privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காமருத்துவம் : சோனியாவுக்கு அமெரிக்கா - மக்களுக்கு மார்ச்சுவரியா ?

மருத்துவம் : சோனியாவுக்கு அமெரிக்கா – மக்களுக்கு மார்ச்சுவரியா ?

-

டந்த ஆகஸ்ட் 26-ம் தேதி மக்களவையில் நடந்த உணவு பாதுகாப்பு சட்டம் பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு வாக்களிப்பதற்காக காத்திருந்த சோனியா காந்திக்கு குமட்டலும் வாந்தியும் ஏற்படவே, அவரை உடனடியாக அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

சோனியா காந்தி
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் சோனியா காந்தி.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சோனியாவை எய்ம்ஸ் இயக்குநர் ஆர்.சி.டேகா மற்றும் டாக்டர் நிதீஷ் நாயக் மற்றும் கார்டியோ நியூரோ பிரிவு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். மழைக்காலமாக இருப்பதால் சளித்தொற்று அதிகமாகி, அதற்கு பயன்படுத்திய மருந்துகள் இரைப்பை சிக்கலையும் வாயுக் கோளாறையும் உருவாக்கி இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.

நாட்டின் தலைவியான சோனியா காந்திக்கு சாதாரண சளித் தொல்லைக்கே அவசர பிரிவு பரிசோதனைகள் கிடைத்திருப்பதும், சாதாரண ஏழை மனிதர்கள் மாரடைப்பே வந்து போனாலும், அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி விட மாட்டார்கள் என்பது இருக்கட்டும்.

அத்தகைய ஏழை மக்களுக்கு உணவு வழங்குவதை உத்தரவாதம் செய்யும் மசோதாவை சோனியாவின் கனவுத் திட்டம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இப்படி ஏழை பாழைகளுக்கு உண்டி கொடுக்கும் கனவை நனவாக்கும் அன்னை சோனியாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டால் அது சாதாரணமானதில்லையே? மேலும் அதே ஏழை பாழைகளுக்கு கிடைக்கும் அரசு மருத்துவமனையில்தான் சோனியாவும் சிகிச்சை எடுத்திருக்க வேண்டும் என்று யாரேனும் கேட்க முடியுமா? குறைந்த பட்சம் இந்தியாவில்தான் மருத்துவம் எடுக்க வேண்டும் என்று இவரை மட்டுமல்ல வேறு தலைவர்களைத்தான் கோர முடியுமா?

இந்த சளித் தொல்லைப் பிரச்சினைக்காகவே 2011-ம் ஆண்டு அவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளித்த மருத்துவர்களுடனும் டெல்லி மருத்துவக் குழுவினர் ஆலோசனை நடத்தியுள்ளனர். எதற்கும் இருக்கட்டும் என்று மேல் சோதனைக்காக சோனியா அமெரிக்கா கிளம்பி விட்டிருக்கிறார். இனி இவரது கனவுத் திட்டத்தில் வரும் ஏழைகளுக்கு இந்நாட்டில் என்ன மருத்துவ வசதி கிடைக்கிறது என்பதை பார்ப்போம்.

தவ்லத் பர்வீன்
படம் : நன்றி தினகரன்

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள லெப்பைக் குடிக் காட்டைச் சேர்ந்தவர் தவ்லத் பர்வீன். 4 குழந்தைகளுக்கு தாயான அவர் இந்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட போது மருத்துவர் வயிற்றில் பஞ்சை வைத்து தைத்து விட, ஸ்கேனில் அந்த விபரம் தெரிந்த பிறகு கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த பஞ்சையும், அழுகிப் போன நிலையில் இரண்டு குடல் துண்டுகளையும் எடுத்திருக்கிறார்கள். 25-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டிருக்கிறார்.

அதே போன்று அரியலூர் வி.கைகாட்டியை அடுத்த குடிசல் கிராமத்தைச் சேர்ந்த சுமதி, அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு வயிற்று வலியால் துடித்திருக்கிறார். கடந்த 18-ம் தேதி சுண்டக்குடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவரது பிறப்பு உறுப்பு வழியாக மூன்று ரப்பர் கிளவுஸ்களை எடுத்திருக்கின்றனர். சுமதியின் கர்ப்பப்பை சீழ் பிடித்திருக்கிறது.

இந்தியா எங்கும் அரசு மருத்துவமனைகளில் ஏழை மக்களின் உயிரோடு விளையாடுவது அன்றாட நிகழ்வாகியிருக்கிறது. இதனால்தான் இந்தியாவில் சிகிச்சை எடுப்பது முட்டாள்தனம் என்பது சோனியா போன்ற பெருந்தகைகளுக்கு தெரிந்திருக்கிறது. ஒருவேளை உயிரை எடுக்கும் இந்த சிகிச்சைகளிலிருந்து அதிர்ஷடவசமாக தப்பினாலும் மருந்துகளை வாங்குவதில் மிச்சமிருக்கும் வாழ்க்கை பறி போய்விடும் அளவுக்கு அவற்றின் விலைகளை உயர்த்தி பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை அடிக்க இந்திய அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. இதுதான் இவர்களது உண்மையான கனவுத் திட்டங்கள்.

1979-ல் மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையத்தின் மூலம் 200 மருந்துகளின் விலைகள் குறைந்த பட்ச வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டன. படிப்படியாக அந்த பட்டியலில் இருந்த மருந்துகள் நீக்கப்பட்டு இப்போது 74 மருந்துகளுக்கு மட்டுமே விலைக் கட்டுப்பாடு இருக்கிறது. தற்போது தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலின்படி 348 மருந்துகளுக்கு மத்திய மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் மருந்து கம்பெனிகள் வைத்த விலையின் சராசரியை எடுத்து கட்டுப்பாட்டு விலையாக வைத்திருக்கிறது.

இதனால் மருந்துகளின் விலை கணிசமாக உயர்ந்திருக்கின்றன.

உதாரணமாக, கிளாக்சோ நிறுவனத்தின் ஆகுமென்டின் என்ற ஆண்டிபயாடிக்கின் விலை ரூ 266. இதே மருந்தை இந்திய நிறுவனமான மேன்கைண்ட் ரூ 75-க்கும் குறைவாக விற்கிறது. இப்போது புதிய விலையாக ரூ 141 என்று அரசு நிர்ணயித்திருக்கிறது. ரூ 75-க்கு விற்று லாபம் பார்க்க முடியும் மருந்துக்கு ரூ 141 என்று விலை உயர்த்துவதுதான் அரசின் மக்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் மருந்து வழங்குவதற்கான நடைமுறையாம்.

ஐடிபிஎல்1961-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐடிபிஎல் எனப்படும் இந்திய மருந்து மற்றும் மருந்துப் பொருட்கள் நிறுவனம் குறைந்த விலையில் மருந்துகளின் அடிப்படை வேதிப் பொருட்களை உற்பத்தி செய்து வந்தது. 1970-ல் பைசர் நிறுவனம் ரூ 1.25-க்கு விற்ற டெர்ராமைசின் என்ற மாத்திரையை 25 பைசாவுக்கு உற்பத்தி செய்து விற்றது. அதே போல ஃபுல்ஃபோரா என்ற தனியார் மருந்து நிறுவனம் ரூ 32-க்கு விற்ற ஜெண்டாமைசின் என்ற ஊசி மருந்தை ஹிந்துஸ்தான் ஆண்டிபயாடிக்ஸ் என்ற பொதுத்துறை நிறுவனம் ரூ 7-க்கு விற்றது. இதனால் அந்த இரண்டு தனியார் நிறுவனங்களும் தத்தமது மருந்துகளின் விலையை குறைத்து விற்க கட்டாயப்படுத்தப்பட்டன.

இத்தகைய பொதுத்துறை நிறுவனங்களை இழுத்து மூடவோ அல்லது தனியாரிடம் விற்று விடவோ செய்து விட்டு தனியார் நிறுவனங்கள் விற்கும் மருந்து விலைகளையும் கட்டுப்படுத்தாமல் பொதுமக்களிடமிருந்து கொள்ளை அடிக்க வழி வகுத்து தருகிறது மத்திய அரசு.

ஒரு புதிய மருந்தை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனம் 20 ஆண்டுகள் காப்புரிமை காலத்தின் போது அதிக விலை வைத்து லாபம் சம்பாதிக்கிறது. காப்புரிமை காலம் முடிந்த பின்னரும் புதுப் புதுப் பெயரில் அதே மருந்தை அதிக விலைக்கு விற்று கொள்ளை அடிப்பது வாடிக்கையாக உள்ளது. அத்தகைய மருந்துகளை இந்திய நிறுவனங்கள் குறைந்த செலவில் உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்றும் லாபம் சம்பாதிக்க முடிகிறது.

ஆனால், அந்த விலைகளை விட 2 மடங்கும் அதற்கு மேலும் உயர்த்தி பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு சேவை செய்வதையே தம் லட்சியமாக செயல்படும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்திக்கு நன்றிக் கடனாக அமெரிக்காவில் அவர் அந்த நிறுவனங்களால் சிறப்பாக கவனித்துக் கொள்ளப்படுவார் என்று நம்பலாம்.

நன்றி : ஜூனியர் விகடன், நக்கீரன்.

மேலும் படிகக