privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்திருச்சியில் மாணவியர் விடுதி மூடல் : பு.மா.இ.மு மறியல் - கைது !

திருச்சியில் மாணவியர் விடுதி மூடல் : பு.மா.இ.மு மறியல் – கைது !

-

திருச்சி- மேலப்புதூர் : புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் விடுதி இழுத்து மூடல்! பெற்றோர்கள், ஆசிரியர்கள், பு.மா.இ.மு தலைமையில் சாலை மறியல் – கைது!

திருச்சி மாவட்டம் – மேலபுதூர் அருகே புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் மாவட்டம் முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

இதில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவிகளுக்கும், ஆதரவற்ற மாணவிகளுக்கும் பள்ளி நிர்வாகம் தனியாக பள்ளி வளாகத்திற்குள்ளே விடுதி ஒன்றை நடத்தி வருகிறது. இதில் 536 மாணவிகள் தற்பொழுது தங்கி படித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பள்ளி விடுதியில் குளியலறை வசதியும், குடிநீர் வசதியும் இல்லாமல் விடுதி இயங்கி வருகிறது எனவும், அதனை முறையாக பராமரிக்காததால் விடுதி காப்பாளரை பணிநீக்கம் செய்தும், புதிய காப்பாளரை நியமித்தும் மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் புதிய காப்பாளர் வரும் வரை பள்ளி விடுதிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளித்து மாணவிகள் சொந்த ஊருக்கு சென்று வர அனுமதிக்கப்பட்டனர்.

ஊருக்கு சென்ற மாணவிகள் 3-2-2014 அன்று விடுதிக்கு திரும்பி வந்தனர். அடுத்த இரண்டு நாட்கள் பள்ளியும் விடுதியும் முறையாக இயங்கியது. ஆனால் 5-2-2014 அன்று வந்த அதிகாரிகள் குழு விடுதியை ஆய்வு செய்து ஆய்வின் அடிப்படையில் அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் பள்ளி விடுதியை உடனடியாக மூடி மாணவிகளை விடுதியை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டனர். அதனை அமல்படுத்த வந்த அதிகாரிகள் மாணவிகளை இரவு என்று கூட பார்க்காமல், “வெளியேற வேண்டும், விடுதியை மூடப்பேகிறோம்” என்றனர்.

இதனால் அதிர்ந்த மாணவிகள் செய்வதறியாது திகைத்து அழுதனர். தங்கள் பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் மூலம் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தங்கள் பிள்ளைகளை இரவில் துரத்தும் அவல நிலையை தாங்க முடியாத பெற்றோர்கள் அலறி அடித்துக் கொண்டு அவரவர் ஊர்களிலிருந்து ஓடிவந்தனர். இரவு முழுவதும் பள்ளி நிர்வாகமும், பெற்றோர்களும் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி தங்க வைக்க சம்மதம் வாங்கிய பிறகு பிரச்சனை தீர்ந்தது என மன நிம்மதியோடு ஊர்களுக்கு சென்றனர்.

ஆனால் மறு நாள் காலை 6-2-2014 அன்றுகாலை 2 அரசுபேருந்தை எடுத்து வந்து மாணவிகளை திருச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று இடங்களில் (ஏர்போர்ட் அருகில் உள்ள விடுதி, மணிகண்டம் என்ற இடத்தில் உள்ள விடுதி, சேவாசங்கம் என்ற பள்ளி விடுதி) என தனித்தனியே பிரித்து தங்க வைப்பதாக கூறி பேருந்தில் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு ஏறச்சொல்லி வற்புறுத்தினர். மீண்டும் நிர்வாகத்தினர் மூலம் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் பதற்றத்துடன் ஓடி வந்தனர். வந்தவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் பேருந்து முன்பு அமர்ந்து ஏற மறுத்தனர்.

அதனால் என்ன செய்வது என தெரியாமல் மாணவிகளை பள்ளிக்கு அனுப்பலாம் என்றும் பிறகு எப்படியாவது பெற்றோர்களை சம்மதிக்க வைத்துவிடலாம் என நினைத்து மாணவிகளை அதிகாரிகள் பள்ளிக்கு அனுப்பினர். அதன் பிறகு பள்ளிநிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் பள்ளிக்குள் சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பெற்றோர்களை கலந்தாலோசிக்காமலே அவர்களை வெளியில் நிறுத்திவைத்து இவர்கள் மட்டும் பேசிக் கொண்டிருந்தனர்.

இத்தகவலை அறிந்த பு.மா.இ.மு தோழர்கள் உடனடியாக அங்கு சென்று நிலைமைகளை கேட்டறிந்தனர். அப்போது பெற்றோர்களிடம் “பெற்றோர்கள் இல்லாமலே நிர்வாகத்தினர் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது பெற்றோர்களையும் மாணவிகளையும் ஏமாற்றும் செயல் என்றும், நம் முன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், பாதிப்படைவது நம் பிள்ளைகள், நம் முன் தான் பேசவேண்டும்.” என பு.மா.இ.மு தோழர்கள் பெற்றோர்களுக்கு புரிய வைத்தனர்.

மதியம் 2 மணி அளவில் பேச்சுவார்த்தை முடித்து வெளியில் வந்த நிர்வாகத்தினரிடம் “என்ன முடிவானது” என்று கேட்ட போது,

“மாவட்ட நிர்வாகத்திடம் கேளுங்கள்” என கூறினர்.

அவர்களோ “மாவட்ட ஆட்சியர் உத்தரவு மறுபரிசீலனை என்பதே இல்லை” எனக் கூறினர்.

இதனால் கொதிப்படைந்த பெற்றோர்கள் நிர்வாகத்தினரை முற்றுகையிட்டு, “தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க வேண்டும் என்றால் தங்கள் பிள்ளைகள் படித்தால்தான் முடியும். அதற்கு மாவட்ட நிர்வாகம் தங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பதற்கான சூழலை ஏற்படுத்தி தரவேண்டும்” என்றனர்.

அதற்கு மாவட்ட நிர்வாகம் “பிள்ளைகளின் படிப்பு தரத்தை மேம்படுத்தவும் படிப்பில் அதிக மதிப்பெண் வாங்கவும், அவர்களின் உடல் நலத்தில் அக்கறை கொண்டும் தான் வேறு இடத்தில் தங்க வைப்பது என முடிவு செய்துள்ளோம்” என்றனர்.

அதற்கு பெற்றோர்கள் “பல வருடம் ஒன்றாக படித்துப் பழகிப்போன இடத்தை விட்டு கடைசி இரண்டு மாதத்தில் புதிதாக ஒரு இடத்தில் சென்று தங்கி படிக்கச் சொன்னால் அந்த சூழலோடு பொருந்திப் போக முடியாது” என்றும் “அவர்களை அலைக்கழிக்க வேண்டாம்” என்றும் கோரினர்.

அப்போது பள்ளி நிர்வாகம் சில தவறுகள் செய்வதாகவும் அதை மாற்றவே நடவடிக்கை எடுப்பதாகவும் மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

அப்போது நமது தோழர்கள் “பள்ளி நிர்வாகம் நடத்துவது சரியில்லை என்றால் மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்தட்டும். உண்மையில் மாணவர் நலன் தான் முக்கியம் என்றால் நீங்கள் எடுத்திருக்கும் முடிவு முட்டாள் தனமானது அதை மாற்றி விடுதிக்கான நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்”என்றனர். இதை எதிர்பாக்காத அதிகாரிகள் என்ன பேசுவது எனத் தெரியாமல் விழித்தனர்.

அப்போது அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் “மாதத்திற்கு ஒரு மாணவிக்கு அரசு சார்பாக 33 ரூபாய் தான் ஒதுக்கீடு செய்கின்றனர், அது மட்டுமல்லாமல் ஆண்டிற்கு 5000 ரூபாய் என ஒரு மாணவர்க்கு வாங்குகிறோம். மற்றபடி வேறு எதற்கும் பணம் வாங்குவதில்லை. 33 ரூபாயை கூட மாதா மாதம் தராமல் ஆண்டு இறுதியில் தருகின்றனர். அதில் வங்கி கடனை அடைப்பதற்கே முடிகிறது” என்றனர். “அரசு எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் போதே நாங்கள் விடுதியை ஒழுங்காக நடத்த முடியும்” என்றனர்.

உடனே பெற்றோர்களும்,”அரசு ஏற்று நடத்த வேண்டும்” என்றனர். “வெளியே செல்ல எங்கள் குழந்தைகளை அனுமதிக்க மாட்டோம்” எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே பெற்றோர்களின் பேச்சை மதிக்காமல் விடுதியை அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதைக் கண்டு பெற்றோர்களும், தோழர்களும் ஆத்திரம் அடைந்தனர். உடனே பெற்றோர்களை அழைத்து “நம் பேச்சை மதிக்காமல் கதவை இழுத்து மூடுகிறது. நாம் நியாயப்படி நம் நிலையை எடுத்துக் கூறி எந்தப் பயனும் இல்லை. போராடினால் தான் உரிமையை பெற முடியும்.” என கூறினர்.

பெற்றோர்கள் உடனே பள்ளியின் கதவை இழுத்து மூடி அதிகாரிகளை வெளியில் விடாமலும் பள்ளிக்கு வெளியே உள்ள சாலையை மறித்தும் பு.மா.இ.மு தலைமையில் போராட்டத்தில் இறங்கினர்.

அங்கு வந்த கண்டோன்மென்ட் காவல் துறையினர் “என்ன பிரச்சனை என்றாலும் எங்களுக்கு முன்னர் நீங்கதான் நிக்கிறீங்க, இந்த பிரச்சனையை தூண்டி விடுவதும் நீங்கள்தான்” என்றனர்.

அதற்கு தோழர்கள், “மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்களுக்கு பாதிப்பு என்றால் நாங்கள் தான் வருவோம்” என்றனர்.

கூட்டத்தை கலைக்கும் நோக்கத்துடனேயே இறுதிவரை போலீசார் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். எவ்வளவோ பேசியும், மிரட்டியும் பார்த்தனர். ஆனால் தங்கள் பிள்ளைக்கு தரமான பாதுகாப்பான விடுதியை பள்ளிக்குள்ளேயே நடத்த வேண்டும் என்றும், அதில் ஏதாவது சிக்கல் இருந்தால் அதனை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்ற பிடிப்பில் பெற்றோர்களும் தோழர்களும் உறுதியாக நின்றனர்.

அடுத்த கட்டமாக மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் காவல் துறை சாலை மறியல் போராட்டம் நடத்திய தோழர்களையும்,  முன்னணியில் நின்ற சில பெற்றோர்களையும், பள்ளி ஆசிரியர்களையும் கைது செய்தனர்.

மாவட்ட நிர்வாகத்தின் முட்டாள்தனமாக முடிவை எதிர்த்து பு.மா.இ.மு. நடத்திய இப்போராட்டமும், பெற்றோர்களின் உறுதியும் அன்றைய செய்திதாளில் பரபரப்பாக வெளியானது. இதனால் வேறு வழியில்லாமல் அதே விடுதியுடன் கூடுதலாக பள்ளிக்குள் இருந்த மற்றொரு விடுதியிலும் தங்கி படிக்க மாவட்ட நிர்வாகமும் இறங்கி வந்து ஒப்புக் கொள்ள நேரிட்டது.

அதன்படி பத்தாவது, பதினொறாவது, பன்னிரெண்டாவது மாணவிகள் பழைய விடுதியிலும், நான்காம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் மற்றொரு பள்ளிகளுக்குள் இருக்கும் விடுதியிலும் தங்க வைக்கப்பட்டனர். இதனால் பெற்றோர்களும், மாணவிகளும் ஆறுதலடைந்தனர். மறியலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட தோழர்களும், ஆசிரியர்களும் அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்டதும் பள்ளிக்கு சென்ற தோழர்களை உற்சாகமாக பெற்றோர்கள் திரளாக நின்று வரவேற்றனர். பெற்றோர்கள் நன்றியோடு கை கூப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர். அதிகாரம் கையிலிருக்கும் தைரியத்தில், தடாலடியாக செயல்படுவதாக நினைத்துக் கொண்டு முட்டாள்தனமாக முடிவு எடுத்த மாவட்ட ஆட்சியரின் தலையில் குட்டு வைக்கும் விதமாக பு.மா.இ.மு. நடத்திய இப்போராட்டம் அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
புரட்சிகரமாணவர் – இளைஞர் முன்னணி,
திருச்சி.
9943176246

பு.மா.இ.மு. – வின் சுவரொட்டி முழக்கம்

திருச்சி- மேலப்புதூர் : புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் விடுதி இழுத்து மூடல்! பெற்றோர்கள், ஆசிரியர்கள், பு.மா.இ.மு தலைமையில் சாலைமறியல் – கைது!

மாவட்ட நிர்வாகமே !

  • விடுதி மூடலுக்கு சுகாதார சீர்கேடு தான் காரணம் என்றால் விடுதியை அரசே ஏற்று நடத்த தயக்கம் ஏன்?
  • பள்ளிக்கு அருகமையில் விடுதி இருப்பதே சரியானது ! திசைக்கு ஒன்றாய் 4 விடுதிகளில் 500 க்கும் மேற்பட்ட மாணவிகளை அடைத்து வைக்கும் முட்டாள்தனமான முடிவை உடனே கைவிடு!
  • சுகாதாரம்,  சுகாதாரம் என்று கூச்சல் போடும் மாவட்ட ஆட்சியரே, அரசு எந்திரத்தை ஏவிவிட்டு அதிகாரத்திமிரை மக்களிடம் காட்டாதே!