பாசிச மோடி அரசு தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளின் மேம்பாட்டிற்காக ஒதுக்கிய நிதியை விட சமஸ்கிருத மொழி மேம்பாட்டிற்காக ஒதுக்கிய நிதி 17 மடங்கு அதிகம் என்கிற அதிர்ச்சி தகவலை “ஹிந்துஸ்தான் டைம்ஸ்” (Hindustan Times) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (Right To Information Act – RTI) மூலம் பெற்று வெளியிட்டுள்ளது.
ஆர்.டி.ஐ தகவலின்படி ஒன்றிய மோடி அரசு 2014 -15 ஆம் நிதி ஆண்டு முதல் 2024 – 25 ஆம் நிதி ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சமஸ்கிருத மொழி மேம்பாட்டிற்காக ₹2,532.59 கோடியை ஒதுக்கியுள்ளது. இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா உள்ளிட்ட செம்மொழிகளுக்கு செலவிடப்பட்ட ₹147.56 கோடியை விட 17 மடங்கு அதிகமாகும். அதாவது அழிவின் விளிம்பில் உள்ள சமஸ்கிருத மொழிக்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ₹230.24 கோடியும் மற்ற ஐந்து செம்மொழிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ₹13.41 கோடியும் ஒதுக்கியுள்ளது.
மேலும், சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் தமிழுக்கு 5 சதவிகிதத்திற்கும் குறைவாகவும், தெலுங்கு மற்றும் கன்னடத்திற்கு 0.5 சதவிகிதத்திற்கும் குறைவாகவும், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளுக்கு 0.2 சதவிகிதத்திற்கும் குறைவாகவும் நிதி ஒதுக்கி தென்னிந்திய மொழிகள் மீதான தன்னுடைய வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளது பாசிச மோடி அரசு.
இந்தி, உருது, சிந்தி ஆகிய செம்மொழிகளாக அங்கீகரிக்கப்படாத மொழிகளின் மேம்பாட்டிற்காக 2014-15 முதல் 2024-25 ஆண்டுகளுக்கு இடையில் ஒருங்கிணைந்த நிதியாக ₹1,317.96 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சமஸ்கிருதத்திற்கு செலவிடப்பட்ட நிதியில் தோராயமாக 52.04 சதவிகிதம் ஆகும். அதாவது உருது மொழிக்கு ₹837.94 கோடி, இந்தி மொழிக்கு ₹426.99 கோடி மற்றும் சிந்தி மொழிக்கு ₹53.03 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
படிக்க: மதுரை முருகன் மாநாடு: தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்கு துடிக்கும் அமித்ஷா
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 21.99 சதவிகிதம் மக்கள் தமிழ் உள்ளிட்ட மேற்குறிப்பிடப்பட்ட 5 செம்மொழிகள் பேசுபவராக உள்ளனர். ஆனால் வெறும் 24,821 பேர் மட்டும் பேசக்கூடிய, அழியும் தருவாயில் உள்ள சமஸ்கிருத மொழிக்கு ஆயிரக்கணக்கான கோடிகளில் நிதி ஒதுக்கப்படுகிறது.
இது குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “சமஸ்கிருதத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கப்படுகிறது. தமிழ் மொழி மற்றும் இதர தென்னிந்திய மொழிகளுக்கு மத்திய அரசின் முதலைக் கண்ணீரை தவிர ஒன்றும் கிடைப்பதில்லை. போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு” எனப் பதிவிட்டுள்ளார்.
பாசிச மோடி கும்பலானது தமிழ்நாட்டில் வளர்வதற்கும் தேர்தலில் ஒரு இடத்திலாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழில் பேசுவதும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் திருக்குறள் வாசிப்பதும், காசி தமிழ்சங்க மாநாடு நடத்துவது உள்ளிட்ட போலி நாடகங்கள் பல நடத்தப்படுகின்றன.
ஆனால் கீழடி ஆய்வறிக்கையை வெளியிடாமல் இருப்பது, இந்தி மொழியை வலுக்கட்டாயமாக திணிப்பது, புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி தரப்படும் என மிரட்டுவது ஆகிய நடவடிக்கைகள் பாசிச கும்பலின் தமிழ் ’பற்றை’யும் தமிழ்நாட்டு மக்கள் மீதான அக்கறையையும் ஏற்கெனவே அம்பலப்படுத்திவிட்டன.
அழியும் தருவாயில் உள்ள சமஸ்கிருதத்திற்கு பெரும் அளவிலான நிதியை ஒதுக்கிவிட்டு தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளுக்கு சொற்பமான நிதியை மட்டும் ஒதுக்கி இருப்பது தற்போது அம்பலமாகி இருப்பதன்மூலம் பாசிச கும்பலின் முகத்திரை மீண்டும் ஒரு முறை கிழித்தெறியப்பட்டுள்ளது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram