ஏமனில் ஐந்து ஆண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 70 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போர் பல லட்சம் மக்களை பஞ்சத்தின் விளிம்பில் தள்ளியுள்ளது. இதை ‘உலகின் மிக மோசமான மனிதநேய நெருக்கடி’ என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.
ஏமன் நாட்டில் சுத்தமற்ற நீர்நிலைகளால் காலரா போன்ற தொற்று நோய்கள் அதிகரித்துள்ளது. ஆதலால், ‘ஏமனில் நீர்நிலைகள் கூட ஆயுதபாணியாக்கப்பட்டிருக்கிறது’ என்று உள்ளூர் அரசுசாரா தொண்டு நிறுவனம் ஒன்று கூறுகிறது. 1.8 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை.
கடந்த சில ஆண்டுகளில் இந்நாட்டில் ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையால், காலரா நோய்த் தொற்று ஏற்பட்டதில், 12 லட்சம் மக்கள் பாதிப்படைந்தனர்.
அங்கு கிடைத்த தரவுகளின்படி, ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி கூட்டணிப் படை, 20 ஆயிரம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அத்தாக்குதல்கள் நடத்தப்பட்ட பகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட மக்கள் வசிப்பிடப் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்குப் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வான்வழி, கடற்படைத் தாக்குதல் மற்றும் கடல்வழிப் பாதை முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை முடக்கிவிட்டன. இதனால் ஆரோகியமான, சத்தான உணவு கிடைப்பது அரிதிலும் அரிதாகிவிட்டது. ஊட்டச்சத்து குறைப்பாட்டால் குழந்தைகள் பெரும்பாலும் நோஞ்சான் குழந்தைகளாகவே வளர்கிறது.
நாட்டின் பல பகுதிகளில், ஊட்டச்சத்து குறைபாடு தடுப்பு மையங்கள் இருந்தும், டஜன் கணக்கான மக்கள் நாள்தோறும் மணிக்கணக்கில் வரிசையில் காத்து நிற்கின்றனர். மையத்தின் தாழ்வாரத்தில், தன் இரண்டு வயது பெண் குழந்தையை மடியில் வைத்து அமர்ந்திருந்தார் அகமது முகமது அல் பஹியாலி. பசியால் கதறும் தன் குழந்தைக்கு தண்ணீரை மட்டுமே கொடுக்க முடிகிறதே என கவலைபடுகிறார், அகமது.
படிக்க:
♦ ஏமன் மக்கள் மீது காலராவை ஏவிவிடும் அமெரிக்க-சவுதி கூட்டணி
♦ ஈராக்கை உலுக்கிய மக்கள் போராட்டம் ! படக் கட்டுரை
“என் குழந்தை தொடர்ந்து வாந்தி எடுக்கிறாள். யாராவது அவளைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் இங்கு அழைத்து வந்திருக்கிறேன். இது காலராவா அல்லது வேறு நோய்த் தொற்றா என்று எனக்கு சரியாக தெரியவில்லை.
நாங்கள் ஏழைகள். போருக்கு முன்பு நான் சவூதி அரேபியாவில் வேலை செய்து கொண்டிருந்தேன். இப்பொழுது எனக்கு வேலை, வீடு என்று எதுவுமில்லை; வேறு இடத்திற்கு செல்லவும் வழியில்லை. எங்களது மோசமான இந்த நிலைமைக்கு கடவுள் மட்டுமே உதவி செய்ய முடியும்” என்கிற அகமதுக்கு இரண்டு வயது பெண் குழந்தையும் சேர்த்து மொத்தம் 11 குழந்தைகள்.
“குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவினை எங்களால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் மாவு மட்டுமே உண்கின்றனர். சில நேரங்களில் வாரக் கணக்கில்கூட அவர்களுக்கு சத்தான பழங்கள், காய்கறிகள், பால் போன்ற எதுவும் கிடைக்காது” என்கிறவர், “நான் ஒரு பிச்சைக்காரனைப் போல் உணர்கிறேன். இந்தப் போர் என் கண்ணியத்தைப் பறித்துக் கொண்டது” என்று ஆதங்கப்படுகிறார் அகமது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வலுவாக உள்ள ஒரு நகரத்தில், சவூதி கூட்டணி படையினரால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குழந்தையும் தாயும், சாடா (Saadah) மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
வறண்டு வரும் நீர்நிலைகளால், 1.45 கோடி மக்கள் சுத்தமான குடிநீரும் சுகாதாரமும் இன்று தவிக்கின்றனர். இதனால் காலரா போன்ற நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.
ஏமனில் மூன்றில் இரண்டு பங்கு மாவட்டங்கள் கடுமையான பஞ்சத்தைச் சந்தித்துள்ளன. ஹாஜா பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்படும் உணவுப் பொட்டலங்கள்.
மருத்துவ முகாமாக மாற்றப்பட்ட பெனி கைஸ் மாவட்ட பள்ளிக்கூடத்தில், தனது இரண்டு வயது குழந்தையுடன் மருத்துவருக்காகக் காத்திருக்கும் அகமது முகமது அல் பஹியாலி.
அப்ஸ் (Abs) மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவு. நோய்த் தொற்று ஆபத்து தெரிந்தும் தனது வீட்டில் கவனிக்க யாருமில்லாததால் முதல் குழந்தையையும் உடன் அழைத்துவந்துள்ள தாய்.
அப்ஸ் மருத்துவமனையில் குறைப் பிரசவத்தில் பிறந்த ஒரு குழந்தை. ஏமனில் உள்ள மகப்பேறு மருத்துவமனைகள் பாதிக்கு பாதி மூடப்படலாம் எனவும், இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கை ஆபத்துக்குள்ளாகும் எனவும் ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடமேற்கு ஏமனில். அப்ஸ் மருத்துவமனை பகுதியிலிருந்து, 20 கி.மீ தூரத்தில் இருக்கும் அஸ்லாம் கிராமம் மருத்துவ முகாமில், மருந்துச்சீட்டிற்காக குழந்தைகளுடன் காத்திருக்கும் தந்தையர்கள்.
மருத்துவ முகாமாக மாற்றப்பட்ட பள்ளிக்கூடத்தில் சிகிச்சைப் பெற்று வரும் ஏமன் பெண்.
ஊட்டச்சத்து குறைப்பாடுடைய 9 மாதக் குழந்தையை பரிசோதிக்கும் பெண் மருத்துவத் தாதி. அக்குழந்தையின் எடை 2.8 கிலோ.
ஆப்ஸ் மாகாணத்தில் உள்ள தண்ணீர் கிணறு. கிணற்று தண்ணீரை யாரும் பயன்படுத்த வேண்டாம் எனவும் அத்தண்ணீரில் காலரா பரவக்கூடும் என்றும் மனிதநேய அமைப்புகள் எச்சரித்துள்ளன.
செய்தி ஆதாரம் : In Pictures: Malnutrition, cholera add to Yemen woes
தமிழாக்கம் : ஷர்மி