“பயங்கரவாதத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம், பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்றுவிட்டது” என்று மேடைதோறும் ஆபரேஷன் சிந்தூர் ‘வெற்றி’ பெற்றுவிட்டது போன்ற பிம்பத்தைக் கட்டமைத்து வருகிறார், பிரதமர் மோடி. மறுபுறம் மோடி புகழ்பாடி ஊடகங்களோ, “ஆபரேஷன் சிந்தூர்” அதன் ‘வெற்றி’ மற்றும் இந்திய ராணுவத்தின் ‘வீர பராக்கிரமங்களை’ வியந்தோதி ஊதிப் பெருக்கிக் கொண்டிருக்கின்றன.
இந்த வெற்றுக் கூச்சலில், பஹல்காம் தாக்குதல் ஏன் நடந்தது? உண்மையில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியது யார்? பயங்கரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பிருக்கிறது என்று புலனாய்வுத்துறை அறிக்கைக் கொடுத்தும் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டது ஏன்? என்ற பல கேள்விகள் புதைக்கப்பட்டுவிட்டன.
தோல்வியை மறைக்கவே ஆபரேஷன் சிந்தூர்
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பாகிஸ்தானில் செயல்படும் “எதிர்ப்பு முன்னணி” (The Resistance Front) என்ற அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக இந்திய ஊடகங்களில் தகவல் பரப்பப்பட்டது. ஆனால், இதுவரையில் பயங்கரவாதிகள் எவ்வாறு இந்தியாவிற்குள் ஊடுருவினர்? பயங்கரவாத தாக்குதலின்போது அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் ஏன் இல்லை? இத்தாக்குதல் நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக, காஷ்மீரில் தாக்குதல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருக்கிறது. அதனடிப்படையிலேயே ஏப்ரல் 19 அன்று காஷ்மீர் செல்ல வேண்டிய மோடியின் பயணம் திடீரென்று ரத்துச் செய்யப்பட்டிருக்கிறது. தாக்குதலுக்கு வாய்ப்பிருக்கும் சூழலில், பாதுகாப்பைப் பலப்படுத்தாதது ஏன்? இந்தத் தாக்குதலுக்குத் தொடர்புடையவர்கள் ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை?
“இதுபோன்ற தாக்குதல்களில் பயங்கரவாதிகள் மக்களை ஒவ்வொருவராகக் கொல்வதை இதுவரைப் பார்த்ததில்லை” என்று ஓய்வு பெற்ற இராணுவ கமாண்டர் அனுமா ஆச்சார்யா இத்தாக்குதல் குறித்துக் கேள்வியெழுப்பியிருக்கிறார். இவ்வாறு பல கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தாலும் ஒன்றிய உள்துறை அமைச்சரோ அல்லது பாதுகாப்புத்துறை அமைச்சரோ நாடாளுமன்றத்திலோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்பிலோ இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
மேலும், இந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு, ஒன்றிய அரசின் பாதுகாப்புக் குறைபாடுகளும் மற்றும் உளவுத்துறையின் தோல்வியுமே காரணம் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி சங்கர் சவுத்ரி. ஒருவகையில், இத்தாக்குதல், மோடி-ஷாவின் நிர்வாகத் தோல்வியே.
கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீருக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் சென்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “காஷ்மீரின் சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கப்பட்ட பிறகு, அரசாங்கத்தின் தொடர்ச்சியான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக, நமது நாட்டிற்கு விரோதமான சக்திகளால் வளர்க்கப்பட்ட பயங்கரவாத குழுக்களின் செயல்பாடுகள் முடமாக்கப்பட்டுள்ளது” என்று பெருமை பொங்கக் கூறினார். பயங்கரவாத செயல்பாடுகள் முடமாக்கப்பட்டுள்ளன என்று கூறிக்கொண்டே, காஷ்மீரில் இராணுவத்தைக் குவித்து வருகிறது பாசிச மோடி அரசு. ஆனால், இராணுவக் குவிப்பையும் மீறி நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதல், காஷ்மீரின் சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கியதால் காஷ்மீரில் பயங்கரவாதம் முடக்கப்பட்டுள்ளது என்ற மோடி-ஷா கும்பலின் பிரச்சாரத்தை தவிடுபொடியாக்கியது.
எனவே, மோடி அரசின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தான கேள்விகளை மூடிமறைப்பதற்காகவும், தீவிரமடைந்துவரும் தோல்வி முகத்திலிருந்து மீள்வதற்காகவும், சரிந்துபோயிருக்கும் மோடி பிம்பத்தைத் தூக்கி நிறுத்துவதற்கும், பீகார் மாநிலம் உள்ளிட்டு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கான பிரச்சார ஆயுதமாக பயன்படுத்துவதற்காகவும் பஹல்காம் தாக்குதலைக் கொண்டு காய்நகர்த்தத் தொடங்கியது பாசிச கும்பல். இது 2019-இல் புல்வாமாத் தாக்குதலை நடக்கவிருப்பது தெரிந்திருந்தும் மோடி அரசு அதனை அனுமதித்ததையே நினைவூட்டுகிறது.
ஆனால், பஹல்காம் தாக்குதலை முகாந்திரமாகக் கொண்டு நாடு முழுவதும் இஸ்லாமிய வெறுப்பையும் இந்து முனைவாக்கத்தையும் தீவிரப்படுத்தப் பாசிச கும்பல் எடுத்த முயற்சிகள் காஷ்மீர் மக்களாலும், தாக்குதலுக்கு இலக்காக்கப்பட்ட மக்களாலும் முறியடிக்கப்பட்ட நிலையில், நாடுமுழுவதும் தேசவெறி – போர்வெறி -இந்துமதவெறியைக் கிளப்பிவிடுவதற்கான நடவடிக்கையாக ஆபரேஷன் சிந்தூரை தொடங்கியது பாசிச கும்பல்.
இந்து மதவெறி-தேசவெறியின் கலப்பே ஆபரேஷன் சிந்தூர்
இந்துப் பெண்களின் பொட்டை அழித்ததற்கான பதில் தாக்குதல் என்பதைக் குறிப்பிடும் வகையிலேயே பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கு “ஆபரேஷன் சிந்தூர்” (Operation Sindoor) என்று பாசிச கும்பல் பெயரிட்டது. ஆனால், உண்மையில் இத்தாக்குதலில் இஸ்லாமியர்களும் இறந்திருக்கிறார்கள். குறிப்பாக, சுற்றுலாப் பயணிகளைத் தாக்குதலிலிருந்து காப்பாற்ற முயற்சித்தக் குதிரை சவாரியாளரான சையது அலி ஹூசைன் ஷா கொல்லப்பட்டிருக்கிறார். இந்த உண்மையை மூடி மறைத்துவிட்டு, இத்தாக்குதலில் இந்துக்கள் மட்டுமே இறந்ததாகவும் அதற்காக இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் பழிவாங்கப்பட வேண்டும் என்றும் அப்பட்டமான இந்துமதவெறி பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கேற்பவே ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது.
ஆபேரஷன் சிந்தூருக்கான லோகோவில் (LOGO), சிந்தூர் என்ற ஆங்கில வார்த்தையில் உள்ள இரண்டு “O”-க்களில் ஒன்றில் குங்குமம் நிரப்பிய கிண்ணம், மற்றொன்றில் குங்குமம் சிதறியிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது பெண் என்பவள் ஆண்களின் அடிமை, கணவர்களின் இறப்பிற்கு பிறகு அவர்களுக்கு அகவாழ்க்கை இல்லை என்ற பாசிச கும்பலின் ஆணாதிக்க பிற்போக்கு இந்துத்துவ கொள்கையை உயர்த்திப்பிடிக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமின்றி, பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியக் கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால் இஸ்லாமியர்களையும் காஷ்மீரி மக்களையும் குறிவைக்க வேண்டாம் என்று கூறியதற்காகக் கீழ்த்தரமான முறையில் விமர்சிக்கப்பட்டது காவிக் கும்பலின் வக்கிர முகத்தை அம்பலப்படுத்திக் காட்டியது.
அதேபோல், ஆபேரஷன் சிந்தூர் குறித்து ஊடகங்களுக்கு விளக்கிய இராணுவ அதிகாரிகளில் ஒருவரான சோபியா குரேஷியை, “பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு அவர்களது சகோதரியைக் கொண்டு பதிலடி கொடுக்கப்பட்டது” என்று அவரது மதத்தைக் குறிப்பிட்டு மத்தியப்பிரதேச சட்டமன்றத்தின் மூத்த கேபினட் அமைச்சர் குன்வர் விஜய் ஷா பேசியது காவி கும்பலின் இஸ்லாமியர்கள் மற்றும் பெண்கள் மீதான பார்வையை அம்பலப்படுத்தியது.
இது வெறுமனே ஒரு சட்டமன்ற உறுப்பினரின் கருத்தல்ல, இதுதான் ஒட்டுமொத்த பாசிச கும்பலின் சிந்தனை, அதுவே செயல்வடிவம் பெற்றிருக்கிறது. பா.ஜ.க-வின் மனக்குரலை, குன்வர் சத்தமாக சொல்லிவிட்டார். அதற்குத்தான் அவர் மீதான வழக்குப் போடப்பட்டிருக்கிறது.
மேலும், தற்போது “தனது நரம்புகளில் ஓடுவது இரத்தம் அல்ல, சூடான குங்குமம்” என்று மோடி உணர்ச்சிப் பொங்க முழங்கியிருப்பதன் மூலம், ஆபரேஷன் சிந்தூர் என்பது, நாடு முழுவதும் இந்து மதவெறி – தேசவெறியூட்டுவதற்கான ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் செயல்திட்டமே; இதற்கும் கொல்லப்பட்ட மக்களுக்குமான நீதிக்கும், நாட்டு நலனுக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பது நிரூபணமாகியிருக்கிறது.
மூக்குடைப்பட்ட மோடி-ஷா கும்பல்
பஹல்காம் தாக்குதலுக்கான ‘பதில்’ நடவடிக்கையாக மோடியின் தலைமையில்-முப்படைகளின் கூட்டு நடவடிக்கையில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றுவிட்டதாக ஊதிப் பெருக்கிக் கொண்டிருக்கிறது, மோடிக் கும்பல்.
ஆனால், உண்மையில், இந்தத் தாக்குதலினால் இந்தியாவுக்கு என்ன பலன்? பாகிஸ்தானின் தாக்குதலில் ஏற்பட்ட இழப்புகள் என்ன? என்ற செய்திகள் பெரும்பாலும் வெளிவரவில்லை. கடந்த 8-ஆம் தேதி, ஆபரேஷன் சிந்தூருக்கு எதிராகப் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் எல்லைக் கோட்டுப் பகுதிகளில் உள்ள மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். பூஞ்ச் பகுதியில் மட்டும், தலா ஒரு இந்திய ராணுவ வீரர் மற்றும் கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் உட்பட 22 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலரது வீடுகள் சிதிலமடைந்திருக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வெளியேற்றப்பட்ட மக்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போதிய மருத்துவ வசதிகள் கூட ஏற்பாடு செய்யப்படவில்லை.
காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா மற்றும் உரி பகுதிகளிலும், ஜம்முவின் பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி பகுதிகளிலும், ஸ்ரீநகரின் வூயான், ஜம்மு மற்றும் எல்லைக் கோட்டிற்கு 10-15 கி.மீ. தூரத்தில் உள்ள கிராமங்களிலும், காஷ்மீரின் மத்தியப் பகுதிகளிலும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கிறது. பல வீடுகள் சிதைக்கப்பட்டிருக்கின்றன, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இத்தாக்குதலில் பலியான மக்களின் எண்ணிக்கையையும் போதிய மருத்துவ சிகிச்சைக் கிடைக்காததால் இறந்தவர்கள் குறித்த விவரங்களையும் மோடி அரசும் இராணுவமும் இரகசியமாகவே வைத்துள்ளன. போர்க் காலங்களில் மக்கள் தப்பிப்பதற்கான பதுங்குக் குழிகள் கூட இங்கு இல்லை என்பது பெரும் துயரமும் அவலமுமாகும். தனது அரசியல் ஆதாயத்துக்காக ஆபரேஷன் சிந்தூர் நடத்திய பாசிச கும்பல் எல்லைக் கோட்டுப் பகுதியில் உள்ள மக்களை நிர்கதியாக்கியிருக்கிறது.
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த, ஒன்றிய அரசின் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக மோடிக் கும்பல் பெருமை பீற்றிக் கொள்கிறது. ஆனால், இந்தப் பெருமை பீற்றலில் இந்திய மக்களின் வரிப்பணத்தைக் கோடிக் கணக்கில் கொட்டி வாங்கிய ரபேல் போர் விமானம் அடிவாங்கிய கதை வசதியாக மூடிமறைக்கப்பட்டுள்ளது. ஐந்து ரபேல் போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.
இந்திய ராணுவத்தின் சார்பில் மே 11 அன்று, பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் ரபேல் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்துக் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்த விமானப்படை ஏர் மார்ஷல் ஏ.கே பார்தி, “நாம் தற்போது போர்ச் சூழலில் இருக்கிறோம். இழப்புகள் என்பது போர்ச்சூழலில் பொதுவானது. இந்த சூழலில், நாம் நமது நோக்கங்களை அடைந்தோமா என்ற கேள்வியை நீங்கள் கேட்டால், அதற்கான பதில் ‘ஆம்’. பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நோக்கத்தை நிறைவேற்றினோமா என்று கேட்டால் மீண்டும் இதற்கு வலிமையான பதில் ‘ஆம்’.” என்று பேசியிருக்கிறார்.
அதாவது, ரபேல் உட்பட பல போர் விமானங்கள் அழிக்கப்பட்டிருப்பதையும், இந்தியாவிற்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதையும் அவர் மறுக்கவில்லை, மாறாக அது குறித்து விவாதிக்க வேண்டாம் என்பதே அவர் கருத்து. ஒரு இராணுவ நடவடிக்கை என்ற வகையில் எதிர்த்தரப்பு மற்றும் நமது தரப்பு இழப்புகள் குறித்து நாட்டு மக்களுக்கு வெளியிடுவது கடமையாகும், அந்தக் கடமையைக்கூட இராணுவம் செய்யவில்லை. இந்திய இராணுவமானது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலின் இந்துமதவெறி-தேசவெறி கிளப்பிவிடும் திட்டத்திற்கு பக்கபலமாக நிற்கிறது என்பதை இவையெல்லாம் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கின்றன. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் என அரசின் பல்வேறு துறைகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ள பாசிச கும்பல், இராணுவத்தையும் தன்வயப்படுத்தி வருகிறது என்பதையே இது காட்டுகிறது.
மேலும், மே 8 அன்று சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் ஒரு பில்லியன் டாலர் கடன் பெறுவதைத் தடுக்கும் நோக்கில் ஆபேரஷன் சிந்தூர் மே 7 அன்றே தொடங்கப்பட்டது. ஆனால், மோடி-ஷா கும்பலின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் டாலர் கடனுதவி வழங்கியிருக்கிறது சர்வதேச நாணய நிதியம் (இது பாகிஸ்தானை மறு அடகு வைப்பது என்பது தனி விசயம்).
அதேசமயம், பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்று கூப்பாடு போட்டாலும், இந்தியாவின் இந்த இராணுவ நடவடிக்கையை யூத இனவெறியன் நெதன்யாகு தவிரப் பிற நாடுகளோ அதன் தலைவர்களோ ஆதரிக்கவில்லை. உலக நாடுகளிடம் இந்த நடவடிக்கையின் ‘நியாயத்தை’ எடுத்துரைக்க அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் குழு நாடு நாடாக சுற்றிக் கொண்டிருக்கிறது. சர்வதேச ரீதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுற்றுப் பயணமே, ஆபரேஷன் சிந்தூர் தோல்வியடைந்துவிட்டது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இவற்றின் உச்சமாக, மே 11-ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தியா – பாகிஸ்தான் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திகொள்ளப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எக்ஸ் தளத்தில் அறிவித்தது மோடிக் கும்பலை செய்வதறியாது திக்குமுக்காடச் செய்தது. போர்நிறுத்தம் குறித்து ட்ரம்ப் அறிவித்து அரை மணி நேரத்திற்கு பிறகே மோடி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தியாவின் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கிய ட்ரம்பின் செயலுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறி வருகிறது பாசிச கும்பல்.
எதிர்க்கட்சிகளின் துரோகம்!
பஹல்காம் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது? இதற்கு காரணம் என்ன? ஏன் பயங்கரவாதிகள் கைது செய்யப்படவில்லை? போன்ற பல கேள்விகளுக்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை. அத்தகைய சூழலில், ஆபரேஷன் சிந்தூர் அறிவிக்கப்பட்ட உடனே, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் பாசிச கும்பலின் தேசவெறி முகாமில் ஐக்கியமாகிவிட்டனர். ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்ட செய்தி வெளியானவுடன், தங்களது தேசபக்தியை நீருபிக்க, ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவு தெரிவித்தனர். மூவர்ணக் கொடிப் பேரணியை பா.ஜ.க. துவங்குவதற்கு முன்னர், தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் ஒற்றுமைப் பேரணி நடத்தினார். காங்கிரசு ஜெய்-ஹிந்த் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது.
பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் இந்தக் கட்சிகள், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-விடம் தேசபக்தி சான்றிதழ் பெறுவதற்காகவும், பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளைக் கவர வேண்டும் என்ற குறுகிய நலனுக்காகவும் அரசியல் சோரம் போய்விட்டன. மனிதக்குல விரோத பார்ப்பனிய-பாசிச சித்தாந்தத்திற்கு நேர் எதிரான, மனிதக்குல நன்மைக்கான பொதுவுடைமை சித்தாந்தத்தைக் கொண்டிருப்பதாக சொல்லிக்கொள்ளும் சி.பி.எம். மற்றும் சி.பி.ஐ. கட்சிகளும் பாசிஸ்டுகளின் போர்வெறிக்கு ஆதரவு தெரிவித்தது வெட்கக்கேடானது. முதல் உலகப்போரின்போது “தந்தையர் நாட்டைக் காப்போம்” என்று சமூகதேசிய வெறிக்குப் பலியான சமூக-ஜனநாயகவாதிகளின் வாரிசுகள் தாங்கள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றனர்.
ஆபேரஷன் சிந்தூரின் பயன் என்ன என்று சி.பி.எம். கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.எம்.பேபி கேள்வி எழுப்பியிருக்கிறார். சிந்தூர் நடவடிக்கைத் தொடங்கும் போது இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? ஆபேரஷன் சிந்தூர் நடவடிக்கையின் ‘நியாயத்தை’ எடுத்துரைக்க எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்லும்போது வழியனுப்பிவிட்டு இப்பொழுது கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் மேலே குறிப்பிட்டிருப்பது போல, பஹல்காம் தாக்குதலில் இஸ்லாமிய வெறுப்பு-இந்து முனைவாக்கம் என்ற பாசிச கும்பலின் திட்டம் முறியடிக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகள் இந்த குறிப்பான சூழலைப் பயன்படுத்திக்கொண்டு பாசிஸ்டுகளின் அரசியல் தோல்வியை அம்பலப்படுத்திப் பின்வாங்கச் செய்வதற்குப் பதிலாக, பாசிஸ்டுகளின் நிகழ்ச்சிநிரலுக்கு அப்பட்டமாக பலியாகியுள்ளனர். எதிர்க்கட்சிகளின் இத்தகைய அரசியலற்ற – பாசிஸ்டுகளை ஜனநாயக ரீதியாக அணுகுகிற போக்கு பாசிஸ்டுகளின் பிடியில் மக்களையும் நாட்டையும் தள்ளவே செய்யும். இது நாட்டுக்கும் மக்களுக்கும் எதிர்க்கட்சிகள் செய்கிற மாபெரும் துரோகமாகும்.
பாசிச எதிர்ப்பில் ஒரு மாற்றுத்திட்டத்தின் தேவை குறித்து நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். ஒரு மாற்றுத்திட்டமில்லாமல் பா.ஜ.க-வை தேர்தலில் கூட வீழ்த்த முடியாது என்பதை 2024 நாடாளுமன்றத் தேர்தலும் நிரூபித்துக் காட்டியது. தற்போது பாசிஸ்டுகளின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் அடிபணிந்து போயிருப்பதன் மூலம் மீண்டுமொரு முறை மாற்றுத்திட்டத்தின் முக்கியத்துவம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அப்பு
(புதிய ஜனநாயகம் – ஜூன் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram