இனவெறி இஸ்ரேல் பட்டினிப் போரை நடத்தி காசா மக்களைப் படுகொலை செய்து கொண்டிருக்கிறது. தற்போது காசாவைத் திறந்தவெளி வதை முகாமாக மாற்றும் நோக்கத்தில் காசா மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது.
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி காசா மீது இன அழிப்பு போரைத் தொடங்கிய இஸ்ரேல், காசாவில் மக்கள் அடர்த்தியாக வாழக்கூடிய நகரங்கள், தற்காலிக தங்குமிடங்கள், நிவாரண முகாம்கள், மருத்துவமனைகள், கருத்தரித்தல் மையங்கள் மீது தாக்குதல் நடத்தி 50,000-த்திற்கும் மேற்பட்ட மக்களைப் படுகொலை செய்துள்ளது.
ஆனால், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் நடந்த மக்கள் போராட்டத்தினால் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்ட இஸ்ரேல், 2025 ஜனவரி 19 அன்று காசா உடனான மூன்று கட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மார்ச் 2-ஆம் தேதியுடன் போர் நிறுத்தத்தின் ஆறு வாரக் கால முதல் கட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால், இரண்டாம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல் அனைத்து இஸ்ரேலியப் பணயக் கைதிகளையும் விடுவித்தால் மட்டுமே போர் நிறுத்த ஒப்பந்தம் தொடரும் என்று இனவெறி இஸ்ரேல் அறிவித்தது. இஸ்ரேலின் நயவஞ்சக திட்டத்தை அறிந்துகொண்ட ஹமாஸ் அமைப்பு அதனை ஏற்க மறுத்துவிட்டது.
இதனால் இனவெறி இஸ்ரேல் மார்ச் 2-ஆம் தேதி முதல் காசா மக்களுக்குத் தேவையான உணவு, சுத்தமான குடிநீர், மருந்துப் பொருட்கள் போன்றவற்றை காசாவிற்குள் செல்லவிடாமல் அனைத்து நுழைவாயில்களையும் மூடியது. ஏற்கெனவே இனவெறி தாக்குதல்களாலும், நோய்களாலும் சொல்லொணா துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் நிறுத்தப்பட்டது அவர்களைக் கையறு நிலைக்குத் தள்ளியது.
இந்நிலையில், அமெரிக்காவின் பக்கபலத்துடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, மார்ச் 18-ஆம் தேதி அன்று அதிகாலை தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் மற்றும் ராகேப்பா வடக்கில் காசா நகரம் மற்றும் மத்தியப் பகுதியில் டெயர் அல் – பாலா பகுதிகள் மீது இனவெறி இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் 183 குழந்தைகள் உள்பட 404-க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இது ஒரு ஆரம்பம் மட்டுமே ஹமாஸிடம் உள்ள அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்கும் வரை எங்களின் தாக்குதல்கள் தொடரும் என்று பாசிஸ்ட் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்.
இந்த அறிவிப்பிற்கு பின்னர் காசாவில் உள்ள மருத்துவமனைகள், நிவாரண முகாம்கள், காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களைக் குறிவைத்து படுகொலை செய்த இஸ்ரேல் தாக்குதலை புதிய உச்சத்திற்குக் கொண்டுசென்றது. குறிப்பாக, நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்துவந்த காசாவின் ஒரேயொரு சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மீதும் தாக்குதல் நடத்தி அதனை முற்றிலுமாக அழித்தது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் வடக்கு காசாவில் செயல்பட்டுவந்த அல் – அஹ்லி மருத்துவமனை (Al- Ahli Hospital) மீது தாக்குதல் நடத்தி அதனையும் அழித்தது. மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு அதனை ஹமாஸ் அமைப்பினர் இராணுவ தளமாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்று அவதூறு மூலம் நியாயம் கற்பித்தது.
மேலும் இஸ்ரேலின் கொடிய குண்டு வீச்சு தாக்குதல்களால் 1,500 குழந்தைகள் கண்பார்வையை இழந்துள்ளனர். மேலும், கண்பார்வை இழக்கும் அபாயத்தில் உள்ள குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்க முடியாத அவல நிலை தொடர்கிறது. தொடர் முற்றுகையினால் படுகாயமடைந்த குழந்தைகளுக்கு அத்தியாவசிய சிகிச்சை அளிக்கக்கூடிய மருந்து பொருட்களின் தட்டுப்பாட்டால் உரிய சிகிச்சை கிடைக்காமல் தினந்தோறும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இறந்து கொண்டிருக்கின்றனர்.
மேலும், மார்ச் மாதம் முதல் இஸ்ரேல் காசா மக்களுக்குத் தேவையான உணவுகளை தடுத்து நிறுத்தியுள்ளதால் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாலஸ்தீன குழந்தைகள் மரணத்தின் விளிம்பில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (World Health Organization- WHO) எச்சரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் 950 குழந்தைகள் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா-வின் பாலஸ்தீன அகதிகளுக்கான அமைப்பு (United Nations Relief and Works Agency for palestine Refugees – UNRWA) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் உணவுப் பற்றாக்குறை காரணமாக 65,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்போது இறக்கும் அபாயத்தில் உள்ளனர். அதே சமயத்தில் இராணுவ தாக்குதல் தொடங்கியதிலிருந்து 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இத்தகைய காரணங்களால் இறந்துள்ளனர். முற்றுகையிடப்பட்ட பகுதியில் மாவு, சர்க்கரை, அரிசி, பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பெரும்பாலான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் இறைச்சி, கோழி, மீன் ஆகியவையும் சந்தைகளில் தீர்ந்துவிட்டதால், பஞ்சமும் பட்டினியும் தீவிரமடைந்துள்ளது என்று பாலஸ்தீன மனித உரிமைகள் மையம் ( palestinian Centre For Human Rights – PCHR ) தெரிவித்துள்ளது.
கூடுதலாக, சந்தைகளில் மீதமுள்ள சில பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன. இதனால் காசா மக்கள் தங்கள் அடிப்படை உணவுத் தேவைகளைப் பெற முடியாமல் தவிக்கின்றனர். மேலும், உணவுப் பொருட்களைப் பெற வரிசையில் காத்திருக்கும் மக்கள் கூடும் இடங்களும், கள சமையலறைகளும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளால் (Israel Defense Force – IDF) ) குறிவைக்கப்படுகின்றன. இது பஞ்ச நெருக்கடியை மோசமாக்குகிறது என்று மனித உரிமைகள் மையம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன மனித உரிமைகள் மைய தகவலின்படி, இஸ்ரேலிய முற்றுகையினால் ஏற்பட்ட பட்டினியால் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதற்காக தங்களின் உணவைத் தவிர்க்கும் அவலம் அரங்கேறி வருகிறது. இதனால் அவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இது அவர்களின் ஆரோக்கியத்தையும் பாதித்து அவர்களது குழந்தைகள் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளையும் ஆரோக்கியமான உடல் வளர்ச்சியையும் குறைக்கிறது. அதிகளவிலான கருச்சிதைவு, முன்கூட்டிய குழந்தை பிறப்புகள் மற்றும் எடை குறைந்த குழந்தைகளின் பிரசவம் போன்றவற்றிற்கு இது வழிவகுப்பதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், தாய்மார்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டால், கருவில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் பிறந்த குழந்தை இறப்பு ஆகியவை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இது குழந்தைகளின் வளர்ச்சியைக் கணிசமாகப் பாதிப்பதுடன் குடல் தொற்றுகள், மெலிதல் மற்றும் தசைச் சிதைவு ஆகியவற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள், மிகை இதயத் துடிப்பு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர், இது எதிர்காலத்தில் இதய தசை செயலிழப்புக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. மேலும், வளர்ச்சி குன்றியவர்களாகவும், மன மற்றும் உடல் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படுபவர்களாகவும் இக்குழந்தைகள் இருக்கலாம் என்று பாலஸ்தீன மனித உரிமைகள் மையம் (Palestinian Centre For Human Rights- PCHR) தெரிவித்துள்ளது.
பல தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாததால் பால் பொடியைத் தண்ணீரில் கலந்து கொடுக்கின்றனர். சில நேரங்களில் அவையும் போதுமானதாக இல்லாததால் பட்டினியால் பிஞ்சுக் குழந்தைகள் துடிதுடித்து இறக்கின்றனர். பட்டினி மற்றும் படுகாயங்களினால் பாலஸ்தீன குழந்தைகள் கற்பனை செய்ய முடியாத துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.
