ஈவிரக்கமின்றி 8,000 வீடுகளை இடித்துத் தள்ளிய குஜராத் பா.ஜ.க அரசு

தேசப் பாதுகாப்பு என்று நயவஞ்சகமாக முஸ்லீம்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. இந்த புல்டோசர் இடிப்புகள் என்பவை நிறுவனமயமாக்கப்பட்ட இஸ்லாமிய வெறுப்பின் பரந்த வடிவத்தின் ஒரு பகுதியாகத்தான் நாம் பார்க்க வேண்டும்.

குஜராத்தின் சியாசத் நகரில் அடித்தட்டு மக்கள் வசிக்கும் 8,000 வீடுகளை கடந்த மே இறுதியில் ஒரே இரவில் இடித்து தரைமட்டமாக்கியது பாசிச பா.ஜ.க அரசு. இது வரலாற்றில் மிகப்பெரும் இடிப்பு நடவடிக்கையாகும். இடிக்கப்பட்டவற்றில் பெரும்பாலானவை முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை.

அம்மக்கள் பல பத்தாண்டுகளாக அங்குதான் வசித்து வந்தனர். ஆதார் அட்டைகள், வாக்காளர் அட்டைகள், ரேசன் அட்டைகள் வைத்திருந்த பல குடும்பங்களின் வீடுகளும் இடித்துத் தள்ளப்பட்டன. அப்பகுதியில் வங்கதேசத்தவர் சட்டவிரோதமாக வசித்து வருவதாகவும், இது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் கூறி பாசிச பா.ஜ.க அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டது. ஆனால் வீடுகளை இழந்தவர்களில் 90 சதவிகிதம் பேர் இந்திய குடிமக்களாகி விட்டனர் என்பதையெல்லாம் பொருட்படுத்த பாசிசக் கும்பல் தயாராக இல்லை.

தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பெயரில் இவ்வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டன. பா.ஜ.க அரசு வீடுகளை இடிக்கப் போவதாக எந்த முன்னறிவிப்பும் இன்றி நடவடிக்கைக்குத் தயாரானது. மக்கள் வசிக்க மாற்று இடங்களைக் கூட ஏற்பாடு செய்யவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் குஜராத் உயர்நீதிமன்றமோ, தேச பாதுகாப்பு காரணங்கள் என்பதால் தடைவிதிக்க முடியாது என்று கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது.

மக்கள் சிறுகச் சிறுக சேமித்து, பெரும் உழைப்பைக் கொட்டிக் கட்டிய அவர்களின் வீடுகள் அவர்களின் கண்முன்னே ஈவிரக்கமின்றி இடித்துத் தள்ளப்பட்டன. “நாங்கள் இந்தியர்கள், வங்கதேசத்தவர் அல்ல. அருகில் உள்ள பராஜேடி கிராமத்தில் நான் பிறந்தேன்; என் சகோதரி மோதிபாய் மருத்துவமனையில் பிறந்தார். எனது குழந்தைகள் அனைவரும் இங்குதான் பிறந்தார்கள். 45 ஆண்டுகளுக்கு முன் நான் திருமணம் செய்து கொண்டேன். எனது சேமிப்பு அனைத்தையும் இங்கு முதலீடு செய்தேன். எனக்குச் செல்ல இடமில்லை. என் இதயம் வலிக்கிறது. இப்போது என்னிடம் எதுவும் மிச்சமில்லை. என்வீட்டுப் பொருட்கள் திறந்த வெளியில் கிடக்கின்றன. இனி வாடகைக்கு ஒரு வீட்டைத் தேட முயல்வேன்” என்று கண்ணீர் வடிக்கிறார், பஷீர் பாய்.


படிக்க: காஷ்மீர்: முன்னறிவிப்பின்றி வீடுகளை இடித்த அதிகாரிகள்


ஆயிரக்கணக்கான மக்கள் இதேபோல துயரங்களைச் சுமந்து கொண்டு, அங்கே தெருவில் நிராதரவாக நிற்கின்றனர்.

பஹல்காம் தாக்குதலை முகாந்திரமாக வைத்துக் கொண்டு, முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை நாடு தழுவிய அளவில் பாசிச கும்பல் தொடர்ச்சியாகப் பரப்பிக் கொண்டிருக்கிறது. தற்போது, தேசப் பாதுகாப்பு என்று நயவஞ்சகமாக அவர்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. இந்த புல்டோசர் இடிப்புகள் என்பவை நிறுவனமயமாக்கப்பட்ட இஸ்லாமிய வெறுப்பின் பரந்த வடிவத்தின் ஒரு பகுதியாகத்தான் நாம் பார்க்க வேண்டும்.

இந்த நடவடிக்கையின் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டர் நிலம் மீட்கப்பட்டதாக அகமதாபாத் மாநகராட்சி கூறியது. அவ்வாறு மீட்கப்பட்ட நிலங்கள் கார்ப்பரேட் வளர்ச்சி என்ற பெயரில் அதானி, அம்பானி கார்ப்பரேட் கும்பலுக்குத் தாரைவார்க்கப்படலாம்.

வீடுகளை இழந்து நிர்க்கதியான மக்களோ குற்றவாளிகளாக்கப்பட்டு, செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். துயரங்கள் இதோடு நிற்கப் போவதில்லை. ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அதானி – அம்பானி பாசிசக் கும்பலுக்கு முடிவு கட்டுவதன் மூலமே இத்துயரங்களைத் தடுத்து நிறுத்த முடியும்.


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க