privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகுழந்தைகள்காசி நகரின் சுடுகாட்டுச் சிறுவர்கள்!

காசி நகரின் சுடுகாட்டுச் சிறுவர்கள்!

-

சிதையின் குழந்தைகள்  ஆவணப்படம் | Children of the Pyre

“நீங்கள் பலவீனமான இதயம் கொண்டவராக இருந்தால்  தயவு செய்து இந்தப் படத்தை பார்க்க வேண்டாம், உடனே இந்த திரையரங்கை விட்டு வெளியேறிவிடுங்கள். உண்மையாகவே இந்த ஆவணப்படம் அதிர்ச்சியானது” என்று சிதையின் குழந்தைகள் (The Children of Pyre) ஆவணப்படத்தை அறிமுகப்படுத்தினார் அப்படத்தின் இயக்குனர் ராஜேஷ் ஜாலா.

குளிரூட்டப்பட்ட அந்த திரையரங்கத்தில் இது ஒரு விளம்பர யுக்தியாகவே பட்டது. ஆனால், ஆவணப்படம் ஆரம்பித்த சில நொடிகளில் அந்த திரையரங்கமே காசி நகரின் கங்கைக்கரையில் பிணங்கள் எரிக்கப்படும் சுடுகாடாக மாறிவிட்டது. உடல் முதல் உள்ளம் வரை வேர்த்து விறுவிறுத்துவிட்டது.  காரணம் சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த பிணங்களால் மட்டும் அல்ல, அந்த படம் முன் வைக்கும் அனல் தகிக்கும் உண்மைகளால்.

குழந்தைகள் என்றவுடன் ஹார்லிக்ஸ் பிள்ளைகளும் அமுல் பேபிகளும் நினைவுக்கு வந்தால் நீங்கள் இந்தப்படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும். இது புனித பூமியான காசியில் இறந்தவர்கள் சொர்க்கத்திற்கு நேராக போய்ச் சேர உதவும் வகையில் பிணங்களை எரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிறுவர்களின் வாழ்க்கையைப் பற்றியது.

ஆவணப்படத்தின்  டிரைலர்

காசி நகரம்:
மாலை நேரம்:
மணிகார்னிகா சுடுகாடு:

சுடுகாட்டுச்-சிறுவர்கள்பிணம் எரிப்பதற்கு முன் சடங்குகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சுற்றிலும் சில சிறுவர்கள் உஷாராக நின்று கொண்டிருக்கிறார்கள்.  பிணத்தை சிதையின் மீது வைப்பதற்கு முன்பு அதன் மீது போர்த்தப்பட்டிருக்கும் பல வண்ண பளபளப்பான துணியை எடுக்கிறார் புரோகிதர். அவ்வளவுதான் அந்தத் துணியை நொடியில் கைப்பற்றிக் கொண்டு வேக வேகமாக அங்கிருந்து நகர்கிறான் ஒரு சிறுவன். பிணத்துடன் வந்தவர்களோ சிறுவர்களை திட்டியபடி துரத்துகிறார்கள். துணியை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கைமாற்றியபடி சிறுவர்கள் சிட்டாய் பறக்கிறார்கள்.

காசி ஹிந்துக்களுக்கு மிக முக்கிய புண்ணிய ஸ்தலம். தவறு செய்யும் கிறித்துவர்களுக்கு உடனடியாக சர்ச்சில் பாவமன்னிப்பு கிடைப்பது போல், ஹிந்துக்கள் என்ன பாவம் வேண்டுமானாலும் செய்து விட்டு காசியில் உள்ள கங்கையில் குளித்துவிட்டால் அவற்றை கரைத்துக் கொள்ளலாம்.

இன்னும் முக்கியமாக ‘காசியில் உயிரை விட்டு கங்கைக் கரையில் உடல் எரிக்கப்பட்டால் சொர்க்கத்திற்கு நேராக போய் விடலாம்’ என்ற நம்பிக்கையும் உண்டு. கடவுளின் நகரில் சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்கும் துறைமுகமாக இருந்தாலும் சரி, அங்கு பிணங்களை எரிக்கும் வேலையை செய்பவர்கள் ‘தீண்டத்தகாதவர்கள்’தான். ‘நாங்க குளிச்சு சுத்த பத்தமாக வந்தாலும் எங்களைத் தொட மாட்டார்கள். பிணத்தையும் பிணத்தை மூடியிருக்கும் துணியையும் தொடுவதால் எங்களை தீண்டத்தகாதவர்கள் என்கிறார்கள்’ என்கிறான் ஒரு சிறுவன்.

காசியில் கங்கைக் கரையில் இருக்கும் மணிகார்னிகா சுடுகாட்டில் பல பிணங்கள் ஒரே நேரத்தில் எரிந்து கொண்டிருக்கின்றன. ஒரு காட்சியில் பார்க்கும் தூரத்தில் 14 பிணங்கள் எரிந்து கொண்டிருப்பதாக எண்ணுகிறான் ஒரு பையன். அனைத்து பிணங்களையும் தொழில்முறை வெட்டியான்கள் எரிக்க வேண்டும் என்றால் வரிசையில் பிணங்கள் வெயிட் செய்து நாறிவிடும். ‘நாங்கள் இல்லையென்றால் இந்த பிணங்களை நாய்கள்தான் இழுத்துக் கொண்டு போகும்’ என்று சொல்கிறான் ஒரு சிறுவன். ‘பிணம் சீக்கிரமா எரிஞ்சுடணும்னுதான் எங்க விருப்பம், அப்பதான் எங்க வேலை சீக்கிரம் முடியும், தூர தூரத்திலிருந்து வந்திருக்கும் சொந்தக்காரங்களும் சீக்கிரம் திரும்ப முடியும்’ என்று வாடிக்கையாளர்கள் மீது அக்கறையுடன் பேசுகிறான்.

‘இப்போ எனக்கு 15 வயதாகிறது, 5 வயதிலேயே இந்த வேலைக்கு வந்து விட்டேன்’ என்கிறான் ஒரு பையன். இன்னொருவனை 8 வயதுக்கு மேல் மதிக்க முடியாது.

ரவி, யோகி, சுனில், மனீஷ், ககன், ஆஷிஷ், கபில் என்ற ஏழு சிறுவர்களின் மூலமாக புண்ணிய நதிக் கரையில் இருக்கும் மயானத்தின் செயல்பாடுகளை காட்டுகிறது இந்த ஆவணப் படம்.

பிணங்களை எரிப்பதற்கு உதவி செய்யும் எடுபிடிகளாக இந்த சிறுவர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக பிணத்தை மூடி வரும் அலங்காரங்கள் செய்யப்பட்ட, பல வண்ணத் துணியை எடுத்துச் சென்று விற்பதில்தான் அவர்களுக்கு வருமானம். அதைத் தவிர பிணத்தை எரிக்க வருபவர்களிடம் வசூலிக்க முடிந்ததை வசூலித்துக் கொள்கிறார்கள்.

பிணத்தை சிதையில் ஏற்றும் முன்பு துணியை உருவி அருகில் வைக்கிறார்கள். அந்த நேரத்தில் அருகில் பவ்யமாக நின்று கொண்டிருக்கும் சிறுவர்கள், லாகவமாக அதை கையில் எடுத்தபடி கவனத்தை ஈர்த்து விடாதபடி நடக்கிறார்கள், யாராவது கவனித்து விட்டால் ஓடுகிறார்கள். சில சமயம் பிணத்தை எரிக்க வந்திருப்பவர்கள் அல்லது வெட்டியான் பிடித்து துணியை பிடுங்கி கொள்கிறார்கள் ‘சில பேர் நல்லவங்க, துணியை கொடுத்திடுவாங்க, போய் காசு சம்பாதிச்சுங்க என்று. சில பேருக்கு பொறாமை நாங்க துணியை வித்து நிறைய சம்பாதிக்கிறோம்னு பிடுங்கிடுவாங்க, துணியை சிதையில் வைத்து எரித்துப் போடுவார்கள்’.

அந்தத் துணியை எடுத்துச் சென்று கடைகளில் விற்றால் ஒரு துணிக்கு 2.50 ரூபாய் கிடைக்கும். அதை துவைத்து, மடித்து, பையில் போட்டு கடைகளில் 25-30 ரூபாய் விலைக்கு மறுபடியும் விற்கிறார்கள் கடைக்காரர்கள்.

கிடைக்கும் துணி எல்லாவற்றையும் திரட்டி எடுத்துக் கொண்டு போய் விற்று பணத்தை பிரித்துக் கொள்கிறார்கள் இந்த சிறுவர்கள். இதிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்காகத்தான் தங்கள் வாழ்நாளையே இங்கு கழிக்கிறார்கள். பிணம் ரோட்டில் கடக்கும் போது நாம் மூக்கை பொத்திக்கொள்கிறோம். நம் குழந்தைக்கு கூட சாவைப் பற்றி விளக்காமல் “சாமிகிட்ட போய்டாங்க” என்று தான் சொல்லுகிறோம். ஆனால் காசியில் இருக்கும் இந்த சிறுவர்கள் சாவை தினமும் எதிர்கொள்கிறார்கள்.

“ஆரம்பத்தில் இந்த வேலைக்கு போனா என் அம்மா என்னை அடித்து நொறுக்கி விடுவார். இனிமேல் சுடுகாட்டிற்கு சென்றால் கொன்று விடுவேன் என்பார். ஆனால் ஒரு நாள் 500 ரூபாய் நோட்டை கொண்டு கொடுத்த பிறகு ‘நீ தினமும் சுடுகாட்டிற்கே வேலைக்கு போ’ என்று சொல்லிவிட்டார்”

அவர்கள் கஞ்சா புகைக்கிறார்கள், புகையிலை சாப்பிடுகிறார்கள். ‘இத்தனை பிணங்களை எரிக்க வேண்டியிருக்கிறது, கஞ்சா பிடிச்சா இன்னும் நான்கு பிணங்களை எரிப்பதற்கு தயாராக மனது லேசாகி விடும்’ என்கிறான் ஒரு பையன்.

‘சின்ன பையனாக இருந்து கொண்டு இந்த வயதிலேயே புகையிலை சாப்பிடுகிறாயே’ என்று கேட்டதும்

‘அது சரி, இவ்வளவு சின்ன வயதில் வேலை செய்து சம்பாதிக்கிறேனே, அதில் உங்களுக்கு வெட்கம் இல்லையா! அவ்வளவு அக்கறை இருந்தா அரசாங்கத்திடம் சொல்லி மாசா மாசம் 5,000 ரூபாய் அனுப்பி வைக்க ஏற்பாடு செய். நான் இதை எல்லாம் விட்டு விடுகிறேன். அது முடியாதுன்னா என்னை என் போக்கில் விட்டு விடு’

ஆம், இவர்களின் வாழ்க்கை பரிதாபப்பட வேண்டிய ஒன்றல்ல, சமூகத்தின் மீது கோபம் கொள்ள வேண்டிய விடயம். நம் பரிதாபத்தை உதிரும் மயிருக்கு சமமாக கூட அவர்கள் மதிப்பதில்லை.

“இன்று ஒரு அரசியல் தலைவரின் பிணத்தை எரிக்கிறார்கள். எங்க தேசத்தின் மிகப்பெரிய தலைவராம் அவர்” என்கிறான். தூரத்தில் மூவர்ணக் கொடி போர்த்திய உடல் ஒன்று சிதையில் வைக்கப்படுகிறது.

“அரசியல் தலைவர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்”

“தாயோளி எல்லாவனும் தாயோளிகதான்!. பணக்காரங்களுக்குத்தான் வேலை செய்கிறானுங்க, அதிலும் முதலில் அவங்க பையை நிரப்பிக் கொள்கிறானுங்க’

“நான் மட்டும் நாட்டின் தலைவரானால், எல்லாருக்கும் ஒரு வீடு கட்டிக் கொடுத்து விடுவேன். ஒவ்வொரு வீட்டிலும் அடுப்பு எரிய ஏற்பாடு செய்வேன். எல்லோருக்கும் நல்ல மருத்துவ வசதி செய்து கொடுப்பேன். ஆனா, ஏழைகளுக்கு மட்டும்தான். பணக்காரங்க எல்லாம் தாயோளிங்க’

“தலைவர்கள் பிணத்தின் மேல் மூவர்ணக் கொடி போர்த்தியிருக்கும். அதை எடுத்துச் சென்று போன முறை ஒரு படகுக் காரருக்கு 5 ரூபாய்க்கு விற்றேன்”. அந்த வகையில் ஒரு தலைவரின் மரணம் இந்த சிறுவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. ஓரிரு ரூபாய்கள் அதிக வருமானம் கிடைக்கும்.

ஆகஸ்ட் 15 அன்று மூவண்ணக் கொடி ஏற்றுகிறார்கள், தேசிய கீதத்தை பாடிக் காட்டுகிறான் ஒரு சிறுவன். மாலையில் ஓய்வு கிடைக்கும் போது தொலைக்காட்சி பார்க்கிறார்கள்.

பிணங்கள் அதிகமாக இருக்கும் நாட்களில் இரவெல்லாம் கூட வேலை செய்கிறார்கள்.  பிணங்கள் எரிந்துக்கொண்டே இருக்கும் என்பதால் பக்கத்திலேயே, அதாவது எரிந்துகொண்டிருக்கும் சிதைக்கு 5 அல்லது 10 அடிக்குள் உள்ள தரையில் அப்படியே படுத்துக்கொள்கிறார்கள். இரவில் இரண்டு அல்லது மூன்று மணிநேரம் தூங்குவதற்குள் ஏதாவது ஒரு பிணத்தை புரட்டிப் போடச் சொல்லி யாராவது எழுப்பி விடுகிறார்கள்.

வெயில் காலத்தில் சூட்டில் சிறுநீர் கூட வராது, உடம்பெல்லாம் வேர்க்குருக்களால் நிரம்பி விடுகிறது.

ககன் எனும் சிறுவனுக்கு 10 வயது தான். அவன்தான் எல்லோரையும் விட குறும்புக்காரன். தூக்கத்தில் ‘சிதைகள் எழுந்து நிற்கும், வாயைப் பிளந்து காட்டும்’ என்று சொல்கிறான்.  ”ஒரே கெட்ட கனவு பேய்கள் எல்லாம் வருகின்றன” என்கிறான்.

சுடுகாட்டுச்-சிறுவர்கள்

ந்தப்படத்தின் டிவிடியை என் நண்பர் ஒருவருக்கு கொடுத்தேன். உயர்  மத்திய வர்க்க நண்பரின் மனைவி இந்தப்படத்தை பார்த்துவிட்டு “நல்ல வேளை, என் பிள்ளைகள் புண்ணியம் செய்தவர்கள்”என்றார். பார்ப்பனிய தத்துவத்தின் வீரியத்தை புரிந்து கொள்ள நண்பரின் மனைவி ஒரு சாட்சி. ஆனால் காசியிலேயே பிறந்து தினமும் கங்கையில் காலை மாலை குளிக்கும் அந்த சிறுவர்களின் பாவம் கரையவில்லை என்பதை அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். கங்கையுடன் துளியும் சம்பந்தமில்லாத நம் சென்னை குழந்தைகள் கூட புண்ணியத்துடன் பிறந்துவிடுகின்றன.

கண்ணுக்கு முன் நடக்கும் எந்த அயோக்கியத்தனத்தையும் கடந்து சூடு சொரணையற்று செல்ல நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். ஆயிரமாண்டு காலம் அடிமையாக, அரை வயிற்றுக் கஞ்சி குடித்து ஆதிக்க சாதிக்கு உழைத்து, கேள்வி கேட்காமல் மடிந்த மனிதர்கள் போன ஜென்மத்தில் செய்த பாவத்தை எண்ணி, அடுத்த ஜென்மத்தில் ஆதிக்க சாதியில் பிறக்க வேண்டிக் கொண்டே, விதியை நொந்து இறந்தவர்கள் தான்.

அந்த தத்துவம் இன்று சுரண்டப்படுபவர்களை பாவம் செய்தவர்களாகவும், சுரண்டுபவர்களை புண்ணியம் செய்தவர்களாகவும் சொல்லுகிறது. அப்பொழுது கங்கையில் குளித்தால் பாவம் போகாது என்ற சிறு உண்மையையாவது ஒப்புகொள்வார்களா? தலித் ஒருவர் கங்கையில் குளித்துவிட்டு வந்தால் ‘பாவ’மெல்லாம் போய், நல்ல வாழ்க்கை அவருக்கு கிடைக்குமா?

சுடுகாட்டுச்-சிறுவர்கள்
இயக்குநர் ராஜேஷ்.எஸ்.ஜாலா

ஆனால் இந்தப் படத்தை எடுத்த ராஜேஷ் ஜாலா ஒரு தீர்வை சொல்கிறார். ‘இந்தப்படத்தை அரசியல்வாதிகள், ஆளுபவர்களுக்கு போட்டு காட்ட வேண்டும். இது தான் இந்தியா’ என்று அம்பலப்படுத்தி அவர்களை திருத்த வேண்டும் என்கிறார்.

‘ஆளுபவர்களும், அதிகாரிகளுக்கும் இந்த உண்மைகள் தெரியாது’ என்பது அபத்தம். சரி தெரியாது என்ற வைத்துக்கொண்டாலும், தினம் தினம் விவசாயிகளை தற்கொலை செய்ய வைக்கும் பொருளாதார கொள்கை, போராடும் மண்ணின் மைந்தர்களை தீவிரவாதிகள் என்று கொல்வது போன்ற சமூகப் பணி செய்துக்கொண்டிருக்கும் அவர்கள் இந்த படத்தை பார்த்து திருந்தி விடுவார்கள் எனும் வாதத்தை பற்றி என்ன சொல்வது! அவர்கள் என்ன விஜய்காந்த படத்தில் வரும் பாகிஸ்தான் தீவிரவாதிகளா அல்லது எம்ஜி ஆர் படத்தில் வரும் நம்பியார்களா, நீண்ட நீதி நெறி வசனத்தின் பின் திருந்திவிட?

ஹார்லிக்ஸ் பிள்ளைகள் அல்ல, சமுகத்துடன் உறவாடும் பிள்ளைகள் தான் நேர்மையாகவும், இரக்கத்துடனும் இருக்கிறார்கள். இந்த சிறுவர்கள் ஒரு அனாதை பிணத்தை பார்த்தவுடன் அதற்கு ஈமச் சடங்குகள் செய்து அதை எரிக்கிறார்கள்.

அந்த சிறுவர்களுக்கு அழகுணர்ச்சி இருக்கிறது, மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், ஆடிப்பாடுகிறார்கள். தங்களுக்குள் சிரித்து கேலி பேசி மகிழ்கிறார்கள். நவராத்ரா திருவிழா நேரத்தில் எரியும் சிதைகளின் பின்னணியில் மேடை போட்டு ஆட வரும் நாட்டிய பெண்களுடன் ககன் டான்ஸ் ஆடுகிறான். ‘நான் அவ்வளவு நல்லா ஆடலை’ என்று வெட்கத்துடன் புன்னகைக்கிறான். மழை பெய்யும் போது, எடுத்து வைத்திருந்த பிணத்தை போர்த்தும் துணியை கட்டிக் கொண்டு அழகு பார்க்கிறான் இன்னொரு சிறுவன்.

‘இந்தத் தொழிலை விரும்பி தான் செய்கிறோம் என்று அவர்கள் எங்குமே சொல்லவும் இல்லை. வேறு வழியில்லை, குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நிதர்சனத்தை உணர்ந்திருக்கிறார்கள்.

ஹிந்துத்வவாதிகளும், ஜெயமோகன்களும் ஜாக்கி ஏத்தி நிற்க வைக்கும் காசியின் புனிதத்தை இவர்களைப் போன்றவர்களின் வாழ்க்கை அவற்றை கேள்வி கேட்டபடியே தான் இருக்கிறது. படத்தை பார்த்த பிறகு தீர்வை நோக்கி நகர வேண்டியது நாம் தான். என்ன செய்ய போகிறோம்? இவர்களுக்காக உச்சு கொட்டிவிட்டு நகரபோகிறோமா? அல்லது ஹிந்து மரபை எண்ணி கன்னத்தில் போட்டு கொண்டு முக்தியடைய போகிறோமா?

_________________________________________________

– ஆதவன்.

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. // ஹிந்துத்வவாதிகளும், ஜெயமோகன்களும் ஜாக்கி ஏத்தி நிற்க வைக்கும் காசியின் புனிதத்தை இவர்களைப் போன்றவர்களின் வாழ்க்கை அவற்றை கேள்வி கேட்டபடியே தான் இருக்கிறது. படத்தை பார்த்த பிறகு தீர்வை நோக்கி நகர வேண்டியது நாம் தான். என்ன செய்ய போகிறோம்? இவர்களுக்காக உச்சு கொட்டிவிட்டு நகரபோகிறோமா? அல்லது ஹிந்து மரபை எண்ணி கன்னத்தில் போட்டு கொண்டு முக்தியடைய போகிறோமா? //

    காசியின் புனிதம், ஹிந்து மரபு எல்லாம் இருந்துட்டுப் போகுது.. உங்கள் கேள்விக்கு அந்தப் பையன்களில் ஒருவனே, எந்த மாதிரி தீர்வு யார் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறானே.. :

    “நான் மட்டும் நாட்டின் தலைவரானால், எல்லாருக்கும் ஒரு வீடு கட்டிக் கொடுத்து விடுவேன். ஒவ்வொரு வீட்டிலும் அடுப்பு எரிய ஏற்பாடு செய்வேன். எல்லோருக்கும் நல்ல மருத்துவ வசதி செய்து கொடுப்பேன். ஆனா, ஏழைகளுக்கு மட்டும்தான்.”

    // உயர் மத்திய வர்க்க நண்பரின் மனைவி இந்தப்படத்தை பார்த்துவிட்டு “நல்ல வேளை, என் பிள்ளைகள் புண்ணியம் செய்தவர்கள்”என்றார். பார்ப்பனிய தத்துவத்தின் வீரியத்தை புரிந்து கொள்ள நண்பரின் மனைவி ஒரு சாட்சி. //

    கர்த்தரின் ஆசிர்வாதமாகவும் இருக்கலாம்., அல்லா நாடியதாலும் இருக்கலாம்., புத்த/சமண நல்லூழ் ஆகவும் இருக்கலாம்.. அது நீங்கள் யாரைக் கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது..!!!

    பிள்ளைகளை பிச்சையெடுக்கவைக்கும் ஆளும் வர்க்க அரசியல்வாதிகளிடம் எந்த தத்துவத்தின் வீரியமும் இல்லையோ..?!

    • அம்பி , காசியில் உயிரை விட்டு கங்கை கரையில் எரியூட்டினால் சொர்க்கம் செல்லலாம் எனபது இந்துக்களின் நம்பிக்கை .இதில் அல்லாவும் ஏசுவும் எங்கிருந்து வருகிறார்கள் .கட்டுக்கதைகளிளிருந்து வெளியே வாருங்கள் .

      • // “நல்ல வேளை, என் பிள்ளைகள் புண்ணியம் செய்தவர்கள்” //

        சுயநலம் சார்ந்த இந்த எஸ்கேபிசம் உலகமுழுதும் வெவ்வேறு நம்பிக்கைகள் உள்ளவர்களிடம் காணப்படும் ஒன்று. இவர்கள் பிள்ளைகளுக்கு நோயோ, விபத்தோ, கொடுமைகளோ நடந்தால் தங்களாலான எல்லா முயற்சிகளையும் எடுப்பார்கள், மற்றவர்களின் குழந்தைகளுக்கு என்றால் நம்பிக்கைகளின் பின்னால் ஒளிந்துகொண்டு மனசாட்சியின் தொல்லையிலிருந்து தப்புவார்கள்..

  2. காசி என்பது இந்துக்களுடன் தொடர்பு கொண்டது என்பதினால் கொஞ்சம் காட்டம் அதிகமாகவே இருக்கிறது. இதற்கும் இந்து என்னும் மரபுக்கும் தொடர்பு இல்லை. இவை நம் சமுகத்தில் நிகழும் பிரச்சனைகளே. இவை மட்டும் அல்ல மனிதனே இன்னும் அடுத்தவர் மனித கழிவுகளை அள்ளும் கொடூரம், குழந்தைத்தொழிலாளர் போன்ற பல பிரச்சனைகள் இருகின்றன. இவற்றுக்கெல்லாம் காரணம் சமுகத்தில் காணப்படும் ஏற்ற தாழ்வுகளே. ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இருக்கும் வரை இவை அனைத்தும் தொடரும். இது போன்ற கொடூரங்கள் கண்டிப்பாக அழிக்கப்பட வேண்டும்.

    • சங்கரனுக்கும் சொர்ணம்மாளுக்குமிடையிலான ஏதோ ஒரு எளவுக்கு இந்து மதம் என்ன பண்ணும்? காசியில் அசிங்கம் நடந்தால் இந்து மதம் என்ன பண்ணும்? இல்லையா கரிகாலன்ஜி?

  3. The article evoked very SAD feelings. One thing i.e. we cannot understand the rituals and it is not possible to find the truth in following the religions.

  4. இந்திய சமூகத்தின் எந்த ஒரு பகுதியை ஆய்வு செய்து பார்த்தாலும் இது போன்ற அவலங்களும் சுரண்டல்களும் வெளிப்படுகின்றன. இதற்கு மேல்தான் பளபளக்கும் இந்தியாவை உருவாக்குகிறார்களாம்!

    உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கும் இந்த அமைப்புகளை இடித்து விட்டு புதிய உலகை படைக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

  5. // அந்த தத்துவம் இன்று சுரண்டப்படுபவர்களை பாவம் செய்தவர்களாகவும், சுரண்டுபவர்களை புண்ணியம் செய்தவர்களாகவும் சொல்லுகிறது. //

    சுரண்டுவது பாவம், கண்ணுக்கு முன்னால் நடக்கும் பாவத்துக்கு தண்டனை கொடுப்பதுதான் நல்ல அரசின் வேலை..

    // தலித் ஒருவர் கங்கையில் குளித்துவிட்டு வந்தால் ‘பாவ’மெல்லாம் போய், நல்ல வாழ்க்கை அவருக்கு கிடைக்குமா? //

    எப்போதோ சொக்கனும், சுப்பனும் கேட்ட அதே கேள்வி…

    அவர்களுக்கு கிடைத்த பதில் :

    ஆங்.. அது.. வந்து.. இப்படியெல்லாம் சொல்லாம கொள்ளாம பாவம் போச்சுன்னா யார் வயல்ல எறங்கி உழைக்கிறது.. என்ன கேட்ட… என்கிட்டயே கேள்வி கேக்கற அளவுக்கு ஆகிப் போச்சா.. எடுறா சவுக்க..

  6. பரிதாப படுவதற்கும் சந்தோச படுவதற்கும் இன்னும் என்ன இருக்கு சமுதாயத்தில், இருக்க வேண்டிய ஒரே உணர்வு ‘கோபம்’. கோபம்னதான் இந்த பார்பினியத்தையும் , முதலாளிதுவத்தையும் தகர்த்தெரியும்….

    இந்த மதம், கடவுளை நம்பும் முட்டாள்கள் எல்லோரும் விதியையை நம்புராங்க…. விதியை நம்பினால் எந்த தப்புக்குமே தண்டனை கொடுப்பது கூடாது.

    உதாரணம் இலங்கை தமிழர்கள் இறந்தது அவர்கள் விதி, ராஜபக்சே செய்த படுகொலையும் விதிதான், அவர்கள் இறக்கவேண்டும் என்று விதி இருக்கிறது, அதற்கு ராஜபக்சே என்னசெய்வார், பாவம். விதி இவரை ஒரு கருவியாக பயன்படுத்திக்கொண்டது. இதேபோல் எல்லா தவறுக்கும் காரணம் விதிதான் என்று நியாபடுத்தலாம்….
    சுருதி என்ற சிறுமி இறந்ததற்கு காரணம் விதி என்ற சொன்ன முட்டாள்களைப்போல்

  7. காசி, பனாரஸ், வாரணாசி ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் இந்த கழிசடை நகரம் உலகிலேயே மிகவும் அழுக்கும் அருவருப்பும் கொண்டதாகும். அழுக்கென்றால் புறஅழுக்கு மட்டுமல்ல அகஅழுக்கும் கூடத்தான். இந்த நகரத்தின் வழியே ஓடும் கங்கை கூட சாக்கடையாகத்தான் ஓடுகிறது. இந்திய துணைக்கண்டத்தில் வாழும் அனைத்து பிரிவு பார்ப்பனர்களையும் இந்த கழிசடை நகரத்தில் காணலாம். இங்கு அமைந்திருக்கும் “பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்” இந்தி வெறி மற்றும் மனுதர்ம பயங்கரவாதத்தின் தோற்றுவாயாகும். இந்திய துணைக்கண்டத்தின் பன்முகத்தன்மைக்கும் இதன் சாதாரண உழைக்கும் மக்களின் நலனுக்கும் எதிரான சக்திகளுக்கும் கோட்பாடுகளுக்கும் இந்நகரம் தான் ஆதர்சம். இங்கு காணப்படும் அம்மண சாமியார்கள், மனிதப் பிணம் தின்னும் அகோரிகள் ஆகியோர் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம். திராவிட இயக்கத்துக்கும் இந்த நகரத்துக்கும் சுற்றிவளைத்து ஒரு தொடர்பு இருக்கிறது. தெலுங்கு பேசும் வைணவ பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து இந்திய தேசியவாதத்தை முன்னெடுத்த ஈ.வெ.ராமசாமி இந்த நகரத்துக்கு போகும் போது மேற்கண்ட இயல்புகளோடு தான் போனார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பின் அங்கிருந்து திரும்பும் போது பெரியாராக வந்தார். இது ஒரு முகைநரண். இந்த நகரத்தின் தார்மீக அழிவு தான் இந்தியாவின் உண்மையான வளர்ச்சிக்கு வித்திடும்.

    • // தெலுங்கு பேசும் வைணவ பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து இந்திய தேசியவாதத்தை முன்னெடுத்த ஈ.வெ.ராமசாமி இந்த நகரத்துக்கு போகும் போது மேற்கண்ட இயல்புகளோடு தான் போனார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பின் அங்கிருந்து திரும்பும் போது பெரியாராக வந்தார். இது ஒரு முகைநரண். //

      ஒண்ணு காவிரிக்கரை இல்லை கங்கைக்கரை… 2 ஆண்டுகளாக இந்த ’கழிசடை’ நகரத்தில் என்னதான் செய்து கொண்டிருந்தார்..?!

        • போனோமா வந்தோமான்னில்லாம 2 வருசமாவா அந்த ’பாழாப்போன’ காசியில் புண்ணியம் சேர்த்துக் கொண்டிருந்தார்..?! காசியில் இருந்து நேரா வீட்டுக்காவது வந்தாரா..? அதுவுமில்ல.. அங்கயிருந்து கெளம்பி பூரிக்கும் போய் புண்ணியம் சேர்த்திருக்கார்.. அப்படியாப்பட்ட பக்திமானாயிருந்த மனுசன் 20 வருசம் கழிச்சு, 45 வயசுக்கு மேல எப்படி நாத்திக பிரம்மஹத்தியாயிட்டார்..?! கலி அப்பவே முத்திப் போயிருந்திருக்கு.. என்னத்தச் சொல்ல…

    • மண்ணிக்கவும் தெலுங்கு அல்ல கன்னடம் பேசும் வைணவ பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து இந்திய தேசியவாதத்தை முன்னெடுத்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இதுவே சரி…

  8. Vinavu, Why you are always mistaking hindus or hindudhva? This is the mistake of our society or Govt. As a media, you have to take people in right path for good future, inspite of mistaking someone(religion, caste and etc) particularly. we are all(soceity) responsible for whatever happening around us.

  9. KD

    யாரையும் குறை சொல்லாதீங்க• நம்ம நாட்டோட கெரகம்னு நெனைச்சுகிட்டு மக்கள இன்னும் நல்லா திட்டுங்க• அத மட்டும் செய்யுங்க• காரணம் அது இதுன்னு போனீங்க• பிச்சுப்புடுவேன் பிச்சு. சரிதான•.

  10. ராஜேஸ் எஸ். ஜாலாவுக்கு ஆயிரம் வணக்கங்கள். இது படமல்ல, நாட்டில் இலட்சோப லட்சம் அவலங்கள் தலைவிரித்து ஆடும்போது எதையோ எடுத்து விட்டு அதை, திரைப்படத்தில் நுழைவதற்கான அடையாள அட்டையாக பயன்படுத்தும் அரைவேக்காட்டு குறும்பட இயக்குனர்களுக்கான ஒரு பாடம். எந்த உலகப்பட விழாவிலும் இது திரையிடப்பட மாட்டாது. எந்த விருதுகளும் இதற்குக் கிடைக்கவும் செய்யாது. ஆனால், ராஜேஸ் ஜாலாவின் பார்வை பதிந்த இடம் இந்த விருதுகளுக்கெல்லாம் தலை சிறந்தது.

  11. “ஆரம்பத்தில் இந்த வேலைக்கு போனா என் அம்மா என்னை அடித்து நொறுக்கி விடுவார். இனிமேல் சுடுகாட்டிற்கு சென்றால் கொன்று விடுவேன் என்பார். ஆனால் ஒரு நாள் 500 ரூபாய் நோட்டை கொண்டு கொடுஇத்த பிறகு ‘நீ தினமும் சுடுகாட்டிற்கே வேலைக்கு போ’ என்று சொல்லிவிட்டார்”

    அம்மாவை
    குற்றம்சுமத்துமிந்த
    வசனம்
    சைலென்டில் காட்டபடவென்டும்

Leave a Reply to mani பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க