privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்கோவை - புதுச்சேரி பகத்சிங் நினைவு நாள் ஆர்ப்பாட்டம்

கோவை – புதுச்சேரி பகத்சிங் நினைவு நாள் ஆர்ப்பாட்டம்

-

நாடு நம்மை அழைக்கிறது – பல்லடத்தில் பகத் சிங் நினைவு நாள் கூட்டம்

பல்லடம் செம்மிபாளையத்தில் அமைந்துள்ள ஜி‌டி‌என் கம்பெனியில் பணி புரியும் 220 தொழிலாளர்களும் போராடும் சங்கமான புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஆனால், நிர்வாகம் இதனை ஏற்க மறுத்து தொழிலாளர்களை பல்வேறு வகையில் பழிவாங்க ஆரம்பித்தனர். இதற்கு எதிராக தொழிலாளர்கள் கடந்த 24.03.2017 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் உள்ளனர். கம்பெனிக்கு நேர் எதிரில் போராட்ட பந்தல் அமைத்து செங்கொடிகளுக்கு இடையே போராட்டம் நடைபெறுகிறது. 31.03.2017 அன்று காலை 11 மணி அளவில் தோழர்கள் பகத் சிங் ராஜகுரு சுகதேவ் ஆகியோரின் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜி‌டி‌என் துணைத் தலைவர் தோழர் சந்திரஹாசன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் விளவை இராமசாமி தியாகத் தோழர்கள் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

மாநில துணை தலைவர் விளவை இராமசாமி தியாகத் தோழர்கள் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
மாநில துணை தலைவர் விளவை இராமசாமி தியாகத் தோழர்கள் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

தொழிலாளர்களாகிய நமக்கு என்று ஒரு மரபு உண்டு. வரலாற்று தொடர்ச்சி உண்டு. அதனை தெரிந்து கொள்வதன் மூலம் இன்றைய தினத்தில் போராடுவதற்கான ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள முடியும். நம்முடைய மரபில் மகத்தான 1917-ஆம் ஆண்டு ரசியப்புரட்சி உள்ளது. இதிலிருந்து ஊக்கமும் ஆக்கமும் பெற்ற இந்திய தொழிலாளி வர்க்கம் போராடத் துவங்கியது. போராட்டத்தை நசுக்குவதற்கு வெள்ளை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தொழிலாளர் விரோத சட்ட மசோதா கொண்டு வர எத்தனித்தது. இதனை எதிர்த்து இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக தோழர் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டு வீசினார். வெறுமேன சத்தமும் புகையும் மட்டும் வரக்கூடிய குண்டுகளை வீசி வெள்ளை அரசாங்கத்தை அதிரச் செய்தார்.

அதன் பின்னர் தனது சிறை வாழ்க்கை மூலமும் நீதிமன்றங்களை பிரச்சாரம் செய்யும் மேடையாக மாற்றியதன் மூலமும் தனது வாழ்க்கையே போராட்டம் என்றார். தனது வாழ்க்கையே இந்திய மக்களுக்கு ஓர் செய்தி என்றார் தனது வாழ்க்கையே இன்பத்தின் ஊற்று என நிலை நாட்டினார். இந்திய தொழிலாளி வர்க்கத்துக்கு போராடுவதற்கு ஆற்றல்களை அள்ளித் தரும் மகத்தான மரபு இது. நாம் இன்று அனுபவித்து வரும் எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட இதர உரிமைகள் அனைத்தும் இதன் மூலமே நமக்கு வாய்த்தது என்பதை நெஞ்சு நிமிர்த்தி பூரிப்புடன் நினைவு கூறுவோம். இத்தகைய மாபெரும் வரலாற்றின் தொடர்ச்சி தான் இன்று நாம் நடத்தும் போராட்டம் என்று உணர்ந்து கொண்டால் போராடுவதற்கு நமக்கு இன்னும் உரம் கிடைக்கும்.

1930-களில் இந்திய பாராளுமன்றத்தில் தொழிலாளர் விரோத மசோதா கொண்டு வரப்பட்டது. மாபெரும் தோழர்கள் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் மூலம் இந்திய தொழிலாளர் வர்க்கம் பதிலடி கொடுத்தது.

