privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாடெஸ்கோவிற்கு எதிரான இங்கிலாந்து மக்களின் போராட்டம் !

டெஸ்கோவிற்கு எதிரான இங்கிலாந்து மக்களின் போராட்டம் !

-

ஷெர்போர்ன் நகர சிறு வணிகர்களும், மக்களும் கேக்கையும் ஷாம்பெய்னையும் பரிமாறியபடி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அச்சிறு நகரத்தில் துவங்கப்பட இருந்த வால்மார்ட்டைப் போன்ற பகாசுர பன்னாட்டு நிறுவனமான டெஸ்கோவின் பல்பொருள் அங்காடி தொடங்கப்பட மாட்டது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பினால் வந்த கொண்டாட்டம் தான் இது. ஷெர்போர்ன் நகர மக்கள் மற்றும் சிறு வணிகர்களின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி இது.

ஷெர்போர்ன்
ஷெர்போர்ன் தெரு

இங்கிலாந்து நாட்டில் உள்ள சிறு நகரமான ஷெர்போர்ன் மிக முக்கியமான சுற்றுலா மற்றும் வணிக நகரம். வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்கள், தேவாலயங்கள், தனித்துவ கலாச்சார அடையாளங்களைக் கொண்ட ஷெர்போர்ன், சுற்றுலா பயணிகளை ஈர்த்ததில் ஆச்சரியமில்லை. இந்நகரத்தில் பல சிறு வணிகர்கள், ரோட்டோரக் கடைகள், சிறு விடுதிகள், இரண்டு மத்திய ரக பல்பொருள் அங்காடிகள் என சுற்றுலா பயணிகளை நம்பி இயங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக அங்காடித் தெரு (ஹைஸ்டிரீட்) மிகவும் புகழ் பெற்றது.

கடந்த வருடம் டிசம்பர் 12-ம் தேதி இங்கிலாந்தின் மிகப் பெரிய சங்கிலித் தொடர் சில்லறை விற்பனை நிறுவனமான டெஸ்கோ ஷெர்போர்ன் நகரத்தில் தன் புதிய கடையை திறக்கப் போவதாக அறிவித்தது. உலகின் மிகப் பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான  வால்மார்ட்டுக்கு அடுத்த இடத்திலும், மொத்த வருமானத்தில் உலகின் மூன்றாவது பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமாகவும் டெஸ்கோ திகழ்கிறது.

டெஸ்கோவின் வருகை பல சிறிய வணிகர்களை அழித்துவிடும் என்பதை உறுதியாக அறிந்து கொண்ட ஷெர்போர்ன் நகர சிறு வணிகர்கள், கடை திறப்பைப் பற்றிய அறிவிப்பு வெளியான உடனே ஒன்று கூடி களத்தில் இறங்கினார்கள். அடையாளப் போராட்டங்களை கைவிட்டு புதுமையாக “தேவையில்லை, டெஸ்கோ” (No Thanks, Tesco) எனும் போராட்டத்தை துவங்கினார்கள். அவர்கள் அரசையும் நம்பவில்லை, அதிகாரிகளையும் நம்பவில்லை அதேநேரம் ஒன்றுபட்டு போராடினால் டெஸ்கோவை விரட்ட முடியும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

போராட்டம் தொடங்கியது. இரண்டே நாளில் ஒரு வலைத் தளம் தொடங்கப்பட்டது. தங்கள் தரப்பு வாதங்களையும், கருத்துகளையும் தெளிவாக பரப்புரை செய்தனர். சுற்றுலா பயணிகளுக்கு விளக்கி டெஸ்கோவிற்கு எதிரான கையெழுத்து இயக்கமும் நடத்தினர், சுமார் 11 ஆயிரம் பேர் வரை இப்போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டனர். இந்த எண்ணிகை ஷெர்போர்னின் மொத்த மக்கள் தொகையைவிட அதிகமானது. டெஸ்கோ வந்தால் எப்படி சிறு வணிகர்களின் வணிகம் நொடிந்து போகும், எவ்வளவு பேர் வாழ்வை இழப்பார்கள் என்பதை விளக்க சில கடைகளை இழுத்து மூடியும், காலியாக்கியும் மக்களின் பார்வைக்கு காட்டினார்கள். போராட்டம் உள்ளூர் மக்களிடையேயும் சுற்றுலா பயணிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் போரட்டத்தை பற்றி கருத்து தெரிவித்த திராட்சைத்தோட்டம் ஒயின் கடையின் (வைன்யார்ட் ஒயின் ஷாப்) உரிமையாளர் வில்கின்ஸ் “ஏற்கனவே இரண்டு பல்பொருள் அங்காடிகள் இருக்கும் இந்நகரத்தில் டெஸ்கோவின் வருகை எங்களை அழித்துவிடும்” என்றார்.

