மே 23 அன்று அதானியின் விளிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்கு 643 கொள்கலன்களுடன் சென்ற எம்.எஸ்.சி எல்சா 3 (MSC Elsa 3) என்ற சரக்கு கப்பல் கொச்சி அருகே கடலில் மூழ்கியது.
184 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பல், மே 24 ஆம் தேதியன்று கொச்சி துறைமுகத்துக்குச் சென்றுசேர வேண்டும். ஆனால், கொச்சியில் இருந்து தென்மேற்கில் 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் சாய்ந்தது. மே 25 காலை இந்த கப்பல் கடலில் மூழ்கியதாகவும் கப்பலிலிருந்த 24 பேரும் மீட்கப்பட்டதாகவும் இந்தியக் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
இந்த கப்பலில் பத்துக்கும் மேற்பட்ட கொள்கலன்களில் கால்சியம் கார்பைடு (calcium carbide) உட்பட ஆபத்தான வேதிப் பொருட்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடலில் மூழ்கிய பல கொள்கலன்கள் மற்றும் பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் (nurdles) கடந்த சில தினங்களாக கொல்லம், ஆலப்புழா, திருவனந்தபுரம், குமரி கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கி வருகின்றன. இதிலிருந்து வெளியேறிய பஞ்சு, பிளாஸ்டிக் உள்பட பல்வேறு பொருட்கள் கடற்கரையில் சிதறிக் கிடக்கின்றன.
இந்நிலையில் கரை ஒதுங்கும் அமிலப் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் கப்பலிலிருந்த 84.44 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 367.1 மெட்ரிக் டன் பர்னஸ் ஆயில் (furnace oil) உள்ளிட்ட எரிபொருள்களும் கடலில் கலக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது ஒரு சுற்றுச்சூழல் பேராபத்தை ஏற்படுத்த வல்லது. கப்பல் மூழ்கிய பகுதியில் மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதை மாநில பேரிடராக கேரளா அரசு அறிவித்துள்ளது.
படிக்க: வனம், கனிமப் பாதுகாப்பு சட்டத் திருத்தங்கள்: கார்ப்பரேட் கொள்ளையின் முகமூடி!
இச்சம்பவம் குறித்து கேரள மீன்பிடித் தொழிலாளர்கள் ஐக்கிய வேதி சங்க (Kerala Matsya Thozhilali Aikya Vedi) மாநில தலைவர் சார்லஸ் ஜார்ஜ் கூறியதாவது:
கொச்சி அருகே சரக்கு கப்பல் வேண்டுமென்றே மூழ்கடிக்கப்பட்டிருக்கலாம் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இது போன்றதொரு சரக்கு கப்பலை உருவாக்க ரூபாய் 400 கோடி வரை செலவாகலாம்.
இத்தகைய சரக்கு கப்பலின் காலாவதி 25 ஆண்டுகள் ஆகும். ஆனால் இந்த கப்பல் செயல்பாட்டுக்கு வந்து 28 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதாவது காலாவதி தேதியை கடந்த பின்னரும் மூன்று ஆண்டுகள் இந்த கப்பல் இயக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் ஒரு சரக்கு கப்பலின் காலாவதி 15 ஆண்டுகள் மட்டுமே ஆகும்.
மூழ்கிய இந்த கப்பலின் செயல்பாட்டை நிறுத்தவும், வேறொரு புதிய கப்பலைக் கொண்டு வரவும் இந்த கப்பல் நிறுவனம் ஏற்கெனவே தீர்மானித்திருந்தது.
இந்த கப்பல் மூழ்குவதால் நிறுவனத்திற்கு எந்த நஷ்டமும் கிடையாது. முழு இன்சூரன்ஸ் தொகையும் அந்த நிறுவனத்திற்குக் கிடைக்கும். இதனால் மூழ்கிய கப்பலைத் திருப்பி எடுப்பதற்கு அந்த நிறுவனம் முயலாது.
26 டிகிரி மட்டுமே சாய்ந்த ஒரு கப்பல் 12 மணி நேரத்திற்குள் எப்படி முழுவதுமாக மூழ்கியது என்பதில் சந்தேகம் உள்ளது என்று அவர் கூறினார்.
ஆலப்புழா பகுதியில் நேற்று ஒரு டால்பின் செத்துக் கரை ஒதுங்கியது. இந்த பகுதியில் பஞ்சு நிரப்பப்பட்ட ஒரு கொள்கலன் கரை ஒதுங்கியது. இதிலிருந்து கீழே விழுந்த பஞ்சை சாப்பிட்டதால் இந்த டால்பின் செத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
முதலாளித்துவம் தனது லாப வெறிக்காக எதையும் செய்யும்!
சூர்யா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram