ஆகஸ்ட் 5-ம் தேதி இலண்டன் மாநகரத்தின் செய்தியாளர் கூட்டத்தில் செயற்கையான மாட்டிறைச்சியால் செய்யப்பட்ட பர்கர் (Burger) முதல் முறையாக பரிமாறப்பட்டது. நெதர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர் டாக்டர் மார்க் போஸ்ட் உருவாக்கிய இந்த செயற்கை மாட்டிறைச்சி, பசுவின் ஸ்டெம் செல்லை கொண்டு ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டதாகும். இனி இறைச்சிக்காக விலங்குகளை கொல்ல வேண்டியதில்லை, ஆய்வகத்தில் தனியாக இறைச்சி-தசையை மட்டும் வளர்க்க முடியுமாம்.
ஒரு உயிரினத்தின் உடலில் எலும்பு, இரத்தம், திசு, தசை, மூளை, இதயம் என பல்வேறு செல் வகைகள் உள்ளன. ஸ்டெம் செல்கள் என்பவை எந்த செல் வகையாகவும் மாறும் திறனுள்ள மாஸ்டர் செல்களாகும். உதாரணமாக மனித உடலில் 200-க்கும் மேற்பட்ட செல்வகைகள் உள்ளன. தாயின் கருப்பைக்குள் பெண்ணின் கருமுட்டையும் ஆணின் உயிரணுவும், ஒன்றிணைந்து முதலில் ஒரேயொரு செல் தான் உருவாகிறது. அவ்வொரு செல்லே பல்கி பெருகி முளைக் கருவாகி பின்னர் வெவ்வேறு வகை செல்களாக மாற்றமடைகிறது. முளைக் கருவிலுள்ள செல்களே ஸ்டெம் செல்கள் எனப்படுகின்றன.
ஸ்டெம் செல்களை கொண்டு செயற்கையாக உடலுறுப்புகளை உருவாக்குவதன் மூலம் தீர்க்கமுடியாத பல நோய்களையும், குறைபாடுகளையும் சரி செய்ய முடியுமென்று மருத்துவ உலகில் பல ஆய்வுகள் நடந்துவருகின்றன. இவற்றின் உதவியால் செயற்கையாக செய்யப்படும் வெளி உறுப்புகளும், உள் உறுப்புகளும் மருத்துவ விஞ்ஞானத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்துவது சாத்தியமாகலாம். உதாரணமாக, செயற்கை கருவிழி அல்லது சிறுநீரகங்களை உருவாக்கும் ஆராய்ச்சி வெற்றி அடைந்து விட்டால், கருவிழி பொருத்துவதன் மூலம் கண் பார்வை பெறும் நிலையில் இருப்பவர்களுக்கும், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மகத்தான உதவியாக இருக்கும். அதே நேரம் இந்த புரட்சி ஏழை மக்களுக்கு பலனளிப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.
மேலும், இத்தகைய ஆராய்ச்சிக்கு பல கட்ட சோதனைகள், தடைகள், கடும் முயற்சிகள் தேவைப்படும். அந்த சில பத்தாண்டுகள் வரை பிடிக்கக் கூடிய நிச்சயமற்ற வெற்றியை நோக்கிய ஆராய்ச்சிக்கு நிதி ஆதரவை வணிக நிறுவனங்கள் வழங்க முடியாது. மேலும் பல ஆராய்ச்சிகளுக்கான சந்தை தேவை பெருமளவு இல்லாமல் போகலாம். உதாரணமாக அரிதாக, சிறு எண்ணிக்கையிலானவர்களுக்கே வரும் நோய்களுக்கான ஆராய்ச்சிக்கு ஆகும் உடனடி செலவில், மிகச் சிறிதளவே வரும் மொத்த வருமானம் மூலம் திரும்பப் பெற முடியலாம்.
எனவே, மருத்துவம் என்பது வணிகமல்ல, மக்களுக்கான சேவை எனும் பார்வை கொண்ட பொதுத் துறை அல்லது அரசு ஆதரவில்தான் இத்தகைய ஆராய்ச்சிகள் நடக்க முடியும். நீண்ட கால அறிவியல் வளர்ச்சி, மனித குல மேம்பாடு என்ற நோக்கத்தில் இத்தகைய ஆராய்ச்சிகளை நடத்த வேண்டியிருந்தாலும் இன்றைய முதலாளித்துவ உலகில் இது கடினமான ஒன்றே.
இந்தச் சூழலில்தான் ஒரு பசுவின் முளைக்கருவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஸ்டெம் செல் தசை (திசு) செல்லாக மாற்றப்பட்டு பின்னர் பசுவின் ரத்ததிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சீரத்தில் (உயிர்க் கரைசல்) இட்டு, ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேதிப்பொருட்களின் துணையுடன் இறைச்சியாக வளர்க்கப்பட்டுள்ளது. சுமார் எட்டு வாரங்கள் வரை இச்செயல்முறையில் வளர்க்கப்பட்ட இந்த இறைச்சியில் கொழுப்பு அறவே இல்லை என்கிறார்கள்.
நிகழ்ச்சிக்கு பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த மார்க் போஸ்ட், உலகின் அதிகரித்து வரும் உணவுத் தேவையை ஈடுசெய்யவும், அதிகரித்துவரும் சுற்றுசூழல் மாசடைவதை குறைப்பதற்காகவும் இந்த ஆய்வில் தாம் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
மாடுகள் சுமார் 100 முதல் 150 கிராம் தாவர புரதத்தை உண்டு 15கிராம் புரதத்தை தமது உடலில் உருவாக்குகின்றன. அதாவது மாடுகளுக்கு உணவளிப்பதில் 15% மட்டுமே மனிதர்களுக்கு திரும்ப கிடைக்கிறது என்றும் இந்த வகையில் நாம் 85% உணவை இழக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், 2050-ம் ஆண்டில் உலகின் இறைச்சி தேவை தற்போதைய தேவையை விட 70%-க்கும் மேல் அதிகமாக இருக்குமென்று ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் மதிப்பீடு தெரிவிக்கிறது என்றும் இப்போதே உலகின் 70%-க்கும் மேற்பட்ட விளைநிலம் கால்நடை தீவன நிலமாக இருப்பதையும், உலகின் பசுமைக்குடில் வாயுக்களில் 5% கரியமில வாயுவையும், 40% மீத்தேன் வாயுவையும் கால்நடைகள் வெளியேற்றுவதன் மூலம் புவி வெப்பமடைவதற்கு காரணமாக இருப்பதையும், அவர் சுட்டிக்காட்டினார்.

கோட்பாட்டளவில் ஒரேயொரு ஸ்டெம் செல்லிருந்து 20,000 டன் வரை செயற்கை இறைச்சி உற்பத்தி செய்யமுடியுமாம். செயற்கை இறைச்சியை பெருமளவில் உற்பத்தி செய்வதன் மூலம் மீத்தேன் வெளியேற்றத்தை 95%, கால்நடை தீனி நிலத்தை 98% குறைக்க முடியுமென்றும், அதன் மூலம் உலகின் உணவுப் பற்றாக்குறையை ஈடுகட்ட முடியுமென்றும் 2011-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலை கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
காலையில் அரைத்த தேங்காய் சட்டினி கெட்டுப் போகாமல் இருக்கும் நுட்பத்தையோ, அதிகமாக விளைந்த தக்காளி அழுகி நாசமாகாமல் போகும் நுட்பத்தையோ கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் போராடிக் கொண்டிருக்கும் சூழலில் செயற்கை இறைச்சியில் பர்கர் தயாரிக்கும் ஆராய்ச்சி தலைப்புச் செய்திகளை பிடித்திருப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும்?
இந்த செயற்கை இறைச்சி ஆய்வு திட்டத்தின் மொத்த செலவான 250,000 யூரோக்களை கூகிள் இணை நிறுவனர் செர்கே பிரின் நிதியளித்துள்ளார். இந்நிகழ்வு ஸ்டெம் செல் ஆய்வுகளுக்கு நிதியளிக்க முதலீட்டாளர்களை ஈர்க்குமென்பதாலும், இதன் மூலம் செயற்கையாக மனித / விலங்கு உறுப்புகளை வளர்க்க முடியுமென்பது நிரூபித்துள்ளதாலும் அறிவியியலில் இது முக்கியமானதொரு நிகழ்வென்று அவர்கள் கருதுகின்றனர்.
அடிப்படை அறிவியியல் ஆய்வுகளுக்கு நிதியளிப்பதை பெரும்பாலான அரசுகள் குறைத்துக்கொண்ட நிலையில், ஆய்வாளர்கள் தமது ஆய்வுகளுக்கு நிதியை ஈர்க்க இத்தகைய வணிகரீதியிலான, கவர்ச்சியான செயல்முறைகளை விளம்பரப்படுத்த வேண்டியுள்ளது.
ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் உணவுப் பற்றாக்குறைக்கான காரணம் விளைச்சல், உற்பத்தி குறைவு என்பவற்றை விட, அவற்றுக்கான தொழில் நுட்பத் தடைகளை விட, அரசு கொள்கைகள், வர்த்தக தடைகள் போன்ற முதலாளித்துவ வணிக நடைமுறைகளே காரணமாக உள்ளன. இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் விவசாயம் மேற்குலகின் தேவைகளுக்காக பணப்பயிர்களின் உற்பத்திக்கு மடை மாற்றப்பட்டு, வளர்ந்த நாடுகளில் அரசின் மானியம் பெற்று உற்பத்தி செய்யப்படும் விவசாய-உணவு பொருட்கள் இறக்குமதியுடன் போட்டியிட முடியாமல் உணவு உற்பத்தியில் தற்சார்பு அழிக்கப்படுகிறது.
மேலும் ஒரு அமெரிக்கன் போலவோ இல்லை ஐரோப்பியன் போலவோ ஏழை நாடுகளின் மக்கள் இறைச்சியை அதிக அளவில் உட்கொள்ள முடியாது. காரணம் ஆட்டுக்கறி கிலோ ரூ. 500 விற்கும் போது சாதாரண மக்கள் அதை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலை இங்கே இருக்கிறது. எனவே இறைச்சி, முட்டை போன்றவை நுகரக்கூடிய தேவை ஏழைகளுக்கு இருந்தாலும் அவை அவர்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. இதன்படி இன்றைய உலகில் இறைச்சிக்காக அழியும் சுற்றுச் சூழல் என்பது மேற்கத்திய நாடுகளில்தான் இருக்க முடியும்.
பூமியின் சுற்றுச் சூழலை அழிப்பதில் முதலாளித்துவ நாடுகளும், நிறுவனங்களுமே முதன்மைக் காரணமாக இருக்கும் போது அவர்களால் பணியமர்த்தப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், குண்டு பல்பை எரிக்காதீர்கள், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர்கள் என்று நம்மிடம் உபதேசம் செய்தவது போலத்தான் இந்த இறைச்சி சுற்றுச்சூழல் நேசமும்.
இந்த உணவுப் பற்றாக்குறைக்கு செயற்கை இறைச்சி தீர்வாக இருக்க முடியாது. செயற்கை இறைச்சியை தயாரிக்கும் தொழில் நுட்பங்களை வளர்த்து, தொழிற்சாலை அமைத்து வணிக ரீதியான செயல்முறைக்கு கொண்டுவர 10 முதல் 20 ஆண்டுகள் வரை பிடிக்கலாம். இதற்கான தொழில் நுட்பத்துக்கு காப்புரிமை வழங்கப்பட்டு பெரும்பான்மை மக்களுக்கு பயன்படாமல் விலை உயர்த்தப்பட்டு விடும். இந்தியா போன்ற நாடுகளில், காப்புரிமை பெறப்பட்ட செயற்கை இறைச்சியை அறிமுகப்படுத்தி இறைச்சிக்கு மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தும். மேலும் உணவுப் பற்றாக்குறைக்கு ஏற்றத்தாழ்வான நுகர்வும், அந்த நுகர்வைத் தீர்மானிக்கும் முதலாளித்துவ பொருளாதாரமே அடிப்படைக் காரணம். அதை இந்தக் கண்டுபிடிப்பு மாற்றிவிடாது.
கரியமில வாயு போன்ற சுற்றுச் சூழலை பாதிக்கும் வாயுக்களை வெளிப்படுத்தும் வாகன உற்பத்தி, நச்சு வாயுக்களை வெளியேற்றும் தொழிற்சாலை நுட்பங்கள் இவற்றுக்கு மத்தியில் கால்நடைகள் வெளியிடும் மீத்தேன் சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதால் செயற்கை இறைச்சிக்கான ஆராய்ச்சி தேவை என்று சொல்வதும் பொருத்தமற்றதாகவே இருக்கிறது.
மத்தியகாலத்தில் மதத்திடம் கட்டுண்டுகிடந்த அறிவியலை விடுதலை செய்ய வேண்டியிருந்தது. தற்போதும், முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்திடம் கட்டுண்டிருக்கும் அறிவியியலை விடுதலை செய்வதே உணவு பற்றாக்குறைக்கும், சூழல் மாசடைவதற்கும் மட்டுமின்றி அனைத்து அறிவியல் முன்னேற்றத்திற்கும் தீர்வாக இருக்க முடியும்.
– மார்ட்டின்
படங்கள் : நன்றி சையின்டிஃபிக் அமெரிக்கன்
மேலும் படிக்க
This meat is Haraam
how to you say
This meat will help humans when he steps out of this planet
if rich consumes it, it will decrease the demand for butchered meat and there by reduce the cost of regular meat for poor
பாட்டாளி வர்க்க புரட்சியைத்தவிர மற்ற எந்த பலவன்ன புரட்சியும் பாட்டாளி மக்களுக்கு பயன்படப்போவதில்லை
We have to start eat human flesh. Today’s economic condition will not allow us to ‘import’ artificial flesh from other countries. Human flesh may be available after 2014 parliament election.