இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ரூ. 100 கோடிக்கு மேல் கடன் வாங்கி திரும்பச் செலுத்தாத 22 பேரின் ரூ. 76, 600 கோடி வாராக் கடனை தள்ளுபடி செய்துள்ளது.
சி.என்.என் – நியூஸ் 18 தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் கேட்டதன் அடிப்படையில் மார்ச் 31, 2019-ம் ஆண்டு வரை ரூ. 100 கோடி மற்றும் ரூ. 500-க்கும் அதிகமாக தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள் குறித்த தகவல்கள் வங்கி வாரியாக பெறப்பட்டுள்ளன.
இந்தத் தகவலில் ரூ. 100 கோடிக்கும் மேல் பெற்ற ரூ. 2.75 இலட்சம் கோடி மதிப்பிலான வாராக்கடன்களை வணிக வங்கிகள் தள்ளுபடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த மார்ச் 31, 2019 அன்று ரூ. 500 கோடிக்கும் மேல் கடன் வாங்கி திரும்பச் செலுத்தாத 33 பேரின் ரூ. 37, 700 கோடி திரும்ப வராத கடன் இருப்பதாக அறிவித்திருந்தது எஸ்.பி.ஐ.
ரூ. 500 கோடிக்கு மேல் பெற்ற ரூ. 67,600 கோடி வாராக்கடன்களையும் சமீபத்தில் தள்ளுபடி செய்திருப்பதாகவும் அந்தத் தகவல் கூறுகிறது.
ரூ. 100 கோடிக்கு மேல் கடன் வாங்கி திரும்பச் செலுத்தாத 980 பேரின் பட்டியலையும் ரிசர்வ் வங்கி வழங்கியிருக்கிறது. இவற்றில் கடனை திரும்பச் செலுத்தாத 220 கணக்குகள் எஸ்பிஐ வங்கியைச் சேர்ந்தவை. சராசரியாக ரூ. 348 கோடி கடனை இவர்களுக்கு அளித்துள்ளது அந்த வங்கி.
அதுபோல, மார்ச் 31 வரை அதிகக் கடன் கொடுத்த மற்றொரு வங்கியாக பஞ்சாப் நேஷனல் பாங்க் உள்ளது. ரூ. 100 கோடிக்கும் மேல் கடன் வாங்கிய 94 பேர், மொத்தம் ரூ. 27, 024 கோடியை திரும்பச் செலுத்தவில்லை. இந்தக் கடனையும் அந்த வங்கி தள்ளுபடி செய்துள்ளது. சராசரியாக அவர்கள் பெற்ற கடன் ரூ. 287 கோடி.
மேலும், பி.என்.பி. ரூ. 500 கோடிக்கு மேல் கடன் வாங்கி பெரிய கடனாளர்கள் 12 பேரின் மொத்த கடனான ரூ. 9,037 கோடியையும் தள்ளுபடி செய்துள்ளது.

அரசு வங்கிகளில் எஸ்.பி.ஐ.யும் பி.என்.பி.யும் பட்டியலில் முதன்மையான இடங்களைப் பிடித்திருக்கும் நிலையில் ஐ.டி.பி.ஐ. வங்கி தனியார் வங்கிகளில் முதன்மை இடத்தில் உள்ளது. ரூ. 100 கோடிக்கும் மேல் கடன் வாங்கி திரும்பச் செலுத்தாத 71 பேரின் மொத்தக் கடனான ரூ. 26, 219 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது.
அடுத்து இந்தப் பட்டியலில் உள்ளது கனரா வங்கி. ரூ. 100 கோடிக்கும் மேல் கடன் வாங்கி திரும்பச் செலுத்தாத 63 பேரின் கடனையும் ரூ. 500-க்கும் மேல் கடன் வாங்கி 7 கணக்குகளின் மொத்த தொகையான ரூ. 27, 382 கோடியையும் அந்த வங்கி தள்ளுபடி செய்துள்ளது.
ரூ. 100 கோடி மற்றும் அதற்கு மேல் கடனாகப் பெற்று திரும்பச் செலுத்தாத 56 பேரின் கடனைத் தள்ளுபடி செய்துள்ளது பாங்க் ஆஃப் இந்தியா. அதுபோல, கார்ப்பொரேஷன் வங்கி 50 கணக்குகளின் கடனையும் பாங்க் ஆஃப் பரோடா 46 கணக்குகளையும் செண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா 45 கணக்குகளின் கடனையும் தள்ளுபடி செய்துள்ளது.
தனியார் வங்கிகளில் ஆக்ஸிஸ் வங்கி 43 பேரின் கணக்குகளையும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி 37 பேரின் வாராக் கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளன.
படிக்க:
♦ ஊட்டச்சத்து குறைபாடு – காலரா : ஏமன் மக்களின் தீராத்துயரம் ! – படக்கட்டுரை
♦ சஞ்சீவ் பட் : உண்மையைக் காண மறுக்கும் காவிமன்றம் !
அதுபோல், செண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, ரூ. 500 கோடிக்கும் மேல் கடன் பெற்ற 4 வாராக் கடனாளிகளின் கடனையும் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த வாராக்கடன் தள்ளுபடி விவரங்கள் சி.என்.என்., நியூஸ்-18, ஆர்.டி.ஐ தகவலில் தெரிய வந்துள்ளன.
ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் கணக்கில் வைத்திருக்கும் சாமானியர்களை சுரண்டி, ரூ. 100, 500 கோடியென தூக்கிக் கொடுக்கின்றன வங்கிகள். அவற்றையும் வாராக் கடன் எனக்கூறி கமுக்கமாகத் தள்ளுபடி செய்கின்றன. விவசாயிகள் வாங்கும் சில ஆயிரம் ரூபாய் கடனுக்காக அடியாட்களை அனுப்பும் வங்கிகள், கார்ப்பரேட்கள் வாங்கிய கடனை சுலபமாக தள்ளுபடி செய்துவிடுகின்றன. முதலாளித்துவத்தில் இயங்கும் வங்கிகள் முதலாளிகளுக்குத்தான் எப்போதும் சாதகமாக செயல்படுகின்றன.
கலைமதி
நன்றி: சிஎன்பிசி டிவி18
Pnb bank கடன் தள்ளுபடி செஞ்சா list venum irukka thozhar…