கோவையில் 30-05-2025 அன்று மக்கள் அதிகாரக் கழகத்தின் கொள்கை அறிக்கை “மாபெரும் ஆயுதம்” வெளியீட்டு நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வை மக்கள் அதிகாரக் கழகம் கோவை மாவட்டச் செயலாளர் தோழர் ராஜன் தலைமையேற்று நடத்தினார்.
மாபெரும் ஆயுதம் கொள்கை அறிக்கை வெளியீட்டை மக்கள் அதிகாரக் கழகத்தின் உறுப்பினர், மூத்த தோழர் பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக சக்திகள் முன்னிலையில் வெளியிட்டார்.
வெளியீட்டைப் பெற்றுக்கொண்டு ஜனநாயக சக்திகள் கருத்துரை வழங்கினர்.
மக்கள் விடுதலை முன்னணியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தோழர் மு.கா. முத்தமிழன் தனது கருத்துரையில் மூட பழக்கவழக்கங்களை ஒழிப்பது, சினிமா மோகம், பா.ஜ.க-வின் சர்வாதிகாரத்தை முறியடிக்க இணைந்து பயணிப்போம் எனக் கூறினார்.
த.மு.மு.க-வின் மாவட்டச் செயலாளர் தோழர் KU.முஜீப் ரகுமான் அவர்கள் கருத்துரையில் மக்கள் அதிகாரக் கழகம் உருவானதை வரவேற்று வாழ்த்தினார். ஒடுக்கப்படும் மக்கள் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்தும் தீர்மானங்களைக் குறிப்பிட்டும் வாழ்த்தினார்.
மே 17 இயக்கத்தின் தோழர். ஜீவா அவர்களின் கருத்துரையில் கொள்கை அறிக்கையானது இளைஞர்களை பாசிசத்திற்கு எதிராக முன் நகர்த்தும் மாபெரும் ஆயுதம் என்று கூறினார்.
மேலும், சிறுபான்மையினருக்கு எதிரான பா.ஜ.க-வின் அடக்குமுறை குறித்தும், இவ்வெளியீட்டை முதல் முறை படிக்கும் இளைஞர்களுக்கும் பாசிச எதிர்ப்பு உணர்வு கட்டாயம் வரும் என்றும் பேசினார். பாசிச எதிர்ப்பில் மே 17 இயக்கம் மக்கள் அதிகாரக் கழகத்துடன் இணைந்து பயணிக்கும் என கூறினார்.
மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் மாறன் உரையில் மாபெரும் ஆயுதம் மக்கள் அதிகார கழகத்துக்கு மட்டுமின்றி பாசிசத்துக்கு எதிராகப் போராடும், இயற்கையை நேசிக்கும், சாதி ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடும் அனைத்து மக்களுக்குமானது எனக் கூறினார். இந்திய வரலாறு வர்க்க போராட்டத்துடன் வர்ண – சாதி பேதத்துக்கெதிரான போராட்டத்தைக் கொண்டது என விளக்கினார். அதில் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தை அனைத்து ஜனநாயக சக்திகளும் சேர்ந்து முறியடிப்பது பற்றி விளக்கினார்.
SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். கே. ராஜா உசேன் உரையில் “ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கலாச்சாரம் என பொய் சொல்லி வர்ணாசிரமதின் பெயரால் மக்களை நச்சு கருத்தால் பிளவு படுகிறது பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி. இந்நூலை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதன் மூலம் பாசிச சங்பரிவார் கும்பல்களை விரட்டியடிக்க முடியும் எனக் கூறி வெளியீட்டினை வரவேற்றார்.
வழக்குரைஞர் தோழர். மதி அம்பேத்கர் அவர்கள் கருத்துரையில் கொள்கையறிக்கையானது மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பதற்கு உதாரணமாக எளிமையான வடிவில் உள்ளது. படிக்கக் கூடிய இளைஞர்களுக்கு பாசிசம் என்றால் என்ன என்று எளிமையாகப் புரியக்கூடியது. இந்திய நாட்டின் சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த பிரச்சினைகளைக் கூறும் நூல்தான் இந்த மாபெரும் ஆயுதம்” என்று வரவேற்று உரையாற்றினார்.
இறுதியாக மக்கள் அதிகார கழகத்தின் தோழர் சங்கர் நன்றியுரை ஆற்றினார்.
கூட்டம் முடிந்ததும் கூட்டத்தில் கலந்து கொண்ட நமது புதிய ஜனநாயக வாசகர் ஒருவர் 25 புத்தகங்களைப் பெற்றுக் கொண்டார்.
மக்கள் அதிகாரக் கழகம்,
கோவை மாவட்டம்.
9488902202

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram