ஜம்மு–காஷ்மீரை கூறுபோடத் துடிக்கும் பாசிச கும்பல்!

இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காஷ்மீரை இந்து மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜம்முவிற்கு எதிராக நிறுத்தி ஜம்மு மக்களை தனது அடித்தளமாக மாற்றிக்கொள்ளத் துடிக்கிறது பாசிச கும்பல்.

ஜம்முவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ நிறுவனத்தின் எம்.பி.பி.எஸ் சேர்க்கை பட்டியலை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவிக் கும்பல்

ம்மு–காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரியாசி மாவட்டத்தில் “ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ நிறுவனம்” (SMVDMI) அமைந்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பரில் தேசிய மருத்துவ ஆணையம் இக்கல்லூரிக்கு மருத்துவப் படிப்பிற்கு அனுமதி வழங்கி, 50 மருத்துவ சீட்டுகளை ஒதுக்கியிருந்தது. இதற்கான நீட் தேர்வு தரவரிசை அடிப்படையிலான தற்காலிக மாணவர் சேர்க்கை பட்டியல் நவம்பரில் வெளியிடப்பட்டது. அதில், 42 இஸ்லாமிய மாணவர்களும் ஏழு ‘இந்து’ மாணவர்களும் ஒரு சீக்கிய மாணவரும் தேர்வாகியிருந்தனர்.

இவ்விவகாரத்தை கையிலெடுத்த ஆர்.எஸ்.எஸ். குண்டர் படை, இந்து மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் இஸ்லாமிய மாணவர்களுக்கு சலுகை அளிக்கப்படுவதாகவும் அப்பட்டமான பொய் பிரச்சாரத்தில் இறங்கியது. “ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவிக்கு இந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கையை காஷ்மீர் மக்களுக்கு செலவழிக்கக் கூடாது” என்றும் வைஷ்ணோ தேவி கல்வி நிறுவனங்களில் இந்து ஆசிரியர்கள், ஊழியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும் வெறுப்பை பரப்பியது. போராட்டம் என்ற பெயரில் கல்லூரி வாயிலின் முன்பு அட்டூழியத்தில் ஈடுபட்டது. பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள், துணைநிலை ஆளுநர், ஜே.பி.நட்டா, அமித்ஷா என ஒட்டுமொத்த பாசிச கூட்டமும் இதற்கு துணைநின்றது.

இதனையடுத்து, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கல்லூரியில் போதிய உட்கட்டமைப்பு வசதி இல்லை என்ற பொய்யான காரணத்தைக் கூறி மருத்துவப் படிப்பிற்கான அனுமதியை தேசிய மருத்துவ ஆணையம் எதேச்சதிகரமாக இரத்துச் செய்துவிட்டது. ஜம்மு–காஷ்மீர் மாணவர்களுக்கும் மக்களுக்கும் கிடைத்த மருத்துவக் கல்லூரி பறிக்கப்பட்ட இந்த அறிவிப்பை சங்கிக் கும்பல் வெடி வெடித்து மேளத்தாளத்துடன் கொண்டாடியது.

மற்ற மாநிலங்களில் இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கிடையே மேற்கொள்ளும் பிளவுவாத அரசியலை, ஜம்மு–காஷ்மீரில் பரந்துப்பட்ட அளவில் மேற்கொள்கிறது பாசிச கும்பல். அதாவது, இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காஷ்மீரை இந்து மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜம்முவிற்கு எதிராக நிறுத்தி ஜம்மு மக்களை தனது அடித்தளமாக மாற்றிக்கொள்ளத் துடிக்கிறது பாசிச கும்பல். மறுபுறத்தில், ஜம்முவில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் மீது மத வெறுப்பை பரப்பி ஜம்முவிற்குள் இந்துமுனைவாக்கம் செய்தும் வருகிறது.

வைஷ்ணோ தேவி கல்லூரி விவகாரத்தில் தனது கெடுநோக்கத்தை ஈடேற்றிய பாசிச கும்பல், அடுத்து, காஷ்மீரின் புத்காமில் சட்டக் கல்லூரி வளாகம் அமைக்கப்படுவதற்கு எதிராகப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. ஜம்மு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் சட்டக் கல்லூரியை ஜம்முவில் தொடங்க வேண்டுமெனவும் நீலிக்கண்ணீர் வடித்து, போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதுகுறித்து கேள்வியெழுப்பியுள்ள முதலமைச்சர் உமர் அப்துல்லா, “ஜம்முவில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். இரண்டும் உள்ளன; அப்போதெல்லாம் சமத்துவம், பிராந்திய சமநிலைக்கான கோரிக்கை எங்கே போனது?” என்று அம்பலப்படுத்தியுள்ளார்.

இதுமட்டுமின்றி, கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக் குழுக்களிலும் ஜம்மு மாணவர்களுக்கு இடமளிக்கப்படுவதில்லை என்ற பொய்யை பரப்பி மாணவர்களிடையே மோதலை உருவாக்க முயற்சித்து வருகிறது காவிக் கும்பல். உமர் அப்துல்லா ‘காஷ்மீர் ஆட்சியாளர்’ என்றும் அவரது ஆட்சியில் காஷ்மீருக்கு மட்டும் அனைத்து சலுகையும் அளிக்கப்பட்டு ஜம்மு வளர்ச்சித் திட்டமின்றி புறக்கணிக்கப்படுவதாகவும் அப்பட்டமான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

புறக்கணிக்கப்படும் காஷ்மீர்

ஆனால், காவிக் கும்பல் மேற்கொள்ளும் பொய் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு நேர்மாறாக காஷ்மீர் மக்களின் உரிமைகள் பல்வேறு வகைகளில் வெட்டிச் சுருக்கப்பட்டு வருகிறது.

ஜம்மு–காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2025 வரை இட ஒதுக்கீட்டால் பயனடைந்தவர்கள் குறித்த விவரம் 2025 ஏப்ரலில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அத்தரவுகளானது இட ஒதுக்கீடு என்ற பெயரில் நடந்துவரும் மோசடியையும் காஷ்மீரி இஸ்லாமியர்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுவதையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

அப்புள்ளிவிவரத்தின்படி, இட ஒதுக்கீட்டால் பட்டியல் சாதி (SC) பிரிவின் கீழ் ஜம்முவில் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை 67,112; காஷ்மீரில் 0. பட்டியல் பழங்குடியின (ST) பிரிவில் ஜம்முவில் 4,59,493 பேர் பயனடைந்துள்ளனர்; அதுவே காஷ்மீரில் 79,813 பேர் மட்டுமே. பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் (EWS) எனும் பிரிவின் கீழ் ஜம்முவில் 27,420 பேர் இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர்; காஷ்மீரில் இதன் எண்ணிக்கை 2,273 மட்டுமே. இந்த ஏற்றத்தாழ்வு இட ஒதுக்கீட்டின் அனைத்து பிரிவுகளிலும் உள்ளது. ஜம்முவைக் காட்டிலும் காஷ்மீரின் மக்கள்தொகை அதிகம் என்ற எதார்த்தத்தோடும் இந்தப் புள்ளிவிவரத்தை நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக, ஜம்மு–காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 69 சதவிகித மக்கள் பொதுப் பட்டியலுக்கு கீழேயே வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் காஷ்மீரி இஸ்லாமியர்கள் ஆவர். 2019-க்கு முன்புவரை பொதுப் பட்டியல் 50 சதவிகிதம் வரையில் இருந்துவந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பாசிச பா.ஜ.க. கும்பல் பிற சாதிகளுக்கு கூடுதலாக இட ஒதுக்கீடு அளித்து பொதுப் பட்டியலை வெட்டி சுருக்கி வருகிறது.

குறிப்பாக, கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஜம்மு–காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் புதிய இட ஒதுக்கீட்டு கொள்கையை அமல்படுத்திய மோடி அரசு, 18 சதவிகிதமாக உள்ள பட்டியல் சாதி – பழங்குடியின மக்களுக்கு 28 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளித்தது. அதேபோல், 15 சாதிகளை புதிதாக ஓ.பி.சி. பட்டியலில் இணைத்து அதற்கான இட ஒதுக்கீட்டை 4-லிருந்து 8-ஆக உயர்த்தியது. இவ்வாறு பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு இட ஒதுக்கீட்டை 60 சதவிகிதமாக உயர்த்தி பொதுப் பட்டியலை 40 சதவிகிதமாக சுருக்கி காஷ்மீர் மக்களை வஞ்சித்தது.

அதேபோல், 2023-ஆம் ஆண்டு ஜம்மு–காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்ட தொகுதி மறுவரையறையின் போது மோடி அரசு, குறைவான மக்கள்தொகையை கொண்ட ஜம்முவிற்கு கூடுதலாக ஆறு தொகுதிகளையும் அதிக மக்கள்தொகை கொண்ட காஷ்மீருக்கு ஒரே ஒரு தொகுதியையும் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு காஷ்மீரி இஸ்லாமிய மக்களின் அரசியல் – பொருளாதார – சமூக உரிமைகளை பறித்து அம்மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்க பல்வேறு சதித்திட்டங்களை அரங்கேற்றி வருகிறது.

மேலும், சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரிலும் சட்டத்திட்டங்கள் மூலமும் காஷ்மீரி இஸ்லாமிய மக்களின் இடங்களை பறித்து வருகிறது. சமீபத்தில், மசூதிகள், தர்காக்கள், இமாம்கள் குறித்த தரவுகளை பதிவு செய்ய வேண்டுமென்று காஷ்மீர் போலீசு அறிவிப்பு வெளியிட்டிருப்பதன் மூலம் இஸ்லாமியர்கள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

மறுபுறம், ஊடகவியலாளர்கள் மீதான ஒடுக்குமுறை, இணையத் தடைகள் மூலம் காஷ்மீர் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை வெளி உலகிற்கு தெரியாமல் மூடிமறைக்கிறது. காஷ்மீரில் இராணுவத்தை குவிப்பதன் மூலமும் மக்களை கொடூரமாக ஒடுக்கி வருகிறது.

இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் போது பாசிச கும்பல் பரப்பிய வெறுப்பால் பிற மாநிலங்களில் காஷ்மீரி இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில், உத்தராகண்ட், இமாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சால்வை விற்கும் காஷ்மீரி இஸ்லாமிய வியாபாரிகள் மீது சங்கிகளின் தாக்குதல் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

பாசிச கும்பலின் பிளவுவாத அரசியல்

மேற்கண்ட உண்மைகளை எல்லாம் மூடிமறைத்துவிட்டுதான் ஜம்மு மக்களின் உரிமைகளை காஷ்மீர் மக்கள் பறித்துக்கொள்வது போல நயவஞ்சக நாடகமாடி வருகிறது பாசிச கும்பல். ஜம்மு–காஷ்மீரில் பாசிச கும்பல் மேற்கொண்டுவரும் இந்த அரசியலை நாம் மணிப்பூர் கலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

மணிப்பூரில் மெய்தி இன மக்கள் வசிக்கும் சமவெளியிலேயே அதிக கல்வி நிலையங்களும் மருத்துவமனைகளும் அலுவலகங்களும் உள்ளன; குக்கி பழங்குடியின மக்களை காட்டிலும் மெய்தி மக்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறியுள்ளனர். இந்த உண்மையை மூடிமறைத்துவிட்டு, மலையில் வசிக்கும் குக்கி பழங்குடியின மக்களுக்கு மட்டும் பழங்குடியின அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகவும் சமவெளியில் வசிக்கும் மெய்தி மக்கள் வஞ்சிக்கப்படுவதாகவும் வெறுப்பை தூண்டியது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல். இந்த வெறுப்பை முதலீடு செய்து மெய்தி மக்களை தனது அடித்தளமாக்கிக்கொண்டு மணிப்பூரில் கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டது. இதே உத்தியைத்தான் தற்போது ஜம்மு–காஷ்மீரில் கையாண்டு வருகிறது பாசிச கும்பல்.

ஆனால், ஜம்முவில் மட்டுமின்றி காஷ்மீர், லடாக் என ஒட்டுமொத்த ஜம்மு–காஷ்மீரிலும் வளர்ச்சியின்மைக்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் காரணம் மோடி அரசின் புறக்கணிப்பும் கார்ப்பரேட் சேவையுமே ஆகும்.

குறிப்பாக, 2019-இல் ஜம்மு காஷ்மீரின் 370 சிறப்புரிமை பறிப்பிற்கு பிறகு அங்கு ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பாசிச மோடி அரசு வாக்குறுதியளித்தது. ஆனால், சிறப்புரிமை இரத்திற்கு முன்னர் 7.9 சதவிகிதமாக இருந்த வேலையின்மை விகிதம் தற்போது ஜம்மு–காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 17.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதேபோல், காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம் என பா.ஜ.க. கும்பல் அடித்துவந்த வெற்றுச் சவடாலையும் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் திரைக்கிழித்துவிட்டது.

மேலும், லடாக் யூனியன் பிரதேசத்தில் தேர்தலை நடத்தாமல் ஒடுக்கிவரும் பா.ஜ.க. கும்பல், ஜம்மு–காஷ்மீரில் அதிகாரக் குவிப்பின் மூலம் உமர் அப்துல்லா அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது, ஆட்சிக் கவிழ்ப்பு சதியிலும் ஈடுபட்டு வருகிறது.

இதன் காரணமாக, இரண்டு யூனியன் பிரதேசங்களில் இளைஞர்களின் கொந்தளிப்பும் போராட்டமும் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, மாநில உரிமை வேண்டும் என்ற கோரிக்கையும் அதற்கான போராட்டமும் முன்னுக்கு வந்துகொண்டிருக்கிறது. லடாக்கிற்கு மாநில உரிமைக் கோரியும், அரசியல் அமைப்புச் சட்டம் ஆறில் லடாக்கை இணைக்கக் கோரியும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் முன்னெடுத்துவந்த போராட்டத்தில் கடந்தாண்டில் ஆயிரக்கணக்கான மக்கள் – இளைஞர்கள் திரண்டனர். இதனை கண்டு அதிர்ந்துபோன பாசிச கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தி வன்முறையின் மூலம் அப்போராட்டத்தை ஒடுக்கியது.

ஜம்மு–காஷ்மீர் மக்களும் மீண்டும் மாநில உரிமை வேண்டுமென்பதில் உறுதியுடன் குரல் கொடுத்து வருகின்றனர்.

இதனையெல்லாம் மூடி மறைக்கவே ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களை எதிரெதிராக நிறுத்தும் அரசியலை கையாண்டு வருகிறது பாசிச கும்பல். இந்தப் பிளவுவாத அரசியலின் உச்சமாக, ஜம்முவிற்கு தனிமாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையை பேசுபொருளாக்கி மக்களின் மனநிலையை ஆழம் பார்த்து வருகிறது பாசிச கும்பல். இது, “ஜம்மு–காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்துவிட்டு அதனை ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் என்ற மூன்று யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வேண்டும்” என்று 2002-இல் ஆர்.எஸ்.எஸ். நிறைவேற்றிய தீர்மானத்தை நினைவூட்டுவதுடன், ஜம்மு காஷ்மீரை கூறுபோட வேண்டுமென்ற பாசிச கும்பலின் நோக்கத்தை பட்டவர்த்தனமாக எடுத்துக்காட்டுகிறது.

ஆனால், தற்போது வரை ஜம்மு–காஷ்மீர் மக்கள் ஒற்றுமையுடன் மாநில உரிமைக்காக குரல் கொடுத்து வருகின்றனர். மக்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஜம்மு–காஷ்மீர் மாநில உரிமைக்கான போராட்டங்களை கட்டியமைப்பதும் அதனை பாசிச பா.ஜ.க. கும்பலுக்கு எதிரான பாசிச எதிர்ப்பு போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டியதும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.


துலிபா

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க