privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்புதுச்சேரி ஊழல் அதிகாரிகளை தண்டித்த தொழிலாளர்கள் !

புதுச்சேரி ஊழல் அதிகாரிகளை தண்டித்த தொழிலாளர்கள் !

-

தொழிலாளர்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படும் தொழிற்சாலை ஆய்வாளர்களை அடையாளம் காண்போம்!

இந்தியாவில் தொழிலாளர் நலனுக்காக என்று கூறிக்கொண்டு முதலாளிகளுக்கு சேவகம் செய்வதற்காக மட்டுமே செயல்பட்டு வருகிறது தொழிலாளர் நலத் துறை. இதில் புதுச்சேரியும் விதிவிலக்கு அல்ல என்பதினை நிரூபித்துள்ளது புதுச்சேரி தொழிலாளர் துறை. இத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழிற்சாலை ஆய்வாளர்களோ, தாங்கள் முதலாளிகளின் எடுபிடிகள் தான் என்பதினை நிருபித்து வருகின்றனர். சுமார் 14 வருடங்களாக தொழிற்சாலை ஆய்வாளராக செயல்பட்டு வரும் தாண்டவமூர்த்தியும் அவரது கூட்டாளியான துணை தொழிற்சாலை ஆய்வாளர் முரளியும் முதலாளிகளின் எச்சில் காசிற்காக தொழிலாளர் வாழ்க்கையில் “தாண்டவம்” ஆடிவருகின்றனர்.

புதுச்சேரி ஏம்பலம் பகுதியில் வேப்லர்ஸ் என்கின்ற மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக திருமதி லட்சுமி என்கின்ற தொழிலாளி 4 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். 4 வருடங்களாக இவரது உழைப்பினை சுரண்டிய முதலாளி தொழிலாளரது அடிப்படை உரிமைகளான ESIC, PF கூட பிடித்தம் செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி பணி நிரந்தரமும் செய்யாமல் ஏமாற்றி வந்தார். இந்நிலையில் மார்ச் மாதம் 22-ஆம் தேதி பணி செய்து கொண்டிருக்கும் போது அவரது சேலை இயந்திரத்தில் மாட்டி தூக்கி வீசப்பட்டார். இதில் அவரது கால் எலும்பும் தாடை எலும்பும் முறிந்து மயக்கமானார். அவரை தூக்கிச் சென்று புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, ரோட்டில் அடிபட்டு கிடந்ததாகவும், மனிதாபிமானத்தோடு மருத்துவமனையில் சேர்த்து விட வந்ததாகவும், அவர் யார் என்றே தெரியாது எனவும், மருத்துவமனையில் பதிவு செய்துவிட்டு சென்றுவிட்டது நிர்வாகம்.

மறுநாள் கண்விழித்த பிறகே அவருக்கு முதலாளியின் திருட்டுத்தனம் புரிந்தது. அதன்பிறகே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை நாடினார். புஜதொமு இதனை தொழிலாளர் துறையில் முறையிட்டதின் அடிப்படையில், தொழிற்சாலையை ஆய்வு செய்த தொழிற்சாலை ஆய்வாளரான முரளி திருமதி லட்சுமி தொழிற்சாலையில் பணி புரியவே இல்லை என்று பொய்யான அறிக்கை அளித்தார். இவரது அறிக்கை பொய் என்பதால், ஆய்வாளரை நேரில் சென்று பார்த்து திருமதி லட்சுமி பணி புரிந்தது உண்மை என்றும், அவர் எழுந்து நடக்கவே இரண்டு ஆண்டு ஆகும் என்பதால் அதுவரை சம்பளம் தர வேண்டும் என கோரியபோது முதலாளியை விட அதிகமாக கோபப்பட்டு இது ESI அலுவலகத்தில் பேச வேண்டிய விஷயம் என்றும், அவர் பணி புரியவே இல்லை என்றும் கூறி பாதிக்கப்பட்ட நபரின் பிரதிநிதியை கேவலமாக பேசி அனுப்பியுள்ளார் முதலாளிகளின் ஏவல் நாயான தொழிற்சாலை ஆய்வாளர் முரளி.

ESIC-யில் பதிவே செய்யாத போது ESIC-யில் பேச வேண்டுமென கூறுவது ஏமாற்றுவேலை என்பதால் புஜதொமு சார்பாக பல கட்ட போராட்டம் செய்யப்பட்டதின் அடிப்படையில் தொழிலாளர் ஆணையரால் தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டு திருமதி லட்சுமி பணி புரிந்தது உண்மை என்பதையும், பணியில் இருக்கும் பொழுதுதான் அடிபட்டது என்கின்ற உண்மையும் வெளிக்கொணரப்பட்டது. அதுமட்டுமின்றி 4 வருடமாக வழங்கப்படாத உரிமையான ESIC, PF-னை நிர்வாகம் ஒட்டுமொத்தமாக கட்டியது மட்டுமின்றி குணமாகி வரும் வரை மாதா மாதம் சம்பளம் தருவதாகவும் நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.

இரண்டாவதாக, புதுச்சேரி வட மங்கலத்தில் இயங்கி வரும் HUL தொழிற்சாலையில் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. தற்போது பேச்சுவார்த்தை முறிவு ஏற்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நிர்வாகம் ஒரு தொகையினை அறிவித்து, அதனை தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மிரட்டியது. ஏற்க மறுத்த தொழிலாளிகளை கைகூலிகளை ஏவி விட்டு அடித்தது. இதில் முக்கியமாக மாயகிருஷ்ணன் என்கின்ற தொழிலாளியின் கழுத்தை நான்கு கைகூலிகளை கொண்டு நெரித்தனர். அவரது கழுத்தினை நெரிக்கும் பொழுது மேற்பார்வையாளர்கள் 5 பேர் சுற்றி நின்று கை தட்டி அடிப்பவர்களை ஊக்குவித்தனர். அடிப்பட்ட தொழிலாளி இரத்த வாந்தி எடுத்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தொழிலாளர் நலத்துறையிலும், காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

காவல்துறையோ விசாரித்து, அடித்தவர்கள் மீது நடவடிக்கை என்ற பெயரில் கட்ட பஞ்சாயத்து செய்து அடித்தது தவறு என்று மட்டுமே எழுதி வாங்கினார்கள். ஆனால் தொழிற்சாலை ஆய்வாளர் தாண்டவமூர்த்தியோ அதற்கும் ஒருபடி மேலே போய் ஆய்வு என்ற பெயரில் நேராக மேலாளர் அறைக்கு மட்டும் சென்று பார்த்துவிட்டு தொழிலாளர்களை மிரட்டுகின்ற மற்றும் அடிக்கின்ற சம்பவம் நடக்கவே இல்லை என்றும் தொழிற்சாலை சுமுகமாக ஓடுகிறது என்றும் அறிக்கை அளித்தார்.

தொழிற்சாலை ஆய்வாளர் தொழிற்சாலையை ஆய்வே செய்யவில்லை என்றும், மேலாளர் அறைக்கு மட்டும் சென்று வந்துவிட்டார். எனவே மறு ஆய்வு செய்யவேண்டுமென கடிதம் தரப்பட்டு மறு ஆய்வு தொழிலாளர் துணை ஆணையர் தலைமையில் நடந்தது. அப்போது நடந்த ஆய்வின் போது நிர்வாகம் கைக்கூலிகளை ஏவி தொழிலாளர்களை அடித்தது உண்மை என நிரூபிக்கப்பட்டது. நிர்வாகத்தின் மீது நடவடிக்கையாக தொழிலாளர் துறை சார்பாக ”காரணம் கோரும் அறிவிப்பு” (Show Cause) அளிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவதாக, புதுவை தவளகுப்பத்தில் இயங்கிவரும் தேஜாஸ் நெட்வொர்க் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கேட்டு வழக்கு தொடர்ந்தனர். வழக்கு புதுவை நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் நிர்வாகம், பணி நிரந்தரம் கேட்ட தொழிலாளிகளை தொழிற்சாலை உள்ளே விடாமல் பணி மறுப்பு செய்து விட்டு இயந்திரங்களையும், மூலப்பொருட்களையும் எடுத்துக்கொண்டு பெங்களுர் செல்ல முற்பட்டது. இதனை தொழிலாளர் துறையில் முறையிட்ட போது தொழிற்சாலை ஆய்வாளர் தாண்டவமூர்த்தி தொழிற்சாலையை ஆய்வு செய்து விட்டு நிர்வாகம் எந்தப் பொருளையும் எடுத்து செல்லவில்லை என்றும், யாரையும் பணி மறுப்பு செய்யவில்லை என்றும் பித்தலாட்ட அறிக்கை அளித்தார். பணி மறுப்பு செய்யப்பட்டதினை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் (ரிட்மனு) வழக்கு தொடரப்பட்டு தொழிலாளருக்கு பணி வழங்க வேண்டுமென்று உயர்நீதி மன்றம் உத்தரவிடப்பட்ட நிலையிலும், உற்பத்தி மூலப்பொருட்களையும், இயந்திரங்களையும் எடுத்து செல்லும் போது காவல்துறைக்கும், தொழிலாளர்களுக்கும் தள்ளு முல்லு ஏற்பட்டு காவல் நிலையத்தில் புகார் உள்ள நிலையிலும், தொழிற்சாலை ஆய்வாளர் தாண்டவ மூர்த்தி அப்படியோர் சம்பவமே நடைபெறவில்லை என பொய்யான அறிக்கை அளித்து தொழிலாளர்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளார்.

இவ்வாறு தொடர்ச்சியாக தொழிலாளர்களுக்கு துரோகம் செய்கின்ற வகையில் செயல்படும் தொழிற்சாலை ஆய்வாளர்களான தாண்டவமூர்த்தி, முரளி இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்யவேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து 23.05.2013 அன்று தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தினை புஜதொமு தலைமையில் முற்றுகையிடுவதென தீர்மானிக்கப்பட்டு 200 சுவரொட்டிககள் அச்சிடப்பட்டு பரவலாக பிரச்சாரம் செய்து அன்று மாலை 3.00 மணியளவில் முற்றுகையிடப்பட்டது.

முற்றுகையின் போது பெரும்பாலான தோழர்கள் சிவப்பு சட்டை, கொடியுடன் முழக்கமிட்டுக்கொண்டே தொழிலாளர் துறை அலுவலக கண்ணாடி கதவினை தள்ளிக்கொண்டு இரண்டாவது மாடியில் உள்ள தொழிற்சாலை ஆய்வாளர் அறையினை முற்றுகையிட்டனர். தொழிலாளர்கள் வருவதினை தெரிந்துகொண்ட தாண்டவமூர்த்தி – முரளி இருவரும் கழிவறையில் போய் ஒளிந்து கொண்டு கதவினை மூடிக்கொண்டனர். அந்த அலுவலகம் மூன்று மாடி கட்டிடம் என்பதால் முழக்கத்தினை கேட்டு அனைத்து அலுவலக ஊழியர்களும் முற்றுகையிட்ட இடத்திற்கு வந்து விட்டனர். வந்தவர்களில் சிலர் அமைப்பு பெயரை பார்த்துவிட்டு ”இவர்களா? இவர்கள் மிகவும் நேர்மையானவர்கள், எந்த பிரச்சனையாக இருந்தாலும் உறுதியாக நின்று போராடுபவர்கள். சுமார் 20 கம்பணி தொழிலாளர்களாவது இருப்பார்கள் என்றும், இதுவரை இவர்கள் வெளியே வாசலில் இருந்துதான் போராட்டம் செய்வார்கள், இப்போது உள்ளேயே வந்து போராட்டம் நடத்துகிறார்கள், நாளைக்கு நாம் ஏதாவது தவறு செய்தால் நமக்கும் இதுதான் நிலைமைதான், பார்த்துக் கொள்ளுங்கள்” என்றும் பேசிக்கொண்டனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இந்த அலுவலகத்தில் பணிபுரிந்தாலும் யாரும் இந்த இருவருக்கு உதவியாக வரவில்லை. அலுவலகத்தினை சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர்கள் இவனுகளுக்கு இதுதான் சரியான பாடம் என கூறினார்கள்.

தோழர்கள் தொடர்சியாக முழக்கமிட்டுக் கொண்டே இருந்தனர். இந்நிலையில் தொழிலாளர் துணை ஆணையர் மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தி 5 பேர் தொழிலாளர் ஆணையரை சந்தித்து பேசுமாறு கூறினார்கள். அதன்படி மாநிலத்தலைவர், அலுவலக செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இரண்டு பேர் என நான்கு பேர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையின் போது தொழிலாளர் ஆணையர் தாண்டவமூர்த்தி – முரளி மீது நீங்கள் மூன்று பிரச்சனையில் மட்டுமே புகார் அளித்துள்ளீர்கள். ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக இதுபோன்று தவறு செய்து வருகின்றனர் என்று தனக்கு புகார் வந்துள்ளதாகவும், அதற்குள் நீங்கள் முற்றுகையிட்டுவிட்டீர்கள் என்றும், கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். காவல்துறை துணை ஆய்வாளரோ ஆணையர் கூறியதினை கேட்டுவிட்டு இப்படிப்பட்ட கேவலமானவர்களை முற்றுகையிட்டது தவறு இல்லை. எனவே இது தொடர்பாக உங்கள் மீது வழக்கு போடப் போவதில்லை, கைதும் செய்யப் போவதில்லை என்றும் ஒவ்வொரு அலுவலகத்திலும் இதுபோன்ற திருடர்கள் இருந்துவிடுகிறார்கள் என கூறிவிட்டு சென்றார். தொழிலாளர் ஆணையர் அளித்த உறுதியின் அடிப்படையில் தோழர்கள் கலைந்து சென்றனர்.

மறுநாள் தொழிற்சாலை ஆய்வாளர் தாண்டவ மூர்த்தியின் மகன் நமது தோழர் ஒருவரை தொடர்புகொண்டு எனது அப்பாவிற்கு 36 வருட சர்விஸ் இதனை ஒரு நிமிடத்தில் அசிங்கப்படுத்தி விட்டீர்கள் என கூறினார். உடனே தோழர் தொழிலாளர் வயிற்றில் அடித்து பொய்யான அறிக்கை கொடுத்தது சரியா? என கேட்டபோது இதற்கு பதில் அளிக்காமல் உங்களால் முடிந்ததை நீங்கள் செய்துவிட்டீர்கள் என்னால் முடிந்ததினை நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறி சென்றுவிட்டார்.

இந்த முற்றுகையின் மூலம் தொழிலாளர் நலத்துறையில் உள்ளவர்களுக்கு தவறு செய்தால் முற்றுகையிடப்பட்டு அசிங்கப்படுத்தப்படுவோம் என்ற பயம் உருவாகியுள்ளது.


[படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க