பாலஸ்தீன மக்களை முற்றிலுமாக அழிப்பதற்கு இஸ்ரேல் பட்டினியை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது என்பதை மனிதாபிமான குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு இனப்படுகொலை செயலாகும் என்று அக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உலக நாடுகளில் நடைபெறுகின்ற பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான போராட்டங்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் எதிர்ப்பால் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்ட இஸ்ரேல் மே 2-ஆம் தேதி முதல் குறைந்த அளவிலான உணவுப் பொருட்களை காசாவிற்குள் அனுமதித்து வருகிறது. ஆனால், தினந்தோறும் 500-600 நிவாரணப் பொருள் லாரிகள் செல்ல வேண்டிய தேவை காசாவில் இருக்கும் நிலையில் வெறும் 100 லாரிகளை மட்டுமே இனவெறி இஸ்ரேல் அனுமதிக்கிறது. இந்த நிவாரணப் பொருட்களால் பாலஸ்தீன மக்களில் ஒரு சதவிகித மக்களின் தேவையைக்கூட முழுமையாக ஈடுசெய்ய முடியாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், உலக உணவுத் திட்டத்தின் ஆதரவுபெற்ற பேக்கரிகளுக்கு 15 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்களை தெற்கு காசாவில் இஸ்ரேல் படைகள் கொள்ளையடித்தன. மேலும் மே 23 அன்று டெய்ர் அல்-பலாவில் வான்வழித் தாக்குதல் மூலமாக மனிதாபிமான உதவிகளைப் பாதுகாத்துவந்த ஆறு பாதுகாப்பு அதிகாரிகளைப் படுகொலை செய்தது. இது காசா மக்களுக்கான உணவைத் தடுத்து அம்மக்களைப் பட்டினி படுகொலை செய்யும் இஸ்ரேலின் திட்டத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது.
மே 23-ஆம் தேதி அன்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசாவிலிருந்து பாலஸ்தீன மக்களை வெளியேற்றுவதே இஸ்ரேலின் போர் முயற்சியின் அதிகாரப்பூர்வ நோக்கம் என்று முதல் முறையாக பகிரங்கமாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மே 25 அன்று இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் காசாவின் 44 சதவிகித பகுதியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளதாகவும், அடுத்த இரண்டு மாதங்களில் காசாவின் 75 சதவிகித பகுதிகளை கைப்பற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதற்காக தெற்கு கடற்கரை, வடக்கு காசா நகரம் மற்றும் மத்திய காசாவின் நுரைசாட் பகுதியிலும் மூன்று வதை முகாம்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது. இது வடக்கு காசாவிலிருந்து வரும் மக்களை தெற்கு கடற்கரையில் உள்ள சிறிய பகுதிக்குள் அடைத்து வைத்து படுகொலை செய்யும் திட்டமாகும். பாசிஸ்ட் ஹிட்லர் யூதர்களைப் படுகொலை செய்யப் பயன்படுத்திய திட்டத்தினை ஒத்ததாகும்.
“ஒரு வருடத்திற்குள் காசா முற்றிலுமாக அழிக்கப்படும். பொதுமக்கள் தெற்கில் ஒரு ‘மனிதாபிமான மண்டலத்திற்குள்’ தள்ளப்படுவார்கள். அங்கிருந்து அவர்கள் மூன்றாம் நாடுகளுக்கு பெருமளவில் வெளியேற்றப்படுவார்கள்” என்று இம்மாத தொடக்கத்தில் இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தெரிவித்திருப்பது காசா மீது இனவெறி இஸ்ரேல் போர் தொடுத்ததன் உண்மையான நோக்கம் அம்பலமாகியுள்ளது.
தற்போது வரை இனவெறி இஸ்ரேலின் கொடூர தாக்குதலினால் 17,000 மேற்பட்ட குழந்தைகள் உள்பட 53,900 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால், இஸ்ரேலின் நரவேட்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இஸ்ரேலின் இன அழிப்புக்கு இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அந்தந்த நாடுகளில் நடக்கும் மக்கள் போராட்டத்தின் விளைவாக இஸ்ரேலின் தீவிர இன அழிப்பை வேடிக்கை பார்த்துவந்த பல நாடுகள் கூட இஸ்ரேலைக் கண்டித்துள்ளன. குறிப்பாக இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இஸ்ரேல் உடனான ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளன. இந்நாடுகள் இஸ்ரேலின் இன அழிப்பு போருக்கு ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்குவதை நிறுத்தும் வகையில் இந்நாடுகளில் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.
மறுபுறம் காசா மக்கள் மீதான இனவெறி போர் நிறுத்தப்பட வேண்டும் என்று இஸ்ரேல் உள்பட அமெரிக்கா, நெதர்லாந்து, பாரீஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் இஸ்ரேலுக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் இப்போராட்டங்கள் காசா மீதான இஸ்ரேலின் இனவெறி போரைத் தடுத்துநிறுத்துவதையும் சுதந்திர பாலஸ்தீனம் அமைவதை நோக்கியும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
இன்குலாப்
(புதிய ஜனநாயகம் – ஜூன் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram