மயிலாடுதுறை: தலித் வீடு கட்டியதைச் சகித்துக்கொள்ள முடியாத சாதி வெறியர்கள்!

50 பேர் கொண்ட ஆதிக்க சாதிவெறி கும்பல் தட்சிணாமூர்த்தி வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளது. இதில் வீடு முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

யிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் மேலமங்கநல்லூரில் தலித் சமூகத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி வீடு கட்டியுள்ளார். அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத சாதிவெறியர்கள் ஜூன் 22 ஆம் தேதி அன்று தட்சிணாமூர்த்தியின் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர்.

மங்கநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேலமங்கநல்லூர் பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் 2022 ஆம் ஆண்டு கப்பூர் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் தட்சிணாமூர்த்தி இடம் வாங்கி வீடு கட்டியுள்ளார். இடம் வாங்கியது முதல் ஆதிக்கச் சாதி வெறியர்கள் தட்சிணாமூர்த்தி மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வந்துள்ளனர்.

தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் தங்கள் பகுதியில் எப்படி வீடு கட்டி வசிக்கலாம் என்று கூறி 2023 ஆம் ஆண்டு வீட்டை தீ வைத்து எரித்துள்ளனர். இக்கொடிய சம்பவம் நடந்த சில மாதங்களில் தட்சிணாமூர்த்திக்கு சொந்தமான வைக்கோல் போருக்கும் தீ வைத்து அவருடைய சொத்துகளை நாசம் செய்துள்ளனர். அடுத்ததாக வீடு கட்டுவதற்கு வைத்திருந்த 5,000 செங்கற்களைத் திருடிச் சென்றது, ஆடு மாடுகளை அவிழ்த்துச் சென்றது என்று தொடர்ச்சியாக தட்சிணாமூர்த்தி மீது சாதி வெறியர்கள் தாக்குதல் நடத்தி வந்துள்ளனர்.

சாதி வெறியர்களின் தொடர் தாக்குதலால் தட்சிணாமூர்த்தி உடல் மற்றும் பொருளாதார ரீதியாகவும் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளார். போலீசில் புகார் அளித்த போது போலீசார் எத்தகைய நடவடிக்கையும் எடுக்காமல் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளனர்.

இதன் விளைவாக ஜூன் 22 ஆம் தேதி அன்று காலை 50 பேர் கொண்ட ஆதிக்க சாதிவெறி கும்பல் தட்சிணாமூர்த்தி வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளது. இதில் வீடு முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இக்கொடூர சம்பவத்தைக் கண்டித்தும் தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மயிலாடுதுறை குத்தாலம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் விளைவாக போலீசார் தற்போது வரை வன்முறையில் ஈடுபட்ட நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். அவர்களின் மீது பட்டியலின பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் மூன்று பிரிவுகளின் கீழும் வீடு புகுந்து அத்துமீறல், சாதிய வன்கொடுமை, சொத்துகளைச் சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் தாக்குதலில் ஈடுபட்ட மற்ற அனைவரையும் தற்போது வரை கைது செய்யாமல் சிலரை மட்டும் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


படிக்க: இராமநாதபுரம்: தலித் இளைஞரைத் தாக்கிய அகமுடையார் சாதி வெறியர்கள்


சில மாதங்களுக்கு முன்பாக சிவகங்கை மாவட்டத்தில் புல்லட் ஒட்டியதற்காக தலித் இளைஞர் மீது ஆதிக்கச் சாதி வெறியர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழ்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தற்போது தலித் ஒருவர் வீடு கட்டினார் என்பதற்காகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தலித் மக்கள் தங்களின் இயல்பான வாழ்க்கையை அச்சத்துடன் வாழ வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்ட தாக்குதல் சம்பவங்கள் தலித் மக்கள் தங்களை விட எந்தவகையிலும் முன்னேறிவிடக்கூடாது என்கிற பார்ப்பனிய கருத்துகள் ஆதிக்கச் சாதி வெறியர்களின் மனதில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன. இதை “இப்ப எல்லாம் யார் சார் ஜாதி பார்க்குறாங்க?” என்று கேட்பவர்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதேபோல், ‘திராவிட மாடல்’ அரசு, ’சமூக நீதி அரசு’ என்று பெருமை பேசிக்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதிவெறி தாக்குதல்கள் நடப்பதை அங்கீகரிக்காமலும் அவற்றைத் தடுப்பதற்கு போதுமான நடவடிக்கைகளை எடுக்காமலும் இருப்பதானது கண்டிக்கத்தக்கதாகும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க