privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விசோசலிசத்தில் மோசார்ட் இசைப்பார் - முதலாளித்துவத்தில் இசைக்க மாட்டார் !

சோசலிசத்தில் மோசார்ட் இசைப்பார் – முதலாளித்துவத்தில் இசைக்க மாட்டார் !

-

சோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள் – 2

“கருத்துச் சுதந்திரம் கிடைக்கவில்லையே என்று எப்போதாவது கவலைப் பட்டதுண்டா?” என்று கேட்டான் பிராங்.

உண்மையில் இல்லை. சுருக்கமாக சொன்னால், அதைப் பற்றி எதுவும் தெரியாது. அங்கு சில விடயங்கள் தடை செய்யப் பட்டிருந்தாலும், ஒடுக்கப் படுகிறோம் என்று யாரும் கருதிக் கொள்ளவில்லை. மேற்குலகில் பல தசாப்தகாலமாக கருத்துச் சுதந்திரம் உள்ளது. ஆனால், தவறுகளுக்கும் குறைவில்லை.

எதையுமே மாற்ற முடியாத கருத்துச் சுதந்திரம் எதற்கு? அது இருந்து என்ன பிரயோசனம்? கம்யூனிசம் வீழ்ந்த பின்னர் எங்களுக்கும் அந்த அனுபவம் கிடைத்தது. திடீரென எல்லா இடங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை காண முடிந்தது. ஆனால், யாருமே அதைப் பொருட்படுத்தவில்லை.

திடீரென எல்லா இடங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை காண முடிந்தது.

கருத்துச் சுதந்திரம் கிடைத்து விட்டதால் எந்த நன்மையையும் உண்டாகவில்லை. நிலைமை முன்னரை விட மோசமடைந்தது. மக்கள் எல்லாவற்றையும் இழந்தார்கள். அவர்களது வீடு, சேமிப்புப் பணம், இலட்சியங்கள். அதிக பணம் கொடுக்கத் தயாராக இருந்தவரால் நீதிமன்ற தீர்ப்பை கூட விலைக்கு வாங்க முடிந்தது.

நாட்டில் நடக்கும் குற்றச் செயல்கள் எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் காண்பித்தார்கள். ஏனென்றால் அது ஊடக சுதந்திரத்திற்கு நல்லது என்றார்கள். ஒவ்வொரு இறந்த உடலையும், வன்முறைச் சம்பவத்தையும் பார்க்கும் பொழுது, எமது அழகான நாட்டில் இன்னும் என்ன மிச்சம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டோம்.

கம்யூனிசக் காலத்தில் எங்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருந்தாலும், கிரிமினல் குற்றங்கள் எதுவும் நடக்கவில்லை. அது மட்டுமல்ல, உணவை வாங்குவதற்கு கையில் போதுமான பணம் இருக்கிறதா என்ற கவலை கூட இருக்கவில்லை.

ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகளுக்கு தம் மக்களைப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கும். இந்த மக்கள் எல்லாவற்றுக்கும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், எதற்காக? கடைசியில், மக்கள் தாங்கள் நினைத்ததை எல்லாம் சொல்ல முடிந்தது. அப்போதும் அவர்களுக்கு திருப்தி வரவில்லை.

“அரசியல்வாதிகள் கண்டுகொள்ளவில்லை என்றால், குரலை உயர்த்தி சொல்ல வேண்டியது தானே?” என்றான் பிராங்.

அதைத் தானே நாமும் செய்தோம்? அரசாங்கம் மாறியது. ஆனால், எந்தப் பிரயோசனமும் இருக்கவில்லை. கருத்துச் சுதந்திரம் வெறும் வயிற்றை நிரப்பவில்லை. இடது, வலது வித்தியாசம் இல்லாமல், அனைத்து அரசியல்வாதிகளதும் பிரதானமான நோக்கம், தமது பணப் பைகளை நிரப்புவது மட்டுமே.

“எது முக்கியம்? கருத்துச் சுதந்திரமா, பிள்ளைகளுக்கு உணவு கொடுப்பதா? என்று தெரிவு செய்ய வேண்டிய நிலைமை வந்தால் என்ன செய்வாய்?” நாங்கள் எதையும் விருப்பத்துடன் தெரிவு செய்யவில்லை. அதை வரலாறு எமக்காக செய்தது. ஒரு நாள் வயிறு நிறைய உணவு கிடைத்தது. ஆனால், முழுச் சுதந்திரம் இருக்கவில்லை. அடுத்த நாள் முழுச் சுதந்திரம் இருந்தது, கையில் காசு இருக்கவில்லை.

நிச்சயமாக, இது எல்லோருக்கும் பொருந்தாது. வழமையாக முதலாளித்துவத்தில் இருப்பது போன்று, புதிய சமுதாயத்தில் எல்லாம் நேர்மையற்ற வகையில் பங்கிடப் பட்டது. வலிமை மிக்க பணக்காரர்கள் சரியான தருணத்தில் ஒரு மூழ்கும் கப்பலை விட்டு வெளியேற முடிந்தது. பலவீனமான ஏழைகள் அதற்குள் கிடந்தது அமிழ்ந்து போனார்கள். யாருமே அவர்களை காப்பாற்ற வரவில்லை.

ஏழு பேரில் ஒருவர் தனது உணவுக்காக கஞ்சித் தொட்டியை நம்பியிருக்கும் மக்களைக் கொண்ட அமெரிக்காவை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றினோம். ஆனால் ஒரு வித்தியாசம். எமது நாட்டில் ஏழைகளுக்கான கஞ்சித் தொட்டிகள் இருக்கவில்லை, எந்தவொரு செல்வந்தரும் தான தர்மம் செய்யவில்லை. எத்தனையோ பேர் குறுகிய காலத்தில் பணக்காரர் ஆனார்கள். ஆனால், அவர்களுக்கு ஏழைகளுடன் பணத்தைப் பங்கிடும் மனம் இருக்கவில்லை.

சோவியத் யூனியனில் கோர்பசேவ் அதிபர் பதவிக்கு வந்தார். பெறேஸ்ட்ரோய்கா கொண்டு வந்தார். பெர்லின் மதில் வீழ்ந்தது. ஆரம்பத்தில், பல்கேரியாவில் கோர்பசேவ் கொண்டு வந்த சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ரஷ்ய பத்திரிகைகள், சஞ்சிகைகள் தடை செய்யப் பட்டன. “சோஷலிசத்தை காப்பாற்றுவதற்காக, பல்கேரியா சோவியத் யூனியன் மீது படையெடுக்குமா?” என்று நாங்கள் எமக்குள் வேடிக்கையாக பேசிக் கொண்டோம்.

ஒரு நாள் பல்கேரியாவிலும் ஆட்சி மாற்றம் நடந்தது. எந்நேரமும் சிரித்துக் கொண்டிருந்த எமது “மகிழ்ச்சியான சர்வாதிகாரி” பதவி விலக நிர்ப்பந்திக்கப் பட்டதை தொலைக்காட்சியில் காண முடிந்தது. திடீரென கட்டவிழ்த்து விடப் பட்ட மாதிரி எல்லாம் நடந்தேறின. ஏனென்றால், எமது நாட்டில் மிகவும் பலம் வாய்ந்த கட்சித் தலைவரை அகற்றலாம் என்றால், எதுவும் சாத்தியமே. திடீரென பலர் தெருவுக்கு வந்து கம்யூனிசத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள். நாற்பது வருட கால பரிசோதனை போதும். கம்யூனிசத்தை குப்பைத் தொட்டிக்குள் வீசுவோம். எல்லோரும் இறக்கை முளைத்ததை போன்று நடந்து கொண்டனர்.

சில நாட்களுக்கு முன்னர் நடக்க முடியாதவை என்று நினைத்துக் கொண்டிருந்தவை எல்லாம் நடந்தன. இந்த ஆட்சி மாற்றம் மூலம், கம்யூனிஸ்டுகள் தமது அதிகாரத்தை பலப் படுத்தி விட்டதாக நினைத்தார்கள். ஆனால், திடீரென சிறிய சிறிய எதிர்க்கட்சிகள் முளைத்தன. கடைசியில் சுதந்திரம் பெற்றோம். அதாவது, பல கட்சிகள் கலந்து கொண்ட பொதுத் தேர்தலை சொல்கிறேன். கம்யூனிச எதிர்ப்புப் கட்சிகள் ஒன்று சேர்ந்து நீல வர்ணத்தில் போட்டியிட்டன. கம்யூனிஸ்ட் கட்சியின் சிவப்புக்கும், நீலத்திற்கும் இடையில் தேர்தல் போட்டி ஆரம்பமானது.

அப்போது எனக்கு பதினெட்டு வயது ஆகியிருந்தது. வாழ்க்கையில் முதல் தடவையாக தேர்தலில் ஓட்டுப் போடும் உரிமை கிடைத்தது. எனது தெரிவு நீலக் கட்சிக்குத் தான் என்பது எப்போதோ தீர்மானிக்கப் பட்டு விட்டது. குறிப்பாக நகரங்களில் வாழ்ந்த இளைஞர்களின் தெரிவும் அதுவாக இருந்தது. எனது நாய்க்குட்டியின் கழுத்துப் பட்டியில், எதிர்க்கட்சியின் நீல நிற பலூன் கட்டி விட்டேன். அதையும் இழுத்துக் கொண்டு எனது தாத்தா, பாட்டி இருக்கும் வீட்டிற்கு சென்றேன்.

தாத்தா, பாட்டிக்கு அது பிடிக்காது என்பது எனக்குத் தெரியும். அவர்கள் எப்போதுமே கம்யூனிச ஆதரவாளர்களாக இருந்தார்கள். அவர்கள் மட்டுமல்ல, அப்படி நிறையப் பேர் இருந்தனர். இந்தக் கருத்து முரண்பாடு பல குடும்பங்களுக்குள் பிரச்சினையை உண்டாக்கியது. இரவும், பகலும், குடும்ப உறுப்பினர்களுக்குள் இடையறாத வாக்குவாதங்கள் நடந்தன.

நான் தாத்தா, பாட்டியின் வீட்டிற்கு சென்று அவர்களது அழைப்பு மணியை அழுத்தினேன். கதவைத் திறந்து வந்து, எனது நாயின் கழுத்துப் பட்டியில் இருந்த நீல பலூனை கண்டார்கள். அவர்களைப் பொறுத்தவரையில், இது சகிக்க முடியாத, கம்யூனிச விரோத சீண்டுதல். அதனால், கோபத்துடன் கதைவை அடித்து சாத்தி விட்டார்கள்.

அப்போது தான் எனது முட்டாள்தனம் உறைத்தது. தாத்தாவும், பாட்டியும், இந்த உலகில் நான் மிகவும் நேசிக்கும் மனிதர்களாக இருந்தனர். சிறு வயது முதல் கொஞ்சி மகிழ்ந்து, இனிப்புப் பண்டங்களை கொடுப்பதை தவிர வேறெதையும் செய்திராதவர்கள். பாட்டி பல்கனியில் நின்று கொண்டு என்னைப் பார்த்து கண்ணீர் விடுவதைக் கண்டேன்.

அந்த நேரத்தில், எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டங்களில் மும்முரமாக இருந்த எனக்கு, தாத்தா, பாட்டியின் பிரிவின் துயரம் பெரிதாகத் தெரியவில்லை. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் எல்லோரும் புன்முறுவலுடன் வீடுகளுக்கு திரும்பினோம். வழியில் எதிர்ப்பட்ட கம்யூனிச ஆதரவாளர்கள் மட்டும் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், எதுவும் பேசவில்லை. (எதிர்க்கட்சி ஆதரவாளரின்) மகிழ்ச்சி ஆரவாரம் ஒரு சில நாட்கள் நீடித்தது.

கம்யூனிச எதிர்ப்பு எதிர்க்கட்சிக்கு நகரங்களில் மட்டுமே செல்வாக்கு இருந்தது என்று சொல்லலாம். ஆனால், கிராமப் புறங்கள் அப்போதும் கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்தன. கிராமங்களில் நீலக்கொடி காட்டிய சிலருக்கு விவசாயிகள் அடி போட்டு அனுப்பினார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியானது தனது கடந்த கால சாதனைகளை சொல்லிக் காட்டி பிரச்சாரம் செய்தது. குறிப்பாக விவசாயிகள் மத்தியில் எதிர்க்கட்சி அரசாங்கம் பற்றிய அச்சவுணர்வை தோற்றுவித்து இருந்தனர். எதிர்க்கட்சி அவர்களது நிலங்கள் பறித்து, முந்திய நிலவுடைமையாளர்களுக்கு திருப்பிக் கொடுத்து விடுவார்கள். இதனால் வேலையிழப்புகள் ஏற்படும். அத்துடன், மருத்துவத்திற்கு காசு கொடுக்க வேண்டி இருக்கும். சந்தைப் பொருளாதாரம் வந்தால், அவர்கள் எடுக்கும் சம்பளத்திற்கும், ஓய்வூதியத்திற்கும் பெறுமதி இருக்காது.

ஆரம்பத்தில், நான் இந்த அச்சுறுத்தல்களை கம்யூனிஸ்டுகளின் பொய்ப் பிரச்சாரம் என்று நினைத்தேன். இருப்பினும் கிராமப் புற விவசாயிகள் அதை நம்பினார்கள். மேற்கத்திய அமைப்பில் நம்பிக்கை கொண்டிருந்த நகர்ப்புற அறிவுஜீவிகளை விட, கிராமப்புற விவசாயிகள் உண்மைக்கு அண்மையில் நின்றுள்ளனர் என்பது கடைசியில் தெரிய வந்தது. எதிர்க்கட்சி அவமானப் பட்டு நாட்டை நாசமாக்கிக் கொண்டிருந்த நேரம், மிக மோசமான நிலைமை நிதர்சனமானது. ஆனால், அந்த நேரம் நல்லது நடக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள் மனதில் எந்த வித எதிர்மறையான எண்ணமும் இருக்கவில்லை.

ஒரு தலைமுறை கடந்ததும் வந்த பிள்ளைகள் எவருக்கும் கம்யூனிசம் என்றால் என்னவென்று தெரியவில்லை. அவர்கள் படிக்கும் சரித்திரப் பாடநூலில் ஒரு சுருக்கமான குறிப்பு இருக்கும். அந்தளவு தான் அறிவு. நாங்கள் மார்க்ஸ், லெனின் சிலைகளுடன் வளர்ந்தோம். ஆனால், இன்றைய தலைமுறைக்கு அவர்கள் யார் என்பதே தெரியாது. லெனினை பார்த்து “யார் இவர்? மாஸ்கோ நகர மெட்ரோ ரயில் கட்டியவரா?” என்று கேட்கிறார்கள்.

லெனின் ஒரு இலட்சியவாதியாக இருந்தார். அவரது பிரதானமான சாதனையாக, சோவியத் காலகட்டத்தில் இனங்களுக்கு இடையில் நல்லுறவு நிலவியதைக் குறிப்பிடலாம். அதாவது, இனவாதத்திற்கு இடமிருக்கவில்லை. சோவியத் அமைப்பு விழுந்த பின்னர், எண்ணில் அடங்காத தேசியவாதக் கட்சிகள் தோன்றின. அவை மக்களின் அடிமனது உணர்வுகளைப் பிரதிபலித்தன. “மோசமான பொருளாதார நிலைமைக்கு காரணம் சிறுபான்மை இனத்தவர் தான்.” – எப்போதும் பழி போடுவதற்கு யாராவது இருக்க வேண்டும். அவர்கள், மேற்கத்திய “ஜனநாயக” நாடுகளைப் பார்த்து கற்றுக் கொண்டார்கள்.

ஒரு பெர்லின் மதில் மட்டுமே வீழ்ந்தது. ஆனால், கணக்கிட முடியாத புதிய மதில்கள் எழுந்தன. உக்ரைன் ரஷ்ய எல்லையில் இரண்டாயிரம் கிலோ மீட்டர் மதில் கட்டுவதற்கு யோசித்தது. அதனோடு ஒப்பிடும் பொழுது பெர்லின் மதில் ஒன்றுமேயில்லை. மிகவும் தடிமனான மதில் மக்களின் மனதில் தான் உள்ளது. அதை ஊடுருவுவதும் கடினமானது. பனிப்போர் முடியவில்லை. அது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் தொடர்கிறது. நீண்ட நெடுங்கால ஜனநாயக மரபைக் கொண்ட நாடுகளில் கூட, நாகரிகம், சகிப்புத்தன்மை என்பன இலகுவில் உடையும் அளவிற்கு மெல்லிய தடுப்புச் சுவர்களாக உள்ளன.

***

ம்யூனிச ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கலாச்சார மண்டபம் இருந்தது. அங்கு நடக்கும் கலாச்சார நிகழ்வுகளை பார்வையிடுவதற்கான கட்டணம் மிகவும் குறைவு, சிலநேரம் இலவசம். சாதாரண மக்கள் கண்டுகளிப்பதற்காக, அங்கு மேடையேறிய நாடகக் குழுக்கள், இசைக் குழுக்கள் போன்றவற்றிற்கு அரசு மானியம் கொடுத்து ஊக்குவித்தது. மொஸார்ட் போன்ற உலகப் பிரசித்தி பெற்ற கலைஞர்கள் உருவாக்கிய படைப்புகளும் சாமானியர்களுக்காக இசைக்கப்பட்டன.

ஜனநாயகம் வந்ததும் மொஸார்ட் இசையும் நின்று விட்டது. ஏனென்றால் அரசு அதற்காக பணம் செலவிட விரும்பவில்லை. இசை, கலாச்சாரம், கல்வி? இதற்கெல்லாம் அரசிடம் பணம் கிடையாது. கிராமங்களில் இருந்த கலாச்சார மண்டபங்கள் எல்லாம் மூடப் பட்டு விட்டன. நகரங்களில் அவை குறைக்கப் பட்டன. எல்லா இடங்களிலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இசைக் கலைஞர்கள் காலத்திற்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. உயிர் பிழைப்பதற்காக இரவு விடுதிகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

பெர்லின் மதில் வீழ்ந்த பின்னர், கிழக்கு ஐரோப்பாவில் பல நம்ப முடியாத விடயங்கள் நடந்தன. மிகக் குறுகிய காலத்தில் நாம் மேற்குலகை எட்டிப் பிடித்தோம். குறைந்த பட்சம் பொருட்களின் விலைகளிலாவது. ஏனெனில் எமது நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் பிரான்ஸ், நெதர்லாந்தை விட அதிக விலைக்கு விற்கப் பட்டன.

முன்பெல்லாம் பெருந்தெருக்களின் அருகில் உள்ள கட்டிடங்களின் சுவர்களில் கடின உழைப்பாளிகளின் ஓவியங்கள் காணப்படும். அந்த இடங்களில் தற்போது விஸ்கி, கார் விளம்பரங்கள் காணப் படுகின்றன.

முன்பெல்லாம் பெருந்தெருக்களின் அருகில் உள்ள கட்டிடங்களின் சுவர்களில் கடின உழைப்பாளிகளின் ஓவியங்கள் காணப்படும். அந்த இடங்களில் தற்போது விஸ்கி, கார் விளம்பரங்கள் காணப் படுகின்றன. சில விளம்பரங்களில் தோன்றும் பெண்கள் ஏறக்குறைய நிர்வாணக் கோலத்தில் இருந்தனர்.

மேற்குலகம் கொடுத்த பொருளாதார உதவிக்கு பிரதியுபகாரமாக IMF மூலம் நிபந்தனைகளை விதித்தது. அந்த நிதியத்தின் “புத்திசாலி” பொருளாதார ஆலோசகர்கள், கூடிய விரைவில் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த வேண்டும் என அறிவித்தனர். பெறுமதியான இயந்திரங்கள் எல்லாம் விற்கப் பட்டன. ஏராளமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டனர்.

தொழிற்சாலைகள் மறைந்து விட்டன. பொருளாதாரமும் போய் விட்டது. மக்களுக்கு சாப்பிட எதுவும் இருக்கவில்லை. திடீரென உணவுப் பொருட்கள் உட்பட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால், மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு மட்டும் தடை இருக்கவில்லை.

மேற்குலகம் நினைத்திருக்கலாம், கிழக்கு ஐரோப்பாவில் முதலாளித்துவத்தை அறிமுகப் படுத்தினால், ஒரே நாளில் எல்லாம் நல்ல படியாக மாறி விடும் என்று. “இதுவா சந்தைப் பொருளாதாரத்தின் வலிமை” என்று ஏழைகள் ஆக்கப்பட்ட மக்களால் நம்ப முடியவில்லை. எங்கு பார்த்தாலும் வறுமையும், பிணியும் தலைவிரித்தாடின.

கம்யூனிச காலத்தை விட மிக மோசமான நிலைமை வந்தது. இருப்பதை எல்லாம் இழந்த பலர் மீதியை குடித்து அழித்தார்கள். தமது வாழ்க்கை இதை விட துயரம் மிக்கதாக அமைய முடியாது என்று உணர்ந்தார்கள். வாங்கிய கடனை அடைக்க முடியாத பலர் தற்கொலை செய்து கொண்டனர். அனேகமாக, அவர்கள் தம் இளம் பிள்ளைகளுக்கு சாப்பாடு போட வேண்டியிருந்த குடும்பத் தலைவராக இருந்தனர்.

பெரும்பாலான மக்களின் வாழ்க்கை நொறுங்கி விழுந்தது. அவர்களது கனவுகள் குப்பைத் தொட்டிக்குள் கிடந்தன. புதிய சமுதாயம் அவர்களுக்கு எந்தச் சந்தர்ப்பத்தையும் கொடுக்கவில்லை. புதியதொரு வர்க்கம் உருவானது. அது “வேண்டப்படாதவர்கள்” என்ற சமூகத்தால் ஒதுக்கப் பட்ட வர்க்கம். “வேண்டப்படாதவர்கள்” வேலை செய்ய விரும்பினார்கள். ஆனால், எங்கேயும் வேலை இல்லை. அவர்களுக்கு கிடைத்த அரச உதவிப்பணம் அத்தியாவசிய செலவுகளுக்கே போதாது.

சந்தைப் பொறிமுறை ஒரு மந்திரச் சொல் போன்று ஒலித்தது. ஆனால், பின்னர் அந்த மாயை மறைந்தது. பணவீக்கம் ஏறிக்கொண்டே சென்றது. கையில் கிடைத்த சம்பளம் பெறுமதி இழந்திருந்தது. பல நிறுவனங்களிடம் சம்பளம் கொடுக்க பணமும் இருக்கவில்லை. சிலருக்கு மாதக் கணக்காக சம்பளம் கிடைக்கவில்லை. சிலருக்கு பணத்திற்கு பதிலாக பொருட்களை கொடுத்தார்கள். நீங்கள் ஒரு கண்ணாடித் தொழிற்சாலையில் வேலை செய்தால். சம்பளமும் கண்ணாடியாகத் தான் கிடைக்கும். அதை உணவுக்காக வேறொருவருடன் பண்டமாற்று செய்து கொள்ள வேண்டும்.

முன்பிருந்த கம்யூனிச அரசு அடிக்கடி ஒரு பிரச்சாரம் செய்து வந்தது: “பல்கேரியாவில் எல்லோருக்கும் வேலை இருக்கிறது. அதே நேரம், மேற்குலகில் வருடக் கணக்காக விசுவாசமாக வேலை செய்பவர்களையும் பணி நீக்கம் செய்கிறார்கள்.” என்று சம்மட்டியால் அடித்த மாதிரி பிரச்சாரம் செய்தனர். புதிய (முதலாளித்துவ) அரசு அதை நடைமுறைப் படுத்தி மெய்ப்பித்தது. கம்யூனிச அதிகாரம் இருந்த இடத்தில் பணத்தின் அதிகாரம் வந்தது. என்ன முன்னேற்றம்?

ஏழ்மையில் கூட சமத்துவம் இருந்த இடத்தில், ஏழை, பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டிருந்தது. புதிய பணக்காரர்கள் சேர்த்த பணத்தில் கோட்டைகள் கட்டினார்கள். புதிய மாடல் கார்களை இறக்குமதி செய்தார்கள். அதே நேரத்தில், தெருக்களில் பிச்சைக்காரர்களும் பெருகினார்கள்.

இதற்கு முன்னர், இப்படியான காட்சிகளை சினிமாப் படங்களில் மட்டுமே கண்டிருந்த எமக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஓய்வூதியப் பணத்தில் வாழ்க்கையை ஓட்ட முடியாத மூதாட்டி ஒருவர், குப்பைத் தொட்டிக்குள் கிளறிக் கொண்டிருந்ததை அருவருப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். இதனுடன் ஒப்பிட்டால், கம்யூனிசத்தின் திட்டமிடல் பொருளாதாரக் காலத்தில் நிலவிய தட்டுப்பாடு ஒரு கொடை எனலாம்.

நிச்சயமாக, எங்களுக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்கும் கருத்துச் சுதந்திரம் இருந்தது. ஆனால், அதனால் எந்தப் பயனும் இல்லையென்றால் என்ன செய்ய முடியும்? என்னைப் பொறுத்தவரையில், வயதானவர்களுக்கு உணவு கொடுக்க வழி கிடைக்குமென்றால் அந்தக் கருத்துச் சுதந்திரம் கூட வேண்டாம் என்பேன். எமது ஊடகங்கள் இந்தக் கருத்துச் சுதந்திரத்தை பிழையாக புரிந்து வைத்திருக்கின்றன. ஒரு குற்றம் நடந்தால், சந்தேகநபரின் பெயர் விபரங்களை உடனே வெளியிட்டு விடுகின்றன. அவரது குற்றம் நிரூபிக்கப் பட்டதா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. வதந்திகளை உண்மை என்று சொல்கின்றன.

