privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்சூழலியல்கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! நாகர்கோவிலில் HRPC கருத்தரங்கம்!!

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! நாகர்கோவிலில் HRPC கருத்தரங்கம்!!

-

பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கான, மனித குலத்திற்கு எதிரான கூடங்குளம் அணு உலையை மூடுவோம்!

_______________________________________________

 கருத்தரங்கம்

நாள் : 26.11.2011 சனிக்கிழமை  நேரம் : காலை 10.00 முதல் 1.00 மணி வரை

 இடம் : ஜெபமாலை திருமண மண்டபம், ஆர் வி.புரம், நாகர்கோவில்

(மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அலுவலகம் அருகில்)

_____________________________________________

அன்பார்ந்த பொதுமக்களே!

தமிழகத்தில் கூடங்குளம் அணு உலையை மூடவேண்டும் என்று கோரி ஆயிரக்கணக்கான மக்கள் நெல்லை மாவட்டம், இடிந்தகரையில் நடத்தி வரும் உறுதியான தொடர் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஜப்பானின் புகுசிமா அணு உலையைில் ஏற்பட்ட விபத்தால் உணவு, குடிநீர், பால், காற்று, கடல்நீர், விசமாகி 2 லட்சம் மக்கள் அப்பகுதியிலிலுந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கதிர்வீச்சு தொடர்ந்து நீடித்து வருகிறது.

புகுசிமா அணு உலை விபத்து ஏற்படுத்திய விழிப்புணர்வு உலகம் முழுவதும் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை தூண்டியுள்ளது. இதனால் சுவிட்சர்லாந்து, ஜெர்மனியில் அணுமின் உலைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் அணுக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்து வருகின்றன.

ஆனால் மன்மோகன்சிங் அரசு இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் படி 3 லட்சம் கோடிக்கு 36 அணு உலைகளை அமெரிக்க, ரசிய பிரான்ஸ் நிறுவனங்களிடம் வாங்கி இந்திய கடற்கரைகள் முழுவதும் நிறுவும் முடிவிலிருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்கிறது.

அணு உலைகள் பாதுகாப்பானது, மின்சார தட்டுப்பாட்டை நீக்கக் கூடியது, நாட்டின் வளர்ச்சிக்கு  அவசியமானது, அணு உலைக்கு எதிராகப்போராடுவோர் தேச விரோதிகள், அந்நிய கைக்கூலிகள் என்று தொடர்ந்து தமிழக மக்கள் மத்தியில் தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், அப்துல் கலாம் போன்ற நபர்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, சிவசேனா, காங்கிரஸ், சாதி சங்கங்கள் போன்ற மக்கள் விரோத கும்பல் பன்னாட்டு அணு உலை முதலாளிகளுக்கு ஆதரவாக பொய் பிரச்சாரத்தை விஷமாக மக்கள் மத்தியில் கக்குகின்றன.

இரத்தம் சிந்திய மக்கள் போராட்டத்தால் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்தாப்பூர் அணு உலை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் அணு உலை கட்டும் திட்டத்தை மம்தா பானர்ஜி நிராகரித்துள்ளார். கேரளாவில் மக்களும் அனைத்து கட்சிகளும் அணு உலைகளை எதிர்த்துப் போராடி தடுத்துள்ளனர். இந்த உரிமை தமிழக மக்களுக்கு இல்லையா? மக்களின் வரிப்பணம் கொள்ளை போவது, கதிர்வீச்சால் உயிர் இழப்பு, நோய்கள் அணுக் கழிவுகளை பாதுகாப்பது, விவசாய  நிலங்கள், கடல் வளம் பாழாவது, காற்று மாசு படுவது, என பல்வேறு இழப்புக்களை நேரடியாக எதிர்கொள்ளும் கூடங்குளம் இடிந்தக்கரை  மக்கள் போராடக்கூடாதா?

1988-ல் கூடங்களத்தில் நடந்த போராட்டதினால் ராஜுவ் காந்தி அணு உலைக்கு அடிக்கல் நாட்ட முடியாததுடன் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி போராட்டத்தை ஒடுக்கியதை மறக்க முடியுமா? மக்கள் கருத்துக் கணிப்பு, சுற்று சூழல் ஆய்வு என அணு உலை அமைப்பதற்கான சர்வதேச விதிமுறைகளை கூடங்குளத்தில் அரசு பின்பற்றவில்லை.

உறுதியான இடிந்தக்கரை மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு நாடு முழுவதும் பரவி வருவதை கண்டு அச்சமுற்ற, மத்திய, மாநில அரசுகள் தூதுக்குழு பேச்சு வார்த்தை என்று ஒருபுறம் இழுத்தடிப்பதும், போராடும் மக்களுக்கு பணம் ஏது? என அமைச்சர்  நாராயணசாமி மூலம் வக்கிரமாக பேசி திசை திருப்ப முயற்சிப்பதும், மறுபுறம் தேசியபாதுகாப்புச் சட்டம், முப்படை இராணுவம், போலீசு, பொய்வழக்கு, கைது என மிரட்டி ஒடுக்கிவிடலாம் என முயற்சிக்கின்றன.

1986 ரஷ்ய செர்னோபில் அணு உலை விபத்தில் பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, 50 மைல் சுற்றளவுப் பகுதி பொட்டல் காடாக மாறியது. இன்னும் அணுக்கதிர் வீச்சு அப்பகுதியில் நீடித்து வருகிறது. செர்னோபில்லின் அதே தொழில் நுட்பத்தில் இன்று கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் நான்கு உலைகள் கட்டப்பட இருக்கின்றன. 13 ஆயிரம் கோடி மதிப்பிலான வி.வி.இ.ஆர்.1000 என்ற இந்த அணு உலையின் ஆயுட்காலம் 35 ஆண்டுகள் மட்டுமே, அதன்பின் இயக்க முடியது.

ரஷ்ய சுற்றுசூழல் விஞ்ஞானிகள் இவ்வாண்டில் ரஷ்ய பிரதமர் மெத்வதேயிடம் அளித்த அறிக்கையில் வி.வி.இ.ஆர் 1000 தொழில் நுட்ப அணு உலைகளில் 31 குறைபாடுகள் உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளனர். அணு  உலை கழிவுகளை 3000 அடிக்கு கீழ் புதைக்கு குறைந்தது 24000ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும் கதிர்வீச்சின் தாக்கம் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகள் வரை இருக்கும்.

இன்று நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 97% மக்களுக்குப் பாதிப்பின்றி அனல், நீர், காற்று, கடலலை, சூரிய ஒளி, குப்பையிலிருந்து எடுக்கப்படுகிறது. யூனிட்டுக்கு 2 ரூபாய்  மட்டுமே உற்பத்தி செலவாகிறது. அணு உலைதான் ஒரேவழி என்பது போல பேசுவது மோசடியானது. பன்னாட்டு கம்பெனிகளின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஷாப்பிங் மால்கள், தொழில் நுட்ப பூங்காக்களுக்கு, 24 மணி நேர ஏ.சிக்கு வழங்கப்படும் தங்கு தடையற்ற மின்சாரத்தை, சிக்கனப்படுத்தினாலே அணு உலைகளிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை ஈடுகட்ட முடியம். இலவசங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் சி.எப்.எல் பல்புகள் கொடுத்து மின் பயனீட்டு அளவை  குறைக்கலாம்.

அணு உலையை இயக்க யுரேனியம் வெளிநாடுகளில் தான் வாங்க வேண்டும். பெட்ரோல் விலை போல அதுவும் உயரும். இதனால் உற்பத்தி செலவு யூனிட்டுக்கு 10 ரூபாய்க்கு மேலாகும். ஒருவேளை வெளிநாடுகள் யுரேனிய விற்பனையை நிறுத்தினால் அணு உலைகள் என்னவாகும்? இந்திய மொத்த மின்சார தேவையில் தற்போது இயங்கி வருகின்ற 18 அணு உலைகள் மூலம் 2.8%  மட்டுமே கிடைக்கிறது. 2005-ல் 3310 மெ.வா உற்பத்தி செய்ய அணு உலைகளை இயக்க பயன்படுத்த பட்ட மின்சாரம் 4000 மெகாவாட் என்கிறார்   பேராசிரியர் தீரேந்திர சர்மா. ஆனால் காற்றாலைகளால் மட்டும் ஆண்டுக்கு தமிழகத்திற்கு 2040 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.

அணு மின் உலையினால் ஏற்படும் தலைமுறைகள் கடந்த மிகப் பெரிய அபாயம் அணுகழிவுகளைப் பாதுகாப்பது. ஏற்கனவே தாராப்பூர் அணு உலைக் கழிவை திரும்ப பெறும் பொறுப்பை அமெரிக்கா நிராகரித்ததால், 20 ஆண்டுகளாக இந்திய அரசு பெரும் பொருட் செலவில் அதை பாதுகாத்து வருகிறது. தற்போது கூடங்குளம் அணு கழிவுகளை எடுத்துச்செல்ல ரசிய அரசு மறுத்துள்ளது.

பொதுவாக அணு உலைகள், அணு குண்டு தயாரிப்புடன் பிணைக்கப்பட்டு, இராணுவம், பாதுகாப்புடன் தொடர்பு படுத்தப்படுவதால் இதில் நடக்கும் விபத்துகள், ஊழல்கள், தொழில் நுட்ப தோல்விகள், துரோகம், இரகசியம் என்ற பெயரில் மூடி மறைக்கப்படுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து அணுசக்தி துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் விவாதிக்க நீதிமன்றத்தில் வழக்குப்போட உரிமைகள் மறுக்கப்படுகிறது.

இதனால் இந்திய மக்களின் 3 லட்சம் கோடி ரூபாய் வரிப்பணம், லட்சகணக்கான மக்களின் உயிர் பாதுகாப்பு, உள்ளிட்ட அனைத்தும் அமெரிக்க – இந்திய முதலாளிகள், சில அதிகாரிகள் மட்டுமே முடிவு செய்யும் அவலம் உள்ளது.

அணு உலை விபத்து இழப்பீட்டு சட்டத்தின்படி விபத்து நடந்தால் எத்தனை ஆயிரம் பேர் இறந்தாலும் அணு உலைகளை விற்ற, பன்னாட்டு நிறுவனம் ரூபாய் 1,500 கோடி கொடுத்தால் போதும். மீதி பணத்தை இந்திய அரசே மக்கள் வரிப்பணத்திலிருந்து வழங்க வேண்டும். அமெரிக்காவில் பிரைஸ் ஆன்டர்சன் சட்டத்தின் படி அதே அணு உலை நிறுவனங்கள் ரூ.49266 கோடி நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். ஏனென்றால் அமெரிக்கன் உயிரைவிட இந்திய உயிர் 33 மடங்கு கீழானது. அணு சக்தி ஒழுங்கு வாரியம் – அணு உலை விபத்தை முக்கியத்துவம் இல்லாத விபத்து என அறிவித்தால் நட்ட ஈடு வழங்க தேவையில்லை.

24000 ஆண்டுகள் கதிர் வீச்சு உள்ள விபத்திற்கு 10ஆண்டுகளில் இழப்பீடு கோராவிட்டால் அதன் பின் சட்டப்படி கோர முடியாது. சுனாமி, நிலநடுக்கம், போர், பயங்கரவாத நடவடிக்கைகளால் விபத்து ஏற்பட்டால் மத்திய அரசு நட்ட ஈடு வழங்க வேண்டியதில்லை.

அணு உலையில் விபத்தே ஏற்படாது 100% பாதுகாப்பானது என்று  சொல்லும் அரசவைக் கோமாளி அப்துல் கலாம் வல்லரசு கனவு காணும் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, காங்கிரசு என அணு உலையை ஆதரிக்கும் நபர்களிடம் மட்டுமே கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று பேசுகிறார். பல மாதங்களாக போராடும் மக்களை சந்திக்க அஞ்சுகிறார். பூகம்பத்தால் அணை உடைந்துவிடும் என நினைத்தால் காவேரி ஆற்றில் கரிகாலன் கல்லணையை கட்டியிருக்க முடியாது. ஆயிரம் ஆண்டு தஞ்சை பெரியகோவில் இருக்காது என லூசு தனமாக நம்மிடம் பேசுகிறார்.

இந்திய – அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தப்படி அனைத்து அணு உலைகளும் இயங்கினால் கூட இன்னும் 15 வருடங்களுக்குப் பின்பும் இந்திய மின்  தேவையில் 7% மட்டுமே அணு மின்சாரத்தால் கிடைக்கும். பன்னாட்டு அணு உலை முதலாளிகளை பாதுகாக்கும் அணு சக்தி இழப்பீட்டு சட்டத்தை நீக்குவதற்கு மன்மோகன்சிங்கிடம் பேசுவாரா? மின் தேவைக்கு அணு உலைதான் ஒரே வழியா? என கேட்பாரா?

இந்திரா காந்தியின் அவசர நிலை காலத்தில் அனுமதி வழங்கப்பட்டு போபாலில் அமெரிக்க யூனியன் கார்பைடு ரசாயன தொழிற்சாலை ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டு 1984ஆம் ஆண்டு டிசம்பரில் ஒரே இரவில் 20 ஆயிரம் மக்கள் துள்ளத் துடிக்கக் கொல்லப்பட்டனர். இன்றளவும் அதன் பாதிப்பு தொடர்கிறது. விசக்கழிவுகள் அகற்றப்படவில்லை. முறையாக இழப்பீடும் வழங்கப்படவில்லை. வழக்கின் முதல் குற்றவாளி ஆன்டர்சன் மீது இன்னும் விசாரணையே துவங்கப்படவில்லை. மற்ற குற்றவாளிகளுக்கு டி.வி.எஸ். 50 இடித்தால் என்ன தண்டனையோ அதுதான் வழங்கப்பட்டது. அன்றைய தினமே ஜாமீனில் விடப்பட்டனர். பன்னாட்டு நிறுவனங்கள் மீதான வழக்கில் இந்திய அரசு நீதிமன்றங்களின் யோக்கியதை இதுதான். ஆனால் கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் வழக்கே தொடுக்க முடியாத படி இந்திய அரசுக்கும் ரசிய அரசுக்கும் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அணு உலைகளை கட்டுவது மக்களின் மின்சாரத் தேவையிலிருந்து எடுக்கப்பட்ட முடிவல்ல. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், இந்திய-அமெரிக்க இராணுவ ஒப்பந்தம், இந்திய-பிரான்ஸ், இந்திய-ரஷ்ய வர்த்தக உடன்பாடுகள் இந்திய முதலாளிகளின் நலன்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.

இதில் மக்களின் நலன், வளர்ச்சி, பாதுகாப்பு, துளியுமில்லை. விவசாயம், பொது விநியோகம், கல்வி, சுகாதாரம், சமூக நல திட்டங்கள், சுயசார்பு விஞ்ஞான வளர்ச்சி, சுற்று சூழலை பாதிக்காத மின்சார தயாரிப்பிற்கென தேவையான நிதியை ஒதுக்காமல், பன்னாட்டு அணு உலை முதலாளிகளின் லாப வெறிக்காகவும், இந்திய ஆளும் அதிகார வர்க்கத்தின் வல்லரசு கனவுகளுக்காகவும் லட்சக்கணக்கான கோடி மக்கள் வரிப்பணத்தை பல ஆண்டுகளுக்குபின் கிடைப்பதாக கூறும் 7% அணு சக்தி மின்சாரத்திற்காக முதலீடு செய்வதன் ஒரு பகுதியே கூடங்குளம் அணு உலை. 40 ஆண்டுகள் கூட ஆயுளற்ற அணு உலைகளுக்கு, 400 தலைமுறை மக்களின் உயிரை, வாழ்க்கையை பணையம் வைக்கம் இக்கொடூரத்தை நாம் அனுமதிக்கலாமா?

அறிவார்ந்த, தேசப்பற்றார்களே, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வுரிமையை தகர்க்கும் அணு குண்டு-அணு உலை அரசியல், ஆதிக்க வல்லரசுக் கனவு-அமெரிக்க அடியாள் அரசியலை நாம் அனுமதிக்கக் கூடாது. கூடங்குளம் மட்டுமல்ல இப்புவிப்பரப்பிலிருந்தே மனித குலத்திற்கு எதிரான அனைத்து அணு உலைகளையும் அகற்றும் வரை போராடுவோம். வாரீர்!

 

மத்திய, மாநில அரசுகளே!

பன்னாட்டு அணு உலை முதலாளிகளின் லாப வெறிக்காக சொந்த நாட்டு மக்களைப் பலியிடாதே!

அனல், நீர், காற்று, கடல் அலை, சூரியஒளி போன்ற சுயசார்பு மின்சார வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடு!

தமிழக மக்களே!

இந்திய அரசு, .ர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ், சிவசேனா, கும்பலின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடிப்போம்!

நம் அனைவருக்காகவும் போராடும் கூடங்குளம்இடிந்தகரை மக்களின் போராட்டத்தில் இணைவோம்!

மனித குல விரோத அணு உலைகளை நாட்டை விட்டே விரட்டியடிப்போம்!.

 

கருத்தரங்கம்

நாள் : 26.11.2011 சனிக்கிழமை  நேரம் : காலை 10.00 முதல் 1.00 மணி வரை

இடம் : ஜெபமாலை திருமண மண்டபம், ஆர் வி.புரம், நாகர்கோவில்

(மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அலுவலகம் அருகில்)

வரவேற்புரை :
திரு.சிவராச பூபதி, வழக்கறிஞர்
மாவட்டச் செயலர், ம.உ.பா.மையம். மதுரை

தலைமை :
திரு.சே.வாஞ்சிநாதன், வழக்கறிஞர்
மா.துணைச்செயலர், ம.உ.பா.மையம். மதுரை.

முன்னிலை :
திரு.சிவசுப்பிரமணியன், வழக்கறிஞர்

கருத்துரை :
கூடங்குளம் அணு உலையும் இடிந்தகரை மக்கள் போராட்டமும்.
முனைவர்.சுப.உதயகுமார்
அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், நாகர்கோவில்.

அணு மின்சாரம் பாதுகாப்பனது, அவசியமானது – பொய்யும் புரட்டும்
திரு..முத்துக்கிருஷ்ணன், எழுத்தாளர், மதுரை.

அணு விபத்து இழப்பீட்டுச் சட்டம் ஓர் அடிமைச்சாசனம்
திரு.தி.லஜபதிராய், வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், மதுரை

பன்னாட்டு அணு உலை அரசியலும் – காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ்.பி.ஜே.பியின் வல்லரசுக் கனவும்
தோழர்.காளியப்பன், இணை பொதுச் செயலாளர்.
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

இடிந்தகரை மக்கள் போராட்டம் இந்தியா முழுவதும் பரவட்டும்
திரு.சி.ராஜு, வழக்கறிஞர், மாநில ஒருங்கிணைப்பாளர்.
மனித உரிமை பாதுகாப்பு மையம்.

மக்கள் கலை இலக்கியக் கழக மைய கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழச்சி நடைபெறும்.

நன்றியுரை : திரு.சு.ப.ராமச்சந்திரன், வழக்கறிஞர்
மாவட்டச் செயலாளர், ம.உ.பா.மையம். தூத்துக்குடி.

அனைவரும் வருக!

_________________________________________________________

மனித உரிமை பாதுகாப்பு மையம்தமிழ்நாடு
கன்னியாகுமரி மாவட்ட கிளை
18ஆ, 2-வது தளம்,தங்கையா கட்டிடம் பொதுப்பணித்துறை சாலை நாகர்கோவில்.

தொடர்பு : 9486643116,9443527613.

_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்