மகாராஷ்டிரா பந்தர்பூர் யாத்திரை: இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிட்ட பட்னாவிஸ் அரசு!

யாத்திரையின் போது யாத்திரிகர்கள் இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்த்து வந்தாலும், மற்ற கிராமவாசிகள் இறைச்சி சாப்பிடுவதென்பது ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. ஆனால் மகாராஷ்டிராவில் பாசிச கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு படிப்படியாக இந்த நிலை மாற்றப்பட்டு வருகிறது.

காராஷ்டிரா மாநிலத்தில் ஆண்டுதோறும் பந்தர்பூர் வாரி (Pandharpur Wari) யாத்திரை நடைபெற்று வருகிறது. அதற்காக சோலாப்பூர் (Solapur) மாவட்டத்தில் பத்து நாட்கள் இறைச்சிக் கடைகள் செயல்படுவதற்குத் தடை விதித்துள்ளது பட்னாவிஸ் அரசு.

மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தின் பந்தர்பூரில் சந்திரபாகா நதிக்கரையில் வித்தோபா (கிருஷ்ணனின் அவதாரம் என்று கூறப்படுகிறது) கோவில் அமைந்துள்ளது. 700 ஆண்டுகளுக்கு மேலாக இக்கோவிலுக்கு ஆண்டுதோறும் ஜூன் – ஜூலை மாதங்களில் பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்த யாத்திரையில் வார்காரிகள் (யாத்திரிகர்கள்), மக்கள் உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிலுக்குச் செல்வார்கள்.

இந்நிலையில் மகாராஷ்டிராவின் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சரும் பா.ஜ.க தலைவருமான ஜெய்குமார் கோர் ஆஷாட ஏகாதசிக்கு (ஆடி மாத வளர்பிறையில் 11வது சந்திர நாள்) ஏழு நாட்களுக்கு முன்பிருந்து பந்தர்பூர் கோவிலுக்கு வரும் யாத்திரிகர்களின் பாத யாத்திரை முடிவுறும் கடைசி மூன்று நாட்கள் வரை (மொத்தமாக 10 நாட்கள்) இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று சோலாப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் “இந்த காலகட்டத்தில் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டுமென்று பல யாத்திரிகர்கள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்-யிடம் தெரிவித்தனர். எனவே கலெக்டர் இதற்கு உத்தரவிட்டார்” என்று தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் மதுபான விற்பனைக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் யாத்திரிகர்கள் பயணம் மேற்கொள்ளும் அனைத்து இடங்களிலும் இதுபோன்ற தடைகள் விதிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பந்தர்பூர்க்கு செல்லும் பாத யாத்திரையை 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சந்த் தியானேஷ்வர் போன்ற துறவிகள் தொடங்கி வைத்தனர் என்று கூறப்படுகிறது. இது பக்தி இயக்கத்துடன் ஆழமான தொடர்புடையது. கடந்த சில ஆண்டுகளாக இந்த நிகழ்வை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் தனது அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள  முயற்சி செய்து வருகிறது.


படிக்க: இராம நவமி: உ.பி-யில் இறைச்சி விற்பனைக்குத் தடை!


பாத யாத்திரையில் பங்கேற்பவர்கள் பெரும்பாலும் இறைச்சி உண்ணும் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். யாத்திரையின் போது யாத்திரிகர்கள் இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்த்து வந்தாலும், மற்ற கிராமவாசிகள் இறைச்சி சாப்பிடுவதென்பது ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. ஆனால் மகாராஷ்டிராவில் பாசிச கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு படிப்படியாக இந்த நிலை மாற்றப்பட்டு வருகிறது.

அம்மாநிலத்தில் பாசிச கும்பல் ஆட்சி அமைத்தது முதல் இந்து மத பண்டிகைகளான நவராத்திரி, ராம நவமி உள்ளிட்ட பண்டிகைகளின்போது மாநிலம் முழுவதும் இறைச்சிக் கடைகள் செயல்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக இம்மாத தொடக்கத்தில், உள்நாட்டு ’பசுக்களின் நலனு’க்காக அமைக்கப்பட்ட மகாராஷ்டிரா கோசேவா ஆயோக் (Maharashtra Goseva Ayog) அமைப்பு பகரீத் பண்டிகை சமயத்தில் ஜூன் 3 முதல் ஜூன் 8 வரை, மாநிலத்தில் எந்த கால்நடை சந்தையும் செயல்படக் கூடாது என்று உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்ததால் இறுதியில் பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.

உழைக்கும் மக்களின் உணவு உரிமையில் தலையிடும் பாசிச கும்பலின் இது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க