privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்பூஷண் ஸ்டீல் : முதலாளித்துவ பயங்கரவாதத்தின் கோரம் !

பூஷண் ஸ்டீல் : முதலாளித்துவ பயங்கரவாதத்தின் கோரம் !

-

டந்த நவம்பர் 13-ம் தேதியன்று ஒரிசாவின் தேங்கனால் மாவட்டத்தின் மேராமுண்டுலி பகுதியில் உள்ள பூஷண் எஃகு ஆலையின் கொதிகலன் வெடித்ததில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் கதி என்னவாயிற்று என்றே யாருக்கும் தெரியவில்லை. அவர்கள் அத்தனை பேரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆனால், 3 தொழிலாளர்கள்தான் மரணமடைந்துள்ளனர் என்றும், 38 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும், 168 தொழிலாளர்களைக் ‘காணவில்லை’ என்றும் அலட்சியமாக அறிவித்துள்ளது, அம்மாநிலத் தொழிலாளர் துறை. காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள இத்தொழிலாளர்கள் இந்த விபத்தில் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் எங்கேயாவது வீசியெறியப்பட்டு, அடையாளம் தெரியாத பிணங்களாக புதர்களில் நாளை கண்டறியப்படலாம் என்றே பலரும் அஞ்சுகின்றனர்.

10-bhushan-steelவிபத்து நடந்த போது எத்தனை தொழிலாளர்கள் அங்கு பணியில் இருந்தனர் என்ற எந்த விவரமும் அந்த ஆலையின் பதிவேட்டிலோ, தொழிலாளர் துறையிடமோ இல்லை. 35 ஒப்பந்ததாரர்களின் பொறுப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் இந்த ஆலையில், விபத்து நடந்தபோது 974 பேர் அங்கு பணியாற்றியுள்ளனர் என்று ஒப்பந்ததாரர்கள் கூறும் தகவலை வைத்துத்தான் இந்தக் கணக்குகூட தரப்படுகிறது. இவ்வளவு பெரிய கொடூரம் நடந்துள்ள போதிலும், நீதித்துறையோ, ஊடகங்களோ, ஓட்டுக் கட்சிகளோ இம்முதலாளித்துவப் பயங்கரவாதத்தைக் கண்டும் காணாமல் உணர்ச்சியற்றுக் கிடக்கின்றன.

இந்த ஆலையில் அற்பக் கூலிக்கு 12 மணி நேரத்துக்கும் மேலாகக் கசக்கிப் பிழியப்படும் தொழிலாளர்களுக்குச் சட்டப்படியான குறைந்தபட்சக் கூலியோ, சேமநல நிதியோ, தொழிலாளர் மருத்துவ ஈட்டுறுதியோ, போனசோ எதுவுமே கிடையாது. மேலை நாடுகளிலிருந்து கழித்துக் கட்ட எந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி இந்த ஆலையில் இயக்கப்படுவதால், அடிக்கடி விபத்துகள் நேருகின்றன. அரசின் அதிகாரபூர்வக் கூற்றுப்படியே, 2006-ம் ஆண்டில் இந்த ஆலை நிறுவப்பட்டதிலிருந்து கடந்த 7 ஆண்டுகளில் வெவ்வேறு விபத்துகளில் 119 தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சுற்றுச்சூழல்துறை, வனத்துறையிடம் முறைப்படி ஒப்புதல் பெறாமல் ஆலை இயக்கப்படுவதையொட்டி கடந்த 7 ஆண்டுகளில் இந்த ஆலை நிர்வாகத்தின் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், இப்பயங்கரவாத முதலாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆலை நிர்வாகத்தின் அறிவிக்கப்படாத தனியார் குண்டர் படையாகவே உள்ளூர் போலீசு இயங்குகிறது. இவையனைத்தும் மைய அரசு, மாநில அரசு, ஆலை முதலாளிகளின் கிரிமினல் கூட்டணியை நிரூபித்துக் காட்டுகின்றன. ஒரிசா மாநில மக்களிடமிருந்து அவர்களது காடுகளையும் நிலங்களையும் பறித்துக் கொண்டு அவர்களுக்கு வேலை வாப்பு அளிப்பதாக கூறும் தனியார்மய – தாராளமயத்தின் கோரமுகத்தை பூஷண் எஃகு ஆலை மட்டுமின்றி, நாடெங்கும் தொடரும் முதலாளித்துவப் பயங்கரவாதமே நிரூபித்துக் காட்டுகிறது.
___________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2014
___________________________________