30.10.2024
மக்கள் நலன் என்ற பெயரில் போக்குவரத்து துறையில்
தனியார்மயத்தை நுழைக்கும் திமுக அரசு!
கண்டன அறிக்கை
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் மக்களின் வசதிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக தனியார் பேருந்துகளுக்கு கி.மீ.க்கு ரூ.51.25 வீதம் வாடகையாக வழங்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு அரசால், தனியார் பேருந்துகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில், பயன்படுத்துவதற்கான காலம் முடிந்த சுமார் 1000 பேருந்துகளை மீண்டும் இயக்குவதற்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.
இதற்கு கடும் கண்டனம் எழுந்த போதும் பேருந்துகள் வாங்காமல், தேவையான எண்ணிக்கையில் நடத்துநர்கள், ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு போக்குவரத்துத் துறை பணியாளர் இடங்களை நிரப்பாமல் பழைய பேருந்துகளை புதிய பேருந்துகள் போல வண்ணம் பூசுவதில் தான் தமிழ்நாடு அரசு முனைப்பாக இருக்கிறது.
இப்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் நெருக்கடியில் பாதிக்கப்படுவார்கள் என்ற முகாந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்துள்ளது. இது தமிழ்நாட்டு மக்களுக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் செய்யும் துரோகமாகும்.
மக்களின் பயண நெருக்கடியைத் தீர்ப்பதற்கு போதுமான அளவில் தமிழ்நாடு அரசின் பேருந்துகள் இல்லை என்ற உண்மையைப் பற்றிப் பேசுவதற்கு வக்கற்ற தமிழ்நாடு அரசு, எதையோ பேசி தான் செய்யும் தொழிலாளர் விரோத – மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு ஆதரவு கேட்கிறது.
தமிழ்நாடு அரசின் இந்த தொழிலாளர் விரோத – மக்கள் விரோத செயல்பாட்டை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது. இதற்கு எதிராக அனைத்துத் துறை ஊழியர்களும் போராட வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram