“மாபெரும் ஆயுதம்” கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | நெல்லை | செய்தி – புகைப்படம்

க்கள் அதிகாரக் கழகத்தின் “மாபெரும் ஆயுதம்” என்ற கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி ஜூன் 29 அன்று நெல்லை மேலப்பாளையத்தில் எழுச்சிகரமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மக்கள் அதிகாரக் கழகத்தின் நெல்லை மாவட்டச் செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரக் கழக மாநில இணைச் செயலாளர் தோழர் மாறன் கொள்கை அறிக்கையை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார்.

இந்நிகழ்வில் திராவிட தமிழர் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் தமிழகம் கட்சி, ஆதித்தமிழர் கட்சி, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் போன்ற பல்வேறு ஜனநாயக சக்திகள் கலந்துகொண்டு, ”மாபெரும் ஆயுதம்” கொள்கை அறிக்கையை வெளியிட்டனர். குறிப்பாக, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் மற்றும் மாவட்டப் பொருளாளர் சார்பில், தோழர் மாறன் மற்றும் தோழர் தாளமுத்து செல்வா ஆகியோருக்கு நினைவுப் பரிசாகப் புத்தகம் வழங்கப்பட்டது.

சாதிய மற்றும் பாசிச சக்திகளுக்கு எதிரான குரல்

கூட்டத்தில் தனது தலைமை உரையில் பேசிய தோழர் தாளமுத்து செல்வா, நெல்லை மாவட்டத்தில் தொடர்ச்சியாக சாதியப் பிரச்சனைகளைத் தூண்டிவிடும் ஆதிக்கச் சாதி சங்கங்களையும், அவற்றுக்குப் பின்னால் இருந்து இயக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலையும் கடுமையாக அம்பலப்படுத்தினார். ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி போன்ற பாசிசக் கும்பலை வீழ்த்த, மாபெரும் ஆயுதம் என்ற இந்தக் கொள்கை ஆவணத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

வாழ்த்துரை வழங்கியவர்களில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் தோழர் காஜா, தமிழ் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் தமிழ் மணி, மக்கள் தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் கபிலன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தித் தொடர்பாளர் தோழர் நடராஜன், மற்றும் திராவிட தமிழர் கட்சி மாநில பொதுச் செயலாளர் தோழர் கதிரவன் ஆகியோர் தற்போதைய பாசிச சூழலில் இந்தக் கொள்கை அறிக்கையின் முக்கியத்துவம் குறித்துப் பேசினர். பாசிச கும்பலை வீழ்த்த மக்கள் அதிகாரக் கழகத்துடன் என்றும் துணை நிற்போம் என்றும் அவர்கள் உறுதிபட தெரிவித்தனர்.

“நெல்லை மண்ணுக்கு உண்டு பாசிசத்தை எதிர்க்கும் வல்லமை”

கொள்கை அறிக்கை அறிமுக உரையாற்றிய மாநில இணைச் செயலாளர் தோழர் மாறன், இந்த கொள்கை அறிக்கைக்கும் நெல்லை மாவட்டத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை விளக்கினார். இந்தியா பல்வேறு பாரம்பரியங்களுக்கும் பெருமைகளுக்கும் உரியது என்பது போலவே, சிவகளை, ஆதிச்சநல்லூர், அய்யாவழி போன்ற பாரம்பரியச் சிறப்புகளைக் கொண்டது நெல்லை மாவட்டம் என்றார். பார்ப்பனியத்தை எதிர்த்து நிற்கும் வல்லமை இந்த நாட்டிற்கு இருப்பது போலவே, நெல்லை மாவட்டத்திற்கும் உள்ளது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி மதவாத கும்பல் அம்பானி – அதானி போன்ற கார்ப்பரேட் கும்பலுக்காக நாட்டைச் சூறையாடிக் கொண்டிருக்கிறது என்றும், இதைத் தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார். அதற்காகவே, மாபெரும் ஆயுதம் என்ற இந்தக் கொள்கை போர்வாளை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று தனது உரையில் வலியுறுத்தினார்.

பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றைக் கருத்தாக்கத்தோடு ஒன்றிணைந்த இந்த கூட்டம், மாபெரும் ஆயுதம் என்ற கொள்கை அறிக்கையை ஒரு போர்வாளாகத் தாங்கி நிறைவு பெற்றது.

மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை மாவட்டம்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க