கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்திற்குட்பட்ட குருவிநாயனப்பள்ளி, சின்னமட்டாரபள்ளி, வரட்டனப்பள்ளி, பெலவர்த்தி, நாரலப்பள்ளி, மேகலசின்னப்பள்ளி, பெரியகோட்டபள்ளி, கல்லகுறிக்கி, வேப்பனப்பள்ளி ஆகிய 9 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று (09.06.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு காட்டு யானைகள் அச்சுறுத்தல் தொடர்பாக மனு அளிக்க வந்திருந்தனர். இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள மகாராஜா கடை, வேப்பனப்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 12க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. கடந்த சுமார் 5 ஆண்டுகளாக இப்பகுதிகளில் காட்டு யானைகள் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து வருவதாகவும் யானைகள் விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்து நிலங்களில் உள்ள பயிர்களைச் சேதம் செய்துவிடுவதாகவும் தெரிவித்தனர். இப்பகுதியில் பயிரிடப்படும் பயன் தரும் பயிர்களான தென்னை, மா, வாழை போன்ற மரங்களையும் சேதம் செய்து விடுகிறது. இதனால், இலட்சக்கணக்கில் முதலீடு போட்டு விளைவித்த பயிர்கள் நாசமடைவதால் மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி வருகிறது. ஆனால், இதற்கு அரசும் முறையான இழப்பீடும் தருவதில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், காட்டு யானைகள் தாக்கி உயிரிழப்பும் ஏற்படுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்; பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காட்டு யானைகள் அச்சுறுத்தலால் வெளியூர்களுக்கு வேலைக்குச் சென்று இரவில் வரமுடியவில்லை. யானைகள் அச்சுறுத்தல் என வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தால், வெடி போட்டு தற்காலிகமாக யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுகின்றனர். ஆனால், மேற்கூறிய ஊர்களை உள்ளடக்கிய வனப்பகுதியானது குறுகிய நிலப்பரப்பைக் கொண்ட வனப்பகுதியாகும். இதனால் யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினாலும் மீண்டும் மக்கள் வசிக்கும் பகுதிக்கே வந்துவிடுகின்றன. ஆதலால், இங்குள்ள யானைகளை இப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தக் கோரியும், சோலார் மின்வேலிகள் அமைக்கக் கோரியும் பலமுறை வனத்துறையினரிடம் மக்கள் புகார் அளித்துள்ளனர். கடந்த ஆண்டு ஒருவர் யானைத் தாக்குதலால் உயிரிழந்த போது நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்திருந்தும் நடவடிக்கை ஏதும் இல்லை.
வனத்துறையினர் மீது நம்பிக்கை இழந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்திருந்தனர். இதற்குமுன்பு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மக்கள் தனித்தனியாக மனு அளித்தும் உள்ளனர். முறையான நடவடிக்கை எடுக்காததால் ஒட்டுமொத்தமாகத் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க வந்தனர். ஆனால், மக்கள் அனைவரும் ஆட்சியரைச் சந்திக்க போலீசு அனுமதியளிக்கவில்லை. மக்களை நுழைவாயிலே தடுத்து நிறுத்தியது. இதனால், மக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
’’ஆட்சியர் எங்கள் அனைவரையும் வந்து சந்தித்து நடவடிக்கை எடுக்க உறுதி கொடுக்க வேண்டும். இல்லையென்றால், எங்கள் அனைவரையும் விடுங்கள் நாங்கள் சென்று சந்திக்கிறோம்’’ என மக்கள் தெரிவித்தனர். இதனை போலீசும் மறுத்த நிலையில் போலீசிற்கும் மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
”கலெக்டர் அலுவலகத்திற்கும் இந்த இடத்திற்கும் 50 அடி தூரம் தான் இருக்கும்; எங்களை வந்து ஆட்சியர் சந்திக்க மாட்டாரா” என மக்கள் கேள்வியெழுப்பினர். மேலும், சந்திக்கவில்லையென்றால் தேசிய நெடுஞ்சாலையை மறிக்கவும் மக்கள் தயாராக இருந்தனர். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த நிலையில் போராட்டம் தற்காலிகமாக முடித்துக் கொள்ளப்பட்டது.
உடனடியாக, வனத்துறை இப்பகுதிகளில் உள்ள காட்டு யானைகளை நிரந்தரமாக விரட்ட வேண்டும், கிராமப் பகுதிகளுக்கு யானைகள் வராத வண்ணம் சோலார் மின்வேலிகள் அமைக்க வேண்டும். இதுவரை நடவடிக்கை எடுக்காத வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்ய வேண்டும். மேலும் வனத்துறையினர் யானைகளுக்கான குடிநீர் மற்றும் உணவுகளை காடுகளுக்குள்ளேயே ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். மேலும், கல்குவாரிகள், கார்ப்ரேட் நிறுவனங்கள், நெடுஞ்சாலை விரிவாக்கும் என்ற பெயர்களில் வனப்பகுதிகள் அழிக்கப்படுவதைத் தடுத்த நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளின் அடிப்படையில் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டியுள்ளது.
தகவல்:
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram