Thursday, May 1, 2025
முகப்புசெய்திஇந்தியா“இப்போதாவது எழுந்து நில்லுங்கள்” : அருந்ததி ராய் அறிக்கை !

“இப்போதாவது எழுந்து நில்லுங்கள்” : அருந்ததி ராய் அறிக்கை !

"நமது அரசியலமைப்பின் முதுகெலும்பை உடைத்து, நம் காலடியில் ஒரு குழியை வெட்டுவதற்கு இந்த அரசாங்கம் தயாராக உள்ளது" - “இப்போதாவது எழுந்து நில்லுங்கள்”

-

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவேட்டை அமல்படுத்துவதற்கு எதிராக எழுந்து நிற்குமாறு இந்திய குடிமக்களை எழுத்தாளர் அருந்ததி ராய் வலியுறுத்தியுள்ளார். ”நமது அரசியலமைப்பின் முதுகெலும்பை உடைத்து, நம் காலடியில் ஒரு குழியை வெட்டுவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

பொருளாதார மந்தநிலைக்கு அரசாங்கம் செயல்படுத்திய பணமதிப்பழிப்பு நடவடிக்கையே காரணம் என அருந்ததி ராய் குற்றம் சாட்டினார். “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நம் மீது பணமதிப்பழிப்பு சுமத்தப்பட்டபோது, நாம் வங்கிகளுக்கு வெளியே கீழ்ப்படிதலுடன் நின்றோம். இது நமது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்தது…” என குடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியுள்ளார். மேலும், “1935-ம் ஆண்டின் மூன்றாம் ரீச்சின் (பாசிச ஹிட்லரின் ஜெர்மன் பாராளுமன்றம்) நியூரம்பெர்க் சட்டங்களை ஒத்த கொள்கைகளுக்கு, நாம் மீண்டும் ஒரு முறை கீழ்ப்படிதலுடன் இணங்கப் போகிறோமா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

 

“நாம் அப்படி செய்தால், இந்தியா இருக்காது. சுதந்திரத்திற்குப் பிறகு நாம் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறோம். எழுந்து நில்லுங்கள். தயவு செய்து, எழுந்து நில்லுங்கள்!” என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் அருந்ததி ராய்.

படிக்க:
’அறிவிக்கப்படாத அவசரநிலை’ : மாணவர்கள் மீது காவி போலீசின் தாக்குதல் !
♦ குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் !

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் போராடியபோது அவர்கள் மீது போலீசு நடத்திய மிருகத்தனமான தாக்குதல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எழுத்தாளர் அருந்ததி ராய் மக்களை போராட அறைகூவல் விடுத்துள்ளார்.


அனிதா
நன்றி : ஸ்க்ரால்.