றைந்த சொத்துக் குவிப்பு குற்றவாளி A1 ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அ.தி.மு.க. என்ற கட்சி அமளிதுமளியாகி, ஒருவழியாக பா.ஜ.க.வின் மற்றொரு அணியாக மாறி ஆட்சி செய்து வருகிறது. ஆட்சிக்கு வந்தநாள் முதல் இவர்களின் அக்கப்போர் மற்றும் கொள்ளையை தமிழகமே அறியும். ஜெயா தொலைக்காட்சியும், ‘’நமது எம்.ஜி.ஆர்” என்ற பத்திரிக்கையும் ஜெயாவின் மரணத்திற்கு பிறகு மன்னார்குடி கும்பல் வசப்படுத்திக் கொண்டதால் கடந்த பிப்ரவரி மாதம் ஜெயாவின் பிறந்த நாளில் “நமது அம்மா” என்ற பத்திரிகையை எடப்பாடி ஓபீஎஸ் அணி தொடங்கியது. தற்பொழுது “நியூஸ் ஜெ” என்ற செய்தி தொலைக்காட்சியையும் தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த தொலைக்காட்சிக்கு கவுண்டர் அணியின் கலை அணியான சிவக்குமார் – சூர்யா – கார்த்தி அணியினர் ஆலோசனை அளித்திருக்கிறதாம். பிறகு முக்கியமான பத்திரிகையாளர்கள் பலரை பணியில் அமர்த்தியிருக்கின்றனர். கொள்ளைப் பணத்தில் ஊதியம் வாங்கும் அந்த ஊடகவியலாளர்களிடம்தான் இனி நாம் ஊடக அறம் குறித்து பாடம் கேட்க வேண்டும்.

ஆனால் அதிமுக அரசும் கட்சியும் எப்படி ஒரு தொலைக்காட்சியை கார்ப்பரேட் தரத்தில் திடீரென உருவாக்கியது என்பது ஆச்சரியமான ஒன்றல்ல. பணந்தானே நிரந்தரமான தரம்!

ஆற்றுநீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் திட்டத்தை அறிமுகப்படுத்திய அறிவியல் விஞ்ஞானி செல்லூர் ராஜு முதல் நொய்யல் ஆற்றில் நுரை பொங்குவதற்கு மக்கள் சோப்பு போட்டு குளிப்பதே காரணம் என்று சொன்ன சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன்  வரை தமிழக மீம் கிரியேட்டர்களுக்கு அளப்பரிய சேவையை செய்து வருகின்றனர். ஆனால் இந்த நகைச்சுவைகளுக்கு பின்னால் கொள்ளையோ கொள்ளை என அதிமுக கும்பல் முழு தமிழகத்தையும் வழித்து துடைத்து வருகிறது.

அந்தக் கொள்ளைக்கு ஏற்படும் எதிர்ப்பை சமாளிக்க இப்போது அல்ட்ரா மாடர்னாக நியூஸ் சானலை துவங்கியிருக்கிறார்கள்.

கடந்த 12-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் இந்த சேனலுக்கான லோகோ மற்றும் இணையதள தொடக்க விழா நடைபெற்றது. இது முதல் நாளிலேயே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு விட்டது. காரணம், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதை உடனுக்குடன்  “நியூஸ் ஜெ” டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். அதில் “நாட்டை ஆளும் மன்னனின் வால் (வாள்) முனையை விட பேனாவின் கூர் முனை வலிமையானது” என்பதை எழுத்து பிழையுடன் அப்பக்கத்தில் வெளிவந்ததைப் பார்த்து இணையவாசிகள் அனைவரும் கலாய்த்து விட்டார்கள். இனி நியூஸ் ஜே சானல் எடிட்டர்கள் இத்தவறு இல்லாமல் மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவின் தரத்தில் அதிமுக நியுசை ஒளிபரப்புவார்கள்.

சேனலுக்கான துவக்க விழா சென்னை ராஜ முத்தையா சாலையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கத்தில் 14.11.2018 அன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக அண்ணா சாலையில் இருக்கும் பல்லவன் பணிமனையில் இருந்து ஸ்டேடியம் வரை போலிசை குவித்து போக்குவரத்துக்கும், குத்தாட்டத்தை பார்ப்பவர்களுக்கும் இடையூறு இல்லாமல் ஒழுங்குபடுத்தினர்.

முன்னதாக காலையில் அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் ஜெயாவின் பழைய சிலையை அகற்றி விட்டு புதிய சிலையை பழனிச்சாமியும்-பன்னீர்செல்வமும் திறந்து வைத்தனர். திறப்பதற்கு முன் ஒரு துண்டை போட்டு சிலையை மூடினார்கள். இந்த துண்டுதான் நேற்றைய மீம்களுக்கு ஃபுல் சப்ளை!

இந்த கூத்து முடிந்ததும், மாலை துவக்க விழாவில் கலந்து கொள்வது திட்டம். இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்களை வரவழைத்து இருக்கிறார்கள்.  தாரை தப்பட்டைகள், மேளம்தாளம் முழங்க விழா ஆரம்பித்தது. தாண்டியா மேளம், கொக்காலி கட்டை ஆட்டம், குதிரை சாரட், கேரளா செண்டை மேளம், பங்கரா டான்ஸ், கரகாட்டம், தாண்டியா கேர்ள்ஸ், நடன குதிரை, பேண்டு வாத்தியம், வெல்கம் கேர்ள்ஸ், மயிலாட்டம், ஒயிலாட்டம் என அனைத்து ஆட்டக்காரர்களையும் அழைத்து வந்து ரணகளப்படுத்தி இருந்தனர். ஆட்டக்காரர்கள் கூலிக்கு வந்திருந்தாலும் உண்மையில் வாங்கிய பணத்திற்காக ’உயிரைக் கொடுத்து’ வேலை செய்தார்கள். போக்குவரத்து நெரிசல், சத்தத்திலும் தளராமல் தொண்டர்களை குஷிபடுத்தினர். ஒருவேளை சம்பளம் டபுளோ இல்லை அரசு ஆளும் கட்சி விழா என்ற பயமோ தெரியவில்லை.

கட்சித் தொண்டர்கள் அத்தனை பேரும் மிதமிஞ்சிய மப்பில் இருந்ததால் யாரிடமும் பேச முடியவில்லை. வருபவர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கவே விதவிதமான நடனங்கள். இந்த குத்தாட்டங்களை பார்த்து ரசித்தவாறே அரங்கத்தினுள் சென்றனர். அரங்கத்தினுள்ளும் “ஆடலும் பாடலும்” நிகழ்ச்சி என்று ஒரே அமர்களம்தான்.

முக்கியமாக கட்சியின் தேசிய கீதமான “ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்.. சுகம்..” என்ற பாடல் தவறாமல் இடம் பெற்றது. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்த தேசிய கீதம் நமது காதுகளை பஞ்சராக்குமோ தெரியவில்லை.

இந்த புதிய சேனலின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்று இருப்பவர், அம்மாவால் அடிப்படை உறுப்பினர் பதவிகூட பிடுங்கப்பட்டு கடைசி வாய்ப்பாக கடந்த சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் மீண்டும் பதவிக்கு வந்த விழுப்புரம் சி.வி.சண்முகத்தின் தம்பி சி.வி. ராதாகிருஷ்ணன் என்பதால் கணிசமான ஆட்கள் விழுப்புரத்தில் இருந்து அழைத்து வந்திருந்தனர்.

வந்திருந்த பலரும் பாவம்…! வயதானவர்கள்…! வெறும் 200 ரூபாய்க்கு அழைத்து வரப்பட்டதாக கூறினார்கள். இதுபோக சரக்கு மற்றும் உணவு தனி. “எதற்காக வந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. கூப்பிட்டார்கள் வந்தோம்” என்று கணிசமானவர்களும், “டி.வி தொடங்குறாங்க.. அதனால வந்தோம்” என வெகுசிலரும் வெகுளித்தனமாக கூறினார்கள்.

அதேபோல், காலையில் திறக்கப்பட்ட அம்மா சிலை பத்தி என்ன நினைக்கிறீங்க ? என்றோம். “அதெல்லாம் எங்களுக்கு எதுவும் தெரியாது” என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு அரக்க பரக்க கிளம்பினார்கள். அதைவிடக் கொடுமை, நடக்க முடியாதவர்களையும், தூக்கிப் போட்டு வந்திருக்கிறார்கள் என்பதுதான். பேருந்தை விட்டு இறங்ககூட முடியாமல் அதற்குள்ளேயே அமர்ந்திருந்தார்கள். எங்களைப் பார்த்ததும் கையெடுத்து கும்பிட்டுக் கொண்டே, “நடக்க முடியாம உக்காந்துட்டோம்” என்றார்கள் முதியவர்கள்.

இதுதான் அ.தி.மு.க..குத்தாட்டம், குடி, கொள்ளைப்பணம் என்ற அம்மாவின் கொள்கை தவறாமல் எடப்பாடி ஓபிஎஸ் கும்பல் ஆட்சி செய்து வருகிறது.

இதையும் பாருங்க: