பா.ஜ.க-வின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மோடியை ‘விஷ்வகுரு’வாக (உலகத் தலைவர்) முன்னிறுத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பிரிட்டனை பின்னுக்குத்தள்ளி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்ற இடத்தை இந்தியா பிடித்தது; நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் ஏவப்பட்டது; ஜி20 கூட்டமைப்பிற்கான தலைமை பொறுப்பு சுழற்சி முறையில் இந்தியாவிற்கு கிடைத்தது போன்றவற்றை ஊதிப்பெருக்கி, இந்தியா தெற்காசிய நாடுகளின் குரலாக இருப்பது போல பா.ஜ.க. கும்பல் சித்தரித்தது.
இந்நிலையில், கடந்தாண்டு இறுதியில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், உலக மேலாதிக்க பயங்கரவாதியும் பாசிஸ்டுமான டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெற்றார். இது இந்தியாவில் மோடி தலைமையிலான பாசிச கும்பலுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதலாக அவர் வெளியிட்டுவரும் அடாவடித்தனமான அறிவிப்புகள், பாசிச நடவடிக்கைகள் மோடி கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்பின் கட்டளைகளுக்கு அடிபணிந்து தனது அமெரிக்க விசுவாசத்தை மோடிக் கும்பல் காட்டிக்கொண்டிருக்கிறது.
ட்ரம்ப் கும்பலின் அடாவடித்தனங்களும் அடிபணியும் அடிமை மோடியும்
அமெரிக்காவின் அதிபராக பாசிஸ்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற உடனேயே, ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்ற பெயரில் அமெரிக்காவில் புலம்பெயர்ந்துள்ள மக்களை மிகவும் இழிவான முறையில் வெளியேற்றத் தொடங்கினார். நூற்றுக்கணக்கான இந்தியர்களை கைகளில் விலங்கிட்டு, கால்களைக் கட்டி, முகத்தில் முகமூடி அணிவித்து, போர்க் குற்றவாளிகளைப் போல இராணுவ விமானத்தில் நாடு கடத்தியது ட்ரம்ப் தலைமையிலான பாசிச கும்பல். இவ்வாறு இந்தியர்கள் இழிவுபடுத்தப்படும் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவர்கள் மீது வக்கிரத்தைக் கக்கியது.
ஒட்டுமொத்த இந்திய மக்களையும் கொந்தளிக்கச் செய்த இந்த நடவடிக்கையை, இந்தியப் பிரதமர் மோடி பெயரளவிற்குக் கூட கண்டிக்கவில்லை. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரோ, அது அமெரிக்காவின் சட்டவிதிகள் சம்பந்தப்பட்ட விசயம் என்று துளியும் மான உணர்ச்சியின்றி பேசினார். மெக்சிகோ, கொலம்பியா போன்ற சிறிய நாடுகள் கூட தங்கள் நாட்டுக் குடிமக்கள் இழிவான முறையில் வெளியேற்றப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. ஆனால், இந்தியர்களை கண்ணியமான முறையில் அழைத்து வருவதற்காக சிறு துரும்பைக் கூட மோடிக் கும்பல் நகர்த்தவில்லை.
அதேபோல், சமீபத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 இந்திய மக்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்குவதாகக் கூறி மோடி-அமித்ஷா கும்பல் “ஆப்பரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தானின் மீது தாக்குதல் தொடுத்தது. இத்தாக்குதலின் மூலம் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டப் போவதாகப் பாசிச கும்பல் சவடாலடித்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் போர்வெறியையும்-இந்துமத வெறியையும் தூண்டி வந்தது. இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திகொள்ளப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எக்ஸ் தளத்தில் அறிவித்தார்.
போர்நிறுத்தம் குறித்து ட்ரம்ப் அறிவித்து அரை மணி நேரத்திற்கு பிறகே இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. காஷ்மீர் விவகாரத்தில் அந்நிய நாடுகள் தலையிடக் கூடாது என்பது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்று சொல்லப்பட்டுவந்த நிலையில், இந்தியாவின் பெயரளவிற்கான இறையாண்மையையும் கேள்வியெழுப்பும் வகையில் ட்ரம்பின் நடவடிக்கை அமைந்தது.
இது இந்திய மக்கள், ஜனநாயக சக்திகள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பிய நிலையில் அமெரிக்கா இவ்விவகாரத்தில் தலையிடவில்லை என்று பூசி மெழுக முயற்சித்தது மோடி அரசு. ஆனால் ட்ரம்போ பத்துக்கும் மேற்பட்ட முறை தான்தான் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் மத்தியஸ்தம் செய்ததாகவும் இரு நாடுகளுடனும் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என்று மிரட்டியவுடன் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திக்கொண்டதாகவும் இழிவுபடுத்தினார்.
மேலும், அமெரிக்காவின் கட்டளைகளுக்கு அடிபணிந்து, ஈரானிடமிருந்து எண்ணெய் (ஒப்பீட்டளவில், தரமானதும் விலை மலிவானதுமாகும்) வாங்குவதை மோடி அரசு நிறுத்தியுள்ளது. ட்ரம்பின் முதலாவது பதவிக் காலத்தில், அமெரிக்காவின் கட்டளைக்கு அடிபணிந்து, வெனிசூலா நாட்டிடமிருந்து மலிவு விலையில் கிடைத்துவந்த பெட்ரோலிய கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதை மோடி அரசு நிறுத்தியது. பின்னர், பைடன் பதவிக் காலத்தில் வெனிசூலாவிடமிருந்து மீண்டும் எண்ணெய் வாங்கிவந்த நிலையில், இப்போது ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானதும், அவரது அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து வெனிசூலாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியுள்ளது. விலை அதிகமாக இருந்தாலும் அமெரிக்காவிடமிருந்து பெருமளவுக்குப் பெட்ரோலிய கச்சா எண்ணெய்யை வாங்க மோடி அரசு தீர்மானித்துள்ளது.
இவையன்றி, அமெரிக்காவின் நோக்கங்களுக்கும் வரி விதிப்புகளுக்கும் மோடி அரசைப் பணிய வைப்பதற்காக ட்ரம்ப் கும்பல் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் இந்திய மாணவர்கள் கல்வி பயின்றுவரும் நிலையில் புதிய மாணவர்களுக்கு விசா வழங்குவதை ட்ரம்ப் அரசு நிறுத்தி வைத்திருப்பது; அமெரிக்காவில் குடிமக்கள் அல்லாதவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணத்திற்கு ஐந்து சதவிகித கலால் வரி விதிக்கப்பட்டிருப்பது; இந்தியாவில் ஒன்றுகோர்க்கப்பட்ட ஐபோன்களை அமெரிக்காவில் விற்பனை செய்தால், ஆப்பிள் நிறுவனத்திற்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று மிரட்டியிருப்பது ஆகியவை மோடி அரசை அடிபணிய வைப்பதற்கான நடவடிக்கைகளே ஆகும்.
மோடி, ட்ரம்பின் கோலுக்கு ஆடும் குரங்கு!
ட்ரம்பின் பாசிச நடவடிக்கைகளையும் வரி விதிப்புகளையும் எதிர்த்துப் பல நாடுகள் எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தியாவில் மோடி கும்பலோ ட்ரம்ப் அதிபரான உடனேயே தனது அமெரிக்க எஜமான விசுவாசத்தை காட்டத் தொடங்கிவிட்டது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய நிதிநிலை அறிக்கையில், போர்பன் விஸ்கி (Bourbon whiskey), ஈதர்நெட் சுவிட்சுகள் (Ethernet Switches), ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் (Harley Davidson Bikes) போன்ற சில அமெரிக்கத் தயாரிப்புகளுக்கான வரிகளைக் குறைப்பதாக மோடி அரசு அறிவித்தது. கூகுள் (Google) போன்ற அமெரிக்க மென்பொருள் நிறுவனங்களுக்குப் பயனளிக்கக்கூடிய வகையில், ஆறு சதவிகித டிஜிட்டல் வரியை இரத்து செய்துள்ளது.
மேலும், கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்ட அமெரிக்க வர்த்தகக் குழுவினர் முன்வைத்த “சமச்சீர் வர்த்தகம்” (Balanced Trade) இரு நாடுகளுக்கிடையில் உறுதியாகியுள்ளது. அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டு அவை இந்தியச் சந்தையில் தடையற்ற முறையில் கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். இது இந்தியச் சந்தையை அமெரிக்கப் பொருட்களின் குப்பைக் கிடங்காக்கும் சதித்திட்டத்தின் ஓர் அங்கமாகும்.
இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 2 அன்று 57 நாடுகளின் மீது பரஸ்பர வரி (Reciprocal Tariff) விதிப்பை ட்ரம்ப் அறிவித்தார். அமெரிக்காவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருப்பது) விகிதத்திற்கேற்ப இந்த வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகப் பற்றாக்குறை நீடிக்கும் வரை வரி விதிப்பு தொடரும் என ட்ரம்ப் அடாவடித்தனமாக அறிவித்தார். அதனடிப்படையில், இந்தியாவிற்கு 26 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தக் கூடியதாகும்.
ட்ரம்ப் கும்பலின் இந்த வரி விதிப்பானது அப்பட்டமாகப் பிற நாடுகளின் சந்தையைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையாகும். வர்த்தகப் பற்றாக்குறையைக் களைவது என்ற பெயரில் அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்கச் செய்வது, பிற நாடுகளின் இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, அமெரிக்கா உடனான இருதரப்பு பொருளாதார ஒப்பந்தத்திற்கு பணியவைப்பது என பிற நாடுகளின் சந்தையை முற்றுமுழுதாக அமெரிக்கப் பொருட்களுக்கு திறந்துவிடச் செய்வதே இதன் நோக்கமாகும். ஒரு நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை சீரழிக்கக்கூடிய இந்த திட்டத்திற்குப் பிற நாடுகள் பணிந்து வருவதற்கேற்ப பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு ட்ரம்ப் கும்பல் நிறுத்தி வைத்துள்ளது.
ட்ரம்பின் இந்த அடாவடித்தனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடா, மெக்சிகோ, பிரேசில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சீனா போன்ற நாடுகள் அமெரிக்க தயாரிப்புகளுக்கு வரி விதித்தும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டும் பதிலடி கொடுத்த நிலையில், மோடி கும்பலோ இந்த வரி விதிப்பைப் பெயரளவிற்குக் கூட எதிர்க்கவில்லை. மாறாக, ட்ரம்பின் மிரட்டலுக்குப் பணிந்து அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில், 55 சதவிகித பொருட்களுக்கு இறக்குமதி வரியைக் குறைத்து இந்தியச் சந்தையை அமெரிக்காவிற்குத் திறந்துவிட்டுள்ளது.
மேலும், உலக நாடுகளில் முதல் நாடாக அமெரிக்கா உடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தமிட தீர்மானித்து அதற்கான பேச்சுவார்த்தையிலும் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்குப் பல நன்மைகளைப் பயக்கப் போவதாக பா.ஜ.க. அடிவருடி ஊடகங்கள் பொய்யைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அமெரிக்கா உடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டால் இந்தியா மறுகாலனியாவது மிகத் தீவிரமாக நடந்தேறும்.
ஏனெனில், இவ்வொப்பந்தம் கையெழுத்திடப்பட்டால், இந்தியாவில் விவசாய மானியங்கள் குறைக்கப்படுவது; விவசாய விளைப்பொருட்கள் அமெரிக்க நிறுவனங்கள் கொள்முதல் செய்வதற்குத் திறந்துவிடப்படுவது; அமெரிக்க மருந்து நிறுவனங்களுக்குப் பயனளிக்கும் வகையில் காப்புரிமைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது; கட்டுப்பாடற்ற தரவு ஓட்டங்களை (Data flow) இந்தியாவில் அனுமதிப்பது உள்ளிட்டு இந்தியாவில் கார்ப்பரேட் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
முறிக்கப்படும் “இந்தியாவின் முதுகெலும்பு”
அமெரிக்க பெட்ரோலிய கச்சா எண்ணெய், நிலக்கரி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, விமானம் போன்ற அமெரிக்காவின் முக்கிய ஏற்றுமதிகளுக்கு இந்தியாவில் ஏற்கெனவே மிக மிகக் குறைந்த வரியே விதிக்கப்படுகிறது. இந்நிலையில், விவசாயப் பொருட்கள், பால் பொருட்கள் மற்றும் சில முக்கிய உற்பத்திப் பொருட்கள் மீதான வரியையும் குறைத்து அத்துறைகளிலும் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்க வல்லரசு துடித்துக் கொண்டிருக்கிறது. தற்போது, ட்ரம்ப் தலைமையிலான பாசிச கும்பல் இந்த நோக்கத்தை ஈடேற்றும் வகையில் பரஸ்பர வரி விதிப்பைப் பயன்படுத்தி வருகிறது.
இந்திய ஆராய்ச்சி கவுன்சிலின் (ICRIER) அறிக்கையின்படி, அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறை விவசாயத் துறையிலேயே அதிகமாக உள்ளது. மேற்கத்திய நாடுகளின் விளைப்பொருட்களுக்கு இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுவது இதற்கான காரணமாகும். இவ்வாறான அதிக வரி விதிப்பினால், மேற்கத்திய நாடுகளின் விளைப்பொருட்கள் இந்தியச் சந்தையில் கொட்டப்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான், இந்திய விவசாயம் ஓரளவேனும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனால், விளைப்பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைத்து இந்திய விவசாய சந்தையை அமெரிக்க விவசாயப் பொருட்களுக்குத் திறந்துவிடுவது; இந்தியாவில் விவசாய உள்ளீடு பொருட்களுக்கான கொஞ்சநஞ்ச மானியங்களையும், குறைந்தபட்ச ஆதார விலையையும் வெட்டுவது; இந்தியாவின் பொது விநியோக முறையை முடிவுக்குக் கொண்டுவருவது; அரசு கொள்முதலை முற்றாகக் கைவிட்டு அமெரிக்க கார்ப்பரேட் பெருநிறுவனங்கள் கொள்முதல் செய்வதற்கு ஏற்பாடு செய்வது போன்றவற்றைச் செயல்படுத்துமாறு அமெரிக்க வல்லரசும் அதன் அடியாளான உலக வர்த்தகக் கழகமும் இந்திய அரசைப் பல ஆண்டுகளாகவே மிரட்டி வருகின்றன.
இவை படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வந்தாலும், இந்திய விவசாயிகளின் எதிர்ப்புக்கு அஞ்சி இந்திய ஆட்சியாளர்கள் இக்கட்டளைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. இந்நிலையில், ட்ரம்பின் மிரட்டலுக்கு அஞ்சி அமெரிக்க சோளம், சோயாபீன்ஸ், பருத்தி, அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட அமெரிக்க விளைப்பொருட்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்க மோடி அரசு தீர்மானித்துள்ளது. இது ஏற்கெனவே செத்துக் கொண்டிருக்கும் இந்திய விவசாயத்தைப் படுகுழிக்குத் தள்ளும் நடவடிக்கையாகும்.
அமெரிக்க விவசாயத்துறையானது பன்னாட்டு ஏகபோக வேளாண் கார்ப்பரேட்களால் கட்டுப்படுத்தப்படக்கூடியது. இந்த கார்ப்பரேட்டுகளுக்கு அமெரிக்காவில் அதிகளவிலான மானியங்கள் வழங்கப்படுவதால் அமெரிக்க விவசாயப் பொருட்கள் ஒப்பீட்டளவில் மலிவு விலையில் கிடைக்கின்றன. ஆனால், இந்திய விவசாயத்துறை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளால் பின்னி பிணையப்பட்டது. மேலும், மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், டீசல், மின்சாரம் போன்ற விவசாய உள்ளீடுகளின் மானியங்கள் வெட்டி சுருக்கப்பட்டு அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது; இந்திய விவசாயத்துறையில் கார்ப்பரேட் ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட்டு வருவது போன்றவற்றால் இந்திய விவசாயம் மிகப்பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
இத்தகைய சூழலில் அமெரிக்க விளைப்பொருட்களுக்கு இந்தியச் சந்தை திறந்துவிடப்பட்டால் இந்திய விவசாயிகளால் அதனுடன் போட்டிப்போட முடியாமல் மிகப்பெரும் நட்டத்தை எதிர்கொண்டு நொடிந்து போவர்.
மேலும், இந்திய விவசாயிகளுக்கு ஏற்படும் நட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு அமெரிக்காவின் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய விளைப்பொருட்களை அடிமாட்டு விலைக்குக் கொள்முதல் செய்யும் சதித்திட்டமும் இதில் ஒளிந்துள்ளது. அதானி-அம்பானி கும்பலும் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும். இந்தியாவில் அரசு கொள்முதல் ஏறக்குறைய ஒழித்துக்கட்டப்பட்டிருப்பது இந்த சதியை மேலும் எளிதாக்கும்.
விவசாயத்துறையை போல இந்தியாவின் பால் உற்பத்தித்துறையும் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நாடாக திகழும் இந்தியாவின் பால் உற்பத்தித் துறையானது சுமார் எட்டு கோடி சிறு உற்பத்தியாளர்களைக் கொண்டது.
மறுபுறம், இந்தியாவிற்கு அடுத்து இரண்டாம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பால் உற்பத்தித்துறை மிகப்பெரும் தொழிற்சாலை, பால் பண்ணைகளை நடத்தக்கூடிய கார்ப்பரேட் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுவதாகும். உலகளவில் அதிக மானியங்களை பெறுபனவாகவும் இவை உள்ளன. இந்நிறுவனங்கள் வைத்திருக்கும் சராசரி கால்நடைகளின் எண்ணிக்கை 337 ஆகும்.
ஆனால், இந்தியாவின் சிறு உற்பத்தியாளர்கள் சராசரியாக இரண்டு அல்லது மூன்று கால்நடைகளை மட்டுமே கொண்டுள்ளனர். பெரும்பாலும் விவசாயிகளாக உள்ள இந்த சிறு உற்பத்தியாளர்கள் கூட்டுறவுகளின் மூலம் இந்தியாவின் பால் தேவையை ஈடுகட்டுவதுடன் உலக பால் உற்பத்தியில் 22-25 சதவிகிதத்தை உற்பத்தி செய்பவர்களாகவும் உள்ளனர். தற்போது அமெரிக்காவின் பால் பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டிருப்பது விவசாயத்துறையை போலவே இந்தியப் பால் உற்பத்தித் துறையையும் கடுமையாகப் பாதிக்கும்.
ட்ரம்ப் – மஸ்க் கும்பலுக்கு படையலிடப்படும் இந்தியா
அமெரிக்காவின் ஏகபோக பெருமுதலாளியான எலான் மஸ்க்-இன் ஸ்பேஸ் எக்ஸ் – ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் இணையச் சேவையை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இந்தியாவில் வழங்குவதற்கு ஏற்பாடாகியுள்ளது. ஏற்கெனவே தொலைத் தொடர்புத் துறையில் 100 சதவிகித நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதியளித்துள்ள மோடி அரசு, இப்போது எலான் மஸ்க்-இன் ஸ்டார்லிங்க் நிறுவனத்தை இணையச் சேவையில் அனுமதிப்பதன் மூலம், ஒட்டுமொத்த இந்தியத் தொலைத்தொடர்புத் துறையையும் அமெரிக்காவுக்கு அடிமைப்படுத்தியிருக்கிறது.
2ஜி வழக்கில் உச்சநீதிமன்றமானது, தொலைத்தொடர்புத் துறையில் வெளிப்படையான ஏலமுறையின் அடிப்படையில்தான் ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. ஆனால், எவ்வித ஏல அறிவிப்புமின்றி செயற்கைக்கோள் அலைக்கற்றைகள் எலான் மஸ்க்-இன் நிறுவனத்திற்குத் தாரைவார்க்கப்பட்டு, எலான் மஸ்க்-இன் ஏகபோகம் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ளது. மேலும், எலான் மஸ்க்-இன் டெஸ்லா மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்கவும் மோடி அரசு தீர்மானித்துள்ளது.
அதேபோல, இந்தியாவில் அதிகளவிலான ஆயுதங்களை திணிப்பதற்கும் ட்ரம்ப் கும்பல் ஆயத்தமாகியுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin) நிறுவனத்தின் அதிநவீன எஃப்-35 (F-35) ஸ்டெல்த் ரக போர் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வது உறுதியாகியுள்ளது. ஏறத்தாழ 968 கோடி ரூபாய் மதிப்புடைய இந்தப் போர் விமானத்தை இயக்க ஒரு மணி நேரத்திற்கு ஏறத்தாழ 28 லட்சம் ரூபாய் அளவிற்கு செலவாகும் நிலையில் இதனைப் பராமரிக்கவும் பல லட்ச ரூபாய் தேவைப்படும். அமெரிக்காவுடன் குவாட் (QUAD) எனப்படும் இராணுவக் கூட்டணியில் உள்ள இந்திய அரசு, இவற்றைச் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்திய உழைக்கும் மக்களுக்குப் பயனற்ற இந்த ஆயுதங்களுக்கான விலையை இந்திய மக்கள் தங்கள் வரிகளின் மூலமே சுமந்தாக வேண்டும். இதுமட்டுமின்றி, போர்த்தந்திர ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் இந்தியாவைக் கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்காவுடன் பத்தாண்டுகால இராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு மோடி அரசை ட்ரம்ப் நிர்வாகம் நிர்பந்தித்து வருகிறது.
மேலும், இந்தியாவில் அணுசக்தித் துறையில் கார்ப்பரேட்களின், குறிப்பாக அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு மோடி அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 2007-இல் கையெழுத்தான இந்திய-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் சிறிய அணு உலைகளை அமைப்பதற்கு அமெரிக்காவின் ஹோல்டெக் இண்டெர்நேஷனல் (Holtec International) என்ற நிறுவனத்திற்கு அந்நாட்டு எரிசக்தித்துறை ஒப்புதலளித்துள்ளது.
இவ்வாறு இந்திய அணுசக்தித் துறையில் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கேற்ப அணுசக்திச் சட்டம் 1962 மற்றும் அணு சேதங்களுக்கான சிவில் பொறுப்புச் சட்டம் 2010 ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள உள்ளதாக மோடி அரசு அறிவித்துள்ளது, அதற்கான குழுவையும் அமைத்துள்ளது. இச்சட்டத்திருத்தங்கள், இந்தியாவில் அணுசக்தி நிலையங்களைக் கட்டுவது, அதற்கான இயந்திரங்கள் மற்றும் எரிபொருள் இறக்குமதி, எரிபொருள் மறுசுழற்சி, கழிவு மேலாண்மை போன்றவற்றில் கார்ப்பரேட்டுகள் தன்னிச்சையாக செயல்படுவதற்கு அனுமதிப்பதுடன் அணுசக்தி நிலையங்களை கார்ப்பரேட்டுகள் சொந்தமாக்கிக் கொள்வதற்கும் வழிவகுக்கும். அதேபோல், அணு விபத்து ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட கார்ப்பரேட்டுகள் பொறுப்பேற்கத் தேவையில்லை என்ற வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இது போபால் நச்சுவாயு படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் காட்டிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
இவையெல்லாம் இந்திய நாடு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலனியாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதைத் துலக்கமாக எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக, அமெரிக்காவின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியுள்ள ட்ரம்ப்-மஸ்க் பாசிச கும்பலானது உலகம் முழுக்க தனது வேட்டையைத் தீவிரப்படுத்துவதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடாலடியான நடவடிக்கைகளின் மூலம் சுரண்டலைத் தீவிரப்படுத்தி உடனடி பயன்களை அடையத் துடித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இந்தியாவை ஆட்சி செய்துவரும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிச கும்பல் அம்பானி-அதானிகளுக்காக இந்திய நாட்டை சூறையாடிவருவது ஒருபுறமெனில், ட்ரம்பின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து இந்தியாவை அமெரிக்காவின் காலனியாக்குவதற்கான அடியாளாகவும் செயல்படுகிறது. இதன்மூலம் ஒட்டுமொத்த இந்திய உழைக்கும் மக்களைப் பேரழிவிற்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது.
இவையெல்லாம் இந்திய நாட்டு மக்கள் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது என்பதைத் துலக்கமாக எடுத்துக்காட்டுகிறது. இதனடிப்படையில், இந்துராஷ்டிர நோக்கத்துடன் இந்தியாவைச் சூறையாடிக் கொண்டிருக்கும் பாசிச கும்பலை வீழ்த்துவது மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகியுள்ளது.
துலிபா
(புதிய ஜனநாயகம் – ஜூன் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram