privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்மோடியின் குற்றங்கள் : காங்கிரசின் கையிலும் இரத்தக் கறைகள் !

மோடியின் குற்றங்கள் : காங்கிரசின் கையிலும் இரத்தக் கறைகள் !

-

ர்வாதிகாரிகளும் பாசிஸ்டுகளும் பல்வேறுவிதமான தில்லுமுல்லுகள், அடக்குமுறைகள் மூலம் தொடர்ச்சியாக தேர்தல்களில் வென்று, நீண்ட காலத்திற்கு பதவியில் பசை போல ஒட்டிக் கொண்டிருப்பதற்கு உலக வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன.  நரேந்திர தாமோதரதாஸ் மோடி 2002-க்குப் பிறகு குஜராத்தில் நடந்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும், 16-வது நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தல்களிலும் வென்றிருப்பதை அப்படிப்பட்ட சர்வாதிகாரிகளின் வெற்றியோடு மட்டுமே ஒப்பிட முடியும்.

அக்ஷர்தாம் அப்பாவி முசுலீம்கள்
அக்ஷர்தாம் கோவில் தாக்குதல் வழக்கில் மோடி அரசால் மோசடியான முறையில் சிக்க வைக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ள அப்பாவி முசுலீம்கள்.

கார்ப்பரேட் முதலாளிகளையும் ஊடகங்களையும் பக்கபலமாக வைத்துக்கொண்டு, ஆதிக்க சாதி மற்றும் இந்து மதவெறியைத் தூண்டிவிட்டு, சிறுபான்மை முசுலீம்களை நிரந்தர அச்சத்தில் வைத்துதான் அவர் தனது வெற்றியைச் சாதித்து வந்திருக்கிறார்.  குறிப்பாக, குஜராத்தில் போலீசு-உளவுத் துறை மூலம் அரசு பயங்கரவாத, இந்து மதவெறி பாசிச ஆட்சியை நிறுவியதன் மூலம்தான் அவர் தொடர்ந்து நான்கு முறை முதல்வராகப் பதவியில் அமர முடிந்தது.  இந்த சமூக விரோத கிரிமினல்தனத்தைத் தாண்டி அவரது தேர்தல் வெற்றிகளுக்கு வேறெந்த அடிப்படையும் கிடையாது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த மே 16 அன்று உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் ஒரு தீர்ப்பு நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

குஜராத்தில் அமைந்துள்ள அக்ஷர்தாம் கோவில் மீது செப் 2002-ல் நடைபெற்ற தாக்குதல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த ஆறு முசுலீம்களையும் அப்பாவிகள் எனக் குறிப்பிட்டு விடுதலை செய்த அத்தீர்ப்பு, மோடியின் ஆட்சி சிறுபான்மை முசுலீம்களுக்கு எதிரானது மட்டுமல்ல, அடிப்படையிலேயே கேடுகெட்ட ஒரு கிரிமினல் கும்பலின் ஆட்சி என்பதையும் எடுத்துக் காட்டியது.  இந்தியாவின் 15-வது பிரதமராகப் பதவியேற்றுள்ள நபரின் அச்சமூட்டக்கூடிய, அதேசமயம் அருவெறுக்கத்தக்கதுமான கிரிமினல்தனத்தை எடுத்துக்காட்டிய இத்தீர்ப்பு பொதுவெளியில் விரிவாக விவாதிக்கப்படாமல், காங்கிரசு உள்ளிட்ட எதிர்த்தரப்பாலும் ஒதுக்கப்பட்டு ஒரு சாதாரண செய்தி போல கடந்து போனதுதான் இந்து மதவெறிக் கும்பலின் தேர்தல் வெற்றியை விட அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்றாகும்.

லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த தீவிரவாதிகள் எனக் கூறப்பட்ட இரண்டு பேர் ஏ.கே 56 ரக துப்பாக்கியைக் கொண்டும் கையெறி குண்டுகளை வீசியும் நடத்திய அத்தாக்குதலில் குஜராத் கமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த இருவர், தேசிய பாதுகாப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த ஒரு சிப்பாய், குஜராத் ஆயுதப் படையைச் சேர்ந்த ஒரு காவலர் மற்றும் 28 பக்தர்கள் உள்ளிட்டு 32 பேர் கொல்லப்பட்டனர்.  இத்தாக்குதலை நடத்திய இருவரும் தேசிய பாதுகாப்பு படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜந்தர் மந்தர் ஆர்ப்பாட்டம்
உச்ச நீதிமன்றத்தால் அக்ஷர்தாம் கோவில் தாக்குதல் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஆறு முசுலீம்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்கக் கோரி டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் ஜந்தர் மந்தரில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

“குஜராத்தில் நடந்த கலவரத்திற்குப் பழி தீர்க்கும் நோக்கத்தோடு இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக”க் கூறிய மோடி அரசு, குஜராத் மற்றும் உ.பி.யைச் சேர்ந்த ஆறு முசுலீம்களைக் கைது செய்து, அவர்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.  இந்த ஆறு பேரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் மற்றும் ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனக் குற்றஞ்சுமத்தியதோடு, இத்தாக்குதலைச் சர்வதேச முசுலீம் பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாகக் காட்டும் நோக்கத்தில், இத்தாக்குதலோடு தொடர்புடைய 28 குற்றவாளிகள் பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளில் தலைமறைவாக இருப்பதாகவும் பீதி கிளப்பி விட்டது.

பொடா நீதிமன்றம் இந்த ஆறு பேரில் ஆதாம் அஜ்மீரி, சாந்த் கான், முஃப்தி அப்துல் மன்சூரி ஆகிய மூன்று பேருக்குத் தூக்கு தண்டனையும்; முகம்மது சலீம் ஷேக்குக்கு ஆயுள் தண்டனையும்; அப்துல் மியான் காத்ரிக்கு 10 ஆண்டும், அல்தாப் ஹுசைனுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தது.  இத்தீர்ப்பை குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.  இதற்கு எதிராக அல்தாப் ஹுசைனைத் தவிர மீதி ஐந்து பேரும் தொடுத்த வழக்கில் மூன்று பேரின் தூக்குத் தண்டனை, முகம்மது சலீமுக்கு அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனை, அப்துல் மியானுக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனை ஆகியவற்றை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்த உச்ச நீதிமன்றம், ஐந்தாண்டு சிறை தண்டனையைக் கழித்து விடுதலையாகிச் சென்றுவிட்ட அல்தாப் ஹுசைனின் மீதான குற்றச்சாட்டையும் தானே முன்வந்து ரத்து செய்து தீர்ப்பளித்திருக்கிறது.  “இந்த ஆறு பேருக்கும் அளிக்கப்பட்ட தண்டனை அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரானது” எனக் குறிப்பிட்டு உச்ச நீதிமன்றம் இவர்களை விடுதலை செய்திருப்பது ஒருபுறமிருக்க, இந்த வழக்கை நடத்திய மோடி அரசின் மீது நீதிபதிகள் வைத்துள்ள விமர்சனங்கள் பாரதூரமாகக் கவனிக்கத்தக்கவை.

“அரசு தரப்பின் சாட்சியங்களும் வாதங்களும் முக்கியமான ஒவ்வொரு தருணத்திலும் சிதறிச் சின்னாபின்னமாகிப் போயிற்று.  வழக்கின் விசாரணை கட்டத்தில் தொடங்கி குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பொடா சட்டத்தின் கீழ் விசாரிக்க மாநில அரசு அனுமதி அளித்தது, அதன் அடிப்படையில் பொடா நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைத் தண்டித்தது, அத்தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது வரையிலும் வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் உண்மை குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கிறது” என இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், வீ.கோபால கௌடா ஆகிய இருவரும் ஒருமனதாகத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

அக்ஷர்தாம் கோவில் மீதான தாக்குதல் செப். 25, 2002 அன்று நடந்தது.  இத்தாக்குதல் பாகிஸ்தானைச் சேர்ந்த முசுலீம் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத சதிச் செயல் எனக் கூறப்பட்டாலும், தாக்குதல் நடந்து கிட்டத்தட்ட ஓராண்டு வரையிலும் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை; ஒருவரும் கைது செய்யப்படவுமில்லை.

குஜராத் கொலைகள்
காங்கிரசின் துணையோடு மோடி அரசால் நடத்தப்பட்ட போலி மோதல்களில் படுகொலை செய்யப்பட்ட (இடமிருந்து) இஷ்ரத் ஜஹான், சாதிக் ஜமால், சோராபுதின், துளசிராம் பிரஜாபதி மற்றும் மர்மமான முறையில் கொல்லப்பட்ட கவுசர் பீ. (கோப்புப் படங்கள்).

இப்படிப்பட்ட நிலையில், குறிப்பாக அக்ஷர்தாம் தாக்குதலின் ஓராண்டு நினைவுநாள் நெருங்கும் நிலையில் இந்த வழக்கு ஆகஸ்டு 28, 2003 அன்று குஜராத் குற்றப்பிரிவுக்குத் திடீரென மாற்றப்பட்டது.  மறுநாளே இத்தாக்குதலில் தொடர்புடைய குஜராத்தைச் சேர்ந்த ஐந்து முசுலீம்கள் கைது செயப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.  உ.பி.யைச் சேர்ந்தவரும் காஷ்மீரில் மெக்கானிக் ஷாப் நடத்திவருபவருமான சாந்த் கான் ஆகஸ்டு 31, 2003 அன்று காஷ்மீரில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து இத்தாக்குதல் வழக்கு பொடா சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.  இச்சூழ்நிலைகள், கணக்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே ஆறு முசுலீம்கள் தாக்குதல் வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருப்பதையும், அவர்களைத் தண்டித்து விட வேண்டும் என்ற தீய நோக்கத்துடனேயே பொடா சட்டத்தின் கீழ் இவ்வழக்கு கொண்டுவரப்பட்டிருப்பதையும் எடுத்துக் காட்டுகின்றன.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து விடுதலை செயப்பட்ட முகம்மது சலீம், “அக்ஷர்தாம் கோவில் தாக்குதல், ஹரேன் பாண்டியா கொலை, கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு – இந்த மூன்றில் ஏதாவது ஒரு குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு போலீசார் தன்னைச் சித்திரவதை செய்ததாக”ப் பத்திரிகையாளர்களுடன் நடந்த சந்திப்பில் குறிப்பிட்டு, இதுநாள் வரை மறைக்கப்பட்டிருந்த வழக்கு விசாரணையின் மோசடித்தனத்தை அம்பலப்படுத்தினார். “ஏற்கெனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த ஒரு கடிதத்தைத் தன்னிடம் காட்டி, அது போலவே உருது மொழியில் கடிதமொன்றை எழுதும்படித் தன்னை போலீசார் மூன்று நாட்கள் தொடர்ந்து சித்திரவதை செய்ததாக”க் கூறுகிறார், முஃப்தி அப்துல் மன்சூரி.

சித்திரவதை செய்யப்பட்டுத்தான் ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருப்பதை தீர்ப்பிலும் சுட்டிக்காட்டியுள்ள நீதிபதிகள், இந்த வாக்குமூலங்களையும், குற்றவாளிகளுள் ஒருவர் போலீசு தரப்பு சாட்சியமாக மாறியதையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்து விட்டனர்.  மேலும், “இத்தாக்குதல் குறித்த உண்மைகளைத் தனிப்பட்ட ரீதியில் ஆராய்ந்தும் விசாரணை அதிகாரியோடு கலந்து ஆலோசித்த பிறகும்தான் குஜராத் உள்துறை அமைச்சர்  பொடா சட்டத்தின் கீழ் இவ்வழக்கை விசாரிக்க ஒப்புதல் அளித்தார் என்பதை அரசு தரப்பு நிரூபிக்கவில்லை; உள்துறை அமைச்சர் தனது அறிவைச் செலுத்தி பொடாவின் கீழ் வழக்கை விசாரிக்க ஒப்புதல் அளித்ததாகத் தெரியவில்லை.  இதன் காரணமாகவும், சட்டவிதிகளின் படியும் இந்த வழக்கு பொடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டிருப்பது செல்லத்தக்கதல்ல.  விசாரணை அதிகாரியும், பொடா நீதிமன்றமும் பொடா சட்டவிதிமுறைகளின்படி குற்றவாளிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறவில்லை.  எனவே, பொடா சட்டவிதிகளின் படியே இந்த வாக்குமூலங்கள் செல்லத்தக்கதல்ல” எனத் தீர்ப்பளித்திருக்கும் நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான அரசு தரப்பு சாட்சியங்கள் அனைத்தையும் நிராகரித்து விட்டனர்.

அகமதாபாத் ஆர்ப்பாட்டம்
குஜராத்தில் அடுத்தடுத்து பல போலிமோதல் படுகொலைகளை நடத்திய மோடி அரசை நீக்கக் கோரியும், அப்படுகொலைகள் அனைத்தையும் சி.பி.ஐ விசாரக்கக் கோரியும் ஜன் சங்கர்ஷ் மஞ்ச் என்ற அமைப்பினர் அகமதாபாத் நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்).

“இந்த வழக்கு குறித்து பொடா நீதிமன்றமும் குஜராத் உயர் நீதிமன்றமும் வந்தடைந்துள்ள ஒத்த முடிவுகள் உண்மைக்குப் புறம்பானதாகவும் சட்டப்படி தவறானதாகவும் உள்ளன” என்றும்,  “மிகுந்த கவனத்தோடும் திட்டமிட்ட வகையிலும் உருவாக்கப்பட்டுள்ள அரசு தரப்பின் கதையாடல் அவநம்பிக்கையும் சந்தேகமும் கொள்ளத்தக்கது” என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  இந்த வார்த்தைகளுக்கு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது பொய்யாக, மோசடியாக வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது என்பது தவிர வேறு பொருள் கொள்ள முடியாது.

2003-ம் ஆண்டில் குஜராத்தின் உள்துறை அமைச்சகத்தைத் தனது பொறுப்பில் வைத்திருந்த மோடிதான் இந்த வழக்கை பொடா சட்டத்தின் கீழ் விசாரிக்க ஒப்புதல் அளித்தார்.  உள்துறை அமைச்சர் தனது அறிவைச் செலுத்தி இந்த ஒப்புதலை வழங்கவில்லை எனத் தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதற்கு, மோடி ஒருதலைப்பட்சமாகவும் தீய உள்நோக்கத்துடனும்தான் அப்பாவி முசுலீம்கள் மீது பொடா சட்டத்தை ஏவி விட்டிருக்கிறார் என்பது தவிர வேறெந்த விளக்கத்தை அளிக்க முடியும்?

குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போலீசு தரப்பு சாட்சியங்கள் அனைத்தையும் நிராகரித்த நீதிபதிகள், சுயேச்சையான சாட்சியங்கள் யாரும் நிறுத்தப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர்.  குறிப்பாக, தாக்குதலின்பொழுது சுட்டுக் கொல்லப்பட்ட ‘தீவிரவாதிகளிடமிருந்து’ கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் உருது மொழியில் எழுதப்பட்ட கடிதத்தைக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான முக்கிய தடயமாகக் காட்டியது, குஜராத் போலீசு.  இக்கடிதம் முரண்பாடுகளின் மூட்டையாக இருப்பதைச் சுட்டிக்காட்டியதோடு, இதனை நம்பத்தகுந்த சாட்சியமாக ஏற்றுக்கொள்ளவும் நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

அப்பாவி முசுலீம்களைப் பிடித்து வந்து, அவர்களைச் சித்திரவதை செய்து ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெற்று, அவர்களுக்கு எதிராகப் பொய் சாட்சியங்களைத் தயாரித்து, இந்த மோசடிகள், அத்துமீறல்கள் அனைத்தும் அம்பலமாகிவிடக் கூடாது என்பதற்காகவே பாசிச கருப்புச் சட்டமான பொடாவின் கீழ் வழக்கைப் பதிவு செய்திருக்கிறது மோடி அரசு என்பதை இந்தத் தீர்ப்பு அம்பலப்படுத்தி விட்டது.  நாடெங்கும் கவனத்தை ஈர்த்த இந்த வழக்கிலேயே மோடி அரசு இத்துணை தூரம் மோசடியாக நடந்து கொண்டிருக்குமானால், குஜராத்தில் முசுலீம் தீவிரவாதிகள் நடத்தியதாகக் கூறப்படும் மற்ற ‘பயங்கரவாத’ வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டுள்ள முசுலீம்களின் கதி என்னவாக இருக்கக் கூடும்?  குற்றம் எதுவும் செய்யாமலேயே தண்டனை அனுபவித்துவரும் முசுலீம்களின், அவர்களது குடும்பத்தாரின் மனோநிலை எப்படியெல்லாம் குமுறிக் கொண்டிருக்கும்?

இந்த ஆறு பேரையும் விடுதலை செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகூட அரைகுறையானதுதான்; புண்ணுக்குப் புனுகு தடவுவது போன்றதுதான்.  குற்றம் எதுவும் செய்யாமலேயே சிறைத்தண்டனை அனுபவித்திருக்கும் இவர்களின் மறுவாழ்வு குறித்துப் பேசாத, இவர்களை இந்தக் கதிக்கு ஆளாக்கிய மோடி கும்பலை, போலீசு அதிகாரிகளை, நீதிபதிகளைத் தண்டிப்பது குறித்துப் பேசாத தீர்ப்பை வேறெப்படிக் கருத முடியும்?  அதனால்தான் தூக்குதண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் முஃப்தி அப்துல் மன்சூரி, ”இந்த விடுதலை வெறுமையானது; கடந்த 11 ஆண்டு கால ஒவ்வொரு நொடியிலும் நீதி கொன்று புதைக்கப்பட்டுவிட்டது” என விரக்தி மேலிடக்  கூறுகிறார்.

05-captionஇது அவரின் மனநிலை மட்டுமல்ல; ஹரேன் பாண்டியா கொலை வழக்கில், மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில், ஹைதராபாத் குண்டு வெடிப்பு வழக்கில், இவை போன்று இன்னும் பல்வேறு வழக்குகளில் பொய்யாகச் சிக்க வைக்கப்பட்டு, பல ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையடைந்திருக்கும் ஒவ்வொரு முசுலீமின் மனநிலையும் இப்படித்தான் விரக்தியடைந்திருக்கும்; அல்லது பழிவாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும்.

முசுலீம்கள் மீது இழைக்கப்படும் இந்த அநீதிகளுக்குக் காரணமான இந்து மதவெறி பாசிச கும்பலைத் தண்டிக்கத் துணியாமல், அதன் கையில் அரசு அதிகாரத்தை ஒப்படைத்துள்ள சமூகத்திற்கு; சட்டவிரோதமான முறையில் தண்டிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதியும் மறுவாழ்வும் பெற்றுத் தரும் பொறுப்பைச் சுமக்கத் தயாராக இல்லாத சமூகத்திற்கு, முசுலீம் தீவிரவாதம் குறித்துக் குற்றஞ்சொல்வதற்கு எந்தவிதமான தார்மீக அடிப்படையும் கிடையாது.

***

க்ஷர்தாம் தாக்குதலில் ஈடுபட்ட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்; அவர்கள் யார் என்பது இன்று வரை சட்டப்படி நிரூபிக்கப்படவில்லை.  குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு முசுலீம்களும் தீவிரவாதிகள் கிடையாது, அப்பாவிகள் என்ற உண்மை நிரூபிக்கப்பட்டு, விடுதலையடைந்து விட்டனர்.  அப்படியென்றால், இத்தாக்குதலை நடத்தியது யார்?  இவ்வுண்மையைக் கண்டுபிடிக்க முயலாமல் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரு பொய்வழக்கை மோடி அரசு நடத்திவந்த காரணமென்ன? இந்தத் தாக்குதல், மோடி, தன்னைத் தீவிரவாதத்துக்கு எதிரான வலிமைமிக்க தலைவராகக் காட்டிக்கொள்ள நடத்தப்பட்ட நாடகமாக ஏன் இருக்கக் கூடாது?

கடந்த பத்தாண்டுகளாக மைய ஆட்சியில் இருந்த, சி.பி.ஐ., ஐ.பி., ரா என போலீசையும் உளவுத்துறைகளையும் கையில் வைத்திருந்த காங்கிரசு கட்சியும் இந்தக் கேள்வியை எழுப்பவில்லை என்பதும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த பிறகும் மோடி அரசின் மோசடிகளை, அத்துமீறல்களை அம்பலப்படுத்த அக்கட்சி துணியவில்லை என்பதும் ஒதுக்கித் தள்ளக்கூடிய விசயமல்ல.

முசுலீம்களுக்கு எதிரான மோடியின் இந்து மதவெறி பிடித்த நடவடிக்கைகளை  எதிர்க்கும் பம்மாத்து நடவடிக்கைகளில் கூட காங்கிரசு கட்சி ஈடுபட்டதில்லை.  மாறாக, காங்கிரசு கட்சியும், அதன் தலைமையில் இருந்த மைய அரசும் கடந்த பத்தாண்டுகளாக மோடியின் பயங்கரவாதக் குற்றங்களில் பங்காளியாகச் செயல்பட்டு வந்தது என்பதுதான் உண்மை.

குஜராத் அரசில் வருவாய்த்துறை இணையமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா கடந்த 2003-ஆம் ஆண்டு மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.  இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை மோடி அரசு தானே முன்வந்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது.  இப்படுகொலை தொடர்பாக 12 முசுலீம்களைக் கைது செய்த சி.பி.ஐ., அவர்களைத் தீவிரவாதிகளாகவும் சித்தரித்தது.  இம்முசுலீம்கள் கீழமை நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டாலும், குஜராத் உயர் நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் அனைவரையுமே விடுதலை செய்து விட்டது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பையடுத்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமெனக் கோரி வருகிறார் ஹரேன் பாண்டியாவின் மனைவி.  இக்கோரிக்கையை சி.பி.ஐ. நேரடியாக நிராகரித்து விட்டதென்றால், பா.ஜ.க.வோ விசாரணைக் கமிசனைக் கோரும் நாடகத்தை நடத்தி வருகிறது.  உண்மை வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதில் காங்கிரசும் பா.ஜ.க.வும் பங்காளிகளாக நடந்து வருவதற்கு இதுவொரு சான்று.

இழிபுகழ் பெற்ற இஷ்ரத் ஜஹான் போலி மோதல் படுகொலை வழக்கில் கொல்லப்பட்ட நால்வரையும் குஜராத் போலீசிடம் பிடித்துக் கொடுத்தது, அவர்களைக் கொல்வதற்குச் சதித் திட்டம் தீட்டியது, அதற்கான ஆயுதங்களை குஜராத் போலீசுக்குக் கொடுத்து உதவியது ஆகிய அனைத்திலும் மைய அரசின் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த இணை இயக்குநர் ராஜேந்தர் குமார் உள்ளிட்ட நான்கு அதிகாரிகளுக்குப் பங்கிருப்பது தற்பொழுது நிரூபணமாகியிருக்கிறது.

இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரும் மோடியைக் கொல்லும் நோக்கத்தோடு அகமதாபாத் நோக்கி காரில் வந்துகொண்டிருப்பதாக ஒரு மோசடியான உளவுத் தகவலை உருவாக்கி அளித்ததே மைய அரசின் உளவுத் துறைதான். மேலும், இவ்வழக்கில் இஷ்ரத் ஜஹானோடு சேர்த்துக் கொல்லப்பட்ட பிரானேஷ் பிள்ளை என்ற ஜாவேத் ஷேக், மத்திய உளவுத்துறையின் ஆள்காட்டி என்பதும் தற்பொழுது அம்பலமாகியிருக்கிறது.

இப்போலி மோதல் கொலை வழக்கை விசாரிக்கக் கோரி குஜராத் உயர்நீதி மன்றத்தில் நடந்து வந்த வழக்கில் அவர்கள் நால்வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என மைய அரசின் உள்துறை அமைச்சகம் பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்து, மோடி அரசின் படுகொலைக்கு முட்டுக் கொடுத்தது.  இவற்றின் அடிப்படையில்தான் மோடி கும்பல் இந்தப் பச்சைப் படுகொலையை, நாட்டைக் காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாகக் காட்டி வருகிறது.

இப்படுகொலை நடப்பதற்குச் சற்று முன்னதாகவும், அதற்குப் பின்னரும் குஜராத் அரசின் துணை உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கும், படுகொலையை நடத்திய போலீசு அதிகாரிகளுக்கும் இடையே தொலைபேசி உரையாடல்கள் நடந்துள்ளன.  இது மட்டுமின்றி, இப்படுகொலை குற்றச்சாட்டில் கைது செயப்பட்ட  வன்சாரா, சிங்கால் உள்ளிட்ட பல போலீசு அதிகாரிகளும் மோடி, அமித் ஷா ஆகிய இருவரின் ஒப்புதலோடுதான் அந்நால்வரையும் சுட்டுக் கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.  எனினும், இப்படுகொலை வழக்கில் அமித் ஷாவைக் குற்றஞ்சுமத்த எந்த முகாந்திரமும் இல்லை எனத் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே நீதிமன்றத்தில் தெரிவித்து, அச்சதிகாரனைக் காப்பாற்றியிருக்கிறது, சி.பி.ஐ.

துளசிராம் பிரஜாபதியைக் கடத்திச் சென்று போலி மோதலில் படுகொலை செய்த போலீசு அதிகாரிகளுக்கும் குஜராத் முதல் அமைச்சர் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியாகவும் தீவிரவாதத் தடுப்பு போலீசு படையின் இணையதளப் பிரிவின் பொறுப்பாளராகவும் பணியாற்றி வந்த பாரக் ஷாவிற்கும் இடையே அக்கொலையை நடத்துவதற்குத் திட்டம் தீட்டப்பட்ட காலத்தில் நடந்த தொலைபேசி உரையாடல்கள் தற்பொழுது அம்பலமாகியுள்ளன.  இத்தொலைபேசி உரையாடல்கள் துளசிராம் பிரஜாபதி போலி மோதல் கொலையும் குஜராத் முதல்வராக இருந்த மோடிக்குத் தெரிந்துதான், அவரது ஒப்புதலுடன்தான் நடந்தது என்பதற்கான ஆதாரங்களாகும். எனினும், இவ்வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ., மோடியைக் காப்பாற்றும் நோக்கில் இத்தொலைபேசி உரையாடல்களை ஆதாரமாக எடுத்துக்கொள்ள மறுத்து விட்டது.

குஜராத்தைச் சேர்ந்த சாதிக் ஜமால் என்ற முசுலீம் இளைஞர் கடந்த 2003-ம் ஆண்டு ஜனவரியில் அம்மாநில தீவிரவாதத் தடுப்பு போலீசாரால் போலிமோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இவரை லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதியாகவும், மோடியைக் கொல்வதற்காகவே அவர் குஜராத்திற்கு வந்ததாகவும் கட்டுக்கதையை உருவாக்கியதில் குஜராத் போலீசுக்கு மட்டுமல்ல, மகாராஷ்டிரா காங்கிரசு கூட்டணி அரசிற்கும் மைய அரசின் புலனாய்வுத் துறைக்கும் முக்கிய பங்குண்டு.  மகாராஷ்டிரா போலீசில் என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்டு எனப் பெயர்பெற்ற கிரிமினல் பேர்வழியான தயா நாயக், சாதிக் ஜமாலை குஜராத் போலீசிடம் கள்ளத்தனமாக ஒப்படைத்ததும், அவர் அங்கிருந்து குஜராத்திற்குக் கடத்திவரப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டதும் இப்பொழுது அம்பலமாகியிருக்கும் உண்மைகள்.

மோடி அரசின் பயங்கரவாதக் குற்றங்களுக்கு மட்டுமல்ல, காவி பயங்கரவாதத்தின் இளைய பங்காளியாக நடந்து கொள்வதுதான் காங்கிரசின் பரம்பரை பழக்கம்.  காங்கிரசு ஆட்சி மற்றும் கட்சியின் துணையின்றி பாபர் மசூதி இடிப்பையும் மும்பை கலவரத்தையும் இந்து மதவெறிக் கும்பலால் நடத்தியே இருக்க முடியாது.  மகாராஷ்டிரா காங்கிரசு கூட்டணி அரசு மும்பை கலவரம் குறித்த கிருஷ்ணா கமிசன் அறிக்கையை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது என்றால்,  குஜராத் படுகொலை குற்றத்திலிருந்து மோடியை விடுவித்த ராகவன் அறிக்கையை காங்கிரசு கட்சி கேள்விக்குள்ளாக்கியதே இல்லை. டெல்லி சீக்கியப் படுகொலை, நெல்லி முசுலீம் படுகொலை உள்ளிட்டு பல்வேறு இடங்களில் காங்கிரசே இந்து மதவெறியைத் தூண்டிவிட்டுக் கலவரங்களை நடத்தியிருக்கிறது. மாலேகான், அஜ்மீர், சம்ஜௌதா விரைவு ரயில் உள்ளிட்டு பல்வேறு குண்டு வெடிப்புகளை நடத்தியிருக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலைப் பயங்கரவாதிகளென அம்பலப்படுத்த காங்கிரசு முனையாமல் இருப்பதை இந்தப் பின்னணியிலிருந்துதான் புரிந்துகொள்ள வேண்டும்.

இவை அனைத்திற்கும் மேலாக, முசுலீம் தீவிரவாதம், பாக். தூண்டிவிடும் எல்லைதாண்டிய பயங்கரவாதம் குறித்தும், அதனை ஒடுக்குவது குறித்தும், தேச ஒற்றுமை-ஒருமைப்பாடு குறித்தும் பா.ஜ.க.விற்கும், காங்கிரசு கட்சிக்கும் இடையே எந்த வேறுபாடும் கிடையாது.  ஓட்டுப் பொறுக்குவதற்காக மதச்சார்பின்மை வேடம் போடும் காங்கிரசின் மூளையில் நயவஞ்சகம் நிறைந்த மென்மையான இந்துத்துவா கொள்கைதான் மறைந்திருக்கிறது.  அதனால்தான் நாடெங்கும் இந்து மதவெறி அரசியல் ஆழமாக வேரூன்றி வரும் இவ்வேளையில், அதனை எதிர்க்க வழியின்றி முடமாகிக் கிடக்கிறது, காங்கிரசு கட்சி.

குப்பன்.
____________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2014
____________________________