இலட்சக்கணக்கான ஈராக் மக்கள் அரசிற்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போராட்டங்கள் வேலையின்மை, அரசு சேவைகள் செயலிழந்தமை, ஊழல் முதலியவற்றை எதிர்த்து நடைபெற்று வருகின்றன.
எண்ணெய் வளத்தில், உலகளவில் ஐந்தாவது இடத்தில் இருக்கக்கூடிய ஈராக் பல ஆண்டுகளாக அமெரிக்காவின் படையெடுப்பால் பல இன்னல்களை சந்தித்து வருகிறது. அதனால் ஈராக்கில் போராட்டம் புதிதில்லை என்றாலும், தற்போது நடைபெற்றுவரும் இந்தப் போராட்டம் அரசை கதிகலங்க வைத்துள்ளது. போராட்டத்தை ஒடுக்க ஈராக் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில், கடந்த அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து இதுவரை 104 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 6,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்ட 51 வயது பெரியவர், “நாங்கள் பட்டினியில் வாடுகிறோம். அதனால்தான் போராடுகிறோம். இங்கு எண்ணெய் கிணறுகள் அதிகம் இருக்கிறது. ஆனால் எங்களது நாடோ நலிவடைந்திருக்கிறது. என்ன நடக்கிறது, நாடு எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது?” என்கிறார்.
தலைக்குமேல் சூழ்ந்த வெள்ளைப் புகை. ஷோகிக்கு தப்பியோடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை. ஈராக் தலைநகர் பாக்தாத்தில், பாதுகாப்புப் படையினரால் அடுத்தடுத்து வீசப்படவிருக்கும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைக் கண்டு கொத்து கொத்தாக மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடுகின்றனர்.
“அரசு ஸ்னைப்பர்களால் (மறைந்திருந்து சுடுபவர்கள்) குறிவைக்கப்படாதவர்கள் அதிர்ஷ்டசாலிகள்” என்று தனது அருகில் முகமூடி அணிந்து ஓடும் நபரை பார்த்துக் கூறுகிறார் ஷோகி.
அரசியல் கட்சிகளால் இல்லாமல், வெகுஜன மக்களால் ஒருங்கிணைத்து நடத்தப்படுகிறது என்பதே இப்போராட்டத்தின் சிறப்பு. வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும், ஊழல் ஒழிய வேண்டும், மக்களது வாழ்க்கைத் தரம் உயரவேண்டும் என்று அவர்களது முழக்கங்கள் இருந்தாலும், அவர்களது முதன்மையான நோக்கம், இதற்கெல்லாம் மூலக் காரணமான ஈராக் பிரதமர் அடில் அப்துல் மக்தி பதவி விலக வேண்டும் என்பதே.
ஷியா ஆன்மீகத் தலைவரான கிராண்ட் அயதுல்லா அலி அல்-சிஸ்தானி, சில சீர்த்திருத்தங்கள் செயல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். ஈராக் ஜனாதிபதி பர்ஹாம் சாலிஹ் போன்றவர்கள், போராடும் மக்களுக்கு எதிரான அரசின் வன்முறையை கண்டித்ததோடு, மக்களின் அரசியலமைப்பு உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றனர்.
படிக்க:
♦ மீளாத்துயரில் ஈராக்கின் பஸ்ரா நகரத்து மக்கள்… | படக்கட்டுரை
♦ பசுமை படர்ந்த தேயிலைத் தோட்டங்களில் புதைந்து கிடக்கும் தொழிலாளர்கள் !
மேலும், அப்துல் மக்தி அரசை கலைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஷியா தலைவர் முக்ததா அல்-சதரும், கூறி வருகிறார்.
ஆனால், “எங்களுக்குச் சீர்த்திருத்தங்கள் தேவையில்லை; நாங்கள் முழுமையான மாற்றத்தை விரும்புகிறோம்; அதிகாரத்திற்கு உட்பட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்; கைகளில் இரத்தம் படிந்த கட்சியிலிருந்து இல்லாமல், புதிய நபர்களை நாங்கள் தேர்ந்தெடுக்க விரும்புகின்றோம்” என்கிற அவர், “இனி இழக்க ஏதுமில்லை; மானமுடன் இறப்பது மேல். நாங்கள் போராட்டத்தை தொடருவோம்” – என்று போராட்டக்காரர்களின் ஒருமித்தக் குரலாக, களப்போராளி ஷோகியின் குரல் ஒலிக்கிறது.
அரசிற்கு எதிரானப் போராட்டத்தில் காயமடைந்த சிறுவனை மீட்டுச் செல்லும் போராட்டக்காரர்.
இரண்டு நாட்கள் போராட்டத்திற்கு பிறகு கலவர பூமியாக மாறிய பாக்தாத்தில், எரியும் டயர்களுக்கு இடையில் ஓடும் சிறுமி.
வேலையின்மை, ஊழல் மற்றும் செயலிழந்துபோன அரசைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களை தங்களது ஆயுத பலத்தால் தடுத்து நிறுத்தும் ஈராக் பாதுகாப்புப் படையினர்.
ஈராக் பாதுகாப்புப் படையினரால் வீசப்பட்ட வெடித்த குண்டுகளின் குப்பிகளை காண்பிக்கிறார் போராட்டக்காரர்.
தலைநகர் பாக்தாத்தில் அக்டோபர் 1-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில், அரசுப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட போராளியின் இறுதி ஊர்வலம்.
போராட்டக்களத்தில் ஊழல், வேலையின்மை, செயலிழந்த அரசுக்கு எதிராக ஈராக் கொடியை ஏந்தி நிற்கும் போராளி.
பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட பெரியவர், ஆயுதங்களுக்கு அஞ்சாமல் தனது கைத்தடியை உயர்த்தி வீரமுழக்கமிடுகிறார்.
பாக்தாத்தில் துவங்கிய போராட்டம் தீயைப் போல நாடு முழுவதும் பரவியது. ஈராக் தெற்கு பகுதியில் தீப்பிழம்புகளுக்கு மத்தியில், முழக்க அட்டையை ஏந்தி நிற்கும் இளைஞர்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட ஈராக்கின் தென்பகுதி நகரமான நசீரியாவில், 8 போராளிகளும் ஒரு அரசு அதிகாரியும் இறந்த பிறகும்கூட தொடர்ந்து முன்னேறிச் செல்லும் மக்கள் போராட்டம்.
செய்தி ஆதாரம் : In Pictures: Mass protests shake Iraq
தமிழாக்கம் : ஷர்மி