பொய்க்குற்றச்சாட்டு, போர் வெறிக் கூச்சல்!

ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது என்ற அமெரிக்காவின் முடிவை அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துள்சி கபார்ட் நிராகரித்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களைப் பெற்றிருக்கவில்லை, இப்போது இருக்கும் நிலையிலிருந்து அது அணு ஆயுதத்தைப் பெறுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னுக்குப் பின் முரணாகப் பேசுதல், தான் பேசிய எதற்கும் பொறுப்பெடுத்துக் கொள்ளாமல் இருத்தல், இதுவரையிலான முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் பின்பற்றி வந்த அனைத்து மரபுகளையும் மீறி பொது இடங்களில் கூச்சலிடுதல், எதிராளிகளைத் தாக்கிப் பேசுதல், பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துத் தாக்குதல் நடத்துதல், போர் தொடுத்தல் என அனைத்துவிதமான பாசிச அணுகுமுறைகளையும் அமெரிக்க அதிபர் பாசிஸ்ட் டிரம்ப்-யிடம் பார்க்க முடிகிறது.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலிலும் ட்ரம்ப் இந்த பாசிச அணுகுமுறைகளைக் கையாண்டு வருகிறார். இஸ்ரேல் – ஈரான் போர் தொடர்பாக டிரம்ப் பேசியவற்றைக் காலவரிசை அடிப்படையில் பார்த்தால் இதனைப் புரிந்துகொள்ள முடியும்.

ஜூன் 13 ஆம் தேதியன்று ஈரான் மீது இஸ்ரேல் முதலாவது தாக்குதலைத் தொடுத்திறகு:

“தனது அணுசக்தி திட்டம் குறித்து ஈரான் காலம் கடப்பதற்கு முன்பாக விரைந்து அமெரிக்காவுடனான உடன்பாட்டை எட்டவேண்டும். இல்லையெனில், இஸ்ரேலின் தாக்குதல் மோசமாகிவிடும். அத்தகைய படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர இன்னும் நேரம் உள்ளது. இல்லையெனில், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட இத்தாக்குதல் மேலும் கொடூரமானதாக இருக்கும்” என்று மிரட்டும் வகையில் ஈரான் மீதான தாக்குதல் குறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டார் டிரம்ப்.

ஜூன் 15 – இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் தொடங்கிய பின்னர்:

”இன்றிரவு நடந்த ஈரான் மீதான தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஈரானால் அமெரிக்கா எந்த வகையிலும், வடிவத்திலும் தாக்கப்பட்டால், அமெரிக்க ஆயுதப் படைகள் முழு பலமும் வலிமையும் கொண்டு இதற்கு முன்பு கண்டிராத அளவில் உங்கள் மீது தாக்குதல் தொடுக்கும். இருப்பினும் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தத்தை எளிதாகச் செய்து, இந்த இரத்தக் களரி மோதலை முடிவுக்குக் கொண்டுவர முடியும்”

அன்றைய தினம் மீண்டும், ”நான் வர்த்தகத்தைக் காரணம் காட்டி இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டதுபோல ஈரானும் இஸ்ரேலும் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். மேலும், செர்பியாவுக்கும் கோசாவோவுக்கும் இடையிலான சில பத்தாண்டுக்கால முரண்பாடு எனது தலையீட்டால் போராக வெடிக்கவில்லை; எகிப்திற்கும் எத்தியோப்பியாவிற்கும் இடையிலான முரண்பாடும் அப்படியே. அங்கெல்லாம் அமைதி நிலவுகிறது. ஈரானுக்கும் அமைதி வேண்டும்” என்றார்.

ஜூன் 17 – இஸ்ரேலின் மோசட் தலைமையகம் மீது ஈரான் தாக்குதல் தொடுத்த பின்னர்:

”ஈரானின் வான்வெளியை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். இஸ்ரேலுடனான தாக்குதலில் ஈரானின் ஆயுதங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை. ஈரானின் “உச்சத் தலைவர்” (சுப்ரீம் லீடர்) எங்கு மறைந்திருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியும். அவர் இருப்பிடத்தைத் தாக்குவது எளிதானது. ஆனால், அவரை இப்போதைக்கு நாங்கள் கொல்லப் போவதில்லை” என பகிரங்கமாக மிரட்டினார்.

பொய் சொல்லி போர் தொடுக்கும் பாசிஸ்ட் டிரம்ப்

இந்நிலையில், ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது என்ற அமெரிக்காவின் முடிவை அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துள்சி கபார்ட் நிராகரித்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களைப் பெற்றிருக்கவில்லை, இப்போது இருக்கும் நிலையிலிருந்து அது அணு ஆயுதத்தைப் பெறுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட டிரம்பிடம், இது குறித்துக் கேள்வியெழுப்பியபோது, டிரம்போ, தனது நாட்டின் உளவுத்துறை இயக்குநரின் கருத்தையே நிராகரித்தார். எந்த ஆதாரங்களும் இல்லாமல் ஈரான் மீது இஸ்ரேல் முன்வைக்கும் பொய்க் குற்றச்சாட்டை அப்படியே வழிமொழிந்தார்.

ஆனால், அமெரிக்க உளவுத்துறை இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்னரும் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம், துள்சி கபார்ட் அமெரிக்க காங்கிரசில் “எங்களது உளவாளிகள் கூறிய தகவல்கள் அடிப்படையில் பார்க்கும் போது, 2003-இல் ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரிப்பதை நிறுத்திய பின்னர் இன்றுவரை, ஈரானின் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமெனி, அணு ஆயுதங்கள் தயாரிப்பதை மீண்டும் தொடங்குமாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை” என்று உறுதியாகத் தெரிவித்தார்.

ஆனால், இது குறித்துப் பேசிய பாசிஸ்ட் ட்ரம்ப், “அவர் சொல்வதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஈரான் அணு ஆயுதத்தை அடைவதை நெருங்கிவிட்டது என்று நான் நினைக்கிறேன்” என்று அப்பட்டமாகப் பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஈரான் அணு ஆயுதங்களை அடைய இருக்கிறது என்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்வைக்கும் குற்றச்சாட்டை ஈரானும் மறுத்து வந்துள்ளது. எங்களது நாட்டின் எரிசக்தி உற்பத்திக்காக மட்டுமே யுரேனியம் செறிவூட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மாறாக, அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈரான் ஈடுபடவில்லை என்று தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

மொத்தத்தில், ஈரான் அணு ஆயுத நாடு என்ற நிலையை அடையும் நிலைக்கு வந்துவிட்டது என்ற இஸ்ரேல், அமெரிக்காவின் குற்றச்சாட்டு பொய் என அமெரிக்காவின் உளவுத்துறையே அம்பலப்படுத்தியுள்ளது.

ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு பாசிஸ்டுக்குரிய மொழியில், “நான் நினைக்கிறேன்”, “அதனால் போர் தொடுக்கிறேன்” என்ற முறையில் பேசுகிறார். அந்தவகையிலேயே, இஸ்ரேலைத் தூண்டிவிட்டு ஈரான் மீது தாக்குதலைத் தொடுக்கிறார்.

மொத்தத்தில், அணு ஆயுதம் வைத்திருப்பதுதான் ஈரான் மீது போர்தொடுப்பதற்கான காரணம் என்பது அமெரிக்கா உருவாக்கியுள்ள மாபெரும் பொய்!

ஆம், இலட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறிக்கும் மாபெரும் பொய்! கோடிக்கணக்கான மக்கள் மீது விலைவாசியைச் சுமத்தும் பேரழிவை ஏற்படுத்தும் இன்னுமொரு மாபெரும் பொய்!


மகேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க