ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், கடந்த மே மாதம் 13-ஆம் தேதி குற்றவாளிகள் ஒன்பது பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களில் எட்டு பேருக்கு மட்டும் 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பு வந்த பிறகு, தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மாறிமாறி தங்களால்தான் இத்தீர்ப்பு கிடைத்துள்ளது எனப் போட்டியிட்டு வருகின்றன. ஆனால், இது பாதிக்கப்பட்ட பெண்கள் மன உறுதியுடன் நடத்திய சட்டப்போராட்டம் மற்றும் மக்களின் களப்போராட்டத்தின் விளைவாகக் கிடைத்த தீர்ப்பு என்பதே நிதர்சனமான உண்மை.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் ஆயிரக்கணக்கில் நிலுவையில் இருக்கும் சூழலில், பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது என்ற கோணத்தில் இது வரவேற்கத்தக்கதுதான். பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாகப் பேசுவதற்கு இந்த தீர்ப்பு நம்பிக்கையளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதேசமயம் ஒருவர், இருவர் அல்ல 200-க்கும் மேற்பட்ட பெண்கள் (குறிப்பாகக் கல்லூரி மாணவிகள்) மிகவும் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இச்சம்பவத்திற்கே ஆறு ஆண்டுகள் கழித்துத்தான் தீர்ப்பு வந்துள்ளது என்பது விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று. மேலும், குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.
உண்மையில், இந்த ஒன்பது பேர் மட்டும்தான் பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றினார்களா?
2019-ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட பெண்களைக் கட்டாயப்படுத்தியும் கடத்தி வந்தும், கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி அதைக் காணொளிகளாகப் பதிவு செய்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. காணொளி ஒன்றில் “அண்ணா அடிக்காதீங்கண்ணா.. வலிக்குது..” என்று பெண் ஒருவர் கதறியது அனைவரின் மனதையும் உலுக்கி எடுத்தது.
இதனையடுத்து, 2016-2018 காலகட்டத்தில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான காணொளிகள் பாலியல் வெறிபிடித்த மிருகங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியானது. இதற்கென்றே தனியாகப் பல அறைகள் ஒதுக்கி அதில், 2-3 படப்பிடிப்புக் கேமராக்களைப் பொருத்தி வைத்து, பெண்களை வன்கொடுமை செய்யும் காட்சியைப் பதிவு செய்துள்ளனர் என்ற தகவல் கேட்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும், பதிவு செய்யப்பட்ட காணொளிகளை வைத்து பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டி தாங்கள் சொல்லும் நபர்களுடன் உறவுகொள்ள நிர்பந்திப்பது; அதற்கு இணங்காதவர்களிடம் மிரட்டிப் பணம் பறிப்பது என இதை ஒரு தொழிலாகவே மாஃபியா கும்பலொன்று செய்து வந்துள்ளது என்பதும் அம்பலமானது.
அதுமட்டுமின்றி இந்த மாஃபியா கும்பலைச் சார்ந்த பலரும் கந்துவட்டித் தொழிலில் பெரும் தாதாக்களாக வலம் வந்துள்ளனர். இதனால், பெற்ற கடனைத் திருப்பித்தர முடியாதவர்களின் வீட்டிலிருக்கும் பெண்களைத் கடத்திவந்து இக்கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது என்ற கொடூரமும் அம்பலமானது.
இவ்வாறு பெரிய மாஃபியா கும்பலால் நிறுவனமயமான முறையில் அரங்கேற்றப்பட்ட இக்குற்றத்தில் வெறும் ஒன்பது பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
முக்கியமாக. அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன், பிரவீனின் நெருங்கிய நண்பனான பார் நாகராஜன், அ.தி.மு.க. நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், தி.மு.க. பிரமுகர் செல்வராஜின் மகன் மணிமாறன் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் புள்ளிகள் இவ்வழக்கில் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின.
குறிப்பாக, இவ்வாறு பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்ட ஒரு பெண் இந்த மிருகங்களிடமிருந்து தப்பிக்க முயன்றபோது சாலை நடுவில் விழுந்து மற்றொரு கார் ஏறி பரிதாபமாக உயிரிழந்தார் என்பதை நக்கீரன் பத்திரிகை புகைப்பட ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது. ஆனால், இவ்வாறு காணாமல் போன பெண்கள், மன உளைச்சலுக்கு உள்ளாகி, பயந்து தற்கொலை செய்துகொண்ட பெண்களைப் பற்றிய விசாரணைகள் எதுவும் இவ்வழக்கில் மேற்கொள்ளப்படவில்லை.
குறிப்பாக, இவ்வழக்கை விசாரித்த போலீசு கண்காணிப்பாளரான எஸ்.பி. பாண்டியராஜன், “மொத்தமே நான்கு பேர்தான் குற்றவாளிகள்; நான்கு காணொளிகளுக்கு மேல் இல்லை; ஆளுங்கட்சிக்கும் இதில் தொடர்பில்லை” என அப்பட்டமாக பொய்யுரைத்து, வெளிப்படையாகவே குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்களின் தனிப்பட்ட தகவல்களும் போலீசால் பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இவ்வளவு ஏன் குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கே பலகட்ட போராட்டங்களை நடந்த வேண்டியிருந்தது.
இவ்வாறு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளுக்கு உடந்தையாகச் செயல்பட்ட போலீசு அதிகாரிகளின் பதவி பறிக்கப்பட்டு அவர்கள் சிறையில் தள்ளப்பட்டிருக்க வேண்டுமல்லவா?
ஆனால், ‘சமூக நீதி’ ஆட்சி என்று சொல்லிக்கொள்ளப்படும் தி.மு.க. ஆட்சியில், குற்றவாளிகளை முன்னின்று பாதுகாத்த எஸ்.பி. பாண்டியராஜன், முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் துணை ஆணையராக சுதந்திரமாக உலா வந்துகொண்டிருக்கிறார். இதுகுறித்தெல்லாம் வாய்திறக்காமல், தி.மு.க. ஆட்சியில்தான் விசாரணை துரிதமாக்கப்பட்டது என்று பெருமை பீற்றி வருகின்றனர் தி.மு.க-வின் அடிவருடிகள்.
உண்மையில், குற்றவாளிகளில் ஒரு பகுதியினர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இக்குற்றத்திற்கு உறுதுணையாக இருந்த போலீசு உள்ளிட்ட அதிகார வர்க்கத்தைச் சார்ந்தவர்கள், அச்சமயத்தில் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த அரசியல்வாதிகள், கந்துவட்டி ரவுடிகள், பணக்காரப் பொறுக்கிகள் பலர் விசாரணை வளையத்திற்குள்ளேயே கொண்டுவரப்படாமல் தப்பிக்க வைக்கப்பட்டுள்ளனர்.
எனவே, பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு என்பது பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் ஒரு முழுமையான நீதியைப் பெற்றுத்தரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
ஜென்னி லீ
(புதிய ஜனநாயகம் – ஜூன் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram