privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதயாராகிறது தஞ்சை ! தடுக்கப் பார்க்கிறது காவல் துறை !

தயாராகிறது தஞ்சை ! தடுக்கப் பார்க்கிறது காவல் துறை !

-

“விவசாயிகளை வாழவிடு” என்று கோரினால் அரசுக்கு ஏன் வேர்க்கிறது? தஞ்சையில் நடைபெறும் மாநாட்டை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று சட்டப்பூர்வமாகவே முயற்சி செய்தார்கள். திருவள்ளுவர் (திலகர்) திடலில் அனுமதி கேட்ட போது காவல் துறை இழுத்தடித்தது. பிறகு உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அனுமதி வாங்கியது மக்கள் அதிகாராம். சட்ட ரீதியாக முறியடிக்கவில்லை என்பதால் தற்போது சட்ட விரோதமாக முயற்சி செய்கிறார்கள்.

தமிழகமெங்கும் மக்கள் அணிதிரண்டு வருவதை தடுக்க நினைக்கிறது காவற்துறை. அதற்காகவே மாநிலமெங்கும் உள்ள பேருந்து உரிமையாளர்களை மிரட்டி பணிய நினைக்கிறது. மாநாட்டிற்கு மக்கள் வருகையை தடுத்து நிறுத்திவிட்டால் அரசின் மறைமுக உத்திரவை நிறைவேற்றிவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறது காவல் துறை. இது குறித்து மக்கள் அதிகாரம் சார்பில் தோழர் காளியப்பன் தெரிவித்திருக்கும் பத்திரிகை செய்தியை வெளியிடுகிறோம். ஊடக நண்பர்கள் இச்செய்தியினை பரப்புமாறும் கோருகிறோம். நன்றி

– வினவு

04.08.2017

காளியப்பன்,
மாநிலப் பொருளாளர்.

பத்திரிகைச் செய்தி

மிழக விவசாயிகள், மிகக் குறிப்பாக டெல்டா விவசாயிகள் பெரும் நெருக்கடியில் சிக்கித்தவிக்கின்றனர். இதுவரை கண்டிராத வகையில் அதிர்ச்சி மரணங்களும், தற்கொலைச் சாவுகளும் நிகழ்ந்துள்ளன. கூலி விவசாயிகள் சொல்லொணா வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

மத்திய அரசும், மாநில அரசுகளும் பின்பற்றிவரும் விவசாயக் கொள்கைகள்தான் இதற்கு அடிப்படைக் காரணம். உதாரணத்திற்கு 23 விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை தீர்மானிக்கப்பட்டாலும் அதை உறுதிப்படுத்த எந்த கொள்முதல் நடவடிக்கையையும் அரசுகள் எடுப்பதில்லை.

எனவே, தனியாரிடம் அற்ப விலைக்கு விற்கும்படி விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். கொள்முதல் செய்த கரும்புக்குக்கூட பணம் தராமல் ஆண்டுக்கணக்கில் அரசு ஆலைகளே இழுத்தடிக்கின்றன. எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் கண்டுகொள்வதில்லை., மாறாக, துப்பாக்கி முனையில் ஒடுக்குகின்றன.

உணவு உற்பத்தியின் முதுகெலும்பாக இருக்கும் சிறிய, நடுத்தர விவசாயிகளை ஒழித்து, விவசாயத்தைக் கார்ப்பரேட் மயமாக்குவதும், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கை வளங்களைக் கொள்ளையிடுவதுமே அரசுகளின் நோக்கமாக உள்ளது. தமிழகத்தில் கடலூர், நாகை மாவட்டங்கள் பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருப்பதே இதற்குச் சான்று.

இத்தகைய சூழலில், இதுகுறித்துத் தமிழகம் தழுவிய அளவில் விவாதத்தைத் தொடங்கவும், விவசாயிகளை ஒருங்கிணைக்கவும் “விவசாயியை வாழவிடு” என்ற முழக்கத்தோடு மாநில மாநாட்டை நாளை, 05.08.2017 – சனிக்கிழமையன்று தஞ்சை திலகர் திடலில், மக்கள் அதிகாரம் சார்பில் நடத்தவுள்ளோம்.

இம்மாநாட்டில் வேளாண் வல்லுநர்களும், அறிஞர்களும், விவசாயிகள் சங்கத் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். அகில இந்திய கிசான் மஸ்தூர் சங்கத்தலைவர் தோழர் வெங்கட்ராமையா (ஆந்திரா), தோழர் கத்தார் சிங் (பஞ்சாப்) ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நேருரைகள், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. “விவசாய நெருக்கடியும், தீர்வும்” என்ற சிறுவெளியீடும் வெளியிடப்படவுள்ளது.

கருத்தரங்கம் காலை 10 மணிக்கும், மாநாடு மாலை 5.30-க்கும் தொடங்கும். விவசாயப் பிரச்சனை சமூகத்தின் ஒட்டுமொத்தப் பிரச்சனை என்பதை உணர்ந்து அனைத்துப் பிரிவு மக்களும் கலந்துகொண்டு வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மாநாட்டைத் தடுப்பதற்கு காவல்துறை தொடர்ச்சியாக முயன்றுவந்தது. அனுமதி தராமல் இழுத்தடிப்பது, பிரச்சாரத்தைத் தடுப்பது என முடக்கினர். உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடுத்து அனுமதி பெற்றுள்ளோம். இந்நிலையில் பல இடங்களில் பேருந்து உரிமையாளர்களை மிரட்டி மக்களைக் கலந்துகொள்ளவிடாமல் தடுப்பதற்குக் காவல்துறை முயல்கிறது. இது, ஜனநாயகவிரோத நடவடிக்கை மட்டுமல்ல; நீதிமன்ற அவமதிப்புமாகும். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்; இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

தோழமையுடன்,
காளியப்பன்,
மாநிலப் பொருளாளர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

_____________

விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி