privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைவரலாற்றைப் படித்து வர்க்கமாய் எழு தோழி!

வரலாற்றைப் படித்து வர்க்கமாய் எழு தோழி!

-

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 6

ஆண் என்றும் பாராமல்
என்னைப் பேச அனுமதித்த
பெண்களுக்கு முதல் வணக்கம்.

பெண்களைத்
திட்டியே தீர்த்த ஆணாதிக்கத்தின்
சொற்கொலைகளையும் தாண்டி,
பெண்ணின் வர்க்க உணர்வுக்கு
வார்த்தைகளை உசுப்பிவிடும்
இறவா தமிழுக்கும் என் வணக்கம்.

கைத்தலம் பற்றி
நான்குசுவருக்குள் நயம்படச்சுரண்டி
தன்னைச்சுற்றி நடப்பதேதுமே
தெரியாததுபோல்,
பொய்த்தவம் பூண்டவர் மத்தியில்,

வலைத்தளம்பற்றி  சமூகம் பற்றி
வாழ்வின் சகலமும் சுற்றி, வாதம்புரிந்து
எதிரெதிர் பேசி, இணக்கமிலாவிடினும்
தன்னைத் தாண்டியும் சிந்திக்கும்
வினவாளர்களுக்கு உரிய வணக்கம்.
_______________________________________
பெண்களைப் புகழ்ந்து பேசிப் பேசியே
உண்மையில் பெண்களை பேச விடாத
தந்திரக்கார சமூகமிது.

பூமியை “பூமாதேவி’ என்று
புகழ்ந்து பாடியது மதம்.
எதற்கு?
காலந்தோறும் அவளை
காலில்போட்டு மிதிப்பதற்கு.

“வம்சவிளக்கு’ என்று
பெண்ணை வருடிக்கொடுக்கும் சாதி.
எதற்கு?
கடைசிவரைக்கும் அவளை
கொளுத்தி, கொளுத்தியே கருக்கிப் போடுதற்கு.

ஆணின் ஒடுக்குமுறையோ நுட்பமானது
’’நீ பேசினால் என்னையே மறந்து விடுகிறேன்’’
-இது காதலிக்கும் போது.
’’இனி பேசினால் கொன்னே போடுவேன்’’
-இது கல்யாணத்திற்குப் பின்.

ஒரே அடியாகக் கொல்லக்கூடாது!
பெண்களும் பேசலாம்தான்,
பிடித்தமான தொலைக்காட்சி தொடர்கள் பற்றி..

’மானாட, மயிலாடா’ வில்
ஊனாடும் உருவம் பற்றி…

ஆலுக்காஸ் கடையின்
நகைகள் பற்றியும்
ஏழுமாடி சரவணா ஸ்டோரின்
வகைகள் பற்றியும்…
அடுத்துவீட்டுப் பெண்ணிடம்
அசந்துபோய் பேசலாம்தான்…

இரண்டு வட்டிக்கு வங்கியில் வாங்கி
ஐந்து வட்டிக்கு விடும்
மகளிர் சுய உதவிக்குழுவின்
மகிமைப் பற்றியும் பேசலாம்…

ஏன்?
போட்டு வந்த வளையலை வாங்கி
தங்கைத் திருமணத்திற்கு அடகு வைத்ததை
மீட்டுத் தரத் துப்பில்லை என்று
கணவனிடம் கூட கலகம் செய்யலாம்.

மற்றபடி
கலைஞர் போடும் ஒரு ரூபா அரிசியைப் பாரு
உன் முகரையைப் போல,
அடுப்புக்கு நெருப்புமில்ல – சத்தாய்
ஆக்கித் திங்க பருப்புமில்ல
என்ன நாடு இது? ஆட்சி இது?
இதை எதிர்த்துக் கேட்கத் துப்பில்லாத
என்ன ஆம்பிள்ளை நீ?

என்று பெண் பேச ஆரம்பித்தால்
ஏற்குமோ இல்லற தர்மம்!

’’ஆம்படையான் எக்கட்சிக்கு ஓட்டோ
அடியேனும் அக்கட்சிக்கே ஓட்டு’’ எனப்
பெண்களைப் பெரும்பாலும் பழக்கியுள்ள
ஆம்பிளை சிங்கங்களுக்கு
பிடித்தமானது
பெண்களின் அடுப்படிச் சுதந்திரமே
அரசியல் சுதந்திரமல்ல,
______________________________________
ஒரு பெண் சுதந்திரமாகத்
தன் காதல் உணர்வை
வெளிப்படுத்துவதைக் காட்டிலும்
முக்கியமானது
அவள் அரசியல் உணர்வை
வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம்

அனுமதித்ததுண்டா
ஆணாதிக்கத் தந்திரம்

’லவ்வர்ஸ்டே’ மூலமாக
பெண் காதல் உணர்வை வெளிப்படுத்தினால் சம்மதம்,

’மதர்ஸ் டே’ மூலமாக
தாய்மை உணர்வை வெளிப்படுத்தினால் சம்மதம்,

’வெட்டிங் டே’ மூலமாக
குடும்ப உணர்வை வெளிப்படுத்தினால் சம்மதம்,

ஏன்?
’வயசுக்கு வந்ததையே’ உறுத்தலின்றி
ஊரறியச் சொல்வதற்கும் சம்மதம்.
ஆனால் ஒரு பெண்
கம்யூனிஸ்ட் கட்சி மூலமாக
தன் வர்க்க உணர்வை வெளிப்படுத்தினால் மட்டும்
பயம்.. பயம்.. பயம்..
_______________________________________
பெண் பேசுவது பிறகு
விளக்கம் சொல்ல வந்தாலே
வாயை அடக்கு என – என்
தாயை அடக்கிய தந்தையைப் பார்த்து,
சின்ன வயதிலேயே
பெண் மீதான கொடுமையை
கண்ணெதிரே பார்த்து, பார்த்து
’ஆம்பிள்ளைத் தனத்தை’ வெறுத்ததுண்டு.

சொந்த அனுபவத்தில்
சொல்கிறேன் ஒன்று.
அந்த நாளில் அம்மாவுக்கு…
மோரு புளித்தால் அடி
நீரு வைக்க மறந்தால் வார்த்தைக் கடி
குழம்பு தன் சூடு மறந்தால்
கிளம்பும் கரண்டி,
ஒரு நாள் சோறு குழைந்ததற்காய் அடி

அழுதுகொண்டே தடுக்கப் போய் நானும் அடிவாங்கி
நோட்டில் எழுதிவைத்தேன் இப்படி;

’’அன்னம் குழைந்தாலென்ன?
அருமை குறைந்தாலென்ன,
தின்னும் உன் எருமை வயிறு
ஏற்காதா?
கன்னம் குழையும்படி
என்னமாய் அறைந்தாய்
என் அம்மாவை
சின்னஞ் சிறியவனாய் இருப்பதனால்
செய்வதறியாது நிற்கிறேன்
பின்னம் பெரியவனாய் ஆன பின்னே
உன்னை என்ன செய்கிறேன் பார்!’’

ஆசிரியப்பாவால்
அடித்தேன் அப்பாவை
என ஆற்றிக் கொண்டிருந்த மனதை
ஒருகீறு கீறிவிட்டாள் அம்மா…

’’அப்பாவைப் போல் இருக்காதே
பொம்பளையை அடிக்காதே
அவள் சொல்றதையும் கேளு!’’

எனக்கு திருமணமானவுடன்
என் அம்மா சொன்ன அறிவுரை இது.

என்ன இருந்தாலும்
நீயும் ஆம்பிள்ளைதாண்டா? எச்சரிக்கை!
என எனக்கு உணர்த்திய
அம்மாவின் வார்த்தையில் அர்த்தங்கள் ஆயிரம்
அனைவருக்கும் அதில் பொருத்தமுள்ளதால்
அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன்.

பெண்ணைப் பார்த்து
என்ன கொண்டுவந்தாய்
எனப் பேசுபவனுக்குத் தெரியுமா?

இந்த பூமியே
அவள் உனக்கு போட்ட பிச்சை.
_________________________________________________
விஷ மூச்செறியும் மலைப்பாம்புகள்,
வெறிகொண்டு இரைதேடும் விலங்குகள்,
பாறைகள் கரையும் சூறை மழை,
சூரியன் நடுக்கும் கோரப்பனி
இவையிடமிருந்து உயிர்க்கரு காத்து
விழிக்குடம் தளும்பினும் பனிக்குடம் தளும்பாமல்
கானகம் தெறிக்க அலறி தொண்டை நரம்புகள் குழறி
உயிர் ஈன்றவள் பெண்ணடா!

எந்தக் காலத்திலும் பெண்
சும்மாயிருந்ததில்லை…
காந்தள் மலர் கைகளெல்லாம்
தின்று தீர்த்து
வாந்தியெடுக்கவும் உதவி தேடும்
மேட்டுக்குடி சீமாட்டிகளுக்கே!
கறுத்துச் சிவந்த வாழைப்பூ தோலென
தடித்துக் காய்த்திருக்கும் தலைமுறையாய்
உழைக்கும் பெண்களின் கைகள்.

ஆட்டுடன், மாட்டுடன் சென்று
அதன் இயல்பறிந்து
பொறுமையாய் புல்மேய உடனிருந்து
புதிய மேய்ச்சல் நிலங்களை
கண்டறிந்தவள் பெண்
ஆணோ
அவளை ஆடு, மாடாய் நடத்தி
உழைப்பைக் கறந்தான்.

வேட்டைச் சமூகம் முடிந்து
பெண் சும்மாயிருந்தாளா?
முதலில் பயிரிடக் கற்று
விதைநெல்லைக் கொடுத்தாள்
ஆணோ உடனே அவளை
வீட்டினில் அடைத்தான்.

சிக்கி, முக்கி கல்லை உரசி
முதலில் நெருப்பைத் தந்தவள் பெண்
ஆணோ
சிக்கிக் கொண்டாள் இலவச வேலைக்காரி
என அவளை அடுப்பினில் வைத்தான்.

வெறும் பெருமை அல்ல உண்மை,
அன்று;
பெண் தலைமுறை பல விளைவித்த காரணத்தால்
தாங்கும் நிலமும் ’’தாய்மண்’’ ஆனது.

குடும்ப அமைப்பின் சுமைகளனைத்திற்கும்
தாங்கும் குவிமையமாக அவளே ஆனதால்
வீட்டின் முக்கியச் சுவரும் ’’தாய்ச்சுவரானது’’.

வரலாற்றில்
எதையெல்லாம் பெண்
கண்டறிந்து தந்தாளோ
அதைவைத்தே அவளை
சிறைவைத்தான் ஆண்.

வேட்டையாடி பெற்ற
பெண்ணின் சமநிலையை
வேளாண் சமூகத்தின்
உபரி பறித்தது..

காட்டு வாழ்க்கை வழங்கிய
கைகளின் சுதந்திரத்தை
வீட்டு வாழ்க்கை
வேலைக்காரியாய் அடக்கியது.
முதல் வர்க்க ஒடுக்குமுறை
பெண் குரல்நெறித்து துவங்கியது..

தொல்குடி வேட்டையில்
காட்டு விலங்கினை வேட்டையாடி
வெற்றி கண்டவள் பெண்.
கடைசியில் வீட்டு விலங்கிடம்
மனைவியாய் மாட்டிக்கொண்டு
இல்-குடி என வேட்டைக்கு இரையானாள்.

செல், கொல் என
இனக்குழுச் சண்டையில் தலைமையேற்று
சமர்க்களம் புரிந்த
பெண்ணின் அமர்க்களம் பார்த்து
சமமாய் நடந்தான் அன்று காட்டுவாசி.

நில், கேள், சொல்வதை மட்டும் செய்
எனப் பெண்ணை
அடக்கி ஆள்கிறான் வீட்டுவாசி.

பெண்ணின் மாதவிடாய் இரத்தத்தை
புனிதமென்று விளைநிலத்தில் தெளித்து
பெண்ணைக் கொண்டாடினான் புராதனவாசி,
பெண்ணின் மாதவிடாயை
தீட்டு என்று வீட்டுக்குள்ளேயே
தள்ளி வைப்பவன் நாட்டுவாசி

காலத்தால் இவன் முன்னேறியவனாம்
மூளையிருந்தால் மாத்தி யோசி!
____________________________________________
ஒவ்வொரு சமூகக்கட்ட
உழைப்பினில் மட்டுமல்ல,
வரலாற்றில்
பெண்வாடையில்லாத
போராட்டம் ஏதுமில்லை..
பெண் கை கொடுக்காமல்
புரட்சிகள் ஜெயித்ததுமில்லை…

ஜான்சிராணியும், வேலுநாச்சியும்
அசரத்பேகமும்,
வெள்ளையனுக்கு எதிராகத்
தன்னையே தீம்பிழம்பாக வெடித்த
குயிலியும் இல்லாமல்
விடுதலைப் போரில்லை.

தில்லையாடி வள்ளியம்மை மட்டும்
இல்லையெனில்
தென்னாப்பிரிக்காவில் காந்தி கதை
முன்னமே முடிந்திருக்கும்.
இந்தியாவும் எப்பாதோ விடிந்திருக்கும்.
வ.உ.சிக்கு
தென்னாப்பிரிக்க மக்கள் கொடுத்த காசையே
தான் ஓசிக்கு அமுக்கிக் கொண்ட
தில்லாலங்கடி காந்தி பற்றி
பாவம்! தில்லையாடிக்கு தெரியவில்லை.

காந்தியத்திற்கும்
பெண்கள் பெரும்படையாய்
கதராடை உடுத்தினர்.
போராட்டத்திற்கு
கைவளையல்கள் கழட்டிக் கொடுத்தனர்.
பெண் படை தைரியத்தில்
காலை முன்வைத்த காந்தியும்
பெண் உணர்வு மதித்தாரா?

’’இச்சாபத்தியம்’’ எனும் பெயரில்
இரண்டு இளம்பெண்களுடன்
பாலியல் உணர்வை அடக்கிப் பழக
நிர்வாணமாய் கிடந்த காந்தியின்
ஆணாதிக்க அருவருப்பைப் பார்த்துதான்
காந்தியின் குரங்குப் பொம்மையும் கண்ணை மூடியது.

அந்நியத் துணி எரிப்புக்காய்
ஆங்கிலேயரால் துகிலுரியப்பட்ட
பெண்களின் நிர்வாணமோ
தேசத்தின் மானம்!

வெட்கத்தை எதிர்பார்த்த
அடக்கு முறையாளர்களிடம்
தம் வர்க்கத்தை காட்டி
எதிரியின் இரத்தத்தை
காறித்துப்பியவர்கள் உழைக்கும் பெண்கள்!

கீழத் தஞ்சை விவசாயி எழுச்சியில்
கருக்கரிவாளை
கம்யூனிச அரிவாளாய் உயர்த்திப் பிடித்து
நிலப்பண்ணைகளுக்கெதிராக
அறுவடை இயக்கம் செய்தவர் பெண்கள்.

தெலுங்கானாவிலோ
நிஜாம் நிலப்பிரபுத்துவக் குண்டர்களின் முகத்தில்
எண்ணையை காய்ச்சி ஊற்றி
தங்கள் அதிகாரத்தை
சமைத்தவர்கள் பெண்கள்

தெபாகா போராட்டமோ
தினஜ்பூர், ராங்பூர், மால்டா,
மிதுனப்பூர், குல்னா, பர்கானா,
என எல்லா மாவட்டங்களும்
சேலை கட்டிக் கொண்டுதான்
இந்து, முசுலிமாய் இணைந்து போராடின

ஆண்டைகளுக்கு அடியாளாய் வரும்
போலிசு கிராமத்திற்குள் நுழைந்தவுடனேயே
ஒரு பெண் சங்கெடுத்து ஊதுவாள்,
இன்னொரு பெண் மணி அடிப்பாள்
கேட்ட மாத்திரத்தில்
பால்குடிக்கும் குழந்தையையும்
பாதியில் கிடத்திவிட்டு
’இன்குலாப் ஜிந்தாபாத்’ என்றெழும்
பெண்கள் கையில் விளக்கமாறும் ஆயுதமாகும்.

கையில் கிடைக்கும் போலீசை
கூட்டிப் பெருக்காமல்
பெண்கள் கூட்டம் கலையாது.
இது தெபாகா வரலாறு.

திருவாங்கூர் சமஸ்தானத்தின்
இராணுவத் தாக்குதலை
கல், அம்பு, ஈட்டியுடனும்,
எந்த ஆயுதங்களையும் எதிர்க்கும்
வர்க்கக் கோபத்துடனும்
எதிர்த்துப் பாய்ந்து தம் இரத்தத்தில்
நிலப்பிரபுத்துவத்தை மூழ்கடித்தவர்கள்
வயலார்-புன்னப்புரா போர்க்களப் பெண்கள்.

கய்யூர் விவசாயிகள் போராட்டக் காட்சிகளோ
உங்கள் கண்ணில் நீரை வரவழைக்காது!
அடக்குமுறைக்கெதிராக போராடியதால்
அப்பு, சிருகண்டன், அபுபக்கர், குஞ்ஞாம்பு
ஆகிய நால்வரையும் தூக்கிலேற்றியது
பிரிட்டிஷ் அரசு.

நால்வரின் தாய்மாரே
நாட்டு மக்களைப் பார்த்து சொன்னார்கள்..
’’நாட்டுக்காக மரணத்தை துச்சமாக மதித்த
எங்கள் பிள்ளைகளின் பிணத்தைப் பார்த்து
யாரும் கண்ணீர் வடிக்க வேண்டாம்
கனன்றெழும் கோபத்தை மட்டும்
தாருங்கள் என்றார்கள்!

மன்னன் கொட்டமடித்து வாழ
விழுப்புண் எய்திய மகனைப் பார்த்து
மகிழ்ந்து போவாளாம் தாய்.
என்னடா புறநானூறு!

உழைக்கும் வர்க்க உரிமைக்காக
பிரிட்டிஷ் செருக்கை அடக்கிய
பெண்களின் வீரகாவியம் கய்யூரு.
______________________________________________
வரலாறு படைத்த பெண்குலத்தை
வரவேற்று மதித்ததா எந்த மதமும்?

இந்துமதம் என்பதைவிட – இதை
ஆணாதிக்க விந்துமதம் என்றால்
மிகையில்லை,
ஜெயேந்திரன் முதல் நித்யானந்தா வரை
இதை நிரூபிக்கிறான் பொய்யில்லை.

’’பெண்-
குழந்தையில் தந்தைக்கும்,
இளமையில் கணவனுக்கும்,
முதுமையில் மகனுக்கும் கட்டுப்பட்டவள்’’
என்று பிறப்பிலேயே பெண்ணை
ஆணுக்கடிமையாய் ஆக்கியது இந்துமதம்.

’’பெண் பயங்கரமானவள்,
வஞ்சகமானவள், கேடானவள்,
நம்பத்தகாதவள்
போகத்துக்காக மாத்திரமே
பெண்களுடன் உறவு வேண்டும்’’
இவையெல்லாம் ’’அனுசாசன பர்வத்தில்’’
பெண்களைப் பற்றி
’’மகாபாரதம்’’ கொட்டிய குப்பைகள்,
இந்த மகா.. பாவத்தை
பெண்கள் சுமக்கலாமா?
குப்பை இராமாயணத்தையும் சேர்த்தல்லவா
நீ கொளுத்த வேண்டும் பெண்ணே!

கிறித்தவமும்
ஆணின் விலா எலும்பிலிருந்தே
பெண் வந்ததாய்
அடக்கி வைக்கவே
அவிழ்த்து விட்டது கதையை..

பெண்கள் பாவம் செய்ய
தூண்டுபவர்கள் என்றும்,
ஆண்களுக்கு
அலங்கார  மாக்கப்பட்டவர்கள் என்றும்
பர்தாவை போட்டு ஆணாதிக்கத்தை
பாதுகாக்கிறது இஸ்லாமும்.

புத்தரும் கூட
மணலைப் போல உறுதியற்றவர்கள்
பெண்கள் என்று மட்டம் தட்டினார்.

ஒரு தாய் வயிற்றில் பிறந்தும்
தன் புலனடைக்க முடியாமல்
பக்தி முக்தி பரத்தமையில் வழிந்த
அருணகிரிநாதனோ
தொழுநோய் வந்து தெருநாய் துரத்தியபோது
’’விடமொத்த விழியினர்’’
என பெண்களைப் போய்ப் பிராண்டினான்.

’’பெண் எனும் மாயப் பிசாசே’’
எனச் சித்தர்கள் சிலரும் எத்தர்களாயினர்.
பொதுவாகச் சொன்னால்
பொம்பளை விசயத்தில்
எல்லா மதமும் வீக்’’
______________________________________________
பெண்களைப் பற்றிப் பேசாதவன் யார்?
ஆனால்.. பெண்களுக்காகப் பேசியது யார்?

வேதாந்தமெல்லாம்
பெண்களை ’பொரணி’ பேசியபோது
மார்க்சியம் ஒன்றே
பெண்களை புரட்சி பேச வைத்தது!

வேலைக்குப் போகும் ஆணின் ஊதியத்தில்
சமபங்கு
வீட்டிலிருக்கும் பெண்ணுக்கு உரியதென
காரல் மார்க்சே சரியாய்ச் சொன்னார்.

ஏன் தெரியுமா?

வேலைக்குப் போகும் ஆணின்
உழைப்பு நடவடிக்கைக்காக
வீட்டில் அவனுக்கு வேலைகள் செய்து
தன் உழைப்புச் சக்தியை செலவிடுபவள்
பெண் என்பதால்
ஊதியத்தின் பங்கு அவளுக்கும் சேரும் என
உறுதிபட விளக்கியது மார்க்சியம் மட்டுமே!

நெசவுத் தொழிலில்
பிழியப்பட்ட பெண்களின் கைகளுக்காக,
முதலாளித்துவத்தின் ஈரலை எடுத்தது
மார்க்சின் மூலதனமல்லவா!
’’இங்கிலாந்தில்  தொழிலாளி வர்க்கத்தின் நிலைமையில்’’
பெண்கள் மீதான அவலச்சுரண்டலை
எங்கெல்சின் எடுத்துக்களல்லவா
உலகுக்கு எடுத்துக் காட்டியது!

சம உரிமை, சம வாய்ப்பு
சம ஊதியம், சம அதிகாரம்
என பெண்கள் வாழத் தகுந்ததாய்
ஒரு உலகை
சோசலிச ரசியாவே படைத்துக் காட்டியது!

அதனால்தான்
தங்களின் புதிய உலகை
பறிக்க வந்த பாசிச இட்லரை
சோவியத் பெண்கள்
தெருவில் இறங்கி அவன் கருவைக் கலைத்தனர்.

பக்தி உணர்வால் பெற முடியாததை,
மத உணர்வால் பெற முடியாததை,
சமூக உணர்வால் ஆணோடு பெண்ணும் சமமென்று
சோசலிச உணர்வால் நிரூபித்தது ரசியா!

ஆணுக்கு பெண் எதிரியென
முதலாளித்துவம் மடை மாற்றியது
ஆணையும், பெண்ணையும் வர்க்கமாய் சேர்த்து
கம்யூனிசமே முதலாளித்துவ சுரண்டலை பழி தீர்த்தது!
பொது லட்சியத்தோடு இன்னும்
பெண் போக வேண்டிய இலக்குகளையும்
அடையாளம் காட்டியது…

பெண் என்றால் பேயும் இரங்குமாம்
முதலாளித்துவம் இரங்குமா?
ஒரு போதும் இரங்காது என
மூலதனத்தின் இரத்தத்தில்
ரசியா எழுதிக் காட்டியது.
ஆனால் முடியவில்லை சுரண்டல் இன்னும்
___________________________________
மூலதனத்தின் நகங்கள்
உன்னை நோக்கியே முளைக்கிறது பெண்ணே!

உனது சுயமரியாதைக்கான
கைத்தொழில், சிறுதொழிலை பிடுங்கி
மீண்டும் உன்னை
பண்ணையடிமையாக்குகின்றன
பன்னாட்டு கம்பெனிகள்!

அன்று உன் அன்னைக்கு
சொந்தமாக ஒரு மாடிருந்தது.
இன்று அதுவும் போய்
’நோக்கியா’ பட்டியில்
நீயே ஒரு கறவை மாடாய் கட்டப்பட்டுவிட்டாய்.

ஊர்மணக்க உனக்கிருந்த
விளைநிலம் பாழாகி
நீயோ தெருவுக்கு தெரு
ஊதிவத்தி விற்கிறாய்,

பார்க்கும் பெட்ரோல் பங்கிலெல்லாம்
வார்க்கப்படுகிறது உன் இள இரத்தம்

அதிரும் ஆயத்த தையற் கூடங்களிலெல்லாம்
உருவப்படுகிறது உனது நரம்பு,

எந்த முதலாளியின் சோப்பை விற்கவோ
வெயிலில் கரைந்து போகிறாய் நீ,

எந்த பன்னாட்டுக் கம்பெனி
கழிவறை கிளீனர் விற்கவோ
மாடிப்படிகள் ஏறி இறங்கி
நாறிப்போகிறது உனது வாழ்க்கை.

கவுரவமான கால்சென்டர் பண்ணையில்
ஏ.சி. அறையில் ஏவல் வேலை உனக்கு,
கண்களை விற்று சம்பளம் வாங்கி
கண்ட நேரத்தில் தின்று, தூங்கி
கம்ப்யூட்டர் சாம்பிராணியாய் மணக்கிறாய் நீ!
எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம்
என்று கூலியுழைப்பின் பதைப்பிலேயே
துடிக்கிறது இதயம்  உனக்கு!

உனது சொந்தத் தறியை அறுத்தது யார்?
உன் துண்டு நிலத்தைப் பறித்தது யார்?
உனது தயிர்கூடையை பிடுங்கியது யார்?
உன் ஆடு, மாட்டை அடித்து ஓட்டியது யார்?
எந்த உரிமையும் இல்லாமல்
சந்தை மாடாய் பெண்ணே உன்னை
தனியார்மயம், தாராளமயம், உலகமயம்
மூன்று முடிச்சில் கோர்த்தது யார்?

இந்த நாடாளுமன்ற, சட்டமன்ற
பச்சை அயோக்கியர்கள்தான் என்பது
உனக்குத் தெரியாதா என்ன?
அலுவலகத்திலும், வீட்டிலும்
உன் ரத்தத்தை முறிக்கும்
புல்லுருவிகளை எதிர்த்து போராட தயக்கமென்ன?

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும்
ஒரு பெண் இருக்கிறாள்
என்பதில் பெருமை என்ன?
ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னே
பெரும்பாலும் ஆணிருக்காத மர்மமென்ன?

ஆணே ஒரு அடிமை
ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு
எப்படி விடுதலை தர முடியும்?

ஆணுக்கும் உரைக்கும்படி
ஆர்த்தெழுந்து போராடு!
பெண்ணின் பேரழகு
அவள் வர்க்க உணர்வு என்பதை
ஆணுக்குப் புரிய வை!

போராடும் வர்க்கத்தோடு
சேராமல் பெண்ணுக்கு மகிழ்வேது!
தடுப்பவன்
தந்தையாய், கணவனாய்,
தம்பியாய், மகனாய்,
எந்த வடிவில் வந்தாலும்
எதிர்த்து நில்!
வர்க்க உறவே வாழ்க்கைத் துணையென
தெளிந்து கொள்!

இல்லறம் காக்கவே பெண் என்பது
முதலாளித்துவச் சுரண்டலின் தந்திரம்
இணைந்து மக்களோடு போராடு! பெண்ணே
நக்சல்பாரியே நல்லறம்…
நாடே எதிர்பார்க்குது உன்னிடம்..

போதும் உங்கள் பிரச்சாரம்!
புரட்சிக்கெல்லாம்
பொம்பளை வரமாட்டாங்க
என்று கதவைச்சாத்தும் நண்பா,
ஏன் நீ வாயேன்!

உனது மொழியிலேயே உரிமையுடன் கேட்கிறேன்..
’’நீ தைரியமுள்ள மீச வச்ச, வைக்காத
ஆம்பிளையா இருந்தா
பொம்பளையை வெளியே அனுப்பு!’’.

— துரை.சண்முகம்

________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்