இன்று (ஜூன் 22) அதிகாலை ஈரானின் மூன்று அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருக்கிறது. நேற்றே அமெரிக்க அதிபர் பாசிஸ்ட் டிரம்ப், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலில் ஈடுபடும் என எச்சரித்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
உலகத்தில் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் எந்த போர் விதிமுறைகளையும் பின்பற்றாமல் அடாவடித்தனமாக ஈரான் மீது இஸ்ரேல் தொடுத்துவரும் போருக்கு உடந்தையாக அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறது.
ஈரானில் ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இடங்களில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. நடான்ஸ் (Natanz) மற்றும் இஸ்ஃபஹானில் (Isfahan) உள்ள நிலையங்கள் மீது 30 நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணைகளை ஏவியதாகவும், ஃபோர்டோவ் (Fordow) நிலையம் மீது 6 “பதுங்கு குழி” (Bunker buster) குண்டுகளை வீசியதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. சுமார் 30,000 பவுண்டுகள் (13,600 கிலோ கிராம்) எடையுள்ள இவ்வகை குண்டுகள் மிகவும் அழிவுகரமானது.
மனித குலத்திற்கே பெரும் கேட்டை உருவாக்கியிருக்கும் அமெரிக்காவின் இந்த தாக்குதல், இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது குண்டு வீசப்பட்டதற்கு நிகரான கொடூரமான பயங்கரவாத நடவடிக்கையாகும்.
தனது நாட்டில், குடியேற்ற மக்களை வெளியேற்றுவதற்கு மாநில அரசுகளின் உரிமைகளை மீறி, அமெரிக்க ஐக்கிய குடியரசு என்ற கோட்பாட்டையே குழி தோண்டி புதைத்தவர்தான் பாசிஸ்ட் டிரம்ப். இனவெறி, அமெரிக்க மேலாதிக்க வெறி காரணமாக சொந்த நாட்டு மக்களைக் கடுமையாக ஒடுக்கியும் வருகிறார் இந்த பாசிஸ்ட்.
அமெரிக்காவின் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது தன்னுடைய ஆட்சிக்காலத்தில், “போர்கள் தொடங்கப்படாது; முடிவுக்குக் கொண்டு வரப்படும்” என்று பேசிய பாசிஸ்ட் ட்ரம்ப், தனது சொந்த நாட்டின் உளவுப் பிரிவு தெரிவிக்கும் ஆதாரங்களைக் கூட புறந்தள்ளிவிட்டு, பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஈரான் மீது இஸ்ரேல் மூலம் பதிலிப் போரைத் தொடங்கியுள்ளார்.
படிக்க: ஈரான் மீதான போரைக் கண்டிப்போம்!
ஏற்கெனவே, கார்ப்பரேட்டுகளின் கட்டற்ற இயற்கைவள சுரண்டலால் ஏற்பட்டுள்ள சூழலியல் நெருக்கடி; உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு போன்றவற்றால் உலக மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர் கொண்டிருக்கும் நிலையில், இந்நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக மற்றொரு போர்முனையைத் திறந்துள்ளது போர்வெறி பிடித்த அமெரிக்கா.
ஆயுத தளவாட உற்பத்தியில் ஈடுபடும் கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபம் தனது சொந்த கம்பெனிகளின் இலாப வளர்ச்சி என மிகக் குறுகிய முதலாளித்துவ இலாப வெறியின் வெளிப்பாடுதான் ஈரான் மீதான அமெரிக்காவின் இந்தப் போராகும்.
உக்ரைன் – ரஷ்யா போரும், அமெரிக்காவின் பதிலிப் போரே. அந்தப் போர் தொடங்கிய போதே அது உலகப் போராக மாறிவிடுமோ என்று உலக மக்கள் தங்களது அச்சத்தைத் தெரிவித்து வந்தனர். ஒரு வாரத்திற்கு முன்பு, ஈரான் மீதான இஸ்ரேலின் போர் தொடங்கிய போது, இந்த அச்சம் பலருக்கும் அதிகரித்தது.
ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் என்று நேற்றைய முன்தினம் டிரம்ப் போர்வெறிக் கூச்சலிட்டபோது, ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் அதனைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம் என ரஷியா, வடகொரியா போன்ற நாடுகள் கண்டித்திருந்தன.
இக்கண்டனங்களையும் மீறி அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் தொடுத்திருப்பதும் ஏமனில் உள்ள ஹவுதி அரசு ஈரானுக்கு ஆதரவாகப் போரில் இறங்குவதாக அறிவித்திருப்பதும் செங்கடலில் உள்ள அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல் தொடுக்கப் போவதாக எச்சரித்துள்ளதும் இப்போரின் பரப்பு விரிவடைவதை உணர்த்துகிறது. இது பேரழிவை ஏற்படுத்தும் என உலக மக்களும் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தங்களது அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர்.
எனினும், ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் போரையும் மனித குலத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் ஈரான் அணு உலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதலையும் பாசிச மோடி அரசு கண்டிக்காமல் மௌனம் சாதிப்பது மிக மிக இழிவான, கொடூரமான பாசிச மனநிலையையும் அமெரிக்க அடிமைத்தனத்தையும் வெளிப்படுத்துகிறது.
பாசிச டிரம்ப் ஆட்சிக்கு வந்தது முதலாக, இந்தியாவை அவமதித்து வருகிறார். முறையான விசா இல்லாததால் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களைக் கைவிலங்கிட்டு குற்றவாளிகளைப் போல டிரம்ப் நடத்தியதை, தேசபக்தி வேடம் போடும் பாசிச மோடி கண்டிக்கவில்லை!
படிக்க: பொய்க்குற்றச்சாட்டு, போர் வெறிக் கூச்சல்!
பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக, ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது போர்த் தொடுத்ததாக, பாசிச பா.ஜ.க.வும் பாசிச மோடியும் போர்வெறி, தேசவெறி, இசுலாமிய வெறுப்பு, இந்துமதவெறியைக் கிளப்பி தேசபக்த வேடம் போட்டனர்; வெறிக்கூச்சல் போட்டனர். ஆனால், “இந்தியா-பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன்” என்று பாசிச டிரம்ப் கொக்கரிக்கும் போதும், பாசிச மோடி அதனைக் கண்டிக்கவில்லை.
இப்படி அடிமையாக இருந்து கொண்டு, தனது பொய்ப் பிரச்சாரங்கள், ”கோடி மீடியா”க்களை வைத்து மக்களை ஏமாற்றி வருகிறது பாசிச மோடி – அமித்ஷா கும்பல்.
பாலஸ்தீனத்தின் மீது இன அழிப்புப் போரை நடத்திவரும் இஸ்ரேலை இந்திய அரசு இதுவரை கண்டிக்காதது மட்டுமல்ல, அதற்கு மறைமுக ஆதரவுகளையும் தெரிவித்து வந்தது. மேலும், சர்வதேச போர் விதிகளை மீறி ஈரான் மீது இஸ்ரேல் நடத்திவரும் இந்தப் போரை பாசிச மோடி அரசு கண்டித்திருக்க வேண்டும். ஆனால், கண்டிக்காமல் இஸ்ரேலுடன் மிகக்கேவலமான முறையில் நட்புறவைப் பாராட்டி வருகிறது. இஸ்ரேலின் போர் வெறியைத் துருக்கி போன்ற நாடுகளே கண்டிக்கத் தொடங்கிவிட்ட பின்னர் கூட, பாசிச மோடி அரசு கள்ள மௌனம் சாதித்து வருகிறது.
பாசிச மோடியும் அவருக்குப் பின்னால் இருக்கும் சங்கப் பரிவாரக் கும்பலும் வேண்டுமென்றால் மௌனமாக இருந்துவிட்டுப் போகட்டும்.
இந்திய மக்களின் பிரதிநிதி என்ற முறையில் ஆட்சியில் இருக்கும் நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி அமெரிக்காவிற்கு அடிமை விசுவாசம் காட்டுவதை இந்திய மக்களாகிய நாம் ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும்?
மிக மிக நெருக்கடியான பேராபத்தான இந்த சூழலில், பாசிச மோடி அரசின் இந்தக் கள்ள மௌனத்தைக் கண்டிப்பதுடன், இதற்கெதிராக வீதியில் இறங்கிப் போராட வேண்டியது இந்திய மக்களின் கடமையாகும்.
மகேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram