privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்மனுசங்கன்னா பேசாம இருக்க முடியாது - குமரன்

மனுசங்கன்னா பேசாம இருக்க முடியாது – குமரன்

-

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் – 13

பாடம் சொல்லிக் கொடுத்த ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு பதிவை விட்டுச் சென்றிருந்தாலும், பாடங்களுக்கு வெளியே வாழ்க்கையைச் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களின் நினைவுகள் சிறப்பாக பதிந்திருக்கின்றன.

அப்படி முதலில் நினைவில் நிற்பவர் கோபாலகிருஷ்ணன் சார். குள்ளமான, நிதானமான மனிதர். அவர் படித்து முடித்து வேலைக்கு சேர்ந்ததும் எங்கள் ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக வந்தார். அது வரை அறிந்த பல நடைமுறைகளை உடைத்து எறிந்தார். “யாரும் பேசாதீங்க, சத்தம் போடாம இருங்க” என்று மற்ற ஆசிரியர்கள் சொல்வதற்கு மாறாக, “மனுசங்க பேசாம இருக்க முடியாதுதான், பேசுங்க. ஆனா, தாழ்ந்த குரலில் பேசுங்க, பக்கத்து கிளாசுக்கு தொந்தரவு கொடுக்காத அளவில பேசுங்க” என்பார்.

teacher-4அவர் வெளியில் ஏதாவது வேலையாக போகும் போது, “நான் உட்கார்ந்திருக்கும் போது நீங்க பேசிக்கிட்டு இருக்கலாம். நான் இல்லாத போது எல்லாரும் அமைதியா இருக்கணும், அதுதான் ஒழுங்கு” என்று சொல்லி விட்டுப் போவார்.

அப்படி அமைதியாக இருக்கிறார்களா என்று கண்காணிக்க ஒருவனை நிறுத்தி விட்டு, பேசுபவர்களின் பெயர்களை எழுதி வைக்கச் சொல்வார். திரும்பி வந்து, எழுதப்பட்ட பெயர்களை எல்லாம் அழைத்து ஆளுக்கு ஒரு அடி கொடுத்து விட்டு, பெயர் எழுதிய மானிட்டருக்கும் ஒரு அடி தருவார். “இவ்வளவு பேரை பேசுவதாக எழுதி வைச்ச நீயும் கொஞ்சமாவது பேசியிருப்பே இல்லையா, அதுக்கு இந்த அடி” என்பார்.

அடுத்ததாக, ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர் திருநாவுக்கரசு சார்.

“டேய், எல்லாரும் எழுந்திருங்கடா! காலங்காத்தால தூங்கி வழிஞ்சுகிட்டு வந்து உட்கார்ந்திருக்கானுங்க. எல்லாம் எழுந்து வரிசையாக போயி ஒரு சுற்று ஓடிக்கிட்டு வாங்க”.

மாடியில் இருந்த வகுப்பறையிலிருந்து மாணவர் வரிசை தொடர் வண்டி போல ஓடி இந்தப் பக்க மாடிப்படி வழியாக இறங்கி, மறுபக்க படி வழியாக ஏறி வகுப்பறைக்கு வந்து சேரும்.

“ஆங், இப்பதான் முகங்களை பார்க்கவே நல்லா இருக்கு. காலையில சுறுசுறுப்பா இருக்க வேண்டாமா!. சரி பாடத்தை ஆரம்பிப்போம்”

வகுப்பறைக்குள் போய் விட்டாலே அடைத்து வைக்கப்பட்டு, மணி அடிக்கும் போதுதான் வெளியே போக முடியும் என்ற நிலை மாறி, இப்படி வகுப்பு நேரத்தில் வெளியில் ஒரு சுற்று சுற்றி விட்டு வரச் சொல்கிறாரே என்று ஆச்சரியம். மாணவர்களின் நண்பனாக, எப்போதும் சிரித்த முகமாக, அறிவியல் பாடத்தையும் கதை போல நடத்துவார்.

“காலையில இப்படி டல்லா இருக்கீங்க, ஏன் தெரியுமா? காலையில எழுந்திருக்கிறது, அவசர அவசரமா முகத்தை கழுவிக்கிட்டு ஏதாவது சாப்பிட்டு விட்டு வந்துர்றது. சில பேரு முகத்தைக் கூட கழுவாம வந்துர்றது. அதான் பிரச்சனை. வயித்துக்குள்ள மக்கு எல்லாம் வெளியே போகாம தங்கியிருந்தாலே இப்படித்தான் மந்தமா இருக்கும். காலையிலேயே காலைக் கடன்களை எல்லாம் முறையா முடிச்சிட்டு வந்தீங்கன்னா மூளையும் சுறுசுறுப்பா இருக்கும், நல்லா பாடங்களை கத்துக்கலாம்”.

இப்படி, மாணவர்களை கரித்துக் கொட்டுவதோடு நின்று விடாமல், என்ன பிரச்சனை, அதை எப்படி தீர்த்துக் கொள்ளலாம் என்று ஆக்கபூர்வமாகவும் விளக்குவார். பாடங்கள், பாடப் புத்தகங்கள், தேர்வுகள் இவற்றைத் தாண்டி இது போன்று சொல்வதை காரணங்களோடு, ஏற்கும்படி விளக்குவார்.

சாப்பிடும் சாப்பாடு, செரிமான மண்டலம், சுவாச மண்டலம், ரத்த ஓட்டம், உடலின் செயல்பாடுகள் இவை எல்லாவற்றுக்கும் உள்ள உறவையும் “நாம சாப்பிடுற சோறு செரிச்சு, ரத்தத்தில் கலக்கும். மூச்சு விடும் போது உள் வாங்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துக் கொள்ளும். இப்படி சாப்பாட்டு சக்தியும், ஆக்சிஜனும் ரத்தத்தில் ஓடி உடல் முழுதும் போகும். தேவைப்படும் இடத்தில் இரண்டும் சேர்ந்து எரிந்துதான் உடலுக்கு சக்தி கிடைக்கிறது. அப்படி எரியும் போது கரியமில வாயுவும், மற்ற கழிவுகளும் உருவாகி சுவாசத்திலும், கழிவு மண்டலத்திலும் வெளியே அனுப்பப்படும்” என்று சுருக்கமாக, தெளிவாக விளக்கியவர் அவர்தான்.

அடுத்ததாக, குறிப்பிடப் பட வேண்டியவர் டிரில் சண்முகம் சார்.

“அந்த மரத்தடிக்கு போறதை விட இந்த மரத்தடிக்கு வந்தீங்கன்னா, உருப்படியா நாலு விஷயம் கத்துக்கலாம்” இது அவர் அடிக்கடி சொல்லும் டயலாக். பள்ளியில் மாணவர்களுக்கு 3 உடற்பயிற்சி ஆசிரியர்கள் இருந்தனர்.  மாணவர்களுக்கான 3 பேரில் இரண்டு பேர் உடற்பயிற்சி வகுப்புக்கு வரும் மாணவர்களை உட்கார வைத்து விட்டு அல்லது மைதானத்தில் விளையாடச் சொல்லி விட்டு தங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

குட்டை சண்முகம் சார் மட்டும்தான் அவருக்கு ஒதுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களை நின்று கொண்டு 4 பயிற்சிகள், உட்கார்ந்து கொண்டு 4 பயிற்சிகள் செய்வித்து அதன் பிறகுதான் விளையாட அனுப்புவார். ஒவ்வொரு பயிற்சிக்கும் ஒன், டூ, த்ரீ, ஃபோர் என்று எய்ட் வரை போய் அதன் பிறகு எய்ட், செவன், சிக்ஸ் என்று இறங்கி நெக்ஸ்ட, ஹால்ட் வரை வந்து முடிப்பார். அதையும் ஸ்டைலாக ராகத்துடன் சொல்வார். வாரத்துக்கு 2 நாட்கள் அந்த உடற்பயிற்சி வகுப்புகள் அடிப்படை உடல் வளைவுகளுக்கு இன்று வரை பின்பற்றும் அசைவுகளாக நினைவில் நிற்கின்றன. கொஞ்சம் குண்டான உடம்போடு, கால்பந்து ஆடும் மாணவர்களோடு கூட ஓடி பந்தை உதைத்துக் காட்டுவார்.

அடுத்து என்.சி.சி (தேசிய மாணவர் படை) ஒருங்கிணைப்பாளர் குமாரசாமி சார். “நீங்க ரோட்டில யூனிஃபார்ம் போடாம நடந்து போகும் போதும், இந்தப் பையன் என்.சி.சில இருக்கறவனாத்தான் இருக்கணும்னு பார்க்கிறவங்க சொல்லணும். அப்படி மிடுக்கா நடக்கணும்.”

என்.சி.சியில தலைமுடியை ஒட்ட வெட்டிக் கொண்டு வர வேண்டும். “அதுதாண்டா ஆரோக்கியம். நிறைய முடி வளர்த்து வச்சிருந்தா நிறைய வேர்க்கும், அழுக்குச் சேரும், அதுதான் இப்படி வெட்டிக் கொள்ளச் சொல்றோம்” என்பார்.

பள்ளியை நடத்தும் சமுதாயத்தைச் சேர்ந்த அவரது சொந்தக் கார பையன்கள் பலர் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார்கள். தெருவில் அவருக்கு வைக்கப்பட்டிருந்த பட்டப் பெயரை யாரோ ஒருவன் சொல்ல, “டேய் அது அங்க, இங்க டிசிப்ளின்தான் முக்கியம்” என்று ஒரே வார்த்தையில் அதற்கு இறுக்கமாக முற்றுப் புள்ளி வைத்தார்.

எப்படி, அட்டென்ஷன் நிற்க வேண்டும் “பேன்டில் இரண்டு பக்கமும் உள்ள தையலை ஒட்டி கையை வச்சிக்கணும். சட்டை பட்டன்கள், பேன்ட் ஜிப்பு இது எல்லாம் ஒரே நேர் கோட்டில் இருக்கணும்” என்று படிப்படியாக உடை ஒழுங்கை கற்றுக் கொடுத்தார்.

அடுத்ததாக கல்லூரி. கல்லூரியில் சேர்ந்து முதல் நாளில் வகுப்புகளுக்கு மற்ற பேராசியர்கள் யாரும் வரவில்லை. பேசிக் எஞ்சினியரிங் (அடிப்படை பொறியியல்) என்ற வகுப்பை எடுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த டி விஸ்வநாதன் மட்டும் சரியான நேரத்தில் வகுப்புக்கு வந்தார். 45 நிமிடங்கள் பாடம் நடத்தி விட்டு, முதல் அசைன்மென்டும் கொடுத்து விட்டார். “தொழில்நுட்ப வளர்ச்சியின் வரலாறு” என்று ஆங்கிலத்தில் எழுதி கொடுக்க வேண்டும்.

அது வரை, பாடப் புத்தகம் பார்த்து படித்து, அதில் குறித்துக் கொடுத்த பகுதிகளை படித்து வந்தவனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. “சார், எப்படி எழுதறது” என்று ஆங்கிலத்தில் கேட்கவும் தயக்கம். வேறு யாரோ தட்டுத் தடுமாறி கேட்டு விட, “தெர் ஆர் பிளென்டி ஆஃப் புக்ஸ் இன் த லைப்ரரி” என்று அவர் சொல்லி விட, நூலகத்தில் போய் தேடித் தேடிப் பார்த்து ஒன்றும் கிடைக்காமல் வெறுத்துப் போனதுதான் நடந்தது. அசைன்மென்ட் என்றால் சீனியர்கள் அல்லது சக மாணவன் யாராவது எழுதியதை பார்த்து காப்பி அடிப்பது வழிமுறை என்று அப்போது தெரிந்திருக்கவில்லை, பின்னர் கற்றுக் கொள்ளவும் இல்லை.

மெக்கானிக்கல் ஆய்வகத்தையும் முதல் வாரத்திலேயே ஆரம்பித்து விட்டார். “எல்லாரும் ஷூ போட்டுக் கொண்டு வர வேண்டும், காக்கிச் சீருடை போட வேண்டும்” என்று சொல்லி, கெடுவும் விதித்து விட்டார். அவர் சொன்னதற்கு மாற்றுக் கருத்து இருந்தாலும், அதை ஆங்கிலத்தில் அவரிடம் வாதாடி முன் வைக்கத் தெரியாது. முட்டி, மோதி அடித்துப் பிடித்து எல்லோரும் ஷூ வாங்கி போட்டுக் கொண்டோம். மெக்கானிக்கல் ஆய்வக வகுப்புக்கு அணிவகுத்துப் போகும் போது, உள்ளே வந்த அவர், எல்லோரது கால்களிலும் ஷூவைப் பார்த்து, “எல்லாரும் ஷூ போட பழகிட்டீங்க, ரொம்ப சந்தோஷம்” என்று முகத்தில் அபூர்வமான குறுநகையோடு சொல்லி விட்டுப் போனார். “இந்த ஆளுக்குள்ள இப்படி ஒரு அக்கறை இருந்திருக்கிறது” என்று அப்போதான் உறைத்தது.

கடைசியாக, டாக்டர் சீனிவாசனைப் பற்றி சொல்லாமல் சிற்பிகளின் பட்டியல் முடிவுக்கு வராது. தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொள்ளும் போதே “டாக்டர் சீனிவாசன்” என்றுதான் சொல்லிக் கொள்வார். பவர் ஸ்டார் நினைவுக்கு வந்தால் அதில் பெரிய அளவு தவறும் இல்லைதான். ஆனால், அவர் ஏற்படுத்திய தாக்கம் இணையற்றது.

முதல் நாள் மாணவர் சேர்க்கை அன்றே, முன்னணியில் அவர்தான் நின்றார். கணீர் குரலில், திருத்தமான ஆங்கிலத்தில், பல்வேறு ஊர்களில் இருந்து, பல்வேறு கிராமங்களிலிருந்து வந்திருக்கும் மாணவர்களை கை பிடித்து வழி நடத்துவது தன் கடமை என்ற தொனியில் நீளமாக பேசினார். எப்படி ஹாஸ்டலில் சேர வேண்டும், எப்படி சுத்தமான தண்ணீரை குடிக்க வேண்டும், மெட்ராசில் வெளியில் சாப்பிடப் போனால் சரவண பவனைத் தவிர எங்கும் சாப்பிடக் கூடாது என்று ஒவ்வொன்றையும் ஏழெட்டு முறை சொல்லி மறக்க முடியாமல் பதிய வைத்தார்.

கூடவே, “ஒவ்வொரு மாணவனும் என்.எஸ்.எஸ், என்.சி.சி, அல்லது என்.எஸ்.ஓ-வில் சேர வேண்டும். நான்தான் என்.எஸ்.எஸ் பொறுப்பாளர். ஆனா, எல்லாத்தையும் சேர்த்துக் கொள்ள மாட்டேன். அளவான இடங்கள்தான் இருக்கின்றன. வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள்” என்று அப்போதே விளம்பரத்தை ஆரம்பித்து விடுவார்.

அன்று ஆரம்பித்த அவரது அறிவுரை மழை, என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளராக 2 ஆண்டுகள், வேதியியல் பேராசிரியராக 2 செமஸ்டர்கள் தொடர்ந்தது. “நீங்க எல்லாரும் சம்பாதிக்கிறதுல 5 சதவீதம் தரும காரியங்களுக்கு கொடுக்க வேண்டும். ரத்த தானம் செய்ய வேண்டும், வாய்ப்புகள் மறுக்கப்பட்டர்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று வகுப்புகளில் பெரும்பாலான நேரத்தில் இப்படிப்பட்ட அறிவுரைகளாக பொழிவார். அரை மணி நேர, முக்கால் மணி நேர அறுவையில் உருகிப் போன ஒருவன், “சார் நான் 5 சதவீதம் இல்ல, 10 சதவீதம் கொடுப்பேன்” என்று உணர்ச்சி வசப்பட்டு சொல்ல, “யோவ், ஒன் மொகத்த பார்த்தாலே தெரியுது. நீ எச்சிக் கையால காக்கா கூட ஓட்ட மாட்டேன்னு” என்று கலாய்ப்பார்.

“தண்ணியை காய்ச்சி, வடிகட்டித்தான் குடிக்கணும், ஹோட்டல்ல போனா சூடான உணவை மட்டும்தான் சாப்பிடணும். சர்வர் சுமாரா இருக்கு சார்னு சொன்னா அது ஆறிப் போயிருக்குன்னு அர்த்தம்” என்று அவர் சொந்தமாக அனுபவித்து கண்டு பிடித்த பல வாழ்க்கை தத்துவங்களை கடித்து துப்பிக் கொண்டு இருப்பார்.

“மிஸ்டர், நான் இப்படில்லாம் பேசுறேன்னு இளக்காரமா நெனைக்கிறியா, அப்படித்தான் நினைக்கிறேன்னு எனக்குத் தெரியும். ஆனால, நான் பேசுறதுல ஒருத்தனுக்காவது மனம் மாறிட்டா அதுதான் எனக்கு வெற்றி” என்று ஏதோ கிருத்துவ போதகரை மேற்கோள் காட்டி வெறுப்பேத்துவார்.

அவரது புராணங்களை எழுதிக் கொண்டு போனால், இன்னும் பல பக்கங்களை நிரப்பலாம். ஆனால், அவர் ஒரு தவிர்க்க முடியாத, இந்த அறுவையிடமிருந்து எப்படிடா தப்பித்து ஓடுவது என்ற உணர்ச்சியைத் தூண்டி இம்சையாக இருந்தாலும் தன் பதிவுகளை ஆழமாக விட்டுச் சென்றார் என்பது மட்டும் உண்மை.

–    குமரன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க