Thursday, March 20, 2025
முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்பாலியல் வன்முறை: பாஜகவின் பாரதப் பண்பாடு!

பாலியல் வன்முறை: பாஜகவின் பாரதப் பண்பாடு!

-

“நாங்கள் பிஷ்னோய்கள். நாங்கள் நன்மை செய்பவர்களுக்கு நன்மை செய்வோம். தீமை செய்தவர்களை மறக்க மாட்டோம்.  எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் விவசாயம் மட்டும் தான். நாங்கள் ஏன் அமைச்சரைப் பார்த்து அஞ்ச வேண்டும்? அவர் தான் எங்களைக் குறித்து கவலை கொள்ள வேண்டும். ஒருவேளை சட்டம் அவரை தண்டிக்கவில்லை என்றாலும், நாங்கள் அவரை மன்னிக்கப் போவதில்லை”

நிகால் சந்த்ஹரியானாவின் சிர்ஸா மாவட்டத்தைச் சேர்ந்த பிரிஜ்லால் பிஷ்னோய் 86 வயதான ஒரு ஏழை விவசாயி. அரசியலில் சக்தி வாய்ந்த இடத்தில் இருக்கும் பாலியல் வெறி பிடித்த மிருகம் ஒன்று தனது பேத்தியை கிழித்து சீரழித்துப் போட்டதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவரது அரற்றல்களில் ஆத்திரமும் ஆற்றாமையும் பொங்குகிறது.

பிரிஜ்லால் பிஷ்னோயின் பேத்தி 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது 20.12. 2010 அன்று ஓம் பிரகாஷ் என்பவனோடு திருமணம் முடிகிறது. ஓம் பிரகாஷ் ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்தவன், பாரதிய ஜனதா கட்சியின் கீழ்மட்ட பொறுப்பு ஏதோவொன்றில் இருக்கிறான் என்பவை தவிர்த்து பிஷ்னோய் குடும்பத்தாருக்கு அவனைப் பற்றி மேல் விவரங்கள் தெரியாது.

”நாங்கள் கிராமத்தின் வெளியே விவசாய நிலங்களில் அமைக்கப் பட்டிருக்கும் தானிக்களில் (வயலின் நடுவே மரச்சட்டங்களால் தளம் உயர்த்தப்பட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறிய மரக் குடிசை போன்ற அமைப்பு) வாழ்கிறவர்கள். கிராமத்தோடு எங்களுக்கு அவ்வளவாக தொடர்புகள் கிடையாது” என்கிறாள் பிரிஜ்லாலின் பேத்தி.

வெளியுலகம் தெரியாத அப்பாவி ஏழைகள் என்பதோடு, பிரிஜ்லாலின் பேத்திக்கு அடுத்ததாகப் பிறந்த இரண்டு தங்கைகளும் இருந்தனர். படித்து வழக்குரைஞராக வேண்டும் என்கிற தனது கனவைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு கல்யாணத்திற்கு தயாரானாள் அந்தப் பெண்.

”நாங்கள் அவனுக்கு வரதட்சணையாக எங்கள் சக்திக்குட்பட்டு எவ்வளவோ கொடுத்திருந்தோம். என்றாலும், கல்யாணம் முடிந்த உடனேயே அவனது நடவடிக்கைகள் முற்றாக மாறின. மேலும் வரதட்சணை வாங்கி வர துன்புறுத்திக் கொண்டே இருந்தான்”

அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை ஹரியானாவிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளான் ஓம்பிரகாஷ். தனது இளம் மனைவியை எப்போதும் சந்தேகக் கண்ணோட்டத்தோடே கண்காணிப்பில் வைத்திருந்த ஓம்பிரகாஷ், வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம் பூட்டிச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளான்.

ஜெய்ப்பூரில் அவன் அடிக்கடி தனது வீட்டை மாற்றி வந்திருக்கிறான். மனைவிக்கு அவன் வாங்கிக் கொடுத்த உணவுப் பதார்த்தங்களில் ஏதோ மருந்தைக் கலந்து கொடுத்திருக்கிறான்.

“நான் எப்போதும் ஒரு விதமான மயக்க நிலையிலும் ஆழ்ந்த தூக்கத்திலும் தான் இருந்தேன். விழிப்பான சொற்ப நேரங்களில் கூட அரைத் தூக்கத்திலேயே இருந்தேன். நான் மயக்கத்தில் இருந்த சமயத்தில் எனக்கு ஏதோவொன்று நடந்துள்ளதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் கிராமத்தைச் சேர்ந்தவள். நகரம் மிக அந்நியமாக இருந்தது. எனக்கு அங்கே யாரையும் தெரியாது. யாரோடு பேசுவதென்றும் தெரியாது. அங்கே ஒரு சிறைக் கைதி போல் வைக்கப்பட்டிருந்தேன்” என்கிறாள் அந்த இளம்பெண்.

தின்பண்டங்களில் ஏதோ கலந்திருப்பதை உணர்ந்து ஒரு கட்டத்தில் ஓம்பிரகாஷ் கொடுத்த பதார்த்தங்கள் எதையும் சாப்பிட மறுக்கிறாள். கொஞ்சம் சுயநினைவோடு இருந்த சந்தர்பம் ஒன்றின் போது ஓம்பிரகாஷின் சகோதரன் தன்னோடு உறவு கொள்ளும் நிலையில் இருப்பதை அறிந்து அதிர்ந்து போகிறாள். அந்த அயோக்கியத்தனத்திற்க்கு உடன்பட மறுத்துப் போராடியிருக்கிறாள்.

இது ஒன்றும் புதிது கிடையாது, பல நாட்களாக நடந்து கொண்டிருக்கும் சமாச்சாரம் தான், அவளைத் தனது மனைவியாகவே கருதவில்லையென்றும், தனது அரசியல் வளர்ச்சிக்காக அவளைப் பயன்படுத்திக் கொள்வதே தனது நோக்கம் என்றும் எகத்தாளமாக சொல்லியிருக்கிறான் ஓம்பிரகாஷ். மேலும், அவளை மயக்க நிலையில் இருக்கும் இதே போல் பலரோடும் அனுப்பி வீடியோக்களாக எடுத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளான். அந்த வீடியோக்களில் சிலவற்றை அவளுக்கே காண்பித்து மிரட்டியும் இருக்கிறான்.

பத்துப் பதினைந்து நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் தங்காமல் தொடர்ந்து இடங்களை மாற்றி வந்த ஓம்பிரகாஷ், விலை உயர்ந்த செல்போன்களையும் வாகனங்களையும் பயன்படுத்தியிருக்கிறான்.

நிகால் சந்த் மேக்வால்
நிகால் சந்த் மேக்வால்

2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரையில் சுமார் ஒன்பது மாதங்களாக இந்த சித்திரவதைகளை அந்தப் பெண் அனுபவித்து வந்திருக்கிறாள். ஓம்பிரகாஷின் அரசியல் நண்பர்கள் பலரும் அந்தப் பெண்ணை சீரழித்துள்ளனர். அவளால் இப்போது மொத்தம் 17 பேர்களை அடையாளம் காட்ட முடிகிறது. அதில் ஒருவர் நான்கு முறை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வென்றவர். கிரிமினல் எம்..பிக்களை சகித்துக் கொள்ளவே மாட்டேன் என்று போர் குரல் எழுப்பியிருக்கும் உத்தமர் மோடியின் தற்போதைய அரசாங்கத்தில் உரத்துறை அமைச்சராக இருக்கும் அந்தப் பாலியல் குற்றவாளியின் பெயர் நிகால் சந்த் மேக்வால்.

இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியின் கீழ் மட்ட பொறுப்பில் இருந்த ஓம் பிரகாஷ், பில்பங்கா ஜில்லா பரிஷத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக அரசியலில் ”வளர்கிறான்”. பிரிஜ்லால் பிஷ்னோயின் உறவினர் ஒருவரை ஜெய்ப்பூருக்கு வரவழைக்கும் ஓம் பிரகாஷ், பிஷ்னோய் குடும்பத்தினர் வறுமையின் காரணமாக தங்கள் பெண்ணை ஓம் பிரகாஷுக்கு எட்டு லட்சம் ரூபாய்களுக்கு விற்று விட்டதாக எழுதித் தரக் கேட்டு மிரட்டியுள்ளான்.

மிரட்டப்பட்ட உறவினரின் மூலம் அந்தப் பெண்ணின் பரிதாப நிலை பிஷ்னோய் சமூக மக்களின் கவனத்திற்குச் செல்கிறது. அவர்கள் கொந்தளித்துப் போகிறார்கள். என்றாலும் ஏழைகளான அவர்களால் பாரதிய ஜனதாவின் மேல் மட்டம் வரை நெருங்கிய தொடர்பு கொண்ட ஓம்பிரகாஷை எதிர்க்க முடியவில்லை. அவன் மேல் வரதட்சணை வழக்கு பதிய முயற்சிக்கிறார்கள். ஆனால் அது கூட பதிவாகாத படிக்கு தனது போலீசு செல்வாக்கை பயன்படுத்தி தடுத்து விடுகிறான் ஓம்பிரகாஷ்.

உள்ளூர் அளவிலான பிரச்சினையாக முற்றி, இறுதியில் சிர்ஸாவில் சாதி பஞ்சாயத்து ஒன்றின் முன் விசாரணைக்கு வருகிறது இந்த விவகாரம். அங்கே தனது உறவினர்களின் உதவியோடு தப்பிச் செல்லும் பிரிஜ்லாலின் பேத்தி தனது குடும்பத்தோடு சேர்கிறாள்.

“அவர்கள் ஒவ்வொருவரும் தண்டிக்கப்பட்டாக வேண்டும். நான் அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளேன். என்னால் அவர்கள் அனைவரையும் அடையாளம் காட்ட முடியும். அமைச்சர் எங்கள் கிராமத்தவர்கள் மேல் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து வருகிறார். ஆனாலும் நான், எனது வாக்குமூலத்தை மாற்றப் போவதில்லை. எனக்கு நடந்ததென்னவோ நடந்து விட்டது, ஆனால் இதே கொடுமை இன்னொரு பெண்ணுக்கு நடந்து விடக் கூடாது” என்கிறாள் அந்தப் பெண்.

விஷயத்தைக் கேள்விப் பட்ட சிர்ஸா மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் ஹெத்ராம் பெனிவ்வால் உடனடியாக அதில் தலையிட்டுள்ளார். போலீசில் புகார் கொடுக்க முற்பட்ட போது, சம்பவம் ஜெய்பூரில் நடந்துள்ளதால் தம்மால் அதில் தலையிட முடியாது என்று சிர்ஸா மாவட்ட போலீசார் கைகழுவியுள்ளனர். அமித் ஷாவின் தலைமையில் பெண்ணை உளவு பார்க்க ஒட்டு மொத்த போலீசு கட்டமைப்பையும் பயன்படுத்தும் திறமையும் வல்லமையும் கொண்ட மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள் நிகால் சந்துக்கு சிர்ஸா மாவட்ட போலீசாரை மிரட்டிப் பணிய வைப்பது அப்படியொன்றும் சிரமமான காரியமல்லவே?

மோடி அரசு
அமித் ஷாவின் தலைமையில் பெண்ணை உளவு பார்க்க ஒட்டு மொத்த போலீசு கட்டமைப்பையும் பயன்படுத்தும் திறமையும் வல்லமையும் கொண்ட மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள் நிகால் சந்துக்கு சிர்ஸா மாவட்ட போலீசாரை மிரட்டிப் பணிய வைப்பது அப்படியொன்றும் சிரமமான காரியமல்லவே?

சிர்ஸா மாவட்ட போலீசு கைவிட்டபின் அந்தப் பெண் ஜெய்பூர் மாவட்ட போலீசாரை நாடியிருக்கிறாள். அவர்களோ நாள் முழுவதும் அந்தப் பெண்ணை காவல் நிலையத்தில் அமரச் செய்து விட்டு வழக்குப் பதிந்தால் உனக்குத் தான் அவமானம் என்று எச்சரித்துள்ளனர். பார்ப்பன ஆணாதிக்க கொடுங்கோன்மை என்பது இந்துமதவெறி பாரதிய ஜனதா கும்பலுக்கு மட்டுமா, ஒட்டுமொத்த போலீசு-அதிகார அடுக்குமே அதில் தான் ஊறித் திளைத்துக் கிடக்கின்றன.

அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு காவல் நிலையங்களுக்கும் மாநிலங்களுக்கும் இடையில் அலைந்து திரிந்த ஹெத்ராம் பெனிவால் இறுதியில் தனது வழக்குரைஞர் நண்பர்களான இந்தர்ஜித் பிஷ்னோய் மற்றும் நவ்ரங் சௌத்ரி ஆகியோரின் உதவியோடு வழக்கு பதிந்துள்ளார்.

நிகால் சந்த் மேக்வால் மத்திய அமைச்சராகும் வரை இந்த விவகாரம் குறித்து நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டிருந்த காங்கிரசு இத்தனை காலம் கழித்து இப்போது கோதாவில் குதித்து பெண்களின் பாதுகாப்புக்கு ஏற்பட்ட ஆபத்தைப் பாரீர் என்று போலியாக கூவுகிறது. காங்கிரசு கடைபிடித்து வந்த கள்ள மௌனத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை. பாதிக்கப் பட்ட அந்தப் பெண் அளித்திருக்கும் வாக்குமூலத்தில் நிகால் சந்த் மேக்வால் உள்ளிட்ட பாரதிய ஜனதாவின் தலைவர்களோடு சில உள்ளூர் காங்கிரசு பெருச்சாளிகளின் பெயர்களும் அடக்கம். குறிப்பாக, ராஜஸ்தானின் முன்னாள் இளைஞர் காங்கிரசு தலைவர் புஷ்பேந்திர பரத்வாஜின் பெயரையும் அந்தப் பெண் குறிப்பிட்டிருக்கிறாள்.

மார்க்சிஸ்டு கட்சியின் ஹெத்ராம் பெனிவால் இந்தக் கொடுமையான சம்பவத்தை அதிகார அடுக்கின் பல மட்டங்களுக்கும் சுமந்து திரிந்துள்ளார். எங்காவது நியாயம் கிடைக்காதா என்று எதிர்பார்த்திருக்கிரார். தேசிய மகளிர் ஆணையமும், ராஜஸ்தான் மகளிர் ஆணையமும் விசயத்தைக் கேட்டு விட்டு சம்பிரதாயமான பேச்சுடன் அடங்கி விட்டதாக ஹெத்ராம் குறிப்பிடுகிறார். அரசு மற்றும் அதிகார வர்க்கம் குறித்த மார்க்சிஸ்டு கட்சியின் புனித மதிப்பீட்டின் அடிப்படையில் செயல்பட்டிருக்கும் அவர் மேல் பரிதாபமே மேலிடுகிறது. மக்களைத் திரட்டி போராட வேண்டிய இடத்தில் மயிலே மயிலே இறகு போடு என்று அதிகார வர்க்கத்திடம் இறைஞ்சுவதால் என்ன பயன்?

அதே நேரம் இந்துமதவெறியர்கள் செல்வாக்கோடு இருக்கும் ஒரு மாநிலத்தில் இத்தகைய முயற்சிகளே கூட அபூர்வம் என்பதையும் நாம் அங்கீகரிக்கவேண்டும். ஆனால் இந்த முயற்சிகள் இந்துமதவெறியர்களை தொந்தரவு செய்யாத அளவோடு நின்றுவிடுவதுதான் பிரச்சினை.

இதற்கிடையே மொத்தமாக மலத்தில் முங்கியெழுந்து விட்டு பன்னீராக மணக்கிறதே என்கிறது பாரதிய ஜனதா கட்சி. மொத்தமும் மோடியின் பெயரைக் கெடுக்க நடக்கும் அரசியல் சதி என்கிறார் அக்கட்சியின் ராஜ்நாத் சிங். மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிப்பதற்கு வெகு நாட்களுக்கு முன்பாக 2011-ம் ஆண்டின் பிற்பகுதியிலேயே பின்னாட்களில் மோடி பிரதமர் ஆகப் போகிறார் என்பதை எப்படி பிஷ்னோய் குடும்பத்தினர் அறிந்திருக்க முடியும் என்பது பற்றிய விஞ்ஞான விளக்கங்களை அவர் சொல்லவில்லை. ஒருவேளை அக்கட்சிக்கு இணையத்தில் சொம்படித்துக் கொண்டிருக்கும் அறிவுஜீவிகள் சொல்லக் கூடும்.

இப்போது மட்டும் என்ன நடக்கும்? அந்தப் பெண் நடத்தை கெட்டவள், காசுக்கு விலை போய்விட்டாள், காங்கிரசு ஏற்பாடு செய்த நாடகம் என்றெல்லாம் ஆதாரங்களை உற்பத்தி செய்து உலவவிடுவார்கள்.

தங்களது சொந்த வர்க்க அபிலாஷைகளுக்காக மோடியின் ஆசை வார்த்தைகளில் மயங்கிக் கிடக்கும் நடுத்தர வர்க்கத்தினர் இந்த அயோக்கியத்தனத்திற்கு என்ன சொல்வார்கள்? இது தான் பாரதிய ஜனதா கட்சியின் தராதரம் என்பதைப் புரிந்து கொள்வார்களா?

இந்தி பேசும் மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் செல்வாக்கோடு இருப்பதும், அந்த செல்வாக்கில் இத்தகைய ஆணாதிக்க பொறுக்கித்தனங்களை உள்ளிட்டு பல்வேறு கொடுங்கொன்மை செயல்கள் நடப்பதும் வேறு வேறு அல்ல. இந்தி இருக்கும் மாநிலங்களில் உள்ள இந்த பாரதப் பண்பாட்டைத்தான் முழு இந்தியாவிற்கும் பரப்ப துடிக்கிறது பார்ப்பனிய பாஜக கும்பல்.

மேலிருந்து கீழ் வரை ஒட்டு மொத்தமாக கிரிமினல்களையும் காமாந்தகார மிருகங்களையும் உள்ளடக்கிய குற்றக் கும்பல் தான் இந்துத்துவ கும்பல். இதை சட்டப்படியோ, நீதிமன்றத்தாலோ தண்டிக்க முடியாது. உழைக்கும் மக்கள் எடுக்கும் நேரடி நடவடிக்கையின் மூலமே இந்த நாட்டில் பார்ப்பனிய இந்துமதவெறி பாடைக்கு அனுப்ப முடியும். அது வரை பிரிஜ்லாலின் பேத்திகளுக்கு பாதுகாப்பு இல்லை.

–    தமிழரசன்.

தகவல் – Frontline பத்திரிகையில் வெளியான கட்டுரை

மேலும் படிக்க

  1. These kind of peoples should be punished severely in the middle of the road . let all people see and stone to death. these kind of politicians were cruel than virus.

  2. தேசிய மகளிர் ஆணையம் தூங்கி கொண்டு இருக்கின்றதா? இது போன்ற கயவர்களுக்கு பொது மக்கள் முன்னிலையில் மரண தண்டனை வழங்குவதே சிறந்தது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க