privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்தி.மு.கதிமுக : திராவிட முதலாளிகள் கம்பெனி !

திமுக : திராவிட முதலாளிகள் கம்பெனி !

-

திராவிட முதலாளிகள் கம்பெனி
படம் - தெஹல்கா

தி.மு.க, காங்கிரசு கூட்டணி முறியும் என்ற நாடகம் ஊடகங்களில் பரபரப்பாய் பேசப்பட்ட நேரம். ஒரு வேலையாய் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்றிருந்தேன். புதிய சட்டமன்றத்தின் எதிரே இருக்கும் இந்த நெடுஞ்சாலையிலிருந்து இரண்டு பக்கமும் பிரியும் சந்துகளில் ஏராளமான மேன்சன்கள் எனப்படும் தங்கும் விடுதிகள் இருக்கின்றன. இவற்றில் மாதவாடகைக்கும், தினசரி வாடகைக்கும் அறைகள் கிடைக்கும். திருமணமாகாமல் சென்னை வரும் இளைஞர்கள் இங்கிருந்தே தமது தலைநகரத்து வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர்.

தமிழகத்தின் தலைவிதியை தீர்மானிப்பதாக நம்பப்படும் தேர்தலில் சீட்டு கேட்டு வந்த நிறைய கட்சி பிரமுகர்களும் அங்கே தங்கியிருந்தனர். சென்னை தவிர்த்த எல்லா மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்தனர். அ.தி.மு.கவை விட தி.மு.க கறை வேட்டிகளே அதிகம் தென்பட்டன. அதிலும் ஸ்டிக்கர் கூட பிரிக்கப்படாத புத்தம் புதிய வேட்டிகளும் இருந்தன. அந்த குறுகிய சந்துகளில் இவர்களது இனோவா, ஸ்கார்பியோ கார்கள் பெரும் நெரிசலை தோற்றுவித்தன. இவர்களெல்லாம் யார்? என்ன நம்பிக்கையில், தகுதியில் சீட்டு கேட்டு வருகிறார்கள்?

தி.மு.க போட்டியிடும் 121 தொகுதிகளில் வாய்ப்பு கேட்டு 15,000 பேர் விண்ணப்பத்திருக்கின்றனர். இதில் தலைவர்களுக்காக பரிந்துரைக்கும் காக்கா ஐஸ் மனுக்களைத் தவிர்த்து விட்டு பார்த்தாலும் ஒரு தொகுதிக்கு சுமார் 80 முதல் 90 பேர் வரை விண்ணப்பித்திருக்கின்றனர். இதை கருணாநிதியும் பெருமையுடன் தெரிவித்திருக்கிறார்.

விண்ணப்பித்திருப்போர் நேர்காணலுக்காக தி.மு.க வரலாற்றை படித்து தயார் செய்து வருவதாக ஒரு பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. ஆனால் தி.மு.க நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகள் எதுவும் வரலாறு குறித்து இல்லை. அது வைட்டமின் ப குறித்துதான் மையம் கொண்டிருந்தது. ” எவ்வளவு ரூபாய் செலவழிப்பீர்கள், தொகுதிக்குள் சாதி செல்வாக்கு என்ன, குடும்பப் பின்னணி” போன்றவைதான் முக்கிய கேள்விகள். இந்த கேள்விகள்தான் மற்ற கட்சிகளிலும் கேட்கப்படுகின்றன என்றாலும் இதில் ட்ரெண்ட் செட்டர் தி.மு.கதான். வந்தவர்களில் பெரும்பான்மையினர் ஐந்து கோடி ரூபாய் செலவழிக்கும் தகுதி கொண்டவர்கள் என்றும், இதில் கூடக்குறைய இருந்தாலும் தி.மு.க என்றால் வேட்பாளர் குறைந்த பட்சம் ஐந்து கோடி செலவழிக்க வேண்டும் என்பதுதான் சந்தை நிலவரம் என்கிறார்கள்.

எனில் ஒரு தொகுதியில் ஐந்து கோடி ரூபாயை செலவழிக்கும் ஐம்பது தி.மு.க காரர்கள் குறைந்த பட்சம் இருக்கிறார்கள் என்றாகிறது. இதில் விதிவிலக்கு இருக்கலாம். ஆனாலும் நாம் பொதுவிதியைப் பற்றியே இங்கு பேசுகிறோம். வெற்றி, தோல்வி இரண்டில் எது வந்தாலும் இப்படி 5 கோடி ரூபாயை செலவழிக்கும் வல்லமையை இவர்கள் எங்கிருந்து பெற்றார்கள்? ஒரு வேளை வெற்றி பெற்றாலும் இந்த ஐந்து கோடிக்கு ரிடர்ன் எவ்வளவு கிடைக்கும்?

இந்தியாவில் ஊழல் முறைகேடுகள் என்றால் அதில் ஆதாயம் அடைந்த அரசியல்வாதிகள்தான் நம் நினைவுக்கு வருகிறார்கள். ஆனால் இந்த ஆதாயத்தின் கடைசி நபராகத்தான் அரசியல்வாதி இருக்கின்றார். முதலில் முதலாளிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்தான் என்றுதான் அந்த வரிசை இருக்கின்றது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட முதலாளிகள், அதிகாரிகள், காங்கிரசு, தி.மு.க என்று இருப்பதைப் பார்க்கலாம். இதில் தி.மு.கவின் மேல்மட்டமே முதலாளிகளாக இருப்பதால் அவர்களில் ஒரு சிலர் முதலாவதாகவும் இருக்கலாம். அப்போதும் கூட ரிலையன்ஸ், டாடா போன்ற தரகு முதலாளிகளின் ஆதாயத்தை அவர்கள் அடைந்திருக்கவில்லை.

இதனால் அரசியல்வாதிகள் ஊழல் செய்த பணம் குறைவு என்ற பொருளில்லை. உலகமயம் அமுலுக்கு வந்த பிறகு ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் பெருமளவு சொத்து சேர்த்திருக்கின்றனர். நாட்டின் இயற்கை வளத்தையும், மக்கள் வளத்தையும் ஒருங்கே அபகரிக்கும் முதலாளிகள் அதற்கு உதவி புரியும் அரசியல்வாதிகளுக்கு கணிசமான தொகையை அளிக்கிறார்கள். இதன் அளவு நமது கற்பனைக்கு அப்பாற்பட்டது என்பதை ஸ்பெக்ட்ரம் ஊழலில் பார்த்திருக்கிறோம்.

இதை கீழ்மட்டத்திலிருந்து பார்க்கலாம். ஒரு வார்டு கவுன்சிலர் எப்படியெல்லாம் சம்பாதிக்கிறார்?

சென்னை மாநகராட்சி, வார்டு ஒன்றுக்கு குறைந்த பட்சம் ஒரு கோடி முதல் 5 அல்லது 10 கோடிகள் வரை ஒரு வருடத்தில் செலவழிக்கிறது. இதில் மற்றவருக்கான கமிஷன் போக கவுன்சிலருக்கு பத்து சதவீதம் செல்கிறது. இதன்படி ஒரு கவுன்சிலர் பத்து இலட்சம் முதல் ஐம்பது இலட்சம் வரை சம்பாதிக்கிறார். அடுத்து அந்த வார்டில் வீடு கட்டுபவர் அதன் மதிப்பை பொருத்து கவுன்சிலருக்கு சன்மானம் அளிக்க வேண்டும். எதிர்த்துக் கேட்டால் ரோட்டில் கட்டிட பொருட்களை போடக்கூடாது என்பதிலிருந்து, குடிநீர், கழிவுநீர் இணைப்பு வரை பிரச்சினைக்குள்ளாகும். ஒரு வார்டில் ஒரு வருடத்தில் சுமார் நூறு வீடுகள் கட்டப்படுமென்றால் அதில் கவுன்சிலர் குறைந்தது 25 இலட்சம் முதல் 50 இலட்சம் சம்பாதிப்பார்.

பிறகு வார்டில் உள்ள புறம்போக்கு நிலம் இருந்தால் அதை வளைத்து விற்பது உண்டு. இதை யார் செய்தாலும் அதில் குறிப்பிட்ட தொகை கவுன்சிலருக்கு போக வேண்டும். அதே போல வார்டில் நடைபெறும் நில, மனை விற்பனையிலும் கவுன்சிலருக்கு ஒரு கழிவுத் தொகையை புரோக்கரே தனியாக எடுத்து வைப்பார். இதில் வருமானம் கோடியைத் தாண்டும். இறுதியாக வார்டில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்துக்களிலும் கவுன்சிலர் இருப்பதை பலரும் விரும்புவார்கள். போலிசார் கூட தங்களிடம் வரும் பஞ்சாயத்துக்களில் கவுன்சிலர் இருப்பதையே விரும்புவார்கள். இந்த வருமானம் தனி.

வார்டில் நடக்கும் கட்சி பொதுக்கூட்டங்களுக்கு வசூல், கோவில் கும்பாபிஷேகத்திற்கான வசூல், மாநகராட்சிக்கான ஊழியர் நியமன வருமானம் எல்லாம் தனி. இதில் கவுன்சிலரின் படங்கள் பிளக்சில் எல்லா முக்கிய இடங்களிலும் வீற்றிருக்கும். ஆக ஐந்து வருடம் கவுன்சிலராக இருக்கும் ஒரு நபர் தனது சொத்துமதிப்பை சில பல கோடிகளில் தேற்றிவிடுகிறார். இவர்கள் எவரும் ஸ்கார்ப்பியோ காருக்கு குறைவாக பவனி வருவது கிடையாது. வார்டில் நான்கைந்து வீடுகள், கடைகள் என்று ஆயுசுக்கும் போதுமான மதிப்பை சுருட்டி விடுகிறார்கள். இது எல்லா கவுன்சிலருக்கும் பொருந்துமென்றாலும் ஆளும் கட்சி என்பதால் தி.மு.க கவுன்சிலர்கள் அதிகம் சம்பாதித்து விடுகிறார்கள்.

சென்னையில் தி.மு.க கவுன்சிலர்களின் ‘சம்பாத்தியம்’ உருவாக்கியிருக்கும் கெட்ட பெயரால் தி.மு.கவின் தலைவர்கள் பலர் வெளித் தொகுதிகளுக்கு சென்றிருக்கிறார்கள் என்ற செய்தியில் உண்மை இல்லாமல் இல்லை.

_______________________________________________________

ஒரு கவுன்சிலரே இவ்வளவு சம்பாதிக்கிறார் என்றால் பல வார்டுகளைக் கொண்ட ஒரு சட்ட மன்றத் தொகுதியில் வருமானம் எவ்வளவு இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம். ஒரு சட்டமன்றத் தொகுதியில் தமிழக அரசு செலவழிக்கும் எல்லா திட்டங்களுக்கான ஒப்பந்ததாரர் தொகையில் ஒரு கழிவுத் தொகை உறுப்பினருக்கு சென்றுவிடும். மேலும் இவர்கள் சுருட்டுவதோடு தங்களது அல்லக்கைகள் சம்பாதிப்பதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தி ஒரு கூட்டத்தை வைத்துக் கொள்கிறார்கள். மக்களிடையேயும் ஒரு வள்ளல் தோற்றத்தை உருவாக்கிகொண்டும், சாதி ரீதியாகவும் செல்வாக்கை உருவாக்கி கொள்கிறார்கள்.

மணல் விற்பனை, ரியல் எஸ்டேட், டாஸ்மார்க்கின் பார், ஓட்டுநர் நடத்துநர் போன்ற நியமன அரசு ஊழியர் பதவிகள், தொழில் லைசென்சுகள், தொழில் மாமூல்கள், கிரானைட் தொழில், என்று ஏராளமான வகைகளில் வருமானம் கொட்டுகிறது. இதுபோக கட்சியின் தலைமைக்கு அவ்வப்போது பெரும் தொகையை வசூலித்தும் கொடுப்பார்கள். எம்.ஏஎல்.ஏக்கள், எம்.பிக்கள், கழகங்களின் மாவட்ட செயலாளர்கள் எல்லாம் இந்த ரகத்தில் வருவார்கள். இவர்கள் அந்தந்த மாவட்ட பகுதிகளின் குறுநில மன்னர் என்று கூட சொல்லலாம்.

கலைஞர் குடும்பம், அமைச்சர்கள் முதலான தி.மு.கவின் மேல்மட்டத்தினர் அவர்களே முதலாளிகளாவும் இருக்கிறார்கள். அனைவருக்கும் பெரும் தொழில் நிறுவனங்கள் உண்டு. மாநிலத்தின் அனைத்து ஒப்பந்ததாரர்களின் கழிவுத் தொகையும் இவர்களுக்கு சென்று விடும். பன்னாட்டு நிறவனங்கள் தொடர்பான அரசு முடிவுகள் இவர்கள் மூலமே நடப்பதால் அதில் நாம் நினைத்தும் பார்க்க முடியாத வருமானம் செல்கிறது. சான்றாக ஹூண்டாய் தொழிற்சாலை கழிவுப் பொருட்களின் மாத மதிப்பு 50 இலட்சமாகும். இது ஒரு தி.மு.க மேல்மட்டத்திற்கு செல்கிறது. மற்றும் எல்லா அமைச்சர்களும் பொறியியல் கல்லூரிகள் முதல் காஸ்ட்லியான பள்ளிகளையும் வைத்து நடத்துகிறார்கள்.

ஓட்டல் முதலாளிகள் சங்கம், ஆம்னி பஸ் முதலாளிகள் சங்கம், தனியார் மருத்தவ மனைகள் சங்கம், தனியார் பள்ளிகள் சங்கம், தனியார் கல்லூரிகள் சங்கம், சிமெண்ட் மற்றும் கட்டுமான முதலாளிகள் சங்கம் என்று எல்லா தொழில்களுக்குமான முதலாளிகள் சங்கத்தினர் அந்தந்த அமைச்சருக்கு குறிப்பிட்ட காலத்திற்கான மாமூலை பெரும்தொகையில் தருகிறார்கள். சில இடங்களில் இது சொத்து பரிவர்த்தனையாகவும் நடக்கிறது. தமிழகத்தின் பெரும் மதிப்பிலான முன்னணி ரியல் எஸ்டேட் வர்த்தகங்களையும் இவர்களே கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் தமது சொத்துக்களை நம்பிக்கையான பினாமி மற்றும் குடும்பத்தினர் மூலம் வைத்து உப்ப வைக்கிறார்கள். ஹவாலா, அண்டை நாடுகளில் சொத்துக்கள் வாங்குதல், சுவிஸ் வங்கி என்று இவர்களது முறைகேட்டு பணம் எளிதில் கண்டுபிடிக்க இயலாதபடி மறைந்திருக்கிறது. மேலும் தி.மு.கவில் கட்சிப்பதவிகள் அனைத்திலும் கொட்டை போட்ட பெருச்சாளிகளின் வாரிசுகளே இப்போது வருகிறார்கள். அ.தி.மு.கவில் கூட அம்மாவின் தயவால் சில சாதாரணமனிதர்கள் பொறுப்புக்கு வருவது என்பதெல்லாம் தி.மு.கவில் கனவில் கூட நடவாத காரியம்.

91, 2001-ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற ஜெயா கும்பல் அடித்த கொள்ளையை விட அளவிலும், வகைகளிலும் தி.மு.க கும்பல் இந்த 5 ஆண்டுகளில் அடித்த கொள்ளை அதிகம். மேலும் தொடர்ந்து மத்தியில் கூட்டணி அமைச்சரவையில் பங்கேற்றிருப்பதும் இதற்கு ஒரு காரணம்.

_______________________________________________

தி.மு.கவின் வட்ட செயலாளர் முதல் அறிவாலயத்தை கட்டி ஆளும் கலைஞர் குடும்பம் வரை இவர்களது உணர்வையும், உணர்ச்சியையும் தீர்மானிப்பது இந்த வர்த்தக உணர்வுதான், கொள்கை சார்ந்த அரசியல் உணர்வல்ல. தி.மு.கவில் ஒருவர் வட்ட செயலாளராகவோ இல்லை மாவட்ட பிரமுகராவோ, சட்ட மன்ற உறுப்பினராகவோ ஆக வேண்டுமென்றால் அதற்கு அவரது அரசியல் உணர்வு ஒரு போதும் தீர்மானிக்கும் காரணமாக இருப்பதில்லை. அவரால் தி.மு.க எனும் கார்ப்பரேட் கம்பெனிக்கு எப்படி சம்பாதித்து கொடுக்க முடியும், அந்த சம்பாத்தியத்திலிருந்து கட்சியை எப்படி நடத்த முடியும் என்பதிலிருந்தே அவரது செல்வாக்கு தீர்மானிக்கப்படுகிறது.

மாநாடுகள், கட்சி கூட்டங்கள், அமைச்சருக்கான அணிதிரட்டல்கள் அத்தனையும் ஒரு வணிக நிறுவனம் போலவே நடக்கிறது. சுவரொட்டி ஒட்டுவது, கொடி நடுவது, கூட்ட வேலைகள் அனைத்தும் இப்போது தொண்டர்கள் செய்வதில்லை. மேலும் இதற்கு தேவையில்லாத வகையில் இப்போது கட்சியின் பிரச்சாரத்தை ஒன்றுக்கு இரண்டாக தொலைக்காட்சிகளே செய்கின்றன. பூத் ஏஜெண்ட், வட்டபொறுப்பாளர், தொகுதி பொறுப்பாளர் அத்தனைக்கும் ஒரு ரேட் உண்டு. கூடுதலாக இதில் திருமங்கலம் முறை என்று ஒரு பெரிய முறையையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

நேர்காணலில் ” எவ்வளவு செலவழிப்பீர்கள்?” என்ற கேள்வி முதன்மையாக இருப்பதன் பின்னணி இதுதான். அதனால்தான் தி.மு.க எனும் கட்சியில் இருப்பது ஒரு வர்த்தக உணர்ச்சிதான் என்கிறோம். இதற்கு பொருத்தமான சான்றாக தி.மு.க – காங்கிரசு மோதல் நாடகத்தை பார்க்கலாம்.

தி.மு.கவில் அரசியல் உணர்ச்சியோடு இருக்கின்ற தொண்டர்கள் இருக்கிறார்கள். எனினும் அதனோடு பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம், ஊழல் எல்லாம் கலந்துதான் இருக்கிறது. இவர்கள் நேரடியாக தி.மு.க எனும் வர்த்தக வளையத்தில் ஒரு ஆளாக வரமுடியாத கீழ் நிலையில் இருப்பவர்கள். அந்தந்த குறுநில மன்னர்களின் எலும்புத்துண்டில் காலத்தை ஓட்டுபவர்கள். இவர்கள்தான் காங்கிரசுடனான கூட்டணி முறிவு என்ற சேதி வந்ததும் துள்ளிக் குதித்தார்கள்.

இது ஏதோ ஒரு வகையில் கொஞ்சம் தன்மான உணர்வினைக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மைதான். மேலும் காங்கிரசை பிடிக்காத மற்ற நடுநிலைமையாளர்கள் கூட தி.மு.கவின் முடிவை வெகுவாக வரவேற்றார்கள். ஆனால் தி.மு.கவில் பொறுப்பில் இருக்கும் எவரும் இத்தகைய தன்மான உணர்ச்சியில் இதை பார்த்திருக்க் மாட்டார்கள் என்பது நிச்சயம். அவர்களை பொறுத்த வரை இது இரண்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கிடையே எழுந்த சிக்கல். ஒன்றின் வாழ்வு மற்றதனைச் சார்ந்து  இருப்பதால் அவர்கள இதை தீர்க்கவே நினைத்தார்கள்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பாரளுமன்றத்தில் அடக்கி வாசிக்கும் காங்கிரசு சி.பி.ஐ விசாரணையில் தலையிட முடியாது என்றதும், போபார்ஸ் வழக்கை ஊற்றிய மூடியது போல இதையும் மூட வேண்டும் என்று தி.மு.க  கோரியதும் உண்மையாக இருக்கலாம். மற்றபடி இந்த விசாரணை வேறு எதையும் அதாவது பாதிப்பு ஏற்படுத்தும் வண்ணம் இருக்காது என்பது இருவருக்கும் தெரியும். அப்படி ஒரு பாதிப்பு வரும் பட்சத்தில் அது ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆதாயம் அடைந்த முதலாளிகளின் பிரச்சினை என்பதால் அதை யாருமே விரும்பமாட்டார்கள்.

காங்கிரசுக்கு தமிழகத்தில் ஒரு வோட்டு கூட கிடையாது, தனித்து நின்றால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது என்பது தி.மு.கவிற்கு தெரியும். ஆனால் மத்தியில் ஆட்சியில் பங்கேற்றிருப்பதால் அடைந்த ஆதாயத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் காங்கிரசு கேட்கும் தொகுதிகள் அதிகமில்லை என்பதும் தி.மு.க அறியும். இதை வைத்தே காங்கிரசு தி.மு.கவை வழிக்கு கொண்டு வந்தது என்பது இப்போது அனைவரும் அறிந்த ஒன்று.

இப்படி இரு கட்சிகளுக்கும் சாதக பாதக விசயங்கள் இருப்பதும் அவை இரண்டு கம்பெனிகளின் வர்த்தக முரண்பாடுகளினால் எழுந்தது என்பதும்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம். இதில் காங்கிரசு மேல் கை எடுத்தற்கு அது தி.மு.கவை விட பெரிய கம்பெனி என்பதை தாண்டி வேறு இரகசியங்கள் ஏதுமில்லை. ஆரம்பத்தில் இந்த முரண்பாடு தி.மு.கவின் தன்மானத்திற்கு விடப்பட்ட சவால் என்பதாக சித்தரித்த கருணாநிதி பின்னர் காங்கிரசு கேட்ட அதே 63 தொகுதிகளை ஒப்புக் கொண்டார் என்பதிலிருந்தே இது தன்மானப்பிரச்சினை இல்லை, பொறுக்கித் தின்பதில் உள்ள அடிமைத்தனம் என்பதை  புரிந்து கொள்ளலாம்.

வியாபாரத்தில் தனிப்பட்ட மான அவமான உணர்ச்சி இல்லை என்பது தி.மு.கவிற்கும் நன்கு பொருந்தும். சென்ற சட்டமன்றத்தில் கருணாநிதியை அர்ச்சித்த சேகர்பாபு இப்போது தி.மு.க வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது அதற்கு சமீபத்திய சான்று.

தி.மு.க எப்படி ஒரு கார்ப்பரேட் கம்பெனியாக செயல்படுகிறதோ அதே போன்றுதான் அ.தி.மு.கவும் செயல்படுகிறது. ஆட்சியில் இல்லை என்பதால் இந்த கம்பெனியின் வரவு செலவு நட்டத்தில் இருப்பது என்பதைத் தாண்டி வேறு வேறுபாடு எதுவும் இல்லை.

அன்றாட வாழ்க்கைக்கு பயன்படாத தி.மு.க அரசின் நலத்திட்டங்களைத் தாண்டி விலைவாசி உயர்வு, கருணாநிதி குடும்பத்தின் ஆதிக்கம் போன்றவை காரணமாக மக்கள் அதிருப்தியிலும் கோபத்திலும் இருக்கிறார்கள். எனினும் ஒரு தொகுதியில் 5000 முதல் 10000 வாக்குகளை தலா ரூ. 5000 கொடுத்து வாங்கிவிடலாம் என்று தி.மு.க அசாத்திய நம்பிக்கையுடன் இருக்கிறது. மேலும் பூத் ஏஜெண்டு முதல் வட்டார பொறுப்பாளர் வரை அனைவரும் அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்களை விலைகொடுத்து வாங்கும் நிலையிலும் தி.மு.க இருக்கிறது.

இதனால்தான் ஜெயலலிதாவும் கூட தி.மு.கவின் கொள்கை அரசியலுக்காக பயப்படவில்லை. அவர் பயப்படுவது தி.மு.கவின் கார்ப்பரேட் வர்த்தக பலத்திற்குத்தான். அதையும் மீறி மக்கள் தமக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் அவர் இருக்கிறார்.

___________________________________________________

டாவடி அழகிரியும், கோட்டு சூட்டு தயாநிதி மாறனும்தான் தி.மு.கவின் இன்றைய முகங்கள். தமிழனது சுயமரியாதையைக் காப்பாற்றுவோம் என்று முழங்கி தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த தி.மு.கவின் இன்றைய வடிவமைப்பை உலகமயத்தின் தயவில், முதலாளிகள்தான் தீர்மானிக்கிறார்கள். தி.மு.கவின் பாதையில்தான் மற்ற கட்சிகளும் பயணிக்கின்றன. வர்த்தகத்தில் யார் பெரியவர் என்பதுதான் அவர்களுக்கிடையே உள்ள போட்டி.

அரசியல் என்பதை இப்படி இலாபம் பார்க்கும் தொழிலாக மாற்றியதைத்தான் இன்றைய சமூக அமைப்பு சாதித்திருக்கிறது. இந்த அமைப்பிற்குள் இருந்து கொண்டு தி.மு.க, அ.தி.மு.க என்று மாற்றி மாற்றி வாக்களிப்பது மூலம் நாம் எந்த பயனையும் அடையப்போவதில்லை என்பதோடு பெரும் துன்பங்களையும், துயரங்களையும்தான் சந்திக்கிறோம். எனவே நமது மாற்று பார்வை என்பது இந்த அமைப்பிற்கு வெளியே இருந்துதான் வரமுடியும். அதற்கு முதற் கண்ணாக இந்த தேர்தலை நாம் புறக்கணிக்க வேண்டும். வாக்களிப்பது ஒரு ஜனநாயகக் கடமை என்று காதில் பூ சுற்றுவார்கள். இல்லை இந்த போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்பதன் மூலமே நாம் உண்மையான ஜனநாயகத்தின் முதல் படியை எடுத்து வைக்க முடியும்.

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011