முதலாளித்துவமானது பற்றாக்குறை பொருளாதாரத்தை நிவர்த்தி செய்தது. அது சந்தைப் பொருளாதாரம் வேலை செய்வது போலிருந்தது. கம்யூனிச காலத்தில் இருந்த மாதிரி வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. அதே நேரம், பலரிடம் வாங்குவதற்கு கையில் பணம் இருக்கவில்லை. முந்திய கம்யூனிச அரசு உணவுப் பொருட்களுக்கு கொடுத்து வந்த மானியம் இரத்து செய்யப் பட்டது. அதனால், பொருட்களின் விலைகள் நூறு சதவீதம் அதிகரித்தன. ஒரு சோடிக் காலணிகள் வாங்குவதற்கு ஒரு மாத சம்பளம் தேவைப்பட்டது.

பெரும்பாலான மக்களுக்கு சாதாரணமான பொருட்களையும் வாங்கும் வசதி இருக்கவில்லை. எனது மாமியின் வீட்டை பார்த்தாலே போதும். மாமி வாழும் அடுக்குமாடிக் கட்டிடம் சோபை இழந்து காணப்பட்டது. அவரிடம் ஒரு பழைய காலத்து கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. அது தான் விரும்பிய நேரத்திற்கு தான் வேலை செய்யும். குப்பையில் போட வேண்டிய தளவாடங்கள் அங்கு கிடந்தன. மாமி இதையெல்லாம் வீசாமல் வைத்திருக்கக் காரணம் பழைய நினைவுகள் அல்ல. புதிதாக வாங்குவதற்கு அவரிடம் பணம் இருக்கவில்லை. அவருக்கு கிடைக்கும் விதவை ஓய்வூதியத் தொகை பற்றிக் கேள்விப் பட்டவுடன் திடுக்கிட்டுப் போனேன்.

“இந்தளவு குறைந்த பணத்துடன் எப்படி வாழ முடிகிறது?”

மாமி தனது தோளைக் குலுக்கிக் கொண்டு சொன்னார் : “தேவையில்லாத பொருள் எதையும் வாங்குவதில்லை. அதே நேரம், எனக்குத் தேவையான பொருட்களையும் வாங்குவதில்லை. ஒவ்வொரு சதமும் பார்த்து செலவளிக்க வேண்டும். காசைப் பற்றிய கவலை தான் மனிதர்களை மிருகங்களில் இருந்து வேறு படுத்துகின்றது.”

எதற்காக கம்யூனிசக் காலத்தில் எல்லாம் சிறப்பாக இருந்தது என்று வயதானவர்கள் சொல்கிறார்கள் என்பது எனக்கு இப்போது புரிந்தது. உண்மையில் மிகச் சிறப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், பொருட்களின் விலைகள் வருடக் கணக்காக மாறாமல் இருந்தன. வாழ்க்கையில் பெரியளவு பிரச்சினைகளும் வரவில்லை.

புதியதொரு எதிர்காலத்திற்கு கட்டியம் கூறினார்கள். ஆனால் அதன் மேல் கட்டப்பட்ட நம்பிக்கை எல்லாம் நீர்த்துப் போயின. இவை கிழக்கு ஐரோப்பிய வரலாற்றின் அதிர்ச்சியூட்டிய வருடங்கள். பெர்லின் மதில் வீழ்ந்தவுடன் எல்லாம் நல்ல படி நடக்கும் என்ற நம்பிக்கை பொய்யாகிப் போனது. அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருந்தன. சுதந்திரமாக வெளிநாட்டுப் பயணம் செய்ய முடிந்தது. ஆனால், பயணம் போவதற்கு மக்களிடம் பணம் இருக்கவில்லை. நீங்கள் விரும்பிய எந்த இடத்திலும் சென்று தங்கி வேலை செய்யலாம். ஆனால், எங்கேயும் வேலை இருக்கவில்லை.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் கிடைத்தது. ஆனால், எவருமே மக்கள் சொல்வதைக் கேட்கவில்லை. பாராளுமன்றத்தில் நடக்கும் அனல் பறக்கும் விவாதங்களை தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது. எந்த வர்ணம் பூசி இருந்தாலும், நாங்கள் எந்த அரசியல்வாதியையும் நம்பத் தயாராக இருக்கவில்லை. முதலாளித்துவ பரிசோதனைச் சாலையில் நாங்கள் வெறும் எலிகள் மட்டுமே.

இந்த மாற்றங்களுக்குப் பிறகு பலருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்களது எல்லா நம்பிக்கைகளும் பறந்து போயின. ஏற்கனவே இருந்து கொண்டிருக்கும் முதலாளித்துவ சமூகத்தில் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். எல்லா கிழக்கைரோப்பிய நாடுகளிலும் சுய முன்னேற்ற நூல்கள் பெருமளவு விற்பனையாகின. சிலநேரம், மதமும் உதவ முடியும். மேற்குலகில் இருந்த அல்லேலூயா கிறிஸ்தவ சபைகள் பெருகின. அந்த சபைகள் ஏற்கனவே மேற்கில் வெளிச்சத்தை கண்டுவிட்டார்கள் என்பதால் நாமும் காண்போம் என்று நம்பினார்கள்.

கொஞ்சக் காலத்திற்கு முன்னர் நாம் வாழ்ந்த சமுதாயம் மறைந்து, பல ஒளிவருடங்கள் தள்ளிப் போன உணர்வை உண்டாக்கியது. கம்யூனிச காலத்தில் “எவ்வாறு இலட்சக் கணக்கான கிழக்கு ஐரோப்பிய மக்கள் மூளைச்சலவை செய்யப் பட்டனர்” என்ற ஆராய்ச்சிகள் கட்டுக் கட்டாக வெளிவந்தன.

வரலாற்றை நீங்கள் திருப்பிச் சொல்லலாம். ஆனால், அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களின் அனுபவங்களில் தான் உண்மை ஒளிந்துள்ளது. எல்லா சரித்திர நூல்களையும் வாசிக்கையில் பெரியதொரு புதிர் தென்பட்டது. சம்பவங்கள் சரியாகத் தான் இருந்தன. ஆனால், வாழ்பனுபவங்கள் ஒத்துப் போகவில்லை. கம்யூனிசத்தின் மடத்தனங்கள் வெளியில் இருந்து பார்க்கும் போது ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும். ஆனால், அதற்குள் வாழ்ந்தீர்கள் என்றால் பல விடயங்கள் சரியாகத் தான் நடந்துள்ளன என்று தோன்றும்.

பல வருட காலமாக, மேற்கத்திய நாட்டவர் எம்மைப் பற்றிய கற்பனைகளை வளர்த்துக் கொண்டனர். எங்களை சுயவிருப்பில்லாமல் நடக்கும் பொம்மைகளாக பார்த்தார்கள். நாங்கள் உத்தரவுகளுக்கு கீழ்ப் படிந்து நடந்ததாகவும், அனைத்து விடயங்களும் அரசியலை சுற்றி சுழன்றதாகவும் நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலானோர் மட்டுமே அரசியலில் ஆர்வம் காட்டினார்கள். கிழக்கு ஐரோப்பிய இளைஞர்களுக்கும், மேற்கு ஐரோப்பிய இளைஞர்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை. எமது நாட்டின் பொருளாதார நிலைமையை விட இளம் பருவத்தில் தோன்றும் முகப்பரு எமக்கு முக்கியமாகப் பட்டது.

மேற்கத்திய நாட்டவர் பற்றிய எங்களது கற்பனைகளும் விசித்திரமானவை தான். அவர்கள் எல்லோரும் பணக்கார, சுயநலம் பிடித்த, சுருட்டு புகைக்கும் முதலாளிகள். மேற்குலகவாசிகள் பலர் விலை உயர்ந்த சுருட்டு வாங்கவும், சிலநேரம் மாத முடிவில் அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் பணமில்லாதவர்கள் என்பதை பல வருடங்கள் கழித்து தான் புரிந்து கொண்டேன்.

நன்றி : தோழர் கலையரசன், கலையகம்

இந்த கட்டுரையின் முந்தைய பாகத்திற்குச் செல்ல கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க