம் சினிமாவால் சமூகத்திற்கு நடக்கும் கேடுகள் இன்று நடிகை பாவனா போன்றவர்களுக்கு நிகழ்ந்திருக்கிறது. இப்பிரச்சினைகளுக்கு யார் காரணம்?இதை சட்டத்தால் தடுக்க முடியுமா? 5 மாத ஆகிவிட்டால் கருவை கலைக்க கூடாது என்று சட்டம் இருக்கிறது. குடும்ப வன்முறை சட்டம் இருக்கிறது. வரதட்சணை ஒழிப்பு சட்டம் இருக்கிறது. குற்றம் இழைத்ததால் 5 வருடத்திற்கு சிறை வைக்க வேண்டும் என்பதுதான் சட்டம். அந்த சட்டம் நடைமுறைப்படுத்த படுகிறதா? என்றால் இல்லை எல்லா நிறுவனங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இன்றைக்கு பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? 1992 ல் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்றது. ஆனால் இதுவரைக்கும் உயர்நீதி மன்றத்திற்கு வழக்காக கூட வரவில்லை, ஹெல்மெட்க்கு தீர்ப்பு கொடுத்த நீதிமன்றம், டாஸ்மாக் பிரச்சினையில் இது அரசாங்கத்தின் கொள்கை முடிவு இதில் தலையிட முடியாது என்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியதன் மூலம் ஆபாச படங்கள் இன்று பலருக்கும் மலிவாக கிடைக்கின்றது. குளிர்பானம், வண்டி , வேஷ்டிகள் என எல்லா விளம்பரங்களிலும், பெண்களை நுகர்வு பொருளாக உணர்த்துகிறார்கள். எனவே சீரழிவுக்கு காரணம் நுகர்வுவெறி கலாச்சாரமே ? இதனை மாற்ற முடியாதா என்றால் முடியும். ரஷ்ய புரட்சிக்கு வித்திட்டவர்கள் பெண்கள். அதுதான் மெரினா எழுச்சியிலும் நடந்தது. அந்த போராட்டத்தில் பெண்கள் சமத்துவமாக இருந்ததை உணர்ந்ததாக கூறினார்கள். அங்கு பாலியல் துன்புறுத்துல்களும் சீண்டல்களும் இல்லை போலீசும் இல்லை. அங்கே போராடுபவர்களின் நோக்கம் ஒன்றாக இருந்தது . ஆகவே பெண்கள் அழகுபடுத்தி கொள்வது அல்ல வீரம், சமூக போராட்டங்களில் கலந்து கொள்வதுதான் வீரம். நெடுவாசல் போராட்டத்தில் இருக்கும் பெண்கள் விடாபிடியாக போராடுகிறார்கள். ஆகவே சமூக விடுதலைக்காக போராடுவதின் மூலம்தான் பெண்கள் விடுதலையை பெறமுடியும் என்று போராட அறைகூவினார்.பொதுக்கூட்டத்தில் நூற்றுக்குமேற்பட்ட மக்கள் கவனித்தனர். அங்கு வந்திருக்கும் ஆண்களை யோசிக்க வைக்கும் விதமாகவும், சமூக போராட்டங்களில் ஈடுபட்டால்தான் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் இக்கூட்டம் அமைந்தது.
தகவல் : புஜ செய்தியாளர்
பெண்கள் விடுதலை முன்னணி,
பென்னாகரம். பேச – 8870375836.