நிலைமை கை மீறி போன பின் தான் ஷெர்போர்னில் புதிய கடை திறக்கும் திட்டத்தை கைவிடுவதாக டெஸ்கோ நிர்வாகம் அறிவித்தது. தன் நிலையைப் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்ட டெஸ்கோவின் இங்கிலாந்து நிர்வாக இயக்குனர்  கிரிஸ் புஷ் “ஷெர்போர்ன் நகரத்தில் டெஸ்கோவின் கடைத் திறப்பு அந்நகரத்தின் சுற்றுலா துறையை மேம்படுத்தியிருக்கும், வணிகம் பெருகியிருக்கும். ஆனால் வணிகர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் எந்த வித உடன்பாடும் ஏற்படவில்லை. அதனால் அங்காடி திறப்பு கைவிடப்படுகிறது” என்றார்.

தாங்கள் மக்கள் போராட்டத்திற்கு பணியவில்லை என்று, விழுந்து விட்டோம் ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற பாணியில் சமாளிக்கிறது டெஸ்கோ. இது அந்நகர மக்களின் போரட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்பதையும் கிரிஸ் புஷ் மறுத்தார். ”இந்த அங்காடி திறப்பு கைவிடப்பட்டதற்கும் போராட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, மக்களின் போராட்டம் ஒன்றும் செய்யவில்லை, அங்கு கடையை திறக்க போதுமான போக்குவரத்து கட்டமைப்புகள் இல்லை” என்றார்.

ஆனால் இதைப் போராட்டக்காரர்கள் மறுக்கிறார்கள். ”கிரிஸ் புஷ் சொல்வது வேடிக்கையானது, டெஸ்கோ கடந்த வருடம் மே மாதம் முதல் ஷெர்போர்னில் அனைத்து வசதிகளையும் ஆய்வு செய்து, அனைத்து சாதக பாதகங்களையும் உறுதி செய்த பிறகு தான், டிசம்பர் 12-ம் தேதி அதிகார பூர்வமாகக் கடையைத் திறப்பது பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்கள். அதனால் போக்குவரத்து வசதிகள் இல்லை என்று கூறுவதெல்லாம் தவறான வாதமாகும்” என்கிறார்கள்.

அதே நேரம் ஷெர்போர்ன் நகர சுற்றுலாவை டெஸ்கோ மேம்படுத்தும் என்பது பாமரத்தனமான வாதம். வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயத்தை கொண்ட அந்நகரம் ஏற்கனவே கணிசமான சுற்றுலா பயணிகளை ஈர்த்திருக்கும் நிலையில் டெஸ்கோவின் பல்பொருள் அங்காடியில் பொருட்களை வாங்க தான் அந்நகருக்கு சுற்றுலாவுக்கு வருவார்கள் என்கிற கிரிஸ் புஷ்ன் வாதத்தை என்னவென்று சொல்வது?

டெஸ்கோவின் இந்த திட்டம் கைவிடப்பட்டது தனக்கு மிக பெரும் நிம்மதியை தருவதாக கூறினார், ஷெர்போர்ன் நகர கைவினைப் பொருள் கடையின் உரிமையாளார் அலிசன் நர்டன். கிரிஸ் புஷின் அறிக்கையை பற்றி கூறுகையில் ”அவர்கள் மக்கள்  போராட்டம் வென்றது என்று நிச்சயம் ஒப்புக்கொள்ளமாட்டார்கள், ஒப்புக் கொண்டு விட்டால் அவர்களின் பல சங்கிலி தொடர் கடைகளுக்கு மூடு விழா நடத்த அதுவே அச்சாரம் போட்டதாக ஆகிவிடும்” என்றார்.

இந்த நிகழ்வை பற்றிய கருத்துகளில் மிக முக்கியமான கருத்து எழுத்தாளரும், உணவுத் துறை பிரச்சனைகளின் நிபுணரும், இந்தப் போராட்டத்தின் மிக முக்கியமான ஆதரவாளருமான ஜோனா ப்ளித்மேன் தெரிவித்தது தான். “டெஸ்கோ மக்களின் மிகப் பெரிய தலைவலியாகிக் கொண்டிருக்கிறது, டெஸ்கோ கடைகளை மக்கள் வெறுக்கத் தொடங்கி விட்டார்கள். இந்தப் போராட்டம் வரலாற்று சிறப்புமிக்க போரட்டம், ஷெர்போர்ன் மக்களின் வெற்றி, நாட்டில் உள்ள பிற சிறு வணிகர்களுக்கும், பல குழுக்களுக்கும் சொல்லும் உறுதியான செய்தி, ஒன்று பட்டு போராடினால் டெஸ்கோவை துரத்தலாம் என்பது தான்”

ஷெர்போர்ன் மக்கள் மற்றும் சிறு வணிகர்களின் இந்த போராட்டம், இந்திய சிறு வணிகர்கள் மற்றும் இந்திய மக்களின் முன்னால் சமகால உதாரணமாக நிற்கிறது. இந்த போராட்ட அனுபவங்களை உள்வாங்கிக்கொண்டு நாமும் ஒன்றுபட்டு போராடினால் வால்மார்ட்டை விரட்டமுடியும் என்கிற நம்பிக்கையையும் அளிக்கிறது. ஷெர்போன் நகரில் வரலாற்று சிறப்பு மிக்க தேவாலயம் இருந்தாலும் வணிகர்கள் தேவனை நம்பாமல் மக்களை நம்பி போராடியதால் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.

மேலும் படிக்க