privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமிடாசின் சாதனை : குடிக்கும் ஆண்கள் பாட்டில் கழுவும் பெண்கள்

மிடாசின் சாதனை : குடிக்கும் ஆண்கள் பாட்டில் கழுவும் பெண்கள்

-

உழைக்கும் மகளிர் தினம் – புகைப்படக் கட்டுரை 7

காஞ்சிபுரம் மாவட்டம் என்றாலே பட்டு நெசவு, பாலாற்று விவசாயம் என்பதெல்லாம் இனி வெறும் கனவு மட்டுமே. ஆளும் அதிமுக குண்டர்களின்  ஆற்றுமணல் கொள்ளையால், குதறப்பட்டிருக்கும் மக்களின் வாழ்க்கைக்கு ஒரு சான்றுதான் தற்போது எச்சில் சாராய பாட்டில் கழுவும் நிலை. கிரிமினல் சசிகலாவின் மிடாசு சாராய கம்பெனிக்கு தேவையான பழைய பாட்டில் கழுவும் தொழில்தான் இப்போது இங்கு வளர்ந்து வருகிறது. காஞ்சிபுரம் – சென்னை ஆறுவழி நெடுஞ்சாலையில் உருவாகியிருக்கும் புதிய பட்டறைத் தொழில் இது.

காஞ்சிபுரம்-கருக்குப்பேட்டை வட்டாரத்தில்,  எச்சில் பாட்டில் கழுவும் கம்பெனிகள் பல குவிந்துள்ளன. கம்பெனி என்றால் அஸ்பெட்டாஸ் அல்லது ஓலையால் வேயப்பட்ட மாட்டுக் கொட்டகை. 10-க்கு 10-அடி அளவுள்ள 10-க்கும் மேற்பட்ட கழிவுத்தொட்டிகள் அடங்கிய கொட்டாய்கள்தான் கம்பனிகள். குப்பையிலிருந்தும் டாஸ்மார்க் பாரிலிருந்தும், காயலான் கடையிலிருந்தும் பொறுக்கபட்ட பழைய எச்சில் பாட்டில் மூட்டைகள்தான்,கச்சாப்பொருட்கள்போல் லோடு லோடாக கம்பெனிக்கு வரும்.

அச்சு அசலாக புதிய பாட்டில் போல் கழுவி மிடாசுக்கு அனுப்புவதுதான் இந்த கம்பெனிகளின் வேலை.
மூட்டைகளில் வந்த பாட்டில்களை ஓட்டை ஒடைசலை நீக்கி, 13க்கு மேற்பட்ட பிராண்டுகளின் வகைகளை பிரிக்க வேண்டும். பிறகு,பாட்டில்களின் வாய்புறத்தில் சுற்றியுள்ள பழையமூடியின் ரிங்கை (வளையம்) கோணி ஊசியால்  கழற்றி எடுக்கிறார்கள்.

கையை அரித்துத்தின்னும்  தண்ணிக்குள் 8 மணிநேரம்,  42 கிரேடு பாட்டில்களை கழுவினால்தான் 150 ரூபாய் சம்பளம்.

இப்படி,ஒரு கிரேடுக்கு 42 பாட்டில் பிரிக்கப்பட்டு, ஒரு தொட்டியில் ஒருமுறை 42 கிரேடு பாட்டில்கள் கொட்டப்படுகிறது. ஆசிட், சோப் ஆயில் ஊற்றப்பட்ட தொட்டியில் பாட்டிலில் ஒட்டியிருக்கும் பழைய லேபிளை விரலால் சுரண்டி எடுக்கவேண்டும். ”லேபில் கறை, பழைய பாட்டிலிலிந்து சீக்கிரம் போகவேபோகாது” என்று,நொந்து சொல்கின்றனர்,தொழிலாளர்கள். சுத்தமாக கழுவுவதற்கு அடுத்தடுத்த, மூன்று தொட்டிக்கு மாற்றப்பட்டு பளிச்சென ‘எலைட்’ பாட்டில்களாக உருவமாற்றம் அடைகிறது எச்சில் பாட்டில்கள்.

தகரம், பாத்திரமாய் மாறுவதற்க்கு நிகரான உழைப்பு இது. கையை அரித்துத்தின்னும்  தண்ணிக்குள் 8 மணிநேரம்,  42 கிரேடு பாட்டில்களை கழுவினால்தான் 150 ரூபாய் சம்பளம். ஆசிட் தண்ணீர் மேலே படாமல் இருக்க, எச்சில் பாட்டில் வரும் மூட்டைக்கோணிகளையே  உடம்பில் கவசமாக சுற்றிக் கொள்கிறார்கள்,பெண்கள். தொட்டி எட்டாத சிறுவர்கள், காலி கிரேடை காலுக்கு கீழேப்போட்டுக்கொள்கிறார்கள்.

“ஆசிட்டு தண்ணியில் தொடர்ந்து நிற்பதால், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் வரும், இதற்கு, லீவு போட்டால் சம்பளம் கட்டாகும் என்ன செய்வது?” என்று பெருமூச்சுவிடுகிறார்கள்.

பவானி, வயது 55.

பாட்டில் கழுவுறது என்னுடைய வேலை கிடையாது. பட்டு தறி நெய்யறதுதான் சொந்த தொழில். பட்டு தறி அழிஞ்சிப்போச்சி, வீட்டுக்காரு பெயிண்ட் அடிக்கற வேலை, கல்யாண சமையல் வேலைன்னு போவாரு… மாசம் புல்லா வேலை இருக்காது. பெரிய பையனுக்கு வயசு 30 ஆவுது.. அவனுக்கு வலிப்பு நோய் இருக்கு… எங்கயும் தனியா விட முடியாது. மனநலம் பாதிச்ச மாதிரி இருப்பான்.. அவனுக்கு எல்லா வேலைகளையும் நான்தான் செய்யணும். கவர்மெண்ட்ல உதவிக்கு வருஷக்கணக்கா அலைஞ்சதுதான் மிஞ்சம்.. எவனும் சரியான பதில் சொல்லறதுல்ல… செங்கல்பட்டு,மெட்ராஸ்னு தூக்கினு அலைஞ்சது முடியல… குழந்தையா இருந்தா பரவாயில்லை.. 30 வயசு பையன எப்படி தூக்க முடியும் சொல்லுங்க… இப்ப கடவுள்கிட்ட வேண்டிகிறது ஒண்ணுதான் நான், உயிரோட இருக்கும்போதே என் பிள்ளை போய்டணும்… நான் முதல்ல போய்ட்டா எம் புள்ள நாறிப்புடுவான்… அதை என்னால்  நெனச்சிக்கூட பார்க்கமுடியல…

ஒரு மூட்டை பாட்டில் மூடி எடுத்தா 7-ரூபா… கோணி ஊசிய வெச்சி கழற்றணும்… அடிக்கடி,கையில பாளமா பொளந்துக்கும்.. அன்னிக்கு வேலை போய்டும்.. ஒருமுறை உடைஞ்சிப்போன பாட்டில்மேல தவறி விழுந்துட்டேன்… உடம்பெல்லாம் பொத்துக்குனு புண்ணாயிடுச்சி.. தலைவிதி, எச்சப்பாட்டில துடைக்கற வேலைய செய்யறேன்.. எங்க வீட்டுக்காரும், நானும் உட்கார்ந்தமுனா, ஒரு வாரத்துல ஒரு சேலை அறுப்போம்.. தொழில் அழிஞ்சதாலே, பட்டு புடிச்ச கையில பாட்டில புடிச்சிட்டுருக்கேன்….

ஹேமலதா, 8-ம் வகுப்பு மாணவி

என்னைய போட்டோல்லாம் எடுத்து பேப்பர்ல போடாதீங்க.. எங்க டீச்சர் பார்த்தா திட்டும்..  வெள்ளேந்தியாக சிரித்தார். பாட்டில் கழுவுற வேலையெல்லாம் நாங்க செய்ய மாட்டோம்…  அக்காங்க, கழுவி வைச்சா… கேஸ்ல அடுக்கி… எண்ணி வைக்கற வேலைய செய்வோம்.லீவு வந்தா, வாரம் 50, 100 சம்பாதிப்போம். எங்கம்மாக்கிட்ட கொடுத்து எங்களுக்கு தேவையான பொருள வாங்கிக்குவோம். எங்கம்மாவும் பக்கத்துல கம்பெனியிலதான் பாட்டில் கழுவுது. எங்க கூட பத்தாவது படிச்சிட்டிருந்த கீதா அக்கா கூட எங்கம்மாக்கூட அங்க போகுது…

பாரதி, வயது 30

வீட்டுகாரரு ஆச்சாரி வேலை பாக்கறாரு… சம்பாதிக்கறத குடிச்சிட்டு வந்துடுவாரு….. பாட்டில கழுவிதான் குடும்பத்தை பாக்கணும் நான்… இந்த அழுக்கு பாட்டிலை நோண்டி, நோண்டி கழுவுனாதான் கூலி……கையும் காலும் ஆசிட் தண்ணிலய ஊறணும். டெய்லி இந்த தண்ணியிலத்தான் நான் நீச்சலடிக்க வேண்டி இருக்கு….. எதிருல நிக்கிற பிரியாவுக்கு இரண்டு வாரமா ஜூரம் இப்பத்தான் உடம்புத் தேறி வந்திருக்கா. அதோ,அந்த அக்கா கைய பாருங்க.. .. எந்த நேரமும் ஆசிட்டும், சோப்பாயிலும் கலந்த தண்ணியிலயே ஊறி உடம்பே செல்லரிச்சு போச்சு.. எவன்.. குடிக்காதனு சொன்னா கேட்கிறான்.. இந்த பாட்டில பாத்தவே நமக்கு… ஒப்ப மாட்டேனுது…. பல சமயம், பாட்டில்ல ஓணான், அரன, பாம்பு தவளை,,, னு பூச்சிங்க செத்துவரும்…  இந்த, பிரச.. வைச்சுதான் முடிஞ்சவரைக்கும் கழுவுவோம்.

