மீனவர் சகாயம் இறந்துவிட்டார். இன்று பிற்பகலில் நாகர்கோயில் ஜெயசேகர் மருத்துவமனையின் மருத்துவர்கள் இதனை அறிவித்து விட்டனர்.
தோழர் முகுந்தனின் பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டிருந்ததைப் போல, இது கூடங்குளம் அணு உலைக்கு அரசு கொடுத்திருக்கும் இரண்டாவது இரத்தப்பலி.
இன்னும் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. அதனைப் பதிவு செய்தால்தான் உடலை பரிசோதனைக்கு அனுப்ப இயலும். ஆனால் இந்தக் கொலைக்கான பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்வது எப்படி என்பதுதான் அரசின் அணுகுமுறையாகத் தெரிகிறது.
லாக் அப்பில் அடித்துக் கொன்றுவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக வழக்கை மூடும் திறமை வாய்ந்த போலீசுக்கு, சகாயத்தின் மனைவி கொடுத்துள்ள புகாரைக் கையாள்வதொன்றும் பெரிய விசயமல்ல. இருந்தாலும் எந்த விதத்திலும் இது பற்றி தங்களுக்கு தெரியாது என்பது போல நடிக்கவே போலீசு முயற்சிக்கிறது. ஒரு போராட்டம் இல்லாமல் இதற்கு நீதி கிடைக்கப் போவதில்லை.
இனி, தமிழக மீனவர்களைத் தாக்கும் பணி சிங்கள இராணுவத்துக்கு இருக்காது. அணு உலைப் பாதுகாப்பு என்ற பெயரில் அந்தப் பணியை இந்தியக் கடலோரக் காவற்படையே எடுத்துக் கொள்ளும் என்பதையே சகாயத்தின் மரணம் காட்டுகிறது.
இனி தென் தமிழகத்தின் கடற்பரப்பு முழுவதும் கடற்படையின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும். தமிழக மீனவர்களின் கடலாடும் உரிமை சிறிது சிறிதாகப் பறிக்கப்பட்டுவிடும். மீனவர்கள் அனைவரும் அணு உலையைத் தாக்கவரும் பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படுவார்கள். கூடங்குளம் பகுதியைச் சுற்றி உருவாக்கப்படும் போலீசு சாவடிகள் மக்களை நிரந்தரக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரும்.
இது அணு உலையால் உயிர் போவது குறித்த பிரச்சினை அல்ல, அதற்கு முன்னரே, மக்களின் உயிர் வாழும் உரிமை பறிபோவது குறித்த பிரச்சினை.
மூன்றடுக்கு முப்பதடுக்கு பாதுகாப்பெல்லாம் இதற்கு உதவாது. மக்களின் போராட்டம் ஒன்றுதான் உரிமைக்கான பாதுகாப்பு.
______________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்: