28.05.2025
தமிழரின் தாய்மடி கீழடியை கருவறுக்கும்
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் தொல்லியல் துறை!
பத்திரிகை செய்தி
ஒன்றிய தொல்லியல் துறையானது கீழடி அகழாய்வு சம்பந்தமாக ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்த அறிக்கையைத் திருப்பி அனுப்பி உள்ளது. 2023 ஆம் ஆண்டு அமர்நாத் ராமகிருஷ்ணன் 982 பக்கங்களை கொண்ட கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையைச் சமர்ப்பித்தார். இரண்டு ஆண்டுகள் அதைப் பற்றி வாய் திறக்காத ஒன்றிய தொல்லியல் துறையின் நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது அறிக்கையை வெளியிடப் போவதாக ஒன்றிய அரசு நாடகமாடியது. இந்நிலையில் அறிக்கையில் திருத்தம் செய்யுமாறு ஒன்றிய தொல்லியல் துறை அறிக்கையை திருப்பி அனுப்பி இருக்கிறது. இது கீழடி வரலாற்று சான்றுகளை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவதற்கான சதி நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
பொதுவாக தொல்லியல் துறையின் ஆய்வாளரே அவர் சமர்ப்பிக்கும் ஆய்வறிக்கைக்கு முழு பொறுப்பு. அதனை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம். ஆனால், ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டுள்ள காலம், கண்டறியப்பட்ட பொருட்கள் போன்றவை நம்பத் தகுந்ததாக இல்லை எனக் காரணம் கூறி அறிக்கையை திருப்பி அனுப்புவதெல்லாம், ஏற்கெனவே உள்ள நடைமுறையை ஒழித்துக் கட்டி, கீழடி அகழ்வாராய்ச்சியை மிகப்பெரிய அளவில் இருட்டடிப்பு செய்வதாகும்.
கீழடி அகழ்வாராய்ச்சியின் புதிய கண்டுபிடிப்புகள் பற்றியும் கீழடி வரலாறு குறித்தும் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேச ஆரம்பித்ததிலிருந்தே அகழாய்வை முடக்குவதற்கான வேலையை ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்யத் தொடங்கிவிட்டது. கீழடியை இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்த ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை காரணமின்றி பணியிட மாற்றம் செய்தது. அவர் ஆய்வு செய்த பொருட்கள் மைசூரில் இருக்கும் பொழுது, அவரை அசாம் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்து அனுப்பியது. ஆய்வு செய்த பொருட்கள் குறித்து அறிக்கையாக எழுதிச் சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்காததைக் கண்டித்து நீதிமன்றத்தில் முறையிட்டு கால அவகாசம் பெறுவதற்கே ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் 2017 இல் பணியிடமாற்றம் செய்யப்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் 2023 இல் தான் அறிக்கையை எழுதிச் சமர்ப்பிக்க முடிந்தது.
2017 இல் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை ஜனநாயக இயக்கங்கள் நடத்தினர். எமது மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மட்டுமின்றி மதுரையில் தொல்லியல் அறிஞர்களை வைத்து கருத்தரங்கமும் நடத்தப்பட்டது.
2016 இல் முதல் இரண்டு கட்ட ஆய்வுகள் முடிந்த நிலையில் அதன் பிறகு ஸ்ரீரமணன் என்பவரை தொல்லியல் துறைக்கு பொறுப்பாக்கி கீழடி அகழாய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் வரலாற்று சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறி கீழடி அகழாய்வு இழுத்து மூடப்பட்டது. அதன் பிறகு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட நான்காம் கட்டம் முதல் பத்தாம் கட்டம் வரையிலான அகழாய்வில் ஏராளமான வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளன. இதிலிருந்தே ஒன்றிய தொல்லியல் துறையின் இருட்டடிப்பு நடவடிக்கையை புரிந்து கொள்ளலாம்.
கீழடி அகழ்வாராய்ச்சிக்கு வெறும் ஒரு கோடி வரை மட்டுமே ஒதுக்கியுள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசு, இல்லாத சரஸ்வதி நாகரீகத்தைக் கண்டுபிடிக்க நூற்றுக்கணக்கான கோடிகளை ஒதுக்கி இந்தியாவெங்கும் தேடி அலைந்து கொண்டிருக்கிறது. கண்முன்னே கிடைத்த கீழடி தமிழ் நாகரீகத்தை இருட்டடிப்பு செய்யும் ஒன்றிய அரசு, இல்லாத சமஸ்கிருத நாகரீகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் சமஸ்கிருதம்தான் அனைத்து மொழிகளுக்கும் தாய்; பார்ப்பனர்கள்தான் பூர்வகுடிகள்; வேத இதிகாச புராண குப்பைகள்தான் இந்தியாவின் வரலாறு என நிறுவத் துடிக்கிறது.
இப்படிப்பட்ட பா.ஜ.க. கும்பல் தமிழ்நாட்டில் ஆடும் நாடகம் கேலிக்கூத்தானது. மோடி நாடாளுமன்றத்தில் தமிழில் பேசினார்; வானொலியில் தமிழில் பேசினார்; பட்ஜெட்டில் திருக்குறள் வாசிக்கப்பட்டது; காசி தமிழ்ச் சங்கமம் என தமிழுக்கு ஆதரவாக இருப்பது போல் பேசிக் கொண்டும் நாடகமாடிக் கொண்டும் வந்தது இந்த கும்பல். இன்று தமிழ் மக்களின் தாய்மடியான கீழடியை கருவறுக்க அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது.
ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கலாச்சாரம் என்று இந்தி ஆதிக்கத்தையும் சமஸ்கிருத பண்பாட்டையும் நிறுவத் துடிக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் பண்பாட்டிற்கும் எதிரானது.
பல்வேறு சதிகளின் மூலமாக நமது மொழியையும் வரலாற்றையும் இருட்டடிப்பு செய்யும் இந்த பாசிச கும்பலை முறியடிக்க வேண்டியது பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் அனைவரின் கடமை.
நீட், ஜி.எஸ்.டி. திணிப்பு முதல் தமிழ்நாட்டின் பல்வேறு உரிமைகளைப் பறித்து தொடர்ச்சியாகப் பல தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. அதன் தொடர்ச்சிதான் கீழடி அகழாய்வை ஒழித்துக் கட்டும் நடவடிக்கையும் உள்ளது. இதை உணர்ந்துகொண்டு ஒட்டுமொத்த தமிழ்நாடும் பாசிச கும்பலுக்கு எதிராகக் களத்தில் இறங்க வேண்டும்; போராடி முறியடிக்க வேண்டும்.
தோழமையுடன்
தோழர்.ப.ராமலிங்கம்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு-புதுச்சேரி.
9791653200
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram