அசோகா பல்கலை பேராசிரியர் கைது – ஆபரேஷன் சிந்தூர் குறித்துக் கேள்வி கேட்டால் தேசத் துரோகமாம்!

மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டதை எதிர்த்து 1,200க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கையெழுத்திட்டு அரசிற்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

பரேஷன் சிந்தூர் குறித்து கருத்து பதிவிட்டதற்காக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் (Ali Khan Mahmudabad) மே 18 அன்று ’தேசத்துரோக’ சட்டப் பிரிவில் (பி.என்.எஸ் பிரிவு 152) கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதனை தன்னுடைய தேசவெறி பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டது பாசிச கும்பல். மே 7 ஆம் தேதி அன்று ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி தன்னுடைய தோல்விகளை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இறுதியாக நான்கு நாட்களுக்கு நீடித்த போர் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் அசோகா பல்கலைக் கழகத்தின் (Ashoka University) அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் “வலதுசாரி விமர்சகர்கள் பலர் கர்னல் சோபியா குரேஷியைப் பாராட்டுவதைப் பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் கும்பல் கொலைகள், புல்டோசர் தாக்குதல்கள் மற்றும் பா.ஜ.க-வின் வெறுப்புப் பேச்சுகளால் பாதிக்கப்பட்டவர்களையும் இந்திய குடிமக்கள் என்று கருதிப் பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் உரக்கக் கோரலாம் அல்லவா? இல்லையெனில் இது வெறும் பாசாங்குத்தனம்” என்று பதிவிட்டிருந்தார்.

ஆனால் இந்தப் பதிவு பெண் அதிகாரிகள் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோரை இழிவுபடுத்துவதாகவும், ராணுவ நடவடிக்கையை இழிவுபடுத்துவதாகவும், சீருடை அணிந்த பணியாளர்களை அவமரியாதை செய்வதாகவும் உள்ளது என்று அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஹரியானா மாநில மகளிர் ஆணையத் தலைவர் ரேணு பாட்டியா அலிகான் மஹ்முதாபாத்திடம் விளக்கம் கேட்டு மே 12 ஆம் தேதியன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கண்மூடித்தனமான போர் வெறி குறித்தும் போரினால் ஏற்படும் மனித இழப்புகள் குறித்தும் எடுத்துக்கூறிய பேராசிரியர் மீது மகளிர் ஆணையத் தலைவர் மூலம் திட்டமிட்டே இவ்வாறு பொய் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.


படிக்க: ஆபரேஷன் சிந்தூரைக் காரணம் காட்டி கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் பாசிச மோடி அரசு!


ஹரியானா மகளிர் ஆணையத் தலைவர் ரேணு பாட்டியா மற்றும் பா.ஜ.க இளைஞர் மோர்ச்சா தலைவர் யோகேஷ் ஜாதேரி ஆகியோரின் புகாரின் அடிப்படையில் மத உணர்வை புண்படுத்துதல், இந்திய இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்குத் தீங்கு விளைவித்தல் என்கிற பி.என்.எஸ் பிரிவு 152 கீழ் மஹ்முதாபாத் மீது இரண்டு எஃப்.ஐ.ஆர்-களை ஹரியானா போலீசு பதிவு செய்தது. அதனடிப்படையில் மே 18 ஆம் தேதி அன்று போலீசார் மஹ்முதாபாத்தை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டதை எதிர்த்து 1,200க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கையெழுத்திட்டு அரசிற்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

மேலும், மே 20 ஆம் தேதி அன்று இந்திய பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கூட்டு ஆசிரியர் அமைப்புகளின் உறுப்பினர்கள் ஹரியானா போலீசால் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தனர்.

ஜே.என்.யூ ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த சுரஜித் மஜூம்தார் கூறுகையில், “டாக்டர் கானுக்கு எதிரான நடவடிக்கைகள் அவரது கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, பொதுமக்களின் உரிமைகள் மீதான தாக்குதலுமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

ஜே.என்.யூ துணைவேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட், குஜராத் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் நீர்ஜா குப்தா, ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆனந்த் பலேராவ், லடாக் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சாகேத் குஷ்வாஹா மற்றும் பஞ்சாப் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.பி. திவாரி ஆகியோர் மஹ் முதாபாத்திற்கு ஆதரவாகக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.


படிக்க: ஆப்ரேஷன் சிந்தூர்: இந்திய செய்தி ஊடகங்களின் பொய் பிரச்சாரமும் கிளறிவிடப்படும் தேசிய வெறியும்!


இந்நிலையில் மஹ்முதாபாத் மீதான வழக்கு விசாரணை மே 21 ஆம் தேதி அன்று நீதிபதி சூர்யகாந்த் மற்றும் டி.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ”இச்சம்பவத்தின் மூலம் அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் ’மலிவான விளம்பரம்’ பெற முயல்கிறார். எல்லோருக்கும் பேச்சுரிமையை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஆனால் வகுப்புவாதத்தைப் பற்றிப் பேச வேண்டிய நேரமா இது…? நாடு ஒரு பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது” என்று நீதிபதி சூர்யா காந்த் மோசமான முறையில் மஹ்முதாபாத்தின் கருத்துக்களைக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜாமீனில் விடுதலையான பின்பு வழக்கு தொடர்பான கட்டுரைகள், ஆன்லைன் பதிவுகள் எழுதக் கூடாது, பஹல்காம் மற்றும் சிந்தூர் குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது, தன்னுடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளின் அடிப்படையில் பேராசிரியர் மஹ்முதாபாத்க்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் மஹ்முதாபாத் மீதான விசாரணைக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. ஹரியானா அல்லது டெல்லியைச் சேராத மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை 24 மணி நேரத்திற்குள் அமைக்குமாறு ஹரியானா டி.ஜி.பி-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமீனில் வெளியே இருக்கும் போது மஹ்முதாபாத் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டவுடன் “இது அவரது தனிப்பட்ட கருத்து” என்று கூறி விலகி நின்ற அசோகா பல்கலைக்கழகம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து, “பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத்திற்கு மாண்புமிகு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதில் நாங்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளோம். இது அவரது குடும்பத்தினருக்கும் அசோகா பல்கலைக்கழகத்தில் உள்ள அனைவருக்கும் மிகுந்த ஆறுதலை அளித்துள்ளது” என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

பேராசிரியர் மஹ்முதாபாத் செய்த குற்றம்தான் என்ன என்று வாசகர்களுக்குக் கேள்வி எழலாம். பாசிச மோடி அரசின் போலித்தனத்தை அம்பலப்படுத்தியது தான் அவர் செய்த ’குற்றம்’. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைக் குறிப்பிட்டுப் பேசிய மத்தியப் பிரதேச பா.ஜ.க அமைச்சர் விஜய் ஷாவைப் போல ”பயங்கரவாதிகளுக்கு பயங்கரவாதிகளின் சகோதரியை வைத்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது” என்று பேசியிருந்தால் மஹ்முதாபாத் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்காது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க