ஜி‌டி‌என் கம்பெனியில் பணி புரியும் 220 தொழிலாளர்களும் போராடும் சங்கமான புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்
ஜி‌டி‌என் கம்பெனியில் பணி புரியும் 220 தொழிலாளர்களும் போராடும் சங்கமான புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்

2017 ஆம் ஆண்டும் தொழிலாளர் விரோத மசோதாக்கள் இந்திய பாராளுமன்றத்தில் கொண்டு வந்து விட்டனர். இதனை இந்திய தொழிலாளி வர்க்கத்தின் பிரதிநிதியாக நின்று பகத்சிங் வழியை விட இன்னும் ஆயிரம் மடங்கு வீரியத்துடன் வரலாறு விதித்துள்ள கடமையை நிறைவேற்றும் இடத்தில் நாம் உள்ளோம். புஜதொமு தலைமையில் இதனை நிறைவேற்ற சபதமேற்போம்.

தோழர் பகத்சிங் தனது 23ஆம் வயதில் லாலா லஜபதி ராய் மீது தடியடி நடத்திய போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றார். பத்திரிக்கை நடத்தினார். நான் நாத்திகன் ஆனது ஏன் ? போன்ற பல நூல்கள் எழுதினார். பாராளுமன்றத்தில் தொழிலாளர்களுக்காக குண்டு வீசினார். வெள்ளைக்கார நீதிமன்றங்களை நாட்டு விடுதலைக்கான பிரச்சார மேடையாக்கினார். கடுகளவும் கவலையின்றி கம்பீரமாக தூக்கு மேடை ஏறினார். இதற்கெல்லாம் அவருக்கு எந்தவித முன் அனுபவமும் இல்லை. அவர் தன் ஆளுமைக்கு முன் மாதிரியாக யாரையும் வரித்துக் கொள்ளவில்லை. தானே ஒரு முன்மாதிரியாக நடந்து கொண்டார்.

 நாடு நம்மை அழைக்கிறது. அழைப்பை ஏற்று அணிவகுப்போம்
நாடு நம்மை அழைக்கிறது. அழைப்பை ஏற்று அணிவகுப்போம்

1931 மார்ச் 23 இல் மாலை 7.30 மணிக்கு தூக்கு மேடை ஏறும் போதும் தோழர் லெனின் எழுதிய அரசும் புரட்சியும் எனும் நூலை படித்துக் கொண்டுள்ளார். 1917 ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூலை தடை செய்யபட்ட நிலையிலும் சிறைக்குள்ளே அதனை பெற்று படிக்கிறார் என்றால் தன்னை எப்போதும் புத்தாக்கம் செய்தே வைத்துள்ளார். இதுதான் நாம் பெற வேண்டிய படிப்பினை ஆகும். தோழர்களுடைய வாழ்க்கையின் பாடங்களை இது போல நாம் பயின்று இன்றைய புற நிலையை எதிர்கொள்ள வேண்டும்.

சேலம் உருக்காலை தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறி விற்கப்படுகிறது. தேசிய பஞ்சாலை கழக மில்கள் விற்கப்படுகிறது. 15 ஆயிரம் கோடி ரூபாய் பொதுத்துறை விற்பனை மூலம் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் மூலம் நமது குழந்தைகளுக்கான கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பதன் மூலம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் அழிக்கப்படுகிறது. காவிரியில் தண்ணீரை மறுத்து மணல் திருட்டு ஊக்குவிக்கப்படுகிறது. ஓசூரில் MBA Engineering படித்த 22 வயதான காதல் தம்பதிகள் வேலை கிடைக்காமலும் நுகர்வு வெறியின் காரணமாக கொள்ளைக்காரர்களாக மாறி வாழ்வை இழக்கிறார்கள்.

இப்படியாக தமிழ் சமூகம் புழுத்து நாறுகிறது. புரட்சியை  எதிர்பார்த்து ஏங்குகிறது. பகத்சிங் தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில் கூறியது போல நாடு நம்மை அழைக்கிறது. அழைப்பை ஏற்று அணிவகுப்போம் எனக் கூறி முடித்தார்.

தகவல்
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
கோவை


பகத் சிங் சுகதேவ் ராஜகுரு நினைவு நாள்.
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் பார்ப்பன பாசிசத்தை மோதி வீழ்த்துவோம் !
அதற்கான களமாக தமிழகம் – புதுவையை மாற்றுவோம் !

ன்றைய மிக அசாதாரணமான போராட்டக் களமாக மாறியுள்ள அரசியல் சூழலில், சினிமா கழிசடைகளை தங்களது ஆதர்ச ஹீரோக்களாக எண்ணிக் கொண்டு அவர்களின் பின்னே அணிவகுக்கும் இளைஞர்கள், மாணவர்களுக்கு, உண்மையில் யார் நமக்கு ஹீரோவாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகவும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அடிமை சேவகம் செய்வதையே சுதந்திரம் என்று சொல்லி நம்மை ஏமாற்றி வந்த ‘மகாத்துமா’வின் துரோகத்தை தோலுரித்து, ஏகாதிபத்திய எதிர்ப்புக் கனலை நாடெங்கும் விசிறியெழச் செய்து, சமூக மாற்றமே உண்மையான விடுதலை என்பதை உரக்கச் சொல்லி சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவை வழிநடத்தும் அரசியல் கம்யூனிசமே என்பதை நடத்திக் காட்ட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையிலும், அதற்குத் தடையாக உள்ள ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் பார்ப்பன பாசிசத்தை மோதி வீழ்த்தவும், அதற்கான களமாக தமிழகம் – புதுவையை மாற்ற வேண்டிய அவசியத்தை உணர்த்தியும் மார்ச் 23 பகத் சிங், சுகதேவ், ராஜகுரு, நினைவு நாளில் புதுச்சேரி புமாஇமு, புஜதொமு சார்பில் வில்லியனூர் கோட்டமேடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர – மாணவர் இளைஞர் முன்னணியின் புதுச்சேரி அமைப்பாளர் தோழர் பரத் தலைமை தாங்கினார்.

அடுத்ததாக, புஜதொமு புதுச்சேரி மாநில துணைத் தலைவர் தோழர் மகேந்திரன், பிரிட்டிஷ் காலனிய அரசால் கொண்டு வரப்பட்ட தொழிலாளர் நலச் சட்டங்கள் தொழிலாளர் நலன்களுக்கு எதிராக இருப்பதை அம்பலப் படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் குண்டு போட்டு, பிரிட்டிஷ் காலனியவாதிகளின் செவிட்டுக் காதுகளைக் கேட்க வைத்தார். தற்போது தொழிலாளர்களுக்கென 44 சட்டங்கள் இருப்பதாகச் சொன்னாலும், தொழிற்சங்கம் அமைக்கவோ, சட்டப்படியான உரிமைகள் கோரவோ முடியவில்லை. மாருதி, பிரிக்கால் தொழிலாளர்கள் மேற்படி உரிமைகள் கோரியதற்காக கொலைப் பழி சுமத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இச்சட்டங்களும்  தொழில் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருப்பதாகச் சொல்லி, ஒழிக்கப் பட்டு விட்டது. புதிய குலக்கல்வித் திட்டத்தை திணிக்கும் புதிய கல்விக் கொள்கை, சமூக நீதியை மறுக்கும் நீட் தேர்வு என மாணவர் கல்வி உரிமைகளை பறித்து வருகிறது மோடி அரசு, காவிரியில் தண்ணீர் விட மறுப்பது, மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன் என விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் நாசகர திட்டங்களை திணிப்பது என அனைத்து தரப்பு அடித்தட்டு மக்களையும் ஒழிக்கும் வகையில் செயல்படும் பார்ப்பன பாசிச மோடி அரசை வீழ்த்த வேண்டுமெனில், ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான இந்தப் போர் எங்களோடு தொடங்கியதுமில்லை, எங்கள் வாழ் நாளோடு முடியப் போவதுமில்லை என முழங்கிய பகத் சிங் உள்ளிட்ட தியாகத் தோழர்களின் வழியில் அப்போரைத் தொடர்ந்து நடத்தி முடிப்பது தான் தீர்வு என சொல்லி நிறைவு செய்தார்.

அடுத்து உரை நிகழ்த்திய எல் & டி பாட்டாளி தொழிற்சங்க செயலாளர், தோழர் மாதேஷ்வரன், இவ்வார்ப்பாட்டத்தில் பேச அழைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்து பேசத் துவங்கிய தோழர், தியாகிகளின் நினைவு நாளில் மகிழ்ச்சி என்ற வார்த்தையைச் சொன்னதன் பொருள், அத்தியாகத் தோழர்களின் பணியைத் தொடரவும், அதைப் பற்றி சிந்திக்கத் தூண்டியதற்குமாகத் தான் என்றார். மோடியின் மக்கள் விரோதத் திட்டங்களைச் சாடிய தோழர், இன்றைய சூழலில் மாற்று அரசியல் தேவை என்பதையும், ஓட்டுக் கட்சிகளை விட்டொழித்து, ஒன்றுபட்டுப் போராடுவது ஒன்று தான் வழி என்பதையும் உறுதிபடக் கூறி முடித்தார்.

