privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்சிறு தொழில்கள்சிறு குறு தொழில்களை அழிக்கப்போகும் ஜி.எஸ்.டி !

சிறு குறு தொழில்களை அழிக்கப்போகும் ஜி.எஸ்.டி !

-

விவசாயம் : வருமானம் இரட்டிப்பாகவில்லை! வரி இரட்டிப்பாகிறது!!

நாட்டின் முன்னுரிமைத் தொழிலாகக் கருதப்பட்டு, வரிச்சலுகைகள் வழங்கப்பட்டு வந்த விவசாயத்தை சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வரம்புக்குள் கொண்டுவந்து, வரி விகிதத்தையும் அதிகரித்திருக்கிறது மைய அரசு. நாடு முழுவதும் விவசாயம் நொடித்துப் போய், விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வரும் இன்றைய நிலையில், விவசாயத் துறையில் நடந்துள்ள இம்மாற்றம், அந்த அவலத்தை மேலும் தீவிரப்படுத்தக் கூடும்.

அனைத்து வகை உரங்களுக்கும் இதுவரை 6% (வாட்வரி 5% + கலால்வரி 1%)  ஆக  இருந்துவந்த வரி, ஜி.எஸ்.டி-யில் 12% ஆகவும், பூச்சிமருந்துகளுக்கு 12% முதல் 15% வரை இருந்த  வரி 18% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மருந்து  தெளிப்பான்களுக்கு 18% , பி.வி.சி. குழாய்களுக்கு 16%, சொட்டுநீர், தெளிப்பு நீர்க் கருவிகளுக்கு 12%, டிராக்டருக்கு 12% , அதன் உதிரி பாகங்களுக்கு 18% என ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டிருப்பது, ”விவசாயிகளை விவசாயத்தை விட்டு விரட்டாமல் மோடி ஓயமாட்டார்” என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது.

இதற்கு அப்பால், ஆதார் அட்டை இருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும் என்ற புதிய விதியை ஜி.எஸ்.டி.க்குப்பின் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. உர விநியோகத்தை ஆதாருடன் இணைப்பது, எதிர்காலத்தில் விவசாயிகளை உரத்தைச் சந்தை விலைக்கு வாங்கிக்கொள்ள வைக்கும் சதித்தனம் கொண்டதாகும்.

இப்படியுமா நடக்கும் எனச் சந்தேகிப்பவர்கள், எரிவாயு உருளை வாங்குவதை ஆதாருடன் இணைத்த பிறகு என்ன நடந்தது என்பதை எண்ணிப் பாருங்கள். 50 கிலோ யூரியா தற்போது 260 லிருந்து 300 ரூபாய்க்குள் கிடைக்கிறது. இந்த ஆதார் இணைப்புக்குப் பிறகு, உரத்தைச் சந்தை விலைக்கு அதாவது, 1,800 ரூபாய்க்கு வாங்க வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு ஏற்படும்.

இதற்கு அப்பால், இதுவரை விவசாயம் என்ற வரையறைக்குள் இருந்த வேளாண் துணைத் தொழில்களான பால்பண்ணை, கால்நடைகள் வளர்ப்பு, விதைப் பண்ணை, நாற்றுப் பண்ணை, மற்றும் கால்நடை இனப்பெருக்கம், ஒப்பந்த விவசாயம் ஆகியவற்றை விவசாயப் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டது ஜி.எஸ்.டி. கவுன்சில். ஆனால், டாட்டா, பிர்லா போன்ற பெருமுதலாளிகள் ஈடுபட்டுள்ள தேயிலை எஸ்டேட்டுகள் விவசாயப் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்பதோடு, தேயிலைக்கு ஜி.எஸ்.டி.யிலும் முந்தைய 5% வரியைத் தொடரவும் அனுமதித்துள்ளனர்.

முன்பு விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்வதற்கு 2% வாட் வரி மட்டுமே விதிக்கப்பட்டிருந்தது. தற்போது பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் பால் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யில் 5% முதல் 18% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல, நிலத்தடி நீர் வற்றிப்போனதால் விவசாயம் செய்ய முடியாமல் போன நிலத்தில், சிறு அளவிலான ஆடு, மாடு, கோழிப் பண்ணைகள் வைத்துப் பிழைக்கும் சிறு விவசாயிகளும் இனி ஜி.எஸ்.டி. செலுத்தவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஜி.எஸ்.டி.யின் கீழ் வரி செலுத்தாமல் இருக்க வேண்டுமானால், ஆண்டுக்கு 20 இலட்சம் ரூபாய்க்குள் வருமானம் இருப்பதாக அரசுக்குக் கணக்குக் காட்ட வேண்டும். வங்கிக் கணக்குத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் முதல் 10 – ஆம் தேதி கொள்முதல் கணக்கும், 20-ஆம் தேதி விற்பனைக் கணக்கும், 30-ஆம் தேதி வரி செலுத்திய கணக்கும் கட்டாயம் அனுப்ப வேண்டும். இதற்கான ரசீதுகளை 6 மாதம் வரைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இது ஒவ்வொன்றுக்கும் விவசாயிகள் ஆடிட்டரிடம் ஓட வேண்டும்.

விவசாய விளைபொருள்களுக்கு ஜி.எஸ்.டி. யில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் மோடி. ஆனால், உண்மை என்ன? நெல் கொள்முதலுக்கு வரி இல்லை. ஆனால், அதை அரிசியாக்கிப் பையில் அடைத்து விற்றால் வரி. கோதுமை கொள்முதலுக்கு வரி இல்லை. ஆனால், அதை மாவாக்கி விற்றால் வரி. மிளகாயைப் பவுடராக்கி பையில் அடைத்தால் வரி. எலுமிச்சை பழத்திற்கு வரி இல்லை. ஆனால், ஊறுகாய்க்கு வரி.

அச்சிடப்பட்ட பிராண்டு பெயரில் விற்பதெல்லாமே ‘மதிப்புக் கூட்டல்’ என்று வரையறை செய்கிறது ஜி.எஸ்.டி. கவுன்சில். ஒரு ரூபாய் கடுகு, இரண்டு ரூபாய் மிளகு, 5 ரூபாய் சீரகம் என்று கிராமத்துப் பெட்டிக் கடைகளில் விற்பவை அனைத்தும் கண்மார்க் ஊறுகாய், அமிர்தா ஸ்பைசஸ், மான் மார்க் கடலைமிட்டாய் என ஏதோவொரு பெயரில் அச்சிடப்பட்ட பாக்கெட்டுகளில்தான் விற்கப்படுகின்றன.

இவைகளில் பெரும்பாலானவை ஒரு மாவட்ட அளவிலோ அல்லது வட்டார அளவிலோ செயல்படும் குறுந்தொழில் – குடிசைத்தொழில்கள். குடும்ப உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்டு, இருசக்கர வாகனங்களில் ஊர் ஊராகக் கொண்டுசென்று பெட்டிக்கடைகளுக்கு 2-3% சதவீத இலாபத்திற்கு சப்ளை செய்து பிழைக்கின்றனர். தற்போது இவர்களையும் ஆச்சி, சக்தி மசாலா நிறுவனங்களுக்கு இணையாக வரி செலுத்த வேண்டும் என்று நிர்பந்திக்கிறது ஜி.எஸ்.டி. கவுன்சில்.

ஏற்கனவே ஒரு ரூபாய்க்கு கிளினிக் பிளஸ் ஷாம்பு, 5 ரூபாய்க்கு கோல்கேட் பற்பசை எனப் பன்னாட்டுக் கம்பெனிகளின் சரக்குகள் கிராமப்புற சில்லறை வர்த்தகத்தைக் கணிசமாகக் கைப்பற்றிவிட்ட  நிலையில், அச்சந்தையில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கும் சிறு, குறு, குடிசைத்தொழில்களின் மீது கடைசி ஆணியை இறுக்கும் நோக்கத்தோடுதான் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஜி.எஸ்.டி., தேசிய வேளாண் மின்னணு சந்தை, வேளாண் பொருட்கள் மற்றும் கால்நடைகள் விற்பனைக் கமிட்டி சட்டம் என மோடி அரசால் கொண்டுவரப்படும் மாற்றங்கள் அனைத்தும், பாரம்பரியமான முறையில் நடந்துவரும் வேளாண் தொழில் தொடங்கி கிராமப்புற சிறு தொழில்கள் வரையிலும் உள்ள சுயசார்பு தொழில்களை ஒழித்துவிட்டு, அச்சந்தையை இந்தியத் தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கும் தூக்கிக் கொடுப்பதையே பின்புலமாகக் கொண்டுள்ளன.

ஆனால், இதனை மூடிமறைத்து, ஜி.எஸ்.டி.யால் கள்ளச்சந்தை ஒழியும், விலைவாசி குறையும் என்று கூவுகிறது மோடி கும்பல். கருப்புப் பணத்தை ஒழிக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்று புளுகியதைப் போல, இதிலும் புளுகுணியாட்டம் நடக்கிறது.

இந்த உண்மை இன்று வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், எதிர்காலத்தில் வெளிச்சத்திற்கு வந்துவிடும். தனியார்மயம், தாராளமயம், உ.வ.க.வில் இந்தியா இணைந்தது ஆகியவை குறித்து உருவாக்கப்பட்ட மாயைகள் தகர்ந்து, உண்மை அம்பலத்திற்கு வந்திருப்பது போல, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட மாற்றங்கள் குறித்துக் கட்டப்படும் மாயைகளும் தகர்ந்து போகும்.

– மாறன்

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

_____________

விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி