பக்தனாய் பாடவில்லை
சுயமரியாதை சித்தனாய்
கனகசபையில்
கனன்றெழுந்த உன் பாடல்,
எத்தனாய் திரிந்த
தீட்சிதக் கொட்டமடக்கி
அத்தனாய் வீற்றிருந்த
அம்பலத்தரசும்
உன்பலத்தால் ஆடியதை
உலகமே கண்டதய்யா
ஆறுமுகச்சாமி !
வேதியர் வடிவில்
நந்தனின் கனவில் வந்த
ஈசன்,
முதியவர் உருவில்
நீ முன்னேறியதைப் பார்த்து
ஜோதியில் கலக்காமல்
சுயமரியாதையில் கலந்தான்.
வாழ்ந்தால்
உம் போல் வாழ வேண்டும்
எந்த வடிவிலும்
இடையறாது போராட வேண்டும்.
பனித்த சடையும்
பவளம் போல் மேனியும்,
பார்ப்பனத் திமிருக்கெதிராய்
தெறித்த உன் சொல்லால்
தமிழினித்த உருவமாய்
தடுத்தாட் கொண்டாய்
ஆறுமுகச்சாமி !
எல்லோரும்
கடவுள் மேல்
பாரத்தை போடையில்,
கடவுள் பாரத்தை
உன் மேல்
போட்டுக்கொண்டாய் !
வியாபாரம் பார்த்த
வேதியக் கூட்டத்தை
தமிழ் தேவாரம் பாடி
தன்மானம் காட்டினாய்
தாவாரம் நின்று
தயங்கிய பக்தர்களுக்கு
சிற்றம்பல அவமானம் போக்கி
தமிழ் மானம் ஊட்டினாய் !
இரைஞ்சுதல்
இறை நெறி என்று
அடியார்கள் அடங்கையில்,
போராடுதல்
பொது நெறி
என எழுந்த உன் ஆளுமை
ஈசனுக்கும் வாய்க்கவில்லை !
சிவனடியார் ஆறுமுகச்சாமி
எவனடிக்கும் படியார்.
சிவனே
ஒரு தில்லைவாழ் அந்தணன்
என அவிழ்த்துவிட்டாலும்
சீறும்
சுயமரியாதை முடியார்.
ஆயிரம் முறை
ஆரியக் காட்டுமிராண்டிகள்
தள்ளிவிட்டாலும்
அம்பலத்தேற
மனம் ஒடியார்.
‘பொது தீட்சீதர்
கோயில் தனியார்’
எனும் அநீதிக்கெதிராக
அடங்கார்.
அய்யா ஆறுமுகச்சாமி
உம் போல் இனி யார் ?
விடையேறி திருமேனியனுக்கும்
தமிழ் தடை உடைத்த கண்மணியே
நெற்றியெல்லாம் திருநீறு
உன் நெஞ்செல்லாம் தமிழ் வீறு
ஓயாதய்யா உன் போர் !
போற்றுதலுக்குரிய
உம் போராட்டக் குணம் பற்றி,
தமிழுணர்வின் சிற்சபை காட்ட
சுயமரியாதை அற்புதம் காட்ட
ஆயிரமாயிரம்
ஆறுமுகச்சாமிகள் வருவார் !
–துரை. சண்முகம்