இறுதியாக உரையாற்றிய புஜதொமு மாநில இணைச் செயலாளர், இன்று யார் கதாநாயகர்கள், மக்களின் உழைப்பை கோடி கோடியாய் சுரண்டும், கிரிக்கெட் கழிசடைகளும், சினிமா பொறுக்கிகளுமா நமக்கு கதாநாயகர்கள்? தங்களது செயல் மரணத்தைத் தான் பரிசாகத் தரும் என்று தெரிந்து தங்களது மரணத்தைக் கூட ஒரு அரசியல் செயல்திட்டமாக நடத்திக் காட்டி தியாகத்தின் ஒப்பற்ற தோழர்களான பகத்சிங், சுகதேவ், ராஜகுரு தானே நமக்கு கதாநாயகர்களாக இருக்க முடியும். போராட்டம் என்பது அதன் வடிவத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை. அதன் அரசியல் உள்ளடக்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது. காந்தியின் போராட்ட வடிவங்கள் பிரிட்டிசாரின் நகத்தைக் கூட அசைக்கவில்லை. ஆனால், பகத்சிங்கின் அரசியல் உள்ளடக்கம் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை குலை நடுங்கச் செய்தது.

மேலும், மோதி வீழ்த்துவது என்பது நேருக்கு நேர் நின்று தெருவில் இறங்கி சண்டை போடுவது மட்டுமல்ல, நம்மீதான பொருளாதாரத் தாக்குதல்கள், சமூக ஒடுக்குமுறைகளை அவ்வப்போது போராடுவது என்ற அளவில் இல்லாமல், விடாப்பிடியாகவும், இறுதிவரையிலும் உறுதியாகப் போராடி வீழ்த்துவது தான்.

இன்று, அனைவருக்குமான நல்லாட்சி தருவதாக சொல்லி ஆட்சியைப் பிடித்த மோடி கும்பல், மாணவர்களின் கல்வி உரிமையை மறுக்கும் கல்விக் கொள்கைகளையும், தொழிலாளர் உரிமையைப் பறிக்கின்ற தொழிலாளர் சட்டத் திருத்தத்தையும், விவசாயிகளின் உயிரைப் பறித்து, நாட்டையே பாலைவனமாக்கும் நாசகாரத் திட்டங்களையும் திணித்து வருகிறது. கருப்புப் பண ஒழிப்பு என்று சொல்லி, மக்களின் சிறு சேமிப்பையும் பிடுங்கி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எடுத்துக் கொடுக்க குறுக்கு வழிகளின் மூலம் முயற்சி செய்கிறது. ஓட்டுக் கேட்க வரும் முன் இத்திட்டங்களை எல்லாம் நடைமுறைக்கு கொண்டு வருவதாகச் சொல்வதில்லை. தான் சொன்னதையே செய்ய முடியாமல், மக்களுக்கு எதிராக செயல்படுகிறது மோடி அரசு.

மறுபுறம் அனைவருக்கும் பொதுவான அரசு என்று சொல்லிக் கொண்டு, தனது பார்ப்பன கொடுங்கரங்களால் எழுத்தாளர்கள், மாணவர்கள், அடித்தட்டு மக்களைக் கொலை செய்து கலவரங்களின் மூலம் ஆட்சியைப் பிடிப்பது என தனது இந்துத்துவத்தை திணிக்க பயங்கரவாதத்தை திணித்து வருகிறது.

மக்களின் அன்றாட வாழ்க்கையை, உரிமையைக் காக்க வக்கற்றும், அமைதியான வாழ்வை உத்திரவாதப் படுத்த முடியாமல் பொருளாதாரத் தாக்குதல்களாலும், மதவெறி பயங்கரவாதத்தாலும் மக்களை நிலை குலையச் செய்து தான் மக்களுக்குச் சொன்ன எதையும் செய்ய முடியாமலும், எதிராகவும் மாறிப் போன இந்தக் கட்டமைப்பை மோதி வீழ்த்துவது தான் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாளில் நாம் ஏற்க வேண்டிய சூளுரை என்று சொல்லி முடித்தார்.

இறுதியாக புமாஇமு தோழர் பிரகாஷ் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புதுச்சேரி. தொடர்புக்கு: 8124412013, 9597789801

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க