எதுக்கு, ஒப்பாம.. இங்க வர்றோம்னா, இது குடும்ப செலவுக்கு தள்ளிக்கினுப் போய்டும். இன்னிக்கு கூலி வாங்கினா  காய்கறி சந்தையில கொழந்தைகளுக்கு ஒரு வாரத்துக்கு காய் ஆக்கிப் போட்டுடலாம்…

இங்கிருந்து, கழுவுற பாட்டிலெல்லாம், பெரிய பெரிய கம்பெனிகளுக்கு போகுதாம்…. 13 கம்பெனிப் பேரு சொல்லுவாங்க… பீரு, பிராந்தி, ஒயினு, விஸ்கி-னு  மெக்டோலு, வி.எஸ்.ஓ.பி, ராயல் சேலன்ஜ் னு என்னன்மோ சொல்றாங்க. இந்த இடத்திலேயே… சுத்தி, சுத்தி, எட்டு எடத்துல பாட்டில் கழுவுறாங்க…எங்க இருந்துதான் வருதோ மலை மாதிரி இவ்ளோ பாட்டில்கள்.

இந்த வேலையும் பத்தலை, ஏதோ எக்ஸ்ட்ரா கூலி கிடைக்கும்னுட்டு, லாரில லோடு ஏத்தற வேலையும் செய்வோம்.. அது,ஆம்பளங்க செய்ற வேலைனு சொல்லுவாங்க… . என்ன பண்றது…

இதுக்கூடப் பரவாயில்லை… வயசானவங்க எல்லாம் இங்க, குப்பையில எச்ச பாட்டில பொறுக்கற வேலைதான் செய்றாங்க… ரோட்டோரத்துல பாட்டில பொறுக்கிகினு போகும்போது லாரியில மாட்டி செத்த ஆயாவெல்லாம் இருக்காங்க… குடிகாரனுங்க பக்கத்துலபோய் பாத்துகினு, எப்ப குடிச்சி முடிப்பானுங்கனு காலி பாட்டில வாங்க நிப்பாங்க… அத பாக்கவே சகிக்காது… அதுக்கு இந்த பாட்டில கழுவுற வேலை எவ்ளோ பரவாயில்ல…

இளமதி, வயது 45

எனக்கு 2 ஆம்பிள பசங்க… படிக்கறானுங்க… வீட்டுக்காரு நூல் தறி நெய்றாறு… அவன்,குடிய கத்துக்கிட்டு குடியே கதின்னு ஆயிட்டான்… வீட்டுல இருக்கற எல்லாத்தையும் வெச்சி வாங்கி குடிக்கிறதே வேலை… பிள்ளைகளோட புக்கக்கூட வெச்சி குடிச்சிடுவான்… நான்  பாட்டில கழுவுனாத்தான் குடும்பம் நடத்தமுடியும்… அதில அவன் குடிக்கவும் பிடுங்கிடுவான். எப்ப வருவேன்னு காத்திருப்பான்.

ஆசிட்டால்-பொத்தலாகிப்போன-கை

என்னத்த சொல்ல, நாள் எல்லாம், எங்க வீட்டுக்காரு சாராய தண்ணீயில….. நான் இங்க எச்சில் பாட்டில கழுவுற அழுக்கு தண்ணியில….. இப்படியே வாழ்க்கைப்போயிட்டு இருக்கு…

இந்த வேலை, உடம்புக்கு ஒத்துக்கல… அடிக்கடி பல்வலி, ஜூரம்-னு பாடா படுத்தும்… சரி விட்டுட்டு தறி வேலைக்கே போயிடலாமுனு… புடவைக்கு பார்டர் வைக்கும், பார்டர் தறியும் நெஞ்சேன்…. கூலி சரியா தரல…. வேலையும் தொடர்ந்து தரல மறுபடியும் இங்க வந்துட்டேன்… இன்னும் எவ்ளோ நாள் செய்ய முடியுமுனு தெரியல… லீவு எல்லாம் எடுத்தா நமக்குத்தான் கஷ்டம்… வேலைக்கு வந்தா கூலி… இல்லைனா கிடையாது..  ஒரு வேளை டீ மட்டும் கொடுப்பாங்க.

சின்ன வயசுல  எங்கள எங்கம்மா, சாணித் தட்டி, சுள்ளிப்பொருக்கி இட்லி சுட்டு வித்து காப்பாத்துனாங்க…… இப்ப நான் எச்ச பாட்டில் கழுவி என் புள்ளைகள காப்பாத்துறேன், என்றார் விரக்தியாக.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

– வினவு செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க