சிவில் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு (Association for Protection of Civil Rights), குவில் அறக்கட்டளை (Quill Foundation) ஆகிய அமைப்புகள் இணைந்து வெறுப்புணர்வுக் குற்றங்கள் (hate crimes) தொடர்பான அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் ஆண்டில் மட்டும் முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்பட்ட 947 வெறுப்புணர்வு சார்ந்த குற்றங்கள் நாடு முழுவதும் பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற ஜூன் 7, 2024 முதல் ஜூன் 7, 2025 வரை 947 வெறுப்புணர்வு சார்ந்த குற்றங்கள் பதிவாகியுள்ளன. அதில் 602 வெறுப்புணர்வுக் குற்றங்கள்; 345 வெறுப்பு பேச்சு சம்பவங்கள். அவற்றில் பல ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளால் நடத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
“வெறுப்புணர்வுக் குற்றங்கள் தீவிரமடைந்துள்ள போதிலும் அவற்றைப் பதிவு செய்யவோ ஆவணப்படுத்தவோ எந்த முயற்சியும் (அரசால்) மேற்கொள்ளப்படவில்லை”. தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள் இந்திய சட்டங்களின் கீழ் கண்காணிக்கப்பட்டாலும், மத சிறுபான்மையினருக்கு இது போன்ற வழிமுறை எதுவும் இல்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லீம்கள் முதன்மையாக பாதிக்கப்பட்டுள்ளனர்; 419 சம்பவங்களில் 1,460 முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், 85 தாக்குதல்களில் 1,504 கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தது 25 முஸ்லீம்கள் கொல்லப்பட்டுள்ளனர்; உடல் ரீதியாக தாக்குதல் தொடர்பாக 173 சம்பங்கள் பதிவாகியுள்ளன.
பதிவாகியுள்ள 345 வெறுப்பு பேச்சு சம்பவங்களில் 178 சம்பவங்கள் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க முதலமைச்சர்கள் உள்ளிட்ட பா.ஜ.க-வினருடன் தொடர்புடையவை. இரண்டு நீதிபதிகளும் ஆளுநர் ஒருவரும் வெறுப்பு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இது வெறுப்பு பேச்சுகள் நிறுவனமயப்படுத்தப்பட்டு இயல்பாக்கப்படுவதைக் காட்டுகிறது என்று அறிக்கை கவலையை வெளிப்படுத்துகிறது.
படிக்க: இந்துராஷ்டிர அபாயம்: உத்தரகாண்டில் விரட்டியடிக்கப்படும் முஸ்லீம் மக்கள்
பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இவை அனைத்தும் பாசிச மோடி கும்பல் ஆட்சி செய்கின்ற மாநிலங்களாகும். தேர்தல் காலங்களில் வெறுப்பு பேச்சுகளும் வன்முறைகளும் அதிகரிப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுவதை என்ற பெயரிலான கும்பல் தாக்குதல்கள், மத பண்டிகைகளின் போது நடைபெறும் தாக்குதல்கள், மாற்று மதத்தினரை திருமணம் செய்தவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் முஸ்லீம்களுக்குச் சொந்தமான கடைகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் ஆகியவை அரங்கேறிவருகின்றன. மார்ச் 2025-இல் தேவாலயங்கள் மற்றும் பிரார்த்தனைக் கூடங்களின் மீதான தாக்குதல்களில் 267 கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் கூட விட்டுவைக்கப்படவில்லை. சிறுவர்கள் மீது 32 வெறுப்புணர்வுக் குற்றங்களும், மூத்த குடிமக்கள் மீது 10 வெறுப்புணர்வுக் குற்றங்களும் நடந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை முஸ்லீம்கள் மீதானவை.
வெறுப்புணர்வுக் குற்றங்களில் 13 சதவிகிதம் மட்டுமே முறையான புகார்களாக (FIR) போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் உள்ள இடைவெளியைக் காட்டுகிறது. “இந்த எண்ணிக்கை இந்திய முஸ்லீம்கள் அனுபவித்து வரும் மோசமான சூழ்நிலையையும், குற்றவியல் நீதி அமைப்பில் உள்ள போதாமையையும் குறிக்கிறது” என்று இந்த அறிக்கையின் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
கட்டுப்படுத்தப்படாத வெறுப்பின் நீடித்த சமூக விளைவுகள் குறித்து இந்த ஆய்வு எச்சரிக்கிறது. மேலும், இலக்கு வைத்து நிகழ்த்தப்படும் வன்முறையைக் கண்காணித்து எதிர்த்துப் போராட நிறுவன ரீதியிலான வழிமுறைகள் தேவை என்றும் அழைப்பு விடுக்கிறது. “வெறுப்புக் குற்றங்களும் வெறுப்புப் பேச்சு சம்பவங்களும் ஒருபோதும் தனித்த சம்பவங்களாக நடப்பதில்லை” என்று இந்த அறிக்கை கூறுகிறது. “அவை குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் தேசத்தை பாதிக்கின்றன” என்று மேலும் கூறுகிறது.
பாசிச கும்பல் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தது முதல் நாடு முழுவதும் சிறுபான்மையினர் மீதான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த தாக்குதல்களுக்கு எதிராக நாம் கண்டனக் குரல் எழுப்ப வேண்டும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram