Wednesday, September 27, 2023
முகப்புபுதிய ஜனநாயகம்பெண் விடுதலை கானல் நீரல்ல !

பெண் விடுதலை கானல் நீரல்ல !

-

புரட்சியில் மகளிர்
பிரெஞ்சு புரட்சியில் பெண்கள்

லைநகர் டெல்லியில் துணை மருத்துவ மாணவி கும்பல் பாலியல் வல்லுறவுத் தாக்குதலுக்கு ஆளானதைத் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டங்கள் தற்போதைக்கு ஓய்ந்துவிட்டன. ஆனால் பெண்கள் மீதான பாலியல் வன்முறைத் தாக்குதல்கள் இன்னமும் தொடர்கின்றன. தூக்கில் போடுவது, ஆணுறுப்பை வெட்டுவது – எனத் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டுமென்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியபோதிலும், இத்தகைய கொடூரங்களில் ஈடுபடும் கிரிமினல்கள் எவரும் அதற்காக அச்சப்படுவதாகத் தெரியவில்லை.

இதற்கான காரணம், இன்றைய சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியலமைப்பில் உள்ளது. இந்தியச் சமூகமானது ஜனநாயகத்துக்கான அரசியல் போராட்டங்களின் ஊடாக உருவாகி வளர்ந்த சமூகமல்ல. நீண்ட நெடுங்காலமாக நீடித்துவரும் சாதி, மத, ஆணாதிக்கம் நிறைந்த நிலப்பிரபுத்துவ தந்தைவழி சமூக அமைப்பும், அதற்கு அக்கம்பக்கமாக தரகு முதலாளித்துவ உற்பத்திமுறையும், அதற்கேற்ற அரசியல், பண்பாட்டு நிறுவனங்களும் காலனிய காலத்திலிருந்து திணிக்கப்பட்டு நிலைநாட்டப்பட்டன.

நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கப் பிற்போக்குத்தனம் பெண்களின் மீதான ஒடுக்குமுறைக்கு-பாலியல் தாக்குதலுக்கு ஆணிவேராக இருக்கும் அதேநேரத்தில், அதன் மீது திணிக்கப்பட்டுள்ள உலகமயமாக்கம் இத்தாக்குதல்களை முன்னெப்போதும் கண்டிராத வகையில் தீவிரப்படுத்தியிருக்கிறது. ஒருபுறம், பெண்களை நுகர்வுப் பண்டமாக்கி எவ்வித விழுமியங்களுமின்றி பாலியல் வன்முறைகளைத் தீவிரமாக்கியிருக்கும் உலகமயமாக்கம்; மறுபுறம், ஆதிக்க சாதி மற்றும மத அமைப்புகள் பெண்கள் மீது கேள்விக்கிடமற்ற முறையில் தொடுக்கும் தாக்குதல்கள், கட்டுப்பாடுகள், கௌரவக் கொலைகள்- என இத்தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன.

சாதியானாலும், பாலியல் வன்கொடுமையானாலும் இரண்டுக்குமே அடிப்படையாக உள்ள அரசியல்- பொருளாதார கட்டமைவை இன்றைய அரசு பாதுகாக்கிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறப்படும் அரசு எந்திரமே பெண்களுக்கு எதிராக உள்ளது. அதிகாரவர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறை முதலான அரசின் உறுப்புகளே பெண்களுக்கு எதிரான முதன்மைக் குற்றவாளிகளாக உள்ளன. அதை யாரும் தட்டிக் கேட்கவோ, நீதியைப் பெறவோ முடியாதபடி சட்டத்துக்கு மேலானதாக, தனிவகைச் சாதியாக இருந்துகொண்டு சமூகத்தையே அச்சுறுகின்றன. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைக் கொண்டு பெண்கள் மீது கேள்விமுறையற்ற வன்முறைகளில் ஈடுபடும்இராணுவத்தினரை சிவில் கோர்ட்டுகளில் கிரிமினல் சட்டங்களின்கீழ் தண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நீதிபதி வர்மா கமிட்டி பரிந்துரைத்த முக்கியமான சில சீர்திருத்தங்களைக்கூட ஏற்க மறுக்கிறது அரசு. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் குவிந்துள்ள போதிலும், மாநில போலீசு இயக்குனர் முதல் மகளிர் நல அமைச்சகம், வாரியங்கள் உள்ளிட்ட எந்த அரசாங்க உறுப்புகளும் தமது பரிந்துரைகளை வர்மா கமிஷனுக்குக் கொடுக்கவுமில்லை.

வரதட்சிணை தடுப்புச் சட்டமும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்முறைத் தாக்குதல்களை தடுக்காத நிலையில், சட்டங்களை அமலாக்கும் இன்றைய அரசியலமைப்பு முறையே பெண்களுக்கு எதிராக உள்ள நிலையில், கடுமையான சட்டங்களாலும் தண்டனைகளாலும் பெண்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களுக்கு முடிவு கட்டிவிட முடியாது. நிலப்பிரபுத்துவ தந்தைவழி சமூக அமைப்பு, மறுகாலனியாக்கம் – எனுமிரு நுகத்தடிகளையும் அடித்து நொறுக்காமல் பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்திடவும் முடியாது.

இவ்விரு நுகத்தடிகளையும் கட்டிக்காத்து வருகின்ற இன்றைய சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார அமைப்பை அடியோடு மாற்றியமைக்கும் திசையில், குடும்பம் உள்ளிட்டு சமூகத்தின் சகல அரங்குகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டும் போராட்டங்களைக் கட்டியமைப்பதும், இன்றைய அரசியலமைப்பு முறையை வீழ்த்திவிட்டு புதிய ஜனநாயக அரசியலமைப்பை நிறுவும் திசையில் போராட்டங்களை வளர்த்தெடுப்பதுமே ஒடுக்கப்பட்டுள்ள பெண்ணினத்துக்கு விடுதலையையும் உரிமைகளையும் பெற்றுத்தரும்.

________________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2013
________________________________________________________________________________

  1. பெண் விடுதலையென்பது பெண்ணியம் பேசுவதினால் அல்ல மார்க்சியத்தின் வழியில் போரடுவதினால் மட்டுமே சாத்தியம்.

  2. பெண் விடுதலை பெற்று வீதிக்கு வந்தால் கற்பழிக்கிறது இந்த நாடு…

    கொதித்து எழுந்தா..சட்டம் அது இதுனு சொல்லி சட்டத்துறைக்கு கட்டம் சரியில்லனு சொல்லிது இந்த நாடு…

    அரைக்குறை ஆடை அணியிதுகள் என்று அட்டுழியம் செய்யுது இந்த நாடு…

    தன் அம்மாவின் முந்தானை விலகுனா பாக்குமா இந்த தறுதலை நாடு…

    போங்கப்பா பெண் விடுதலை மண் விடுதை ஆனது….இரண்டுமே போலி…

    அவுங்க அடுப்ங்கரையிலேயே.. அவிந்து கிடக்கட்டும்…

    வெள்ளைக்காரன் கிட்ட எல்லாவற்றையும் கத்துக்கிட்டது இந்த நாடு..
    பெண்னை எப்படி மதிக்கவேண்டும் என்பதை தவிர…தூ..

  3. தோழி விநோதினிக்கு,

    திராவக வீச்சால் பாதித்து, நிறைய போராட்டங்களுடன் முன்னேறி கொண்டிருந்த நீ, இன்று காலையில் மூச்சு திணறால் இறந்து போனதை அறிந்து, நிறைய வருந்தினேன். உன்னுடைய இயல்பான முகமும், திராவகம் ஊற்றிய முகமும் மாறிமாறி நினைவில் வந்து கொண்டே இருந்தன.

    உன் சொந்த பந்தங்களில் முதல்தலைமுறை பட்டதாரி நீ. ஒரு அடித்தட்டு குடும்பத்தில் பிறந்து, பட்டம் வாங்குவது என்பதை எத்தனை கடினமான பாதை என்பதை நானும் அறிவேன். உன்னைப்போல் தான் நானும். வாழ்க்கைப் பற்றிய கனவுகளும், தன் வாழ்நாள் முழுவதும் வறுமையில் உழன்ற பெற்றோரை கொஞ்சம் இளைப்பாற வைக்கலாம் என்ற கனவுகளும் இன்று கருகிப்போய்விட்டன.

    உன்மீது திராவகம் வீசியவனை தூக்கில் போட இனி கோரிக்கைகள் வலுக்கும். மக்களிடமிருந்து திராவகத்தை ஒளித்து வைக்க உச்சநீதிமன்றம் ஆலோசனை சொல்லியிருக்கிறது. இதை தனிப்பட்ட ஒரு குற்றச் செயலாக பலரும் பார்க்கிறார்கள். பார்ப்பார்கள். நான் அப்படி பார்க்கவில்லை. இங்கு எல்லா ஆண்களுக்குள்ளும், பெண்ணை இழிவுப்படுத்தும் எண்ணம் சாதுவாகவோ அல்லது சுரேசை விட கொடூர மனமோ ஒளிந்துகொண்டு தான் இருக்கிறது. சுரேசை தண்டித்துவிடலாம். ‘நம்முடைய’ சட்டத்திற்கு அது எளியது தான். ஆனால், இதை செய்ய தூண்டிய பலருக்கு என்ன தண்டனை!

    “உன்னை காதலிக்க வைக்கிறேனா இல்லையா! பார்” என காலரை தூக்கிவிட்டு ‘வீர வசனம்’ பேசிய நாயகன்களுக்கும், படம் எடுத்தவர்களுக்கும் இங்கு என்ன தண்டனை?

    ஒரு வீட்டிற்குள்ளேயே அண்ணன், தங்கையை பேதம் பிரித்து வளர்த்த பெற்றோர்கள் இதற்கு காரணமில்லையா!

    அரைகுறை ஆடை பெண்களை தங்களின் ஊடகங்களில் காட்டி, பெண்ணை சக மனுசியாக பார்க்க தடுக்கும் இவர்களுக்கு என்ன தண்டனை?

    தனது பொருட்களை விற்றுத்தீர்ப்பதற்காக, பெண்ணை துகிலுரியும் முதலாளிகளுக்கு என்ன தண்டனை?

    தனது அடியாட்படைகளான இராணுவமும், காவல்துறையும் செய்யும் பாலியல் வல்லுறவுகளை அரசே வலிந்து காப்பாற்றுகிறது. அரசுக்கு என்ன தண்டனை?

    ஆதிக்கசாதிகாரன் தலித் பெண்ணை தொடவே மாட்டான். எப்படி வல்லுறவு செய்வான் என சொல்லி நீதிமன்றம் வல்லுறவு செய்தவனை விடுவித்ததே! அந்த நீதிபதிகளுக்கு என்ன தண்டனை?

    மீண்டும் சொல்கிறேன். சுரேசுக்கு கடுமையான தண்டனை தேவைதான். ஆனால், அவனை செய்ய தூண்டியது எது என்பதை சிந்திக்காமல் விட்டால், உன்னைப்போல பல விநோதினிகள் பலியாவதை தடுக்கவே முடியாது!

    எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை. அதனால் ‘உன் ஆத்மா சாந்தியடைட்டும்’ என சொல்ல முடியவில்லை. நீ சாந்தியடைய கூடாது. நீ ஒவ்வொருவருக்குள்ளும் புகுந்து குடைந்து, குடைந்து மனச்சாட்சியை உலுக்க வேண்டும்! போராட்டங்களை தூண்டிக்கொண்டே இருக்கவேண்டும்.

    http://socratesjr2007.blogspot.in/2013/02/blog-post_12.html

  4. மக்கள் மத்தியில் அச்சத்தை விதைப்பதன் மூலம் குற்றங்களை ஒரு போதும் கட்டுப்படுத்த இயலாது. இவை உளவியல் சார்ந்து வாசிப்புடையவர்களுக்கு நன்கு விளங்கும். பல பாலியல் குற்றங்களுக்கு அத்திவாரமே அவரது சமூகம், குடும்பம், கல்வி மற்றும் மரபியல் சார்ந்த வாழ்க்கை முறைகள் தான் காரணமாக அமைகின்றது.

    பாலியல் வன்முறைகளுக்குத் தீர்வு காண முற்படும் போது உணர்ச்சிக்களைத் தூண்டி அறிவியலுக்கு ஒவ்வாத பழம் நடைமுறைகளும், மதச் சட்டங்களும் யதார்த்த சமூகத்தின் சிக்கல்களைத் தீர்க்கப் போவதில்லை என்பதை மட்டும் இங்கு இப்போது பதிவு செய்கின்றேன்.

    பழிக்குப் பழிச் சட்டம்: பெண்களுக்கு பாதுக்காப்பு தந்து